Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 27 நவம்பர், 2018

புலியென உறுமும் பெருந்தீ




நாரை தலைகுனிந்திருக்கும்
எல்லாப் பூக்களும் சிவக்கும்
ஒரு பறவையாய் அசையும் நிலத்திற்
புரள்வாள் தாய்
வானம் மண்ணில் உருகித் தீரும்
காந்தளின் விழிகள் கசியும்
சிறகுகளில் விளக்குகளை சுமந்து
துயில் நிலங்களை வட்டமிடும்
பறவைகள் வரையும் தேச வரைபடத்தை
எல்லோரும் குரலெடுத்து அழைப்பர்
தாய் நிலம் கேட்டு
கல்லறைகள் கண் விழிக்கும்
வீரத் தலைவனின் பேருரை கேட்க
ஒரு புலியென உறுமும் தேசம்
மிலாசும் பெருந்தீ.
¤


தீபச்செல்வன்

புதன், 31 அக்டோபர், 2018

பயங்கரவாதி

   


பனை மரங்களை பிடுங்கி
கித்துல் மரங்களை விதைப்பாய்
என் பூர்வீக வீடுகளை சிதைத்து
இராணுவ முகாங்களை எழுப்பி
எனை பயங்கரவாதி என்பாய்

ஆலமரங்களை வீழ்த்தி
வெள்ளரச மரங்களை நடுவாய்
என் ஆதிச் சிவனை விரட்டி
புத்தரை குடியேற்றி
எனை பயங்கரவாதி என்பாய்


எனதுடலை நிர்வாணமாக்கி
இராணுவச் சீருடையை போர்த்துவாய்
எனது வீரர்களின் நடுகற்களை உடைத்து
உனது வெறிச் சின்னங்களை எழுப்பி
எனை பயங்கரவாதி என்பாய்

பிழையாய் எழுதியென் மொழியை அழித்து
உனது மொழியை திணிப்பாய்
எனது பாடல்களை அழித்து
புரியாத உன் பாடல்களையென் செவிகளுக்குள் சொருகி
எனை பயங்கரவாதி என்பாய்

எனது நிலங்களை அபகரித்து
உனது பெயர்களை சூட்டுவாய்
எல்லைகளை மெல்ல மெல்ல அரித்துண்டு
எனது தேச வரைபடத்தை
வரையுமென் கைகளுக்கு விலங்கிட்டு
எனை பயங்கரவாதி என்பாய்

ஆம், சிங்களத் தோழனே!
குழந்தைகளின் நிலத்தை காப்பவன்
பயங்கரவாதி எனில்
குழந்தைகளின் பூக்களை சேமிப்பவன்
பயங்கரவாதி எனில்
நான் பயங்கரவாதிதான்
இது பயங்கரவாதிகளின் பூமிதான்.
¤

■தீபச்செல்வன்

புதன், 24 அக்டோபர், 2018

இராணுவத்தினாலான தேசம்!





முன்பொருகாலத்தில் எனது தேசம் கடலாலானது
இப்போது இராணுவத்தினாலானது
எனது தொன்மங்களின்மீதெழுப்பட்ட இராணுவமுகாங்கள்
எனது வீட்டின் தளபாடங்களிலானது

எப்போழுதும் வீழா நந்திக்கடலருகே
பூவரசம் தடிகளில் செய்த வில்லினால்
இராணுவமுகாமை நோக்கி
அம்பெய்கிறான் கேப்பாபுலவுச் சிறுவன்.

பனியும் வெயிலும் தின்று தீர்த்தது
குழந்தையரின் புன்னகையை
எனினும், வாடிய மலரைப்போல
மரங்களின் கீழே தூங்கும் தொட்டில்களில்
அவர்களுமை சுற்றி வளைத்தே உறங்குகின்றனர்

துப்பாக்கிகளுக்கு அஞ்சாது
வெஞ்சினத்துடன் கொதித்தெழுகின்றனர் எம் பெண்கள்
வற்றாப்பளைக் கண்ணகிபோல
போராளிகளின் கதைகளில் வரும் நாயகிகள் போல

பள்ளிக்கூடம் செல்ல மறந்தவெம் சிறுவர்கள் பாடினர்
நிலம்மீதான பாடல்களை
கற்றனர் எப் பள்ளியும் கற்க முடியாத பாடத்தை

ஆக்கிரமிப்பு எதிரிப் படையே
கவர்ந்தவெம் நிலங்களை விட்டு உடனே வெளியேறு
இனி எனது தேசம்
கடலாலும் ஒரு பகுதி நிலத்தாலும் சூழ்ந்திருக்கட்டும்!
0

-தீபச்செல்வன்

சனி, 19 மே, 2018

'போர் இன்னும் ஓயவில்லை'


மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன்
உறவினர்களின் ஈமக் கிரியைக்காக
விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று
குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில்
என் பழைய கவிதைகளில் ஒன்றைப்
பகிர்ந்துகொள்ள தயக்கமாக இருக்கிறது நண்பா

இப்போதும் நினைவி்ருக்கிறது
போர் முடிந்து அடுத்த நாளாயிருக்க வேண்டும்
அவர்கள் கொல்லப்பட்ட லட்சம்
சனங்களின் சடலங்களை
ரசாயன பதார்த்தம் கொண்டு மறைவாக
அழித்து முடித்திருக்கக்கூடவில்லை
காயப்பட்டவர்களின் புண்களிலிருந்து
புழுக்கள் கொட்டித் தீரவில்லை
திரைப்படமொன்றைப் பார்த்து முடித்து
தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மூடியதைப்போல
எல்லாம் முடிந்துவிட்டது
இனி உனக்குச் செப்பனிடப்பட்ட காபெற் வீதிகளும்
வெள்ளையடிக்கப்பட்ட புதிய வீடுகளும் கிடைக்கும் என்றாய்
யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்தும்
அதன் கதைளை நீ ஏன் நிறுத்தவில்லை என்றாய் நேற்றும்
வகுப்பில் பதினொரு வயதுச் சிறுவன் ஒருவனுக்குச்
சிறுநீருடன் குருதி வெளியேறுகிறது என்றாள் தாயொருத்தி
போரில் தந்தையை இழந்த மற்றொரு பதினாறு வயதுச் சிறுமி
ரத்த அழுத்த மருத்துவ முகாமுக்குச் சென்று வந்திருந்தாள்
உனக்குச் சலிப்பூட்டும் உடைந்த வெண்கட்டிளால்
எழுதும் இக்கவிதைகளுக்காக
நீ ஒருபோதும் அழத் தேவையில்லை
இந்த நிலம் உன்னுடையதில்லை என
எழுதிச்செல்லும் வாசகங்களும்
என் பிள்ளைகளைத் தாருங்கள் எனக் காத்திருக்கும் தாய்மார்களும்
சாதாரணமாகிவிட்ட தெருக்கள் இருக்கையில்
இவை குறித்தெல்லாம் உனக்கு வருத்தம் இருக்காது நண்பா!

போரின் நெடு மௌனத்தைக் கலைக்காது
சிமென்ட் கொண்டும் காபெற் கொண்டும்
காயங்களைப் பூசி அழித்துவிடலாம் என அவர்கள் நம்பும்போது
இந்த நூற்றாண்டின் கொடும்போர் ஒன்று
ஒரு கணத்துடன் முடிந்துபோனது என நீயும் நம்புவாய்!
ஆம் நண்பனே, போர் அந்தக் கணத்துடன் முடிந்தேவிட்டது என்பதை
நானும் வெற்றுத் தோட்டாவால் எழுதிச் செல்கிறேன்.

- தீபச்செல்வன்

ஆனந்த விகடன் மின்னிதழ்

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

மகாவலி



உடலெங்கும் சிங்கக் கோடுகளில்
இராட்சத பாம்புபோல
காவி நிறத்துடன் நுழையுமொரு நதி
மென்று விழுங்கியது என் காடுகளை

நதியின் பெயரால்
துடைக்கப்படும் தேசத்தில்
முளைத்துச் சடைக்கின்றன களை வீடுகள்

தெற்கிலிருந்து
பண்டாவையும் புத்தனையும்
யுத்த டாங்கிகளையும்
அள்ளி வரும் நதி
எம் தலைநகரிலிருந்து
ஒரு வார்த்தையேனும்
எடுத்துச் சென்றதில்லை
எம்மீது நதியின்
ஒரு துளியும் பட்டதில்லை

பீரங்கியிலிருந்து பாயும்
குண்டுகளைப் போன்ற பேரலையின் எதிரே
சிவந்த கண்களுடனிருக்கும்
மாவிலாறு போலொரு சிறுவனும்
முகம் மறைக்கப்பட்ட
மணலாறு போலொரு சிறுமியும்
தாகத்துடன் அலைவதைக் கண்டேன்

எல்லோரும் விழித்திருக்கும் பொழுதில்
துப்பாக்கியை ஏந்தியபடி வீட்டுக்குள் புகும்
ஒரு இராணுவத்தினன் போல
என் நிலத்தில் நுழைகிறது மகாவலி.

தீபச்செல்வன்

2017

செவ்வாய், 20 மார்ச், 2018

பயங்கரவாதியின் மகள்


இறந்தேனும் தன் துணைவனைக்
கண்டுகொண்டாள் அவள்
இப்படி ஒரு நீள் பிரிவு
எந்தப் பெண்ணுக்கும்
கிடைத்துவிடக்கூடாதென.

ஆயுட் சிறைவண்டியில் ஏறினாள் சிறுமி
எந்தக் குழந்தையும் 
இப்படி ஒரு சிறை வண்டியில்
ஏறிவிடக்கூடதென.

தாயின் சடலத்தின் பின்
கொள்ளிக்குடத்துடன் சென்றான் சிறுவன்
எந்தக் குழந்தையும் 
இப்படி ஒரு வயதில் தன் தாயிற்கு
கொள்ளி சுமக்கக்கூடாதென.

காத்திருந்து காத்திருந்து இறந்துபோன துனைவிக்கு
விலங்கிடப்பட்ட கைகளால்
அரப்பும் சந்தனமும் அப்பினான் அவன்
எந்த ஒரு துணைவனுக்கும்
இப்படி ஒரு இறுதிச் சந்திப்பு  
நிகழ்ந்துவிடக்கூடாதென.

இரத்தச்சுவடுகளின்றி
துப்பாக்கிச் சத்தளின்றி தகர்ந்துபோனதொரு வீடு
குறுக்கும் மறுக்குமாக
பின்னப்பட்ட கம்பிகளினுள் சிறையிருக்கும்
பயங்கரவாதியின் மகள்
எண்ணிக் கொண்டாள்
ஒரு சிங்களக் குழந்தைக்கும்
இந்த நிலை நேர்ந்துவிடக்கூடாதென.

O தீபச்செல்வன் 


புதன், 28 பிப்ரவரி, 2018

ஒரு சோற்றுப் பருக்கைக்கான பிரேதப் பரிசோதனை



தன் காடுகளைப் பறிகொடுத்த ஆதிவாசியொருவன்
வீதியில் செல்கையில்,
சலவை தூளால் தோய்த்து
உலர்த்தப்பட்ட உடைகளை அணியாத
வாசனை கமழும் சவற்காரத்தால் உடலை கழுவி
நறுமணத் திரவியம் தெளித்துக்கொள்ளாத அவனை,
திருடன் என்றோம்
மலைகளும் மரங்களும் புதையல்களுமாயிருந்த
வனங்களை அவனிடமிருந்து திருடிவிட்டு.
தானியங்களை பூமிக்குப் பரிசளித்தவனை
இரண்டு கவளம் அரிசிக்காக
குழந்தமை வழியும் முகத்தில் அடித்துக் கொலை செய்தோம்.
கனிகளை எமக்குப் பரிசளித்தவனை
ஒரு சோற்றுப் பருக்கையைத் தேடி
கனிகளை எமக்குப் பரிசளித்தவனின்
உடலைக் கிழித்து
பிரேதப் பரிசோதனை செய்து திருடிக்கொண்டோம்
ஒரு வாழைப்பழத் துண்டையும்
சில காட்டுப் பழங்களையும்.மீந்திருந்ததுவோ பூமியை இழந்த
ஆதிவாசியினது இருளும் பசியும் படிந்த கண்களும்
கோதுமை என சந்தேகிக்கப்பட்டு
தேகம் எங்கும் அப்பியிருந்த
அழுக்கு எனப்பட்ட வனப் புழுதியும்.

- தீபச்செல்வன்

கேரளாவில் அருசி திருடியதாக கூறப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மதுவுக்காக

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...