Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 25 ஏப்ரல், 2009

பயமுறுத்துகிற இருள்

(புகைப்படம்:தீபச்செல்வன்)
---------------------------------------------------------
தீபச்செல்வன்
---------------------------------------------------------------

அச்சம் தருகிற இராத்தரிகளையும்
ஒரு சிறிய பெட்டியாய் சுருங்கிய பகல்களையும்
எனக்கு தந்தீர்கள்?
எல்லாத் தெருக்களும் என்னைக் கண்டு
அஞ்சுகின்றன.
தெருவின் கரையில் பதுங்கியிருக்கிறது
என்னை தின்பதற்கு
காத்திருக்கிற கத்திகள்.

என்னிடம் எந்த சொற்களுமற்று
மௌனத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறேன்.
அச்சம் தருகிறதாக என் கவிதைகளை
எறிந்தீர்கள்.
உங்கள் பகலில் பாம்புகள் அலைகிறதை
நான் கண்டேன்.
எனது பிரதேசத்தில் தரப்பட்ட தெருவில்
அகதியாய் திரிய
என்னுடைய நினைவுகளை
நான் இழந்து வருகிறேன்.

அடையாளங்கள்ளற்ற வாழ்வில்
நான் எதையும் உணரவில்லை.
நிரந்தரமான அடிமையைப்போல என்னை
சித்திரிக்கிறது பறிபோயிருக்கிற தெரு.
மிகவும் நீளமாக போகிறது எல்லாத்திசைகளும்.
அழுவதற்கும் இடமில்லாது
அலைந்து கொண்டிருக்கிறேன்.

அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ
தங்கையுடனான சண்டைகளையோ
மீள கொண்டாடுகிற நாள்கள் வரப்போவதில்லை.
வீடு பற்றியிருந்த நினைவுகள்
சிதறிப்போயிருக்க கால்கள் அலைகின்றன.

எனக்காக காத்திருக்கிற மரணம்
இந்த தெரு வொன்றில் முடிந்துபோகட்டும்.
நிறைவேறாத கனவுகளுடன்
மண்ணை முத்திமிடுகிறேன்.

இருளில் குவிந்திருக்கின்றன
என்னை தொடருகிற எல்லாரது முகங்களும்.
அந்நியமாகிற எனது கடலிலும்
முற்றிலும் மாற்றப்படுகிற மண்ணிலும்
இருள்தான் பரவிக்கொண்டிருக்கிறது.

மீண்டும் மீண்டும்
பயமுறுத்திக்கொண்டேயிருக்கிறது இருள்.
இருளே உன்னை கண்டு
நான் அஞ்சுகிறேன்.
உன்னையும் அவர்கள்
என்னிடமிருந்து பிரித்தனர்.
நான் உணருகிறேன்
இருள் பெரும் புயலாக வருகிறது.
என்ன செய்ய?
-------------------------------------------------
(08.04.2009 மீளவும் அச்சுறுத்தப்பட்ட இரவில்)

5 கருத்துகள்:

உமா சொன்னது…

//அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ
தங்கையுடனான சண்டைகளையோ
மீள கொண்டாடுகிற நாள்கள் வரப்போவதில்லை.//
இந்த இனிமைகள் எல்லாம் மறுபடியும் இலங்கை தமிழர் வாழ்வில் மலர வேண்டும் என் பிரார்த்திக்கிறோம்.

சொல்லரசன் சொன்னது…

//எனக்காக காத்திருக்கிற மரணம்
இந்த தெரு வொன்றில் முடிந்துபோகட்டும்.
நிறைவேறாத கனவுகளுடன்
மண்ணை முத்திமிடுகிறேன்.//

எங்கள் மனதை கவ்விய இருள்.
மரணத்தை தடுக்க முடியாமல் கனவுபோல் வந்து போகும்
ஈழத்து ஆதரவை நினைத்து எங்களுக்கே வெட்கமாகதான் இருக்கிறது.

உமா சொன்னது…

//அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ
தங்கையுடனான சண்டைகளையோ
மீள கொண்டாடுகிற நாள்கள் வரப்போவதில்லை.
வீடு பற்றியிருந்த நினைவுகள்
சிதறிப்போயிருக்க கால்கள் அலைகின்றன.//

மீண்டும் கண்டிப்பாக வரவேண்டும். நாளைய குழந்தைகளுக்காவது இந்த இனிமைகள் இயலவேண்டும்.
நம்பிக்கையுடன் உமா.

எனது வலைப்பதிவில் தங்களுக்கு பட்டாம்பூச்சி விருதை வழங்கியிருக்கிறேன்.இந்த விருதை வழங்குவது ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பை நேசிக்கும் ஒரு வாசகியின் காணிக்கையாகத்தான். தங்களை இன்னும் சிலருக்கு அறிமுகப்படுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன். [பட்டாம்பூச்சி விருது என்பது வலைப்பதிவர்கள் தங்களுக்குள் பாராட்டிக்கொள்வதே.]

இளைய அப்துல்லாஹ் சொன்னது…

அச்சம் தருகிற இராத்தரிகளையும்
ஒரு சிறிய பெட்டியாய் சுருங்கிய பகல்களையும்
எனக்கு தந்தீர்கள்?
எல்லாத் தெருக்களும் என்னைக் கண்டு
அஞ்சுகின்றன.
தெருவின் கரையில் பதுங்கியிருக்கிறது
என்னை தின்பதற்கு
காத்திருக்கிற கத்திகள்.


நான்?
உண்மையில் எனக்கான வார்தைகளாக இது வந்து விழுந்திருக்கின்றன.

நான் ஒட்டுசுட்டான் புளியங்குளத்தில் பிறந்தனான் தீபன்

ஜெயபாலன் சொன்னது…

அந்த வெளியில் கனவு சிதறி ஒழுகிய குருதியுறைந்திருந்தது.
கவிஞா, இந்த வெளி என் தாயகம்தான். எதிரிகளாலும் இளவரசர்களாலும் சிதைக்கப்பட்ட ஒரு ராசத்தியைப்போல விழுந்துகிடக்கிற என் தாயகம்தான். அது கொலைகாரர்களால் அழிந்துபோவதற்க்கு எங்களது உடல்கள் அல்ல. அது எங்களது ஆன்மா. உங்களைப்போன்ற இளைய கவிஞர்களின் கூடுகளுக்குள்தான் எங்கள்முட்டைகளையும் இட்டுவிட குயிலஆய் .....

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...