Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 30 ஜூன், 2016

சிறு பொறி


மதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில்
திரும்ப முடியாமற் போகலாம் என
எண்ணுபவனின் கால் தடம்

மரணம் சைக்கிளின்
பின்கரியலில் ஏறியமர்ந்த தெருக்களில்
உள் உறிஞ்சிய பெருமூச்சு

நெஞ்சறைகளுக்குள் எழுதியெழுதி
தனை அழித்த நாட்களில்
நிராகரிக்கப்பட்டவனின் முனகல்

தன் தாய் மண்ணில் இறங்கி விளையாட
அடம்பிடிக்கும் குழந்தை போலோரு
கவிஞனின் குரல்

அதிகாரத்தை எதிர்த்தமையால்
கொலைப்பட்டியலில் இடப்பட்டவனின்
இரகசிய முகம்

மூன்றாம் நாள் பின் மாலையில்
உனை கொல்லவிருக்கிறோம்
என அறிவிக்கப்பட்ட பின்னர்
எழுதிய பதற்றமான இறுதிக்குறிப்பு

பதுங்குகுழிக்குள் வானம் இறங்கி
இருள் கவிழ்ந்து
போர் மண்ணை விழுங்கிச்
செறித்த காலத்தில்
தெறித்த சிறு பொறி

போரிருட்டில் அலையுமொரு சிறுவன்
கையில் ஏந்திய
அணையும் தீப்பந்தத்தை சுற்றியிருக்கும்
எழுத்துக்களின் கசியும் ஒளிபோலும்
இவ் வலை*.

தீபச்செல்வன்

ஜூன்30 2016

நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்


*'நீ கொல்லப்படுவாய்!' என சிங்கள இராணுவத்தால் எச்சரிக்கப்பட்ட காலங்களில் என் கவிதைகளை பாதுகாகத்தது இந்த வலைப்பதிவு. இதுதான் இறுதிக் குரலோ என்று அஞ்சியபடி பதிவேற்றப்பட்ட கவிதைகளை சேகரித்ததும் இந்தத் தளமே. எழுத்தின் தொடர்புகளை, உறவுகளை தந்ததும் இந்த தளமே. என் எழுத்துக்களை பலருக்கும் கொண்டு சேர்த்த இந்த எளிய வலைத்தளத்தை, போர் நிறைந்து மூடுண்ட கிளிநொச்சி நாட்களில் (30.06.2007) உருவாக்கி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. 

வியாழன், 9 ஜூன், 2016

கொஸ்கம II



நேற்றும் தோழி ஒருத்தி புற்றுநோயினால் இறந்துபோனாள்
காரணம் அறியா மரணங்களுக்கும்
இறந்து பிறக்கும் குழந்தைகளுக்கும்
சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கும்
வடக்கே வீசப்பட்ட கந்தக நஞ்சு வாயுவிற்கும்
தொடர்பில்லை என்றே கொள்க!

நண்பா, இன்று உனது ஊரில் குண்டுகள் வெடித்தபோது
எத்தனை விசாரணைகள்?
எத்தனை கண்டனங்கள்?
எத்தனை கேள்விகள்?
காற்றில் கலந்த விசத்தையும் அளந்தனரே!

அதெப்படி நண்பா!
எனதூரில் குண்டுகள் வெடிப்பது மாத்திரம்
கொண்டாடுதற்குரியதாய் இருக்கும்?

உலகின் குண்டுகளனைத்தையும்
முள்ளிவாய்க்காலில் நம் நெஞ்சில் கொட்டினரே?

குடிநீரில் விசம் கலப்பதுபோல
சோற்றில் விசத்துகளை பிசைவதுபோல
எம் காற்றிலும் நஞ்சைக் கலந்தனரே
விசமடர்ந்த காற்றை உள்ளிழுத்து
மூச்சடங்கினர் ஏதுமறியாக் குழந்தைகள்

கந்தகப்புகையில் ஊறிற்று முப்பது வருடங்கள்
வெடித்துச் சிதறும் குண்டுகளின்
வெடி வாசனையுள் வாழ்வு
கந்தகத் துகள் படிந்தது எல்லாவற்றிலும்

ஓ.. நாம் தமிழீழத்தவரா?
ஓ.. அவை வெடிக்கப்படவேண்டிய இடம்
எமது தேசம்தானா?

ஆம், தோழனே! எனது தேசம் முழுதும் எறியப்பட்ட
ஒவ்வொரு குண்டிலும்
எழுதாக் காரணமொன்றிருந்தது

'இது தமிழ்ழீழத்தை அழிக்கும் குண்டு'

நண்பா! குண்டுகள் அழிப்பதில்லை
கனவுகளையும் மூலங்களையும்
ஆனால், வெடிக்கும் குண்டுகளின் முன்னால்
நீயும் நானும் ஒன்றே!

ஆதலால் நண்பனே எனக்கும் உனக்கும் வேண்டும்
இராணுவமுகாங்களுமற்ற பிரதேசம்
நஞ்சு கலக்காத காற்று
மற்றும் வெடிபொருட்களற்ற பூமி.
0

தீபச்செல்வன்

கொஸ்கம இலங்கையின் தென்பகுதியில் உள்ள பிரதேசம். இப் பிரசேத்தில் உள்ள சாலாவ இராணுவமுகாமின் ஆயுதக்கிடங்கு வெடித்ததில் பிரதேசம் பெரும் அழிவுக்கு முகம் கொடுத்தது.

நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்

கொஸ்கம I


கந்தகப் புகை படிந்து கறுத்த சூரியன்
பீரங்கி இரண்டாகப் பிளந்த நிலா
செல்கள் கொலைசெய்த குளங்கள்
போர் அணைகளால் துண்டிக்கப்பட்ட ஆறுகள்
பொஸ்பரஸ் குண்டுகளால் நீவப்பட்ட குழந்தைகள்
விமானங்கள் மென்ற கோயில்கள், வீடுகள், தெருக்கள்
டாங்கிகள் கிழித்த நிலம்
திரும்புமிடமெல்லாம்
வெடிகுண்டுகளை நிரப்பிய இராணுவமுகாங்கள்
திறந்த குழாய்களுடன்
வீடு நோக்கி
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆட்லெறிகள்
நெற்றிகளை குறிபார்க்கும் துப்பாக்கிகள்
சன்னங்கள் சித்திரம் வரைந்திருக்கும்
உடலெங்கும் வெடிபொருட்களின் பாகங்களை
சுமந்தபடியிருக்கும் ஒருவனால்
வெடிகுண்டின் சிறு பெரியினால்
சிறுபுல் ஒன்று கருகுவதைக்கூட தாங்குதல் இயலாது.
0

தீபச்செல்வன்

நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...