Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்

----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________

01
நமது வாழ்வின் கனவு நகரமே
படைகள் உன்னை மிதிக்கும் பொழுது
நமது மனம் மிதிபடுகிறது.
கிளிநொச்சிக்குளத்தில் கந்தசாமிகோயில் முழ்கியது.
அதிகாரத்தின் கைகளிற்குள்
அடங்க முடியாத நகரம் நேற்றிரவு பின்வாங்கியது.
ஆழமான கிணறுகள்
வசந்தநகரை விட்டு பின்வாங்கின.

நமது நகரம் வீழ்ந்தது என்று
அறிவிக்கப்படுகையில் பெரும்துயர் சூழ்கிறது.
மெல்ல மெல்ல படைகள்
கடிக்கத்தொடங்கிய நாட்களில்
வீடுகள் எங்கோ போயிருந்தன.
கடைகள்
கரடிப்போக்கைவிட்டு பின்வாங்கின.

எனது வீடு முழுவதையும்
தின்றுவிட்டு பெருமிதம் கொள்ளுகிற
படைகள் நகரமெங்கும்;
நுழைந்து கொடிகளை
பறக்க விடுகையில்
காயம் ஆறாதிருந்த கட்டிடங்கள்
வெருண்டன.
ஐந்தடி ஆறு
இரத்தினபுரத்தைவிட்டு பின்வாங்கியது.

இந்தப்போர் எனது நகரத்தை
தின்று பசியாறுகிறது.
நான் வீட்டினை இழந்தேன்.
மரங்களையும் இழந்தேன்.
ஜனாதிபதியின் மிகுந்த மகிழ்ச்சியில்
போர்மீதிருக்கும் ஆசையில்
எனது கடைத்தெருக்களை
நான் இழந்தேன்.
புதிய கட்டிடங்கள் அறிவியல்நகரை
விட்டு பின்வாங்கின.

நேற்று வந்திருந்து பேசிய
சமாதானம் இன்று வந்து
கொடூரமாய் சிதைத்துக் கொண்டிருக்கிறது.
வாழைமரங்கள்
திருவையாற்றை விட்டு பின்வாங்கின.

தமிழர்களின் கனவு நகரம்
தோற்றுவிட்டதாய்
சிங்களவர்கள் வெடி கொளுத்தி ஆடுகிறபோது
மனம் படு காயமடைகிறது.

02
ஆட்களற்ற நகரத்தில்
அவர்களின் கனவுகளையும் நம்பிக்கையும்
படைகள் தேடியழித்துக் கொண்டிருந்தனர்.
கனகாம்பிகைக்குளத்தில் நூலகம் முழ்கியது.

நமது கனவின் நகரம் அழிந்துபோகாது?
திசைகளை மூடுகிற போர்
மரணத்தின் குழியில்
நம்மை தனிமையிலிட துடிக்கிறது.
தோல்விப்படுத்த முனைகிற
சிங்கங்கள் பற்களை கொண்டலைகிறது.
தோல்வி திணிக்கப்பட
சிதைந்த நகரத்தின் கொடுமையான
அனுபவத்திலிருந்து கோபம்; தூண்டப்படுகிறது.
வைத்தியசாலை
ஆனந்தபுரத்தைவிட்டு பின்வாங்கியது.

நாம் விட்டுச்செல்ல முடியாத நகரத்தில்
படைகள் நுழைய முடியாதிருக்கிறது.
தரைகளில் பதுங்கும் கண்களில்
இன்னும் சூடேறுகிறது
என்றும் தீரமுடியாத தாகத்தை
சவப்பெட்டிகளாக்குகிற கனவில்
வாழ்வுக்கான ஏக்கம் சாம்பலாவதில்லை?
மீனாட்சி அம்மன்
ஜெயந்திநகரை விட்டு பின்வாங்கினாள்.

நமது வாழ்வின் கனவு நகரமே
படைகள் உன்னை மிதிக்கும் பொழுது
நமது மனம் மிதிபடுகிறது
உன்னை மீள உயிருட்டுகிற கனவு
மீண்டும் வளருகிறது.
குளத்தடிக்காடுகள்
அம்பாள்நகரை விட்டு பின்வாங்கின.

நம்மை அழிக்கிற கனவு வளர்க்கிற
கொழும்பு
கிளிநொச்சியை தின்று மகிழுகிறது.

03
கனவு ஒருபோதும் உதிரப்போவதில்லை
அவலமாகிப்போன நம்பிக்கை
மீள துளிர்கிற தருணம் அதிகரிக்கிறது.
அம்பாள்குளத்தில் வாய்க்கால்கள் முழ்கின.

இந்த நகரத்தில் படைகள்
தங்குகிற நாட்களை எண்ணுவதிலிருந்தே
நாம் மீண்டும் திரும்புகிற
நாட்களில் தங்கியிருக்கிறோம்.
நாகதம்பிரான்
உதய நகரை விட்டு பின்வாங்கினார்.

படைகள் பலியிடத்துடிக்கிற
நமது நகரத்தை
நாங்கள் விட்டு வந்தோம்.
மாமரங்கள்
திருநகரை விட்டு பின்வாங்கின.

எங்கள் வாழ்வு தின்று களிக்கிற
அரசுகள் துரத்திக்கொண்டேயிருக்கிறது.
நாங்கள் குருதி சுமந்து
கட்டிய நகரம் நொருங்கியபடியிருக்கிறது.
தலையில் நமது நகரத்தை
சுமந்படி திரிகிறோம்.
துயிலுமில்ல வீதி
கனகபுரத்தை விட்டு பின்வாங்கியது.

பூக்களை பலியிடுகிற அரசு
எங்கள் கனவின் தலைநகரத்தில்
தனது கொடியை பறக்கவிடத்துடிக்கிறது.
ஜனாதிபதியின் உணவுக்கோப்பையில்
மண் நிறைகிறது.
வெறிகலந்த வெற்றிச்சொற்களை
சகிக்காத நீளமான வீதி நெளிகிறது.
மாதுளை மரங்கள்
சிவநகரை விட்டு பின்வாங்கின.

முழுக்கனவையும் நசுக்குகிற பேரெடுப்புடன்
தெற்கு வடக்கை ஆக்கிரமித்திருக்கிறது.

04
பரந்தன் மீண்டும் சிதைகிறது.
சின்னக்கடைகளையும் வீதிகளையும்
படைகள் கைகளிற்குள் போட்டு பிசைந்தனர்.
பறவைகள்
மலையாளபுரத்தை விட்டு பின்வாங்கின.

நமது பிரியம் மிகுந்த தெருவே
சின்ன ஒழுங்கைகளே
படைகளது அகன்ற காலடியில்
அதிகாரத்திடம் நசுங்குவது கண்டு துடிக்கிறோம்.
முறிப்புக்குளத்தில் ஆடுகள் மூழ்கின.

வாய்க்கால்களில் படைகள்
கால்களை நனைக்கிறபோது வயல்கள் எல்லாம்
தரிசாகிப்போகிறது.
பானைகளற்று கைகளில் வேகுகிற
பாதி அரிசியில் நமது கிராமங்கள்
ஒடுங்கி துடிக்கின்றன.
விட்டு வந்த கிராமங்களில்
தனியே உருளுகின்றன சைக்கிள்கள்.
முத்துமாரி அம்மன்
செல்வாநகரை விட்டு பின்வாங்கினாள்.

தோட்டங்கள் அழிந்துபோக
காட்டு இலைகளை வறுத்து பசியாறுகிற
குழந்தைகள் குளிக்க ஏங்குகின்றனர்.
எல்லா மரங்களையும் அடிமைப்படுத்துகிற
அதே படைகள்
சுவர்களையும் கூரைகளையும்
எங்களிடமிருந்து பிரித்தனர்.
கூழாமரம்
உருத்திரபுரத்தை விட்டு பின்வாங்கியது.

அகதிவெளிகளில் சாய்கிற
மரங்களில் இலைகள் உதிருகிறபோது
மீண்டும் எங்கள் வீடுகள் துளிர்க்கும்
என்று எங்கள் குழந்தைகளுக்கு
சொல்லி பதுங்குகிறோம்.
இரணைமடுக்குளத்தில்
சமாதானசெயலகம் முழ்கியது.

ஒரு இனம் மற்றொரு இனத்தின்
வாழ்வை அழித்துக்கொண்டிருக்கிறது.

05
இரணைமடுவே கிளிநொச்சி நகரம்
தண்ணீரில் மூழ்கி தவிக்கிறது.
சனங்களிடமிருந்து
பிரிக்கப்பட்ட நகரை படைகள் ஆளுகிறது.
தலைகளில் அதிகரிக்கிற சுமையில்
எதிரியின் கொடுமையான சொற்கள்
எங்களை மேலும் வருத்துகிறது.
பசுமை மிகுந்த வயல்கள்
கணேசபுரத்தை விட்டு பின்வாங்கின.

வீழ முடியாத நகரத்தை
விட்டுச் செல்லுகிற
சனங்களின் கண்ணீரை பருகி
வெடி கொழுத்தப்படுகிறது.
இரணைமடுக்காடே உன்னை
நம்புகிற சனங்கள் மீள
திரும்புகிற ஏக்கத்துடன் அலைகின்றனர்.
மாடுகள்
கனகாம்பிகையை விட்டு பின்வாங்கின.

நெடுநாளாய் கற்கள் கொண்டு
கட்டிய நகரத்தை வாழ்வுக்கான திட்டங்களை
தின்று பெருமித ஏக்கம் கொள்ளுகிறது
உன்னிடம் புதையப்போகிற படைகள்.
கொய்யா மரங்கள்
ஆனந்தநகரை விட்டு பின்வாங்கின.

பயங்கரவாதச் சனங்களாக்கப்பட்ட
எங்கள் அழகிய வாழ்வை சிதைத்து
கனவின் தலைநகர் வீழ்ந்தது எனப்பட்டது.
ஒரு சிங்கள வெடியிலிருந்து
மீண்டும் நமது போர்க்களம் திறபடுகிறது.
தென்னைமரங்கள்
பாரதிபுரத்தை விட்டு பின்வாங்கின.

எல்லாவற்றையும் எடுத்து செல்ல முடியாதபோது
நாம் உன்னை மட்டும் சுமந்து வந்தோம்.
கிளிநொச்சி நகரமே உன்னை வைத்து
செய்த எல்லாவற்றையும்
படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன.
உடைந்த சுவர்களில் மெலிந்த சனங்கள்
கனவுகளை எழுதிச்சென்றனர்.

வாழ்வுக்கான ஏக்கம் இன்னும் அதிகரிக்க
கிளிநொச்சி நகரத்தோடு
வாழ்வுக்கான தேசம் மேலும் ஒடுங்கியபடியிருக்கிறது.
குந்தியிருக்க முடியாத நிலத்தில்
ஒடுங்கியிருக்கிற நகரத்தில்
முழுத்தேசத்திற்கான கனவு வளருகிறது.

ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது
போரெடுத்து நிற்கிறது.
--------------------------------------------------------------------------------
(கிளிநொச்சி,வீழ்ச்சி,புலிகள்,பின்நகர்வு,
படைகள்,கைப்பற்றல்,அரசு,வெற்றி. 02.01.2009)

3 கருத்துகள்:

தமிழ் மதுரம் சொன்னது…

கவிதை மனதைக் கனக்க வைக்கிறது... உணர்வின் வரிகள். நன்றாக உள்ளது. மீண்டும் ஊர் திரும்பும் காலம் வரும் என்று நம்புவோம்..

பெயரில்லா சொன்னது…

தமிழர்களின் வர்த்தக நகரம் அது அந்நியன் ஆதிக்கத்தில் வந்த தருணம் திகைத்தது நான் மட்டுமல்ல என் ஈழ உறவுகளுமே!

வரலாற்று படிப்பினைகள் பல இருப்பதால் மீண்டும் பெறுவோம் எம் வர்த்தக நகரத்தை என்று தமிழர்கள் நாம் உறுதியுடன் போராடுவோம்.. வெற்றி நிச்சயம் எங்களுக்கே..

eelam.mywebdunia.com

nl சொன்னது…

பின்னடைவு இல்லை...
உலக நாடுகளே சேர்ந்து படை நகர்த்தியதால்
தட்காலிக பின்னகர்வு!!!
வெற்றி நிச்சயம் வரும் சில மாதங்களிட்குள்...
சிறிது காலம் துக்க உணர்வுகளுக்கு
விடுதலை கொடுங்கள்...

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...