Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்



இனித் திரும்பாத சூரியனுக்காய்
நீயும் நானும் சாம்பலில் காத்திருக்கிறோம்
மேலெறியப்படும் குண்டுகள்
தின்று தீர்த்துக்கொண்டிருக்கிற
வலயத்தில் மூளப்போகிற சண்டையில்
அவர்கள் நம்மிடம்
எதை எடுக்கப் போகின்றனர்?

துவக்கு மெல்ல புகுந்து
தின்கிறது இறப்பர் குடில்களை.

சிறிய ஆயுதங்களால்
போரிட கிடைத்திருக்கிற அனுமதியின்
இடையில் கனகரக ஆயுதங்கள்
அறிவுருத்தியபடி
உண்மையிலேயே
ஓய்ந்துபோயிருக்கிறதாவென நாம் அறிவோம்.
முற்றுகைகளால் நிறைந்திருக்கிறது
எம் வாழ்நிலம்.

போரிற்கு சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது
பாதுகாப்பு வலயம்
ஷெல்கள் எந்நேரமும் உலவித்திரிந்து
சனங்கள் பார்த்திருக்கவே
இழுத்துச் செல்கிறது
ஐ.நாவின் அனுமதி கிடைத்தது
அமைதியாக சனங்களை கொன்றகற்றுவதற்கு.

மெலிந்து போய்விட்ட சனங்கள்
அனுமதியுடன் ஒழிக்கப்படுகின்றனர்.

இழந்து போக முடியாத
தேசம் பற்றிய கனவை நீயும் நானும்
மறக்க நிர்பந்திக்கப்படும் நடவடிக்கையில்
நீயும் நானும் எல்லாவற்றையும் பிரிந்து
துரத்தி அலைக்கப்படுகிறோம்.

வாழ்வுக்கான பெருங்கனவை
கூடிச் சிதைத்தனர்.
நாமோ கூடு கலைந்து திரிகிறோம்.

போரிட்டுச் சாகிறது பெருநிலம்
சடலங்களுடன் அள்ளுண்டு போகிறது
வளர்த்தெடுக்கப்பட்ட கனவு
முடிவு நெருங்கும் கடைசிக் களத்தில்
தொடங்கவிருக்கிறது அடுத்த போர்.

அம்மாவே உன்னைப் போலிருந்த
எனது நகரத்தை நான் பிரிந்தேன்
தங்கையே உன்னுடன் வளர்த்த
எனது கனவுகளை நான் இழந்தேன்
அவர்கள்
எல்லாவற்றையும் என்னிடமிருந்து பிரித்தனர்
தூரத்தே உழல்கிறது எனது தெரு.

வழியற்றிருக்கிறது போர்க்களம்
கனவுகளுடன் குண்டேறி விழுந்த பேராளிகளின்
மூடுப்படாத விழிகளுடன்.

சண்டை மூண்ட பாதுகாப்பு வலயத்தில்
எப்படி உன்னை பதுக்கி
காத்துக்கொள்ளுவாய்?
அச்சங்களில் ஒளிந்திருக்கிற தங்கையின்
துடிக்கிற மனதை எதற்குள் பொத்தி  வைப்பாய்?
0

07.04.2009

தீபச்செல்வன்

1 கருத்துகள்:

உமா சொன்னது…

தங்களின் 'பதுங்கு குழியில் பிறந்த குழந்தைகள்' படித்து மனம் அமைதி இழந்துவிட்டது. தங்கள் வலைப்பதிவை தேடி படித்ததில் அந்ததாக்கம் அதிகமாகிறது.
மனதில் வலியோடு பிரார்த்தித்து நிற்கிறேன். பிஞ்சு குழந்தைகள் குழிவிட்டு எழுந்து விளையாடும் நாள் காண மனதில் வலியோடு பிரார்த்தித்து நிற்கிறேன்.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...