Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 19 ஜூன், 2014

உனக்காக கொந்தளிப்பேன்


நேற்று எனது ஊரையும்
இன்று உனது ஊரையும்
அழிக்க எங்கிருந்து புறப்பட்டனர்?
நண்பனே, சிதைக்கப்பட்ட கிராமம் ஒன்றிலிருந்து
உனக்காய் குரல் கொடுக்கும்
நானறிவேன் இழப்புகளின் வலியை

நேற்று எனது வீட்டையும்
இன்று உனது வீட்டையும் உடைப்பது ஏன்?
இடிபாடடைந்த வீடொன்றிலிருந்து
உனக்காய் அவதியுறும்
நானறிவேன் வீடற்ற பொழுதுகளை

நேற்று என்மீது குண்டுகளும்
இன்று உன்மீது வாள்களும் வீசுகின்றவர் யார்?
ஆறாத காயங்களோடு
உனக்காய் துடிக்கும் நானறிவேன்
காயங்களின் நிணத்தை

என் கோவில்களையும்
உன் பள்ளிவாசல்களையும் இடிப்பது ஏன்?
கடவுள்களையும் கொலை செய்யும் நிலத்திலிருந்து
உனக்காய் பிரார்த்திக்கும் நானறிவேன்
கைவிடப்படுதலின் துயரத்தை

என்னிடம் தொப்பி இல்லை
நீயோ திருநீறு அணித்திருக்கவில்லை
ஆனாலும் நமது இரத்தம் உறிஞ்சப்படுகிறது
வெறியோடு அலையும் விலங்குகளின் கண்களுக்கு
உறிஞ்சப்படும் குருதி வேறுவேறல்ல

என் சகோதரிகள் பர்தா அணிந்திருக்கவில்லை
உன் சகோதரிகளோ கூந்தலில்
பூச் சொருகியிருக்கவில்லை
ஆனாலும் நமது கண்ணீர் அருந்தப்படுகிறது
வெறியோடு அலையும் விலங்குகளின் கண்களுக்கு
நீயும் நானும் வேறுவேறல்ல

நண்பனே உன் கண்ணீரைத் துடைத்து
உனக்காக கொந்தளிக்கும்
நானறிவேன் ஒடுக்குமுறையின் குரூரத்தை.

0

தீபச்செல்வன்
18.06.2014

நன்றி: தீராநதி, குளோபல் தமிழ் செய்திகள்

புதன், 11 ஜூன், 2014

நான் ஸ்ரீலங்கன் இல்லை I



ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் 
எமை அழைத்தனர்  பயங்கரவாதிகளென 

ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை
பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா?
வேற்றினம் என்பதாற்தானே
அழிக்கின்றனர் நமது சந்ததிகளை

ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்
எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென 

ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை 
பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா?
வேற்று நாடு என்பதாற்தானே
ஆக்கிரமிக்கின்றனர் நமது நாட்டை

நாமொரு இனம்
எமக்கொரு மொழி
எமக்கென நிலம்
அதிலொரு வாழ்வு

வீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே! 
உறிஞ்சப்பட்ட குருதியும் 
மனிதப்படுகொலைகளும்  
அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தை? 

சுதந்திரம் எவ்வளவு இனிமையானதோ
அதைப் பெறுவதும் அவ்வளவு கடினமானதென்றபடி
மாபெரும் விதையாய் புதைந்திருப்பவளே
இன்னும் பல நூறு வருடங்களெனினும் 
நான் காத்திருப்பேன்

நீ அறிவாய்
நான் வரலாறு முழுதும் போராடுவேன்
அடிமையை எதிர்த்துக்கொண்டே இருப்பேன்

காதலியே! அடிமையால் என் அடையாளத்தை ஒழிக்க இயலுமோ?
ஆக்கிரமிப்பால் என் தேசத்தை மறைக்க இயலுமோ?
மாபெரும் சுற்றிவளையிலும்
நான் முன்னகர்வேன்!

நம் கண்களுக்கு முன்னால் விரிந்திருக்கும்
எனது நாட்டை
வேறொரு பெயரால் அழைக்காதே நண்பா!

ஒரு பாலஸ்தீனனை
இஸ்ரேலியரென அழைப்பயா?
என்னை சிறிலங்கன் என்று அழைக்காதே
நான் தமிழீழத்தவன்
எனது நாடு தமிழீழம்

மாபெரும் சமுத்திரத்தில் 
தொலைக்கப்பட்ட ஓர் ஊசியினை 
தேடியலைவதுபோல
அலைகிறேன் என் தாய்நாட்டைத் தேடி.

தீபச்செல்வன்

நன்றி: தீராநதி மே 2014

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...