Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 18 மே, 2016

முள்ளிவாய்க்கால் பரணி!







01
கால்கள் எதுவுமற்ற என் மகள்
தன் கால்களைக் குறித்து
ஒருநாள் கேட்கையில்
நான் என்ன சொல்வேன்?

அவர்கள் கூறினர்
யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென
ஒருவரும் கொல்லப்படவில்லையென
யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென

அவர்கள் கூறினர்
ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென
யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென

பின்னர் கூறினர்
போராளிகளே மக்களைக் கொன்றனரென
பின்னர் கூறினர்
படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென

இறுதியில் சொல்லினர்
யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென

எமை மீட்கும் யுத்தமென்றனர்
மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா?
மனிதாபிமான யுத்தமென்றனர்
பீரங்கியின் சுடுகுழலில் மனிதாபிமானமுண்டா?

நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்து
மேலும் அதை தொடர்ந்து
எல்லாவற்றையும் மறப்போமென்றனர்
எதையும் பகிராமல்
ஒருதாய் பிள்ளையென்றனர்

தாயற்ற என் மகளுக்கு
இதையெல்லாம் எப்படி விளக்குவேன்?

பழி வாங்கும் ஜனங்களென்றனர் ஒருபோது
மன்னிக்கத் தெரியாத ஜனங்களென்றனர் இன்னொருபோது

திரும்பாத இழப்பை
வெற்றி என்போரே!
என் மகளைக் குறித்து
நான் கண்ணீர் மல்குதல்தான்
பழிவாங்குதலா?

02
எனதாசை மகளே!
இம்மாபெரும் காயத்தை எப்படி ஆற்றுவோம்?
இம் மாபெரும் இழப்பை எப்படி நிரப்புவோம்?

காயங்களை மூடும்
இழப்புக்களை மறைக்கும்
தந்திரம் மிக்க வார்த்தை
என்னிடமில்லை

மீளப் பெறமுடியாத கால்களை மறந்து
கால்களை பறித்த வெற்றியை
கொண்டாடச் சொல்லினர்

அவர்களோ போருக்கு காரணம் சொல்லினர்
நாமோ அழிக்கப்பட்டதின் நியாயத்தை வேண்டினோம்
மகளே! போரிடம் என்ன நியாயம் இருக்கும்?

அது நம் குழந்தைகளை கருவிலே நசித்தது
அப்பாவிகளின்மீது குண்டுகளைப் பொழிந்தது
நிலத்துடன் லட்சம் மனிதர்களை
தின்று செரித்தது

எலும்புக்கூடுகளினிடையே
நிணங்களினிடையே
குருதியினிடையே
கொடி உலுப்பி மகிழ்ந்தது

அவர்கள் சொல்லுவதைப் போல
அந்தக் கணங்களை மறந்துவிட முடியுமோ?
அவர்கள் சொல்வதைப்போல
அந்தக் கணங்களை மன்னிக்க முடியுமோ?

திட்டமிட்டு செய்யப்பட்டவைகள்
மறக்கக்கூடியவை அல்லவே
வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டவைகள்
மனிக்கக்கூடியவை அல்லவே

03
ஆட்களற்ற வீடுகளைக் குறித்தும்
வீடுகளற்ற நிலங்களைக் குறித்தும்
புகைப்படங்களில் இருக்கும்
இல்லாதவர்களைக் குறித்தும்
பெயர் பட்டியல்களில் மாத்திரம் இருப்பவர்களைக் குறித்தும்
என் அன்பு மகளே என்னிடம் கேட்காதே?

இரத்தமும் சதைகளும் படிந்த
பழைய பத்திரிகைகளை
நீ விரித்துப் பார்க்காதபடி
மறைவாகவே வைத்துள்ளேன்

04
யுத்த வெற்றியின் பாடலில் மயங்கியபடி
எல்லாவற்றையுமே மறக்கும்படி சொல்லினர்
என் பிஞ்சுக் குழந்தை கால்களற்று நிற்கிறாள்
என் கால்களுக்கு என்ன ஆனது?
ஏன் என் கால்களை எறிகணைகள் தின்றனவென
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?

என் தாயிற்கும்
என் ஐந்து சகோதரர்களுக்கும் என்ன ஆகிற்று?
நம் பதுங்கு குழியில் யார் குண்டு வீசினரென
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?

மாபெரும் இனக்கொலையை ருசிக்கும்
பற்கள் நிரம்பிய கொடியை
என் மகளுக்கு பரிசளிக்கும்
இந்த நாட்களில் தொடங்குமொரு காலம்
எப்படியானதாய் இருக்கும்?

மேலுமொரு காயம் வேண்டாம் மகளே
மேலும் பலர் இல்லாதுபோக வேண்டாம் மகளே

05
நாம் கேட்பதெல்லாம்
உயிருக்கு உயிரல்ல
கொல்லப்பட்டவர்களை
நினைவுகூரும் உரிமையை
மாண்டுபோனவர்களின் கல்லறைகளை
அழுது கண்ணீர் விடும் விடுதலையை

நாம் கேட்பதெல்லாம்
குருதிக்குக் குருதியல்ல
அழிக்கப்பட்டவர்களுக்கு நீதியை

நாம் கேட்பதெல்லாம்
பழிக்குப் பழியல்ல
இன்னொரு இனக்கொலையற்ற அமைதிநிலத்தை

நாம் கேட்பதெல்லாம்
எவருடைய உரிமையையுமல்ல
எம்முடைய உரிமையை

எனதருமை மகளே!
நாம் கேட்பதெல்லாம்
நீதியின் உண்மையை
உண்மையின் நீதியை

உண்மைகளை நம் சடலங்ளைப் போலப் புதைத்து
இடுகாடுகளாக்கப்பட்ட நம் மண்மீது
எளிய நம் சனங்களின் குருதியினால்
பொய்யை புனைந்தெழுதிய அவர்களின் வீர வரலாறு
அழிக்கப்பட்டவர்களை உறங்கவிடாது


ஏனெனில் அவர்களின் போர்
சூழ்ச்சிகளினால் வென்றது
ஏனெனில் அவர்களின் போர்
அநீதிகளால் வென்றது
ஏனெனில் அவர்களின் போர்
விதிகளை மீறியது

05
எனதருமை மகளே!
நம்முடைய நிலத்தை அபகரிக்கவும்
தம்முடைய அதிகாரத்தை பரப்புவும்
நம்முடைய அரசை கலைக்கவும்
தம்முடைய வேர்களைப் பதிக்கவும்
நம்மை பூண்டோடு துடைக்கவும்
உனது கால்களை பிடுங்கி
உன் தாயையும்
ஐந்து சகோதரர்களையும் கொன்றனரென அறிகையில்
இந்த உலகத்தை குறித்து நீ என்ன நினைப்பாய்?

தீபச்செல்வன்

2016

ஓவியம்: றஷ்மி

பிரசுரம்: குளோபல் தமிழ் செய்திகள்

சனி, 7 மே, 2016

Non. Je ne suis pas Sri Lankais/ பிரெஞ்சு மொழியாக்கம்






நான் ஸ்ரீலங்கன் இல்லை/பிரெஞ்சு மொழிபெயாக்கம்

கவிதை- தீபச்செல்வன்
பிரெஞ்சு மொழியாக்கம் - க. வாசுதேவன்

Non. Je ne suis pas Sri Lankais!

Je possède un passeport
pour franchir les frontières,
comme un Palestinien en a un israélien

Je possède une carte d'identité
pour passer les barrières de contrôle
Comme un Irakien en a une américaine,

Je possède quelques monnaies
pour mes achats,
Comme un Syrien possède quelques Euros

On entonne un hymne national
sur ma terre,
Comme on entonne celui de l'Inde
A Manipur,

Une drapeau national est hissé
dans ma patrie,
Comme celui des Chinois flotte
en Tibet

Sur mon doigt, je porte l'emblème
du réfugié appatride,
Comme la brûlure sur la mains des Myanmarais

Auteur: Theepachelvan
Traduit par Vasudevan

க. வாசுதேவன் : ஈழத்தை சேர்ந்த கவிஞர் க.வாசுதேவன். புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழ்கிறார். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், என பன்முக ஆளுமைகொண்டவர். தொலைவில், அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே ஆகிய இரண்டு கவிதைநூல்களையும் தேர்ந்து எடுக்கப்பட்ட 19 நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிதைகள் என்ற கவிதை மொழிபெயர்ப்பையும் பிரெஞ்சுப் புரட்சி என்ற வரலாற்று நூலினையும் எழுதியவர்.

'Jeg er ikke Srilankeser’/நோர்வேஜியன் மொழியாக்கம்



* * *
For å krysse landegrenser
bærer jeg et pass
I likhet med Israelsk pass
i palestinernes hender

For å passere okkupantens sjekkposter
har jeg et Identitetskort
slik som Irakerne går med
Amerikanske identitetskort

For mine utgifter
Har jeg noen mynter
Akkurat som Syriske borgere
holder Euromynter i sine hender

I mitt hjemland
strømmer en nasjonalsang ut i luften
Slik som den Indiske nasjonalsangen
blir sunget i Manipur

Et nasjonalflagg er heist opp
på min jord
Samme som det Kinesiske flagget i Tibet

Fingrene mine
bærer et stempel
For å identifisere meg
som den 'statsløse flyktning'
Dette er som brannsår
på Burmeserenes hender!

* * *

- Dikt skrevet av (Tamil):Theepachelvan
- Oversatt av (Norsk): Rooban Sivarajah

Diktet uttrykker tamilenes lidelser på øya Sri Lanka ved å ta for seg lidelsene til de statsløse flytninger i forskjellige deler av verden. Tamilsk versjon av diktet var publisert i ’Anandavikatan’, en ukentlig magasin i det sør indiske delstaten ‘Tamil Naadu'.

0

புதன், 4 மே, 2016

கடற் குழந்தை



பேரலையை தின்று
பெருங்கரையில் துயில்கிறது
உறங்க ஓரிடமற்ற கடற் குழந்தை

செய்வதறியாது திகைத்துப்போயின பொம்மைகள்
பறந்தலைந்தன அவன் ஊதிய பலூன்கள்

கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
கவிழ்ந்து மிதக்கிறது
அவன் செய்த காகிதப் படகு

அவனருகில் வாடிக்கிடந்தன மீன்களும் கணவாய்களும்
யாருமற்று அநாதரவாக கிடப்பனுக்காய்
தலை குனிந்தன இறால்களும் நண்டுகளும்

பெருங்காற்றே நீயா அவனின் படகை கவிழ்த்தாய்?
பேரலையே நீயா அவனின் படகை உடைத்தாய்?

குடிவரவு சட்டத்தை மீறி
அய்ரோப்பியாவுக்குள் நுழைய எத்தனித்தான் என்றனர்
ஆயுதங்களை பரிசளிப்பவர்கள்
குடியகழ்வு சட்டத்தை மீறிச் சென்று
துருக்கிக்கரையில் துயில்கிறான் என்றனர்
யுத்தத்தின் முதலாளிகள்

ஏனெனில் அவன் சிரியக் குழந்தை

எதுவும் பேசாமல் குப்புறக் கிடந்தான் அய்லான் குர்தி*
குண்டு தின்று வீசிய ஈழக் குழந்தையர் போல
சன்னங்கள் துளைத்த ஆப்பகானியக் குழந்தைபோல
பிய்த்தெறியப்பட்ட ஈராக்கியக் குழந்தைபோல
துரப்பட்ட மயன்மாரியக் குழந்தைபோல
பசியால் துவண்ட சோமாலியாக் குழந்தைபோல

இன்னுமின்னும் எத்தனை தேசங்களின்
இன்னுமின்னும் எதற்காகவெல்லாம்
இன்னுமின்னும் எத்தனை குழந்தைகள்
இன்னுமின்னும் எங்கெல்லாம் வீசப்படுவர்?

ஈழக் கடற்கரையில் அன்றெமது குழந்தைகள்
கொன்று வீசப்பட்டபோது
எழவில்லை ஒரு குரலும்

ஏனெனில் அவர்கள் ஈழக் குழந்தையர்

யுத்தத்திற்கான உலகில்
குழந்தைகளுக்குச் சவக்குழியானது கடல்.
¤

தீபச்செல்வன்

நன்றி: காக்கைச் சிறகினிலே

“அய்லான் குர்தி“ ஓர் சிறியக் குழந்தை. போர் காரணமாக தன் நாட்டைவிட்டு அகதியாக வெளியேறி அய்ரோப்பாவிற்குள் நுழைய முற்பட்டபோது துருக்கில் நடந்த படகு விபத்தில் கடலில் மூழ்கி இறந்தான். அவனின் உடல் துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கியது. 



வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...