Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 5 செப்டம்பர், 2007

வேர்களின் முகங்கள்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

யாரும் இந்தவெளிகளை
திரும்பிப்பார்க்க வேண்டாம்
எல்லோரும்
இந்த மனித விடயத்தில்
தொடர்ந்து மௌனமாய் இருங்கள்
இரக்கமற்ற மௌனத்தின்
நிழலில் எதுவும்
தீர்ந்துவிடப் போவதில்லை
மிஞ்சும் துயரத்திலிருந்து
எல்லாவற்றுக்குமான முளைவரும்.

எமது துயரமும் பயணமும்
கணக்கிடுகிறது
மௌனங்களை விதைத்தவர்
நீங்களே என்று
வனங்களின் அடிக்கல்லில்.

வனங்களைச் சமைத்து
பரவிய பிறகு
தோள்களை நிமிர்த்தி
கோடரிகளோடு
எமது வனங்களுக்குள்
நீங்கள் நுழையவேண்டாம்
மரங்களைத் தறித்து
புதிதாய் பிறக்கும் மனிதத்தை
புதைக்க வேண்டாம்.

எங்கள் நிரந்தர
நிழலின் சூழலுக்காக
இப்போதே புதைகிறோம்.

ஒட்டிய முகங்களுடன்
எங்களைப்பார்த்து எழுதும் கவிதைகள்
வரையும் ஓவியங்கள்
எல்லாவற்றையும்
நீங்கள் கூடி வரவேற்கும் அறைகளில்
மாட்டி வையுங்கள்.

அதிகாரங்களின்
மேன்மை தங்கிய நிலையில்
பலியெடுக்கப்பட்ட உயிரின் கணக்குகள்
எல்லாம் தோற்றுப் போகிறது.
எங்களுடைய மொத்த வலியில்
பொருளாதாரமும் பாதுகாப்பும்
கீறப்படுகிறது.


விமானங்களால் சபிக்கப்படும்
வெளிகளாகவும்
எறிகணைகளால் தேடப்டும்
இலக்குகளாகவும்
நாங்கள் தீர்மானித்தபடி இருப்போம்.

உங்கள் மௌனத்தின் சூழலில்
அசூர வல்லமையில்
எமது அடையாளம் அழிந்து போகும்.
அவர்கள் கருதுகிறார்கள்
நம்புகிறார்கள்.

எல்லாம் அவசாகங்களில்
துடித்துப் போகிறது.
எதிர்பார்க்கவில்லை
நெருப்பு வார்க்கும் வதைகளை
தூக்கிலிட்டு சுருக்கும்
மின்சாரக்கயிறுகளை.

எல்லாமேதான் இங்கு
தீர்ந்துபோகிறது.
எல்லாருமே சிலுவைகளைச் சுமந்தபடி
மரணத்தில் புதைந்துகொள்கிறார்கள்.

எப்போதும் நாங்கள் புதைந்த
இந்த வெளிகளை
திரும்பிப்பார்க்க வேண்டாம்.
புதைகுழிகளைக் கிழறி
விபரம் கேட்கவோ
கணக்கிடவோ வேண்டாம்.
இப்போதே
நாளைய எமது வனங்களின்
வேர்களிடமிருந்து விடைபெறுங்கள்.
__________________________________

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...