Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 18 மே, 2014

முள்ளிவாய்க்கால் தீபம்



குருதி ஒழுகும் தினங்களால் நிரப்பப்பட்ட வரலாற்றின்
மறக்க முடியாத் தினங்களில்
அடக்கப்பட்ட நினைவிலிருந்து
ஒரு பறவை சிறகுலர்த்திப் பறக்கிறது

உயிர் அழிக்கும் ஞானத்தால்
மயானம் ஆக்கப்பட்ட தேசத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தருக்காய்
குருதி உறைந்த கடலின் மேல்
வண்ணங்கள் பூசப்பட்ட
எலும்புக் கூடுகளுக்குள் ஒளிர்கின்றன தீபங்கள்

எரிக்க முடியாத நினைவுகள்
குரலற்ற பாடல்களாய் எழ
தீபங்களுக்கு அலைகின்றன ஆன்மாக்கள்.

கொல்லப்பட்டவர்கள் மறைக்கப்பட்ட
நிலமெங்கும் குழந்தையின் புதைகுழியை தேடி
அலைகிறாள் தாயொருத்தி

தாயிற்கு தீபமொன்றை ஏற்ற முடியாக்
குழந்தையின் இருதயம்
தீப்பிடித்து எரிகிறது அனற்காடாய்

சிதைக்கப்பட்ட சமாதிகளின்மீது நடுப்பட்ட
இருள் மண்டிய அரச மரங்களில் வந்தமர்கிறது
காணாமல்போன துணையை தேடும்
ஆட்காட்டிக்குருவி.

அழிக்கப்பட்ட முகங்கள்
நட்சத்திரங்களில் தெரிய
நந்திக் கடலில் விழுந்து மிதக்கிறது
எரிந்து கொண்டிருக்கும் நிலவு.

சுற்றிவளைக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில்
தீபங்களை சுமக்கின்றன மின்மினிப்பூச்சிகள்.

தீபச்செல்வன்

மே 2014

ஆட்களை இழந்த வெளி


வானம் நேற்றுக் காலைவரை
உறைந்திருந்தது
இப்பொழுது சிதறி
கொட்டிக்கொண்டிருக்கிறது
வானம் அழுகிறதென யாரோ
சொல்லிக்கொண்டு போகிறார்கள்
இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை
சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கின்றனர்
குடி எரிந்து முடிகிறது.

ஹெலிஹொப்டர்கள் அலைந்து
கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது
எரிந்த வாகனங்களை
மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா
எல்லாம் நசிந்துபோக
அடங்கிக் கிடக்கிறது
ஆட்களை இழந்த வெளி.

கைப்பற்றப்பட்டவர்களாக
குழந்தைகளை தொலைக் காட்சிகள்
நாள் முழுவதும்
தின்று கொண்டிருந்தன
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நந்திக்கடலில்
பறவை விழுந்து மிதக்கிறது
பறவைதான் சனங்களை தின்றது
என்றனர் படைகள்
நந்திக்கடல்
உனது கழுத்தை நனைத்து
அழைத்துக்கொண்டு போயிருக்கிறது

உடைந்த ஆட்கள் குழிகளில்
நிரப்பட்டனா்
ஆடகளற்ற வெளி கரைந்து உருகுகிறது
மாடு காகத்தை சுமந்து
வீழ்ந்து கிடக்கிறது
அந்தச் சிறு கூடுகள் நிலத்தை
பிரித்து சிதறின.

இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை
பெரு மழை பெய்கிறது
எனினும் நந்திக்கடல் காய்ந்து போகிறது.

வானம் உருகிக்கொட்டியபடியிருக்க
மிருகம் ஒன்று
சூரியனை தின்று கொண்டிருக்கிறது
யாருமற்ற நிலத்தில்
தப்பிய ஒற்றை ஆட்காட்டிப் பறவை கத்துகிறது.

o தீபச்செல்வன்

18.05.2009

சனி, 10 மே, 2014

நகரத்திற்கு மேல் சுற்றும் பறவை


மழைநாளொன்றில் இருண்டபோன நகரத்தைச்
சுற்றிவளைத்து உன்னைத் தேடியவர்கள்
வீட்டின் கோடியைக் கிளறும்பொழுது
வெளித்தெரிந்தன புதைத்து வைக்கப்பட்ட கவிதைகள்

படுக்கையறையிலிருந்து வெடிகுண்டையும்
சமையலறையிலிருந்து ஆணுறையும்
கடவுளறையிலிருந்து ஆபாசப்படங்களையும் மீட்தாக
நகரமெங்கும் ஒலிபெருக்கியில் அறிவித்தனர்

எதிரிகள் ஆக்கிரமித்திருக்கும்
நம்முடைய நகரத்தில்தான் நடத்தப்பட்டது
பழி சுமத்தும் சுவரொட்டிகளுடன்
உனக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்

மழையில் நனைந்தபடி
கைகட்டி நின்றனர் நம்முடைய நகரின் சனங்கள்

எதுவும் நடக்கக்கூடிய நம்முடைய நகரத்தில்
கை நிறையப்பொருட்களுடன்
வருபவர்கள் யாருடைய பொக்கற்றிலும்
சொருகிச் செல்லக் கூடும் எதையும்

பூவுக்கு ஏங்கும் குழந்தையின் கனவை எழுதிய
உனது கைகளுக்கு விலங்கிடப்பட்டது
நீ பிறந்த நகரில் நான் ஒளித்து வைத்திருக்கிறேன்
உன்னுடைய ஐந்து கவிதைகளை

நான் கண்டேன்
விலங்கிடப்பட்ட ஒரு பறவை சுற்றிக்கொண்டிருந்தது
மழைநாளில் நனைந்து காயாதிருந்த நகரத்தை.

தீபச்செல்வன்

பொன்.காந்தனுக்கு

2013

நன்றி - காலம் இதழ்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...