Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 27 அக்டோபர், 2011

குழந்தைகளைத் தின்னும் பூதங்கள்

அச்சத்தை தவிர எதையும் அறியாத
குழந்தைகள் படிக்கும் கதைகளை கழித்துக்கொண்டு
கொடும் பூதங்கள் வந்து வாழ்வை உலுப்புகின்றன
இரத்தம் குடிக்கும் பூதங்கள்
குழந்தைகளுக்குப் பாலூட்டும் மார்புகளை
அறுத்து விழுங்குகின்றன
பூதங்கள் நிலத்தோடு
குழந்தைகளை தேடி விழுங்குகின்றன.

இருளைக் கண்டஞ்சிய குழந்தைகளின்
கண்களை பிடுங்கிச் செல்ல
இராணுவ உடைகளையும்
சிவப்புத் தோல்பட்டியையும் மறைத்து
குரூர உடைகளை அணிந்து
கூரிய கத்திபொருத்தப்பட்ட நகங்களுடன்
பூதங்கள் நிலத்திற்குள் நுழைந்து மிதந்தன.

பூதங்களை குறித்து குழந்தைகள் அறிந்திருக்காத
செயல்களினால் இன்னுமின்னும் மிரட்டப்படுகின்றனர்
சுவர்கரையோரமாகவும் அதன் பின்பக்கமாகவும்
கதவிற்குப் பின்னாலும் பூதங்கள் மறைந்திருந்து
வீடுகளை தின்பதாய் குழந்தைகள் அஞ்சுகின்றனர்
கிணற்றுள்குள் தங்கி வெறியேறும் பூதங்களால்
பயத்தோடும் பசியோடும்
பொழுதுகளை குழந்தைகள் கழிக்கின்றனர்.

அதிகாரம் கொளுத்து நடனமாடும்
கதிரைகளிலிருந்து கிளம்பும் பூதங்கள்
நாம் பார்த்திருக்க கிளம்பி மறைகின்றன
பேய் ஆள பூதங்கள் அலைகின்றன
ப+தங்கள் ஆள பேய்கள் அலைகின்றன.

பூதங்கள் பெரும்பசியோடு அலையும் தெருவில்
நசிந்து கிடக்கின்றன குரல்வளைகள்
இரத்தத்தோடு வார்த்தைகளையும் தின்னும்
பூதங்கள் மரங்களில் ஏறி ஒளிந்து
நிலத்தோடு எல்லாவற்றையும் உலுப்பியசைக்கின்றன
எந்தத் தாய்மார்களும் குழந்தைகளும்
பார்த்திராததும் கதைகளில் படித்திராததுமான பூதங்களை
இந்தக் குழந்தைகள் எதிர்கொள்ளச் சபிக்கப்பட்டுள்ளனர்.
_____________________
18.08.2011

தீபச்செல்வன்

(நன்றி : தீராநதி அக்டோபர் 2011)

சனி, 15 அக்டோபர், 2011

தீப்பூமி

கொலைகளுக்கு எதிராய்
தீப் பிழம்புகளைத் தின்று
செங்கொடி உயிரில் உக்கிரம் கொண்டாடினாள்
அதிகாரம் மூடியிருந்த பொழுது
எரிக்க முடியாத பூமியில் கலந்து விளைந்த
அதிகாரத்தை எரிக்க தன்னை எரித்தாள்
அன்றும் ஒருத்தி  கொலைக்கெதிராய்
பெரும் நகரத்தோடு எரிந்தாள்
செங்கோல்கள் உயிர்களை
குடிக்கும் பொழுதெல்லாம்
பூமியை காக்க எரித்தாடுகிறாள்
கொலைக்கத்திகள் எல்லோரையும் நோக்கின
உயிர் குடிக்கும் கயிறுகள்
எல்லோரையும் சுற்றின
இனம் திண்ணும்
வாய்கள் பெரும்பசியோடு நீண்டன
அரசர்கள் உயிரைக் கொல்லும் தீர்ப்பெழுதினர்
கருணையை நிராகரித்து
மரணத்தை பிரகடனம் செய்தனர்
கொதித்த நிலத்திற்காய்
செங்கொடி உடல்த் தீமரமாய்
எரிந்து பரவி கிளைகள் உலுப்பினாள்
சலங்கைகள் வெடித்துச் சிதறுண்டன
பறைகள் அதிர முழங்கின
பூமிக்காய் அவள் தீயில் நுழைந்த பொழுது
பூமி தீப்பிடித்தெரிந்தது.
_______________________
செங்கொடிக்கு

தீபச்செல்வன்

வெள்ளி, 14 அக்டோபர், 2011

கொலையாளிகள் அறிவித்துள்ள மரணதண்டனை

கழுத்துக்களை தின்பதற்கலையும்
தூக்குக்கயிற்றை எறியும் இயமியை சுமந்துவரும்
எருதுகளின் கால்கள் மிதித்து
நம்மைச் சிதைக்கின்றன
தலைப்பாகை ஒன்றினுள் லட்சம் எலும்புக்கூடுகள்
புதைக்கப்பட்டிருக்க
ஒற்றைச் சமாதியினுள்
ஒரு சனக்கூட்டத்தின் கனவு படைக்கப்பட்டிருக்கிறது
ஒரு கொடும் சிரிப்போடு
கொலையாளிகள் மரணதண்டனையை அறிவித்துள்ளனர்
சிவப்புத் துண்டுகள் தூக்குக்கயிறுகளாய் பின்னுகின்றன
அறிவிக்கப்படாத மரண தண்டனைகளால்
துடித்துக் கிடக்கிற இனத்தின்
கண்களை பிடுங்கி
கொம்பரசி தின்று தீர்த்துக்கொண்டிருக்கிறாள்
சிறைகளுக்குள் மூடி வைக்கப்படுகையில்
கம்பிகளை கிழித்து வெளிவரும்
குரல்களை தூக்குக் கயிறுகள் விழுங்குகின்றன
கொன்றடங்காத பசியில் இயமி ஆடுகிறாள்
காலம் குறித்து
கொலையிட்டுண்ணும்
அந்தக் கொலையாளிகளின் தூக்குக் கயிறுகளில்
நாம் தீர்ந்து கொண்டே போகிறோம்!
_____________________
தீபச்செல்வன்

புதன், 5 அக்டோபர், 2011

அமைதியின் நிழல்



மரணம் கொன்டக்கப்படும்
ஆயுதமாகும் பொழுது
யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள்
சனங்கள் அமைதியின் நிழலை
இப்பூமியில்
என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள்
இருள் கவிழந்த பொழுதில்
இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன்
உனது போரைத் துடைத்து
அதிகார நிழலை அடித்து விரட்டுகையில்
இப்பூமியில் வெளிச்சம் படரும்
இரத்தமும் காயமும் இல்லாத
பூக்கள் பூத்துக் கொட்டும்
அமைதியின் நிழலைப்
பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம்
அது எவ்வளவு அழகாயிருக்கும்?
_________________________
தீபச்செல்வன் 

திங்கள், 3 அக்டோபர், 2011

இல்லாத அறை


உயிர்த்தெழாது வாடிய
குருத்தோலையை மட்டும் விட்டுச் செல்கிறேன்
சுவர்களில் பதுங்குமளவுக்கு விழுந்த
குழிகளில் எல்லாம்
என் கனவுகள் நிறைக்கப்பட்டிருக்கின்றன
எப்பொழுதுமில்லாமல்
பல்லிகள் விழுந்து வெருண்டோடுகின்றன
வேண்டுமானால் விட்டுச் செல்கிறேன்
தேனீர் காயாத கோப்பைகளையும்
வாடிய பலகாரத் துண்டுகளையும்
கனவைத் துரத்தும் பயங்கரங்கள்
கொண்டாடிப் பருகுகின்றன என் காயாத குருதியை
கிழிக்கப்பட்ட கவிதைகளை பல்லிகள் சுமக்கின்றன
காயும் சவற்காரக் குறையை
குழாயில் கசியும் நீர்த்துளிகள் ஈரமாக்கின்றன
இல்லாத அறையில்
நான் திரிகிறேன்
நினைவுகள் கழற்றப்பட்ட சுவரில்
பிரியாத பாதிச் சித்திரத்தில்
சாம்பல் கொட்டுகிறது
அச்சுறுத்தல்களால் செய்யப்பட்ட
அறையில் இருந்து
துப்பாக்கிக் குண்டுகளால் செய்யப்பட்ட
கொடும் வெளிக்குச் செல்கிறது உயிர்த்தெழாத பறவை
இரத்தம் சொட்டும் கனவுகளால்
ஈரமாகும் என் முகத்தை துடைக்க யாருமில்லை!
_________________________
30.05.2011

நன்றி : மறுபாதி 

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...