கவிதை___________________________--------------------------தீபச்செல்வன்
________________________________________
------------------------------------------------------------------
தூங்க மறுக்கும் குழந்தைமீது
தாயின் பாடல்
மிக மெல்லியதாக படர்கிறது.
நள்ளிரவு அதிர
கூவுகிற
வெளுறிய கொண்டையுடைய
சேவலின்
தொண்டைக்குழியில்
எறிகனைபோய்
சிக்கிக்கொள்கிறது.
தறிக்கப்பட்ட
பனைமரங்களில் வழியும்
சொற்களை
சூன்யப்பிரதேசத்தில்
திரியும்
குட்டையடைந்த நாய்
முகர்ந்து பார்க்கிறது.
குழந்தைகள்
தூக்கி எறியப்பட்ட
நாட்டிலிருந்து
சூரியன் விலகுகிறது.
திசைகளை விழுங்கும்
இராணுவ
தொலைத்தொடர்பு கோபுரத்தில்
திடுக்கிட்டு எழும்பும்
குழந்தையின்
அதிர்வு நிரம்பிய பாடல்
பதிவாகிக்கொண்டிருந்தது.
அதில் குரல் பிடுங்கி
எறியப்பட
பேசும் பறவையின்
வேகமும் சிறகுகளும்
காயப்பட வீழ்கிறது.
இடைவெளிகளில் மிதக்கும்
நாற்காலிகளில்
இருள் வந்து குந்தியிருக்கிறது.
கருவாடுகளை குத்தி குருதி
உறிஞ்ச முனையும்
நுளம்புகளை
பூனைகள் பிடித்து சாப்பிடுகின்றன.
தலைகளை பிடுங்கி
எறிகிற
அதிவேகத்தோடு
மக்களின் குடிமனைகளிற்குளிருந்து
எறிகனைகள்
எழும்பி பறக்கின்றன.
முழு யுத்தத்திற்கான
பிரகடனமாக
குட்டையடைந்த நாய்
பெரியதாய் ஊழையிடுகிறது.
வீட்டு வாசலில்
வந்து நின்ற போர்
கதவை சத்தமாக தட்டுகிறது.
குழந்தை ஒலி அடங்கி அழுகிறது.
----------------------------------------------------------------------------------
16.01.2008 இன்று இரவு ஏழு மணியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திறிகும் இடையில் இருந்த-வெற்று வார்த்தையில் அடைக்கப்பட்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை ஒருதலைப்பட்டசமாக முறித்துக்கொள்கிறது. தமிழ்மக்கள்மீது பாரிய போர் ஒன்றை இலங்கை அரசு பிரகடனத்துடன் திணிக்கத்தொடங்குகிறது. இந்தப்போரினால் தமிழர்களுடன். அப்பாவி முஸ்லீம்மக்கள்,அப்பாவிசிங்களமக்கள் கூட பாதிக்கப்படப்போகிறார்கள். பங்கரவாதத்திற்கு எதிரானது என்ற போர்வையில் இந்தப்போரை மேற்குலகம் ஆதரிக்கிறது என்றே கருதுகிறோம்.
தீபச்செல்வன்.
-------------