Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஜீவா வரைந்த ஓவியம்
0 Comments - 08 Aug 2023
 தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் ஜீவா சிங்களத்தில் வெளியாகவுள்ள புத்தகத்தின் அட்டைக்காக வரைந்த ஓவியம்....

More Link
தீபச்செல்வன் இதுவரை எழுதிய புத்தகங்கள் எத்தனை தெரியுமா?
0 Comments - 03 Jul 2023
ஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன், இதுவரையில் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இதுவரையில் அவர் 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.கவிதை, கட்டுரை, நேர்காணல், நாவல், ஆங்கில கவிதை நூல், சிங்கள நாவல் மொழியாக்கம் என இதுவரையில் அவர் ஈழ விடுதலையை உள்ளடக்கமாக கொண்டு 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.2008இல் பத...

More Link

செவ்வாய், 30 டிசம்பர், 2008

மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
01
மாங்குளத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

ஒரு நாட்டை நோக்கி யுத்தம்
அறிவிக்கப்படுகையில்
மரணம் குறித்து படைகள் அறியாதிருந்தன.
கடலுக்கு மிகவும்
நெருக்கமான சனங்களை துரத்துகையில்
படங்குகளில் தென்னை மரங்கள் பெயர்ந்தன.

எனக்கு மிகவும் பிடித்த கடலே
உனக்கு தனிமை பரிசளிக்கப்படுகிற
யுத்தத்திடம் எதுவரை காயப்படப்போகிறாய்?
படைகளை நீ மூழ்கடிப்பாய்
எனத்தான் நம்பிப் பெயர்கின்றன படகுகள்.

மனிதர்களை நெடுநாளாய் தின்று கொளுத்த
யுத்தத்திடம் வீதியும் கடலும்
முதலில் பலியிடப்படுவது
கண்டு மணல்கள் அலைகின்றன.

02
புளியங்குளத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

பசிய காடுகளே குண்டுகளை கொண்டெறிந்து
வேர்களை அறுக்கிற படைகளின்
துப்பாக்கிகள் மறைந்திருக்கின்றன.
அது இன்னும் முன்னே செல்ல
காத்திருக்கிறது.
மரங்களில் தோல்வி எழுத முனைகிறது.

எனது காடுகள் ஒடுங்காதிருக்கின்றன.
படைகள் வேர்களால்
புதைக்கப்படு நாளை அறியாதிருந்தன.
காடுகளினுள் மரங்களின்
குருதி கசிற இடைவெளிகளில்
துப்பாக்கிகள் நீட்டப்பட
மரங்களின் தலைகள் அறுத்தெறியப்பட்டிருந்தன.

காடுகளை வேட்டையாடுகிற
படைகளிடம் முதலில் சனங்கள் வேட்டையாடப்பட்டன.
பாலைமரங்களிடம் மூளுகிற
மௌனத்தின் தீயில் காடுகளால்
படைகள் எரிக்கப்படு நளை அறியாதிருந்தனர்.

03
கனகராயன் குளத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவிக்கின்றன.

மரங்கள் மிதக்கிற ஆற்றினிடையில்
சனங்களின் குருதியும்
சதைகளும் இராணுவத்தொப்பிகளில்
நிரப்பியபடி வந்தன.
வெள்ளம் ஆற்றை அள்ளிச்செல்லுகிற
மழைநாட்களில் படைகள்
துப்பாக்கிகளை நனைத்து
மெல்ல புகுந்தன.
கரைகள் மீதியற்று கரைகிறது.

ஆறுகள் அறுபட்டு திசையிழந்து திரிந்தன.
ஜனாதிபதி மாளிகையின்
தாழ்வாரங்களின் மீது மோதி
தரையிலிருந்து எழும்புகின்றன.
ஜனாதிபதி ஆற்றை வெட்டி எறிய
புதியபெயர்கள் காத்திருக்க
படைகள் ஆற்றை கால்களுக்கிடையில்
சுற்றி வைத்திருந்தனர்.

படைகள் ஆறுகளால்
இழுத்துச் செல்லப்படு நாளை அறியாதிருந்தனர்.

04
அலம்பிலினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

வீதிகளை பிடித்து தின்றபடி
செல்லுகிற படைகளின்
காலடியில் வீடுகள் மிதிபட
புத்தகம் கிழிந்து பறக்கிறது.
வெற்றியின் களிப்பில்
ஆளில்லாத கிணற்றில்
நாய் ஊளையிடுகிற
சத்தம் நிரம்புகிறது.

யாருமில்லாத ஊரின்
நடுவில் படைகள் விரித்து வைத்திருக்கிற
வரைபடத்தில்
நமது கிராமத்தின் ஆடுகள்
அலைவதை நான் கண்டேன்.

உடைந்த வீட்டின் மீதியை
தின்று இன்னொரு கிராமம்மீது பசித்திருக்கிற
படைகள் ஆடுகளால்
தின்னப்படு நாளை அறியாதிருந்தனர்.

05
குமுழமுனையுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

இரவை கைப்பற்றிய படைகள்
பகலில் மீது தாக்கத் தொடங்கினர்.
சனங்கள் இருளில் திரிய சூரியனது
திசையில் அடுத்த யுத்தம் அறிவிக்கப்பட்டது.

விளக்குகள் அணைய
முகங்கள் விறைத்திருக்க படைகள்
எறிந்து விளையாடுகிற
எறிகணைகளில் தென்னைகள் பட்டெறிந்தன.

தென்னைகள் சரிகிற இரவில்
வீடுகள் நசிய படைகள் புகுந்தன.
குளத்தின் முகத்தை படைகள் பிடிக்க
தண்ணீர் வெருண்டு புகுகிற
ஊரில் கிணறுகள் மூழ்கின.

படைகள் கிணறுகளால்
விழுத்தப்படு நாளை அறியாதிருந்தனர்.

06
ஒலுமடுவினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

வீதியின் நடுவில் காடு
தனியே கிடந்து துடிக்கிற பகலில்
ஒரு பள்ளிக்கூடம் அகப்பட்டது.
மேலுமாய் துயரத்தை அனுபவிக்கிற
கிராமத்தில் மீண்டும்
படைகள் புகுந்த வெற்றியில்
கோழிகளின் இறக்கைகள் மிஞ்சின.

மாடுகளின் எலும்புகள்
கண்டு பொறுக்குகிற படைகள்
சனங்களின் தலைகளை தேடினர்.
கொழும்பின் பசியில்
மாடுகளை படைகள் மேய்ந்தனர்.

படைகள் மாடுகளால்
முட்டப்படு நாளை அறியாதிருந்தனர்.

07
அம்பகாமத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

காய்கறிகளை வெட்டி வீசுகிற
படைகள் கிழங்குகளை பிடுங்கி எறிந்தனர்.
பூக்கள் மறுக்கிற பூமரங்களை
படர்ந்த கொடிகளை வேரில் சுட்டனர்.
கைகளை தேடுகிற
படலைகள் ஓட்டைகளால் நிறைய
அதனூடே ஷெல்கள் நுழைந்தன.

கடலின் படலையில் மரணம்
படைகளை பார்த்தபடி
காத்திருக்கிறது.
சனங்களின் தவிப்பில் கொந்தளிக்கிற
கடலை போர் தாக்கிக் கொண்டிருந்தது.
ஆடுகள் கடலில் அலைய
கிணறுகள் மிதந்தன.

முல்லைத்தீவிடம் கால்
பதிக்க குதிக்கிற படைகள்
கடலிடம் தோற்கப்படு நாளை அறியாதிருந்தனர்.

மற்றொரு சந்தையும்
மருத்துவமனையும் நொருங்குப்படத் தொடங்க
இரண்டு பெரிய நகரங்களினிடையில்
ஒரு வீதியில் தமது வீடுகளை
தேடுகிற சனங்கள் அலைகின்றனர்.
--------------------------------------------------------------------------------
21.12.2008.முல்லைத்தீவு.இராணுவநடவடிக்கை.பலமுனைகள்

1 கருத்துகள்:

தமிழ் மதுரம் சொன்னது…

மனிதர்களை நெடுநாளாய் தின்று கொளுத்த
யுத்தத்திடம் வீதியும் கடலும்
முதலில் பலியிடப்படுவது
கண்டு மணல்கள் அலைகின்றன.//

நேரடி அனுபவம், மனதின் வலிகள் எல்லாம் அருமை... தொடருங்கோ..

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...