Thursday, October 11, 2007

நெருப்பின் கல்லறைவெளி..

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


பிணங்கள் அவர்களின்
தொலைந்த முகங்களைப் பார்த்து
கேள்வி கேட்டன
காயப்பட்ட முகங்கள்
அவர்களை பார்த்து
புன்னகைத்தன
ஆனால்
அவர்கள் மரணத்தின் பாடலுக்காக
மன்றாடினார்கள்.

அவர்கள் சொன்னார்கள்
மரணங்களை
எங்கள் மீது
ஏவி விடுங்கள் என்று
அதனால் நிலங்களுக்காக
குணத்தை வெறிப்படித்தினார்கள்.

அவர்கள் சொன்னார்கள்
எங்கள் உரிமைகளை
உரித்து கேவல் செய்யுங்கள் என்று
அதனால் எமது அடையாளம்
அதிகாரங்களின்
காலடியில் போடப்பட்டது.

இன்று அவர்கள்
ஒரு வெளிச்சத்தின்
முகவரியிலிருந்து புறப்படும்
மரணங்களின் பாடலுக்காக
காத்திருக்க வேண்டியிருக்கிறது.

மரணங்களுக்கு
ஏவல் செய்தவர்கள்
இருளை அறுவடை செய்து
ஓய்ந்திருக்கிறார்கள்
தீயிட்டவர்களுக்கு
நெருப்பிற்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

முகங்களை கொழுத்த
வந்தவர்களின்
முகங்கள் கருகிப்போயின
குரலை திருக முற்பட்டவர்கள்
குரல் தீர்ந்து
வார்த்தைக்கு கை ஏந்தி
பிச்சை கேட்டனர்.

பிணங்களுக்கு
ஆசைப்பட்டு அணிவகுக்க
தொடங்கியவர்கள்
பிணங்களாகினர்
உயிர்களைப் பறிக்க
அதிகாரம் செய்தவர்கள்
உயிர் தீர்ந்து அலைந்தனர்.

முகங்களை தொலைத்தனர்.

வெளிச்சத்தின் சந்தையில்
கைகளில் இருள் காசுகளுடன்
நெருப்பின்
கல்லைறை வெளியிலிருந்து
புறப்படும் மரணத்தின் பாடலுக்காக
காத்திருக்கிறார்கள்.
-------------------------------------------------------------

0 கருத்துகள்: