Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 9 ஆகஸ்ட், 2014

திருக்கேதீச்சரம்



பாடல்பெற்ற தலத்தில் பெற்றோம்
கொன்று மறைக்கபட்டவர்
எலும்புக்கூடுகளால் நிரப்பட்ட
மாபெரும் சவக்குழியை

உக்க மறுக்கும் எலும்புக்கூடுகள்
எந்த வாக்குமூலத்தையும் அளிக்கமுடியாதவையெனச்
சொல்பவனின் பல்லிடுக்குகளில்
சிக்கிப் படிந்துள்ளன சதைத்துண்டுகள்

உறக்கமற்ற மரணத்தோடு
மாபெரும் வதையோடு
சரிந்துபோய்க் கிடப்பவர்கள்
உக்க மறுக்கும் வார்த்தைகளோடிருந்ததை
நான் கண்டேன்

ஆ.. எனப் பிளந்த வாய்கள்
உடலுக்குக் குறுக்காய் கைகள்
தலைகள் திரும்பித் திரும்பி யாரைத் தேடின?
எலும்பாய் கிடக்கும் அச்சிறுவன்
என்ன குற்றமிழைத்திருப்பான்?

ஏன் எங்களைக் கொன்றீர்களெனும்
இறுதிவாக்குமூலங்கள்
இன்னமும் முனக
குற்றங்கள் நிறைந்த இரத்தத்தில்
நனைந்துபோனது திருக்கேதீஸ்வரத் தேவாரங்கள்

எல்லாமும் கொல்லப்படும் தேசத்தில்
எங்கும் சவக்குழிகள்
எங்கும் எலும்புக்கூடுகள்
கொல்லப்படமுடியாத வாக்குமூலங்களுடன்
அலைகின்றன மண்ணுக்கு அடியில்

மண்ணுக்குளிருந்து எழும்பி வருகின்றன
எலும்புக்கூடுகள்
யாருக்கும் புரியும் மொழியோடு

திருக்கேதீச்சரத்தானே நீயேனும்
எமக்காய் வந்தொரு சாட்சி சொல்லு!

0

தீபச்செல்வன்

2014 பெப்ருவரி

நன்றி: கணையாழி, ஞானம், குளோபல் தமிழ் நியூஸ்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

இருண்டகாலத்தின் பதுங்குழி


சொற்களற்றவர்களின் அசையா முகங்களில்
சங்கீதம் பாடி ஆடுகின்றன ஈக்கள்

இரவுக்கும் பகலுக்கும் இடையில் 
மாபெரும் யுத்தப்படை ஒன்று
என் கிராமத்தை கடந்து போயிருக்கையில்
காணவில்லை விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை

சாட்சிகளற்றவர்களின் நிலத்தில்
கைது செய்யப்பட்ட குழந்தை ஒன்றை
ஏற்றுக்கொள்ளவும் யாருமில்லை
மீண்டுமொரு இருண்ட காலத்தில் 
பதுங்குகின்றனர் குழந்தைகள்

வானத்தில் விமானங்கள் இல்லை
எத்திசைகளிலிருந்தும் செல்கள் வரவில்லை  
வானத்தையும் திசைகளையும் கண்டு
அஞ்சுகின்றன குழந்தைகள்

இப்போது எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை 
பீரங்கிகள் எதுவும் இல்லை
விமானங்களும் இல்லை
போர்க்களங்களைத் துறந்துவிட்டோம்
பாசறைகள் யாவற்றையும் மூடிவிட்டோம்
ஆனாலும் ஏனோ சுற்றிவளைக்கப்ட்டிருக்கிறோம்
ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது.

இராணுவம் ரோந்து செல்லும் வீதியில்
யாரோ ஒருவன் 
சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டான்

யாரோ கதவை தட்டிக்கொண்டிருக்கும்
வீட்டுக்குள் வசித்துக் கொண்டிருக்கிறேன்
யாரோ ஒருவன் துப்பாக்கியோடு 
துரத்திக் கொண்டிருக்கும் தெருவில்
சைக்கிளை மிதித்துக் கொண்டிருக்கிறேன்

எல்லோருமே தேடப்படும் நகரத்தில்
எனக்கொரு பதுங்குகுழி எங்கிருக்கிறது?

குழந்தைகள் பார்த்தில்லை ஒளிமிகுந்தகாலத்தை
என்னிடம் இருப்பதுவோ
இருண்டுபோன பதுங்குகுழிகள்.
0

தீபச்செல்வன் 

நன்றி: காலச்சுவடு, ஓகஸ்ட் 2014

தலைமறைவாயிருக்கும் பூனை


 
மீன் குழம்பின் வாசனையை முகரும்படி செய்து
சுடப்பட்ட கறுவாட்டுத் தலையை 
அடுப்பங்கரையில் தொங்கவிட்ட பின்னும்
திரும்பவில்லை தலைமறைவாயிருக்கும் பூனை
 
துள்ளி விளையாடும் வளைகளில்
எலிகள் பூனைகளுக்காய்
எச்சரிக்கை சுவரொட்டிகளை எழுதியிருக்கின்றன 
 
புத்தகங்களுக்கு மேலால்
படுக்கை அறையில்
அடுப்புச் சாம்பலுக்குள்
மயிர் கொட்டி உறங்கும் என் பூனை எங்கே?
 
வாய் கட்டுண்ட பூனை
மறைவாயிருந்து எந்தப் பாடல்களையும் படிப்பதில்லை
மௌன விரதமிருக்கும் அதற்கு 
எலிகள் கட்டியிருந்த மணியொன்று
அசையும்படியும் நகர்வதுமில்லை
 
இருண்ட காலத்தில் தலைமறைவாயிருக்கும் பூனை
மியாவ் என்றெழுப்பும் சங்கீதத்திற்காய்
காத்திருக்கிறது என் வீடு.
 
0

தீபச்செல்வன் 

நன்றி: காலச்சுவடு, ஓகஸட் 2014

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...