Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 22 டிசம்பர், 2008

நீர் அறிந்திருக்காத சிலுவைகள்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
வாழ்வுக்கு தவிக்கிற குழந்தைகள்
மறைந்திருக்கிற தரையில்
சிலுவைகள் புதைக்கப்பட்டிருக்க
யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.

உமக்கான மாட்டுத்தொழுவங்கள்
எம்மிடம் இல்லை.
வைக்கோல் பட்டறைகளும் இல்லை;.

நீர் அறிந்திருக்காத சிலுவைகளை
நாம் சுமக்கிறோம்.

மழைக்காலத்தில் ஏணைகள்
இல்லாமல் தடிகளில் உறங்குகிற
குழந்தைகளை
வெட்டிப்போட கத்திகளுடன் திரிகின்றன
ஏரோது மன்னின் படைகள்.

குதிரைகள் அலருகிற இரவில்
குழந்தைகளை நாம் கட்டுக்குள்
கொண்டு வைத்திருக்கிறோம்.

படுக்கைகளில் குருதி வழிந்தோடுகிறது
தூக்கத்தில் பறி எடுத்த
குழந்தையை விமானம் தின்று
வீசிவிட்டுப் போகிறது.

நீர் மீண்டும் ஒரு சிலுவையை
இங்கு விட்டுச் செல்ல வேண்டாம்.

உம்மால் தாங்கிக் கொள்ள முடியாத
வலிகளான தொழுவங்களில்
போரிடம் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன
நமது தேசத்தின் குழந்தைகள்.

நீர் இந்த தேசத்தில்
இப்போது பிறக்க வேண்டாம்.

கத்திகள் அலைகிற காடுகளில்
நம்முடன் எங்கு வரப் போகிறீர்?
வெட்டுப்பட்ட சொற்களுடன்
நாம் ஒரு பாடலை தேடுகிற போரில்
நீர் சுமந்திராத
சிலுவைகளை சுமக்கிறோம்.

ஏராது மன்னன் பெரும் பசியுடன் வாளுக்கு
இரை தேடுகிற நாட்களில்
இங்கு எண்ணிக்கையற்ற மரியாள்கள்
தமது குழந்தைகளை கொண்டு ஒளிகின்றனர்.
--------------------------------------------------------------
20.12.2008.வன்னி.குழந்தைகள்.யேசுபிறப்பு.

2 கருத்துகள்:

தமிழ்நதி சொன்னது…

எப்போதும் போல வலி தரும் கவிதைகள். அந்தப் படமும் கவிதையும்... வலிகளைப் பேசியே வாழ்வு கழிகிறது. அதிலொரு அயர்ச்சியும் வந்துவிட்டது. நிகழோடு ஒட்டிய உங்கள் கவிதைகள் காலத்தின் பதிவுகள்.

பெயரில்லா சொன்னது…

காலத்திற்கேற்ப எம் மக்கள் படும் துயரங்களை கவிதையாய் பொழிகின்ற உங்களுக்கு என்னுடைய நன்றிகள்..

eelam.mywebdunia.com

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...