Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 30 நவம்பர், 2014

காந்தள் மலர்கள்

வானம் பார்த்திருந்து
மழையை தாகத்தோடு அருந்தி
கிழங்குகள் வேரோடி
நிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறது
காந்தள்க் கொடி.
எதற்காக இந்தப் பூக்கள்
வருடம் தோறும்
கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன?
ஒரு சொட்டு கண்ணீர் விடவும்
ஒரு விளக்கு ஏற்றவும்
மறுக்கப்படுகையில்
எதுவும் இல்லையென
எல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில்
அனல் கனக்கும் தாயின் கருப்பையை
ஈரமாகிக்கின்றன காந்தள் மலர்கள்
தாயின் கனவு வண்ணமாய்
தாகத்தோடு பூக்கும் காந்தள் மலர்களை
யாரால் தடுக்க இயலும்?
தீபச்செல்வன்

சனி, 9 ஆகஸ்ட், 2014

திருக்கேதீச்சரம்



பாடல்பெற்ற தலத்தில் பெற்றோம்
கொன்று மறைக்கபட்டவர்
எலும்புக்கூடுகளால் நிரப்பட்ட
மாபெரும் சவக்குழியை

உக்க மறுக்கும் எலும்புக்கூடுகள்
எந்த வாக்குமூலத்தையும் அளிக்கமுடியாதவையெனச்
சொல்பவனின் பல்லிடுக்குகளில்
சிக்கிப் படிந்துள்ளன சதைத்துண்டுகள்

உறக்கமற்ற மரணத்தோடு
மாபெரும் வதையோடு
சரிந்துபோய்க் கிடப்பவர்கள்
உக்க மறுக்கும் வார்த்தைகளோடிருந்ததை
நான் கண்டேன்

ஆ.. எனப் பிளந்த வாய்கள்
உடலுக்குக் குறுக்காய் கைகள்
தலைகள் திரும்பித் திரும்பி யாரைத் தேடின?
எலும்பாய் கிடக்கும் அச்சிறுவன்
என்ன குற்றமிழைத்திருப்பான்?

ஏன் எங்களைக் கொன்றீர்களெனும்
இறுதிவாக்குமூலங்கள்
இன்னமும் முனக
குற்றங்கள் நிறைந்த இரத்தத்தில்
நனைந்துபோனது திருக்கேதீஸ்வரத் தேவாரங்கள்

எல்லாமும் கொல்லப்படும் தேசத்தில்
எங்கும் சவக்குழிகள்
எங்கும் எலும்புக்கூடுகள்
கொல்லப்படமுடியாத வாக்குமூலங்களுடன்
அலைகின்றன மண்ணுக்கு அடியில்

மண்ணுக்குளிருந்து எழும்பி வருகின்றன
எலும்புக்கூடுகள்
யாருக்கும் புரியும் மொழியோடு

திருக்கேதீச்சரத்தானே நீயேனும்
எமக்காய் வந்தொரு சாட்சி சொல்லு!

0

தீபச்செல்வன்

2014 பெப்ருவரி

நன்றி: கணையாழி, ஞானம், குளோபல் தமிழ் நியூஸ்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

இருண்டகாலத்தின் பதுங்குழி


சொற்களற்றவர்களின் அசையா முகங்களில்
சங்கீதம் பாடி ஆடுகின்றன ஈக்கள்

இரவுக்கும் பகலுக்கும் இடையில் 
மாபெரும் யுத்தப்படை ஒன்று
என் கிராமத்தை கடந்து போயிருக்கையில்
காணவில்லை விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை

சாட்சிகளற்றவர்களின் நிலத்தில்
கைது செய்யப்பட்ட குழந்தை ஒன்றை
ஏற்றுக்கொள்ளவும் யாருமில்லை
மீண்டுமொரு இருண்ட காலத்தில் 
பதுங்குகின்றனர் குழந்தைகள்

வானத்தில் விமானங்கள் இல்லை
எத்திசைகளிலிருந்தும் செல்கள் வரவில்லை  
வானத்தையும் திசைகளையும் கண்டு
அஞ்சுகின்றன குழந்தைகள்

இப்போது எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை 
பீரங்கிகள் எதுவும் இல்லை
விமானங்களும் இல்லை
போர்க்களங்களைத் துறந்துவிட்டோம்
பாசறைகள் யாவற்றையும் மூடிவிட்டோம்
ஆனாலும் ஏனோ சுற்றிவளைக்கப்ட்டிருக்கிறோம்
ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது.

இராணுவம் ரோந்து செல்லும் வீதியில்
யாரோ ஒருவன் 
சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டான்

யாரோ கதவை தட்டிக்கொண்டிருக்கும்
வீட்டுக்குள் வசித்துக் கொண்டிருக்கிறேன்
யாரோ ஒருவன் துப்பாக்கியோடு 
துரத்திக் கொண்டிருக்கும் தெருவில்
சைக்கிளை மிதித்துக் கொண்டிருக்கிறேன்

எல்லோருமே தேடப்படும் நகரத்தில்
எனக்கொரு பதுங்குகுழி எங்கிருக்கிறது?

குழந்தைகள் பார்த்தில்லை ஒளிமிகுந்தகாலத்தை
என்னிடம் இருப்பதுவோ
இருண்டுபோன பதுங்குகுழிகள்.
0

தீபச்செல்வன் 

நன்றி: காலச்சுவடு, ஓகஸ்ட் 2014

தலைமறைவாயிருக்கும் பூனை


 
மீன் குழம்பின் வாசனையை முகரும்படி செய்து
சுடப்பட்ட கறுவாட்டுத் தலையை 
அடுப்பங்கரையில் தொங்கவிட்ட பின்னும்
திரும்பவில்லை தலைமறைவாயிருக்கும் பூனை
 
துள்ளி விளையாடும் வளைகளில்
எலிகள் பூனைகளுக்காய்
எச்சரிக்கை சுவரொட்டிகளை எழுதியிருக்கின்றன 
 
புத்தகங்களுக்கு மேலால்
படுக்கை அறையில்
அடுப்புச் சாம்பலுக்குள்
மயிர் கொட்டி உறங்கும் என் பூனை எங்கே?
 
வாய் கட்டுண்ட பூனை
மறைவாயிருந்து எந்தப் பாடல்களையும் படிப்பதில்லை
மௌன விரதமிருக்கும் அதற்கு 
எலிகள் கட்டியிருந்த மணியொன்று
அசையும்படியும் நகர்வதுமில்லை
 
இருண்ட காலத்தில் தலைமறைவாயிருக்கும் பூனை
மியாவ் என்றெழுப்பும் சங்கீதத்திற்காய்
காத்திருக்கிறது என் வீடு.
 
0

தீபச்செல்வன் 

நன்றி: காலச்சுவடு, ஓகஸட் 2014

வெள்ளி, 25 ஜூலை, 2014

குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி

பள்ளிக்கூடம் செல்ல
ஓர் தெருவைக் காட்டவில்லை
காவலரணற்ற
ஓர் நகரைக் காட்டவில்லை

துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ
ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை

பூர்வீக நிலத்தையும்
மூதாதையரின் வீட்டையும்
காட்ட முடியவில்லை

சிறு அமைதியையோ
அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை

காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை 

அலைகடலையும்
எழும் சூரியனையும்
காயங்களற்ற ஒரு பொம்மையையும்
கிழியாத பூக்களையும் 
பறவைகள் நிறைந்த வானத்தையும்
காட்ட முடியவில்லை

எல்லா உறுப்புக்களையும் புணர்பவர்களை
சூழ நிறுத்திவிட்டு 
காட்ட முடியாதிருந்தோம் 
ஒளியிருக்கும் திசையை 

ஈற்றில் வழங்கியிருக்கிறோம் 
ஆண்குறிகளை அடையாளம்
காட்டுமொரு காலத்தை. 

0

தீபச்செல்வன்


நன்றி: தீராநதி

சனி, 12 ஜூலை, 2014

காஸா நகர் குழந்தைகள்

குழந்தைகள் அஞ்சிப் 
பதுங்கியிருக்கும் நகரில்
பிறக்கப்போகும் இன்னொரு குழந்தைக்காய்
எப்படிக் காத்திருப்பது?

ஒவ்வொரு இஸ்ரேலியப் படையினனும்
துரத்திக் கொண்டிருக்கிறான் 
ஒரு பாலஸ்தீனக் குழந்தையை

அவர்கள் ஏன் குழந்தைகள்மீது
குண்டுகளை வீசுகிறார்கள்?

தமது துப்பாக்கிகளை 
ஏன் குழந்தைகளுக்கு எதிராய்
திருப்புகிறார்கள்?

ஒவ்வொரு பாலஸ்தீனரின் கைகளிலும் 
ஒரு குழந்தையின் பிணம்

குழந்தைகளற்ற
குழந்தைகள் பதுங்கியிருக்கும் 
ஓர் நகரை
எப்படி அழைப்பது?

ஓர் ஈழக் குழந்தையை 
கருவில் கரைத்துக் கொல்லும்போது
பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை 
குண்டுகள் தின்று போட்டிருக்கின்றன

குழந்தைகளைக் கொல்பவர்களின் நோக்கம்
என்னவாய் இருக்கும்?

0


தீபச்செல்வன்

நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்

புதன், 9 ஜூலை, 2014

சிறுமியைத் தேடும் காகம்


ஆழ் கடலிடியில் அமிழ்த்தப்பட்ட
காற்று நிரம்பிய பலூனைப் போலொரு 
இருதயத்தோடிருக்கும் சிறுமி 
தன் குரல்களை தானே நசிக்கிறாள்
 
பறிக்கப்படாத உண்ணிப் பழங்களை
உண்ணும் வண்டுகள் உனைத் தேடுகின்றன
நாவற் தடிகளால் அடித்து
வகுப்பெடுக்கும் செடிகள் வாடிப்போயிருக்கின்றன 
 
குழந்தைகள் காணாமல் போகுமொரு தேசத்தில்
இனி என்னதான் இருக்கும்?
 
எனது  தேசத்தின் குரலாயிருந்த சிறுமியே!
முன்பு குழந்தைகளுக்குச் சவப்பெட்டிகள்
விற்கப்பட்ட நகரில்
இப்போது சிறைச்சாலைகள் திறக்கையில்
எப்படி உனக்கு ரிப்பன்கள் வாங்கித் தருவேன்?
 
அண்ணாவுக்காக அழுதது குற்றமெனவும் 
அவனைத் தேடியது தண்டனைக்குரியதெனவும்
உன்னையும் கடத்துகையில்
நீயும் காணாமல் போகிறாய்
காணாமல் போய்விட்டன பள்ளிக்கூடக் கதிரைகளும்
 
அண்ணாவோடு ஓடிப் பிடித்து விளையாடவும்
அம்மாவின் உணவுகளை தட்டிப் பறித்து உண்ணவும்
வளர்க்கப்பட்ட கனவுகள்
அனுமதிக்கப்படாத தேசத்தில்
உனக்கொரு பந்து கொடுத்திருக்கிறார்கள்
 
சிறைவைக்கப்ப்ட்ட அம்மாவைத் தேடி 
நடு நிசிகளில் எழுந்து குந்திருந்து 
அழுமுன் குரலை திருகிவிட
நள்ளிரவில் திக்கிட்டுக் கத்துகிறது ஊர்க்குருவி
 
உனைச் சுற்றி நிற்கும் படைகள் 
பொம்மைகளே தம்மிடம் இருக்கின்றதெனச் சொல்கையில்
உன்னை எப்படி விடுவிப்பதெனத்  
துடிக்கிறது உன் பொம்மை
 
பனியுறைந்த வயல்களைக் கடந்து
பழங்களை வீழ்த்த வீரமரங்களுக்கு 
தடியெரிந்து செல்லுகையில் 
நீ கதை பேசிய காகமொன்று 
தனியே கரைந்து இந்த நகரத்தை அதிரச்செய்கிறது.

தீபச்செல்வன்

நன்றி: ஜீவநதி ஏழாவது ஆண்டு மலர்

வியாழன், 19 ஜூன், 2014

உனக்காக கொந்தளிப்பேன்


நேற்று எனது ஊரையும்
இன்று உனது ஊரையும்
அழிக்க எங்கிருந்து புறப்பட்டனர்?
நண்பனே, சிதைக்கப்பட்ட கிராமம் ஒன்றிலிருந்து
உனக்காய் குரல் கொடுக்கும்
நானறிவேன் இழப்புகளின் வலியை

நேற்று எனது வீட்டையும்
இன்று உனது வீட்டையும் உடைப்பது ஏன்?
இடிபாடடைந்த வீடொன்றிலிருந்து
உனக்காய் அவதியுறும்
நானறிவேன் வீடற்ற பொழுதுகளை

நேற்று என்மீது குண்டுகளும்
இன்று உன்மீது வாள்களும் வீசுகின்றவர் யார்?
ஆறாத காயங்களோடு
உனக்காய் துடிக்கும் நானறிவேன்
காயங்களின் நிணத்தை

என் கோவில்களையும்
உன் பள்ளிவாசல்களையும் இடிப்பது ஏன்?
கடவுள்களையும் கொலை செய்யும் நிலத்திலிருந்து
உனக்காய் பிரார்த்திக்கும் நானறிவேன்
கைவிடப்படுதலின் துயரத்தை

என்னிடம் தொப்பி இல்லை
நீயோ திருநீறு அணித்திருக்கவில்லை
ஆனாலும் நமது இரத்தம் உறிஞ்சப்படுகிறது
வெறியோடு அலையும் விலங்குகளின் கண்களுக்கு
உறிஞ்சப்படும் குருதி வேறுவேறல்ல

என் சகோதரிகள் பர்தா அணிந்திருக்கவில்லை
உன் சகோதரிகளோ கூந்தலில்
பூச் சொருகியிருக்கவில்லை
ஆனாலும் நமது கண்ணீர் அருந்தப்படுகிறது
வெறியோடு அலையும் விலங்குகளின் கண்களுக்கு
நீயும் நானும் வேறுவேறல்ல

நண்பனே உன் கண்ணீரைத் துடைத்து
உனக்காக கொந்தளிக்கும்
நானறிவேன் ஒடுக்குமுறையின் குரூரத்தை.

0

தீபச்செல்வன்
18.06.2014

நன்றி: தீராநதி, குளோபல் தமிழ் செய்திகள்

புதன், 11 ஜூன், 2014

நான் ஸ்ரீலங்கன் இல்லை I



ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் 
எமை அழைத்தனர்  பயங்கரவாதிகளென 

ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை
பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா?
வேற்றினம் என்பதாற்தானே
அழிக்கின்றனர் நமது சந்ததிகளை

ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்
எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென 

ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை 
பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா?
வேற்று நாடு என்பதாற்தானே
ஆக்கிரமிக்கின்றனர் நமது நாட்டை

நாமொரு இனம்
எமக்கொரு மொழி
எமக்கென நிலம்
அதிலொரு வாழ்வு

வீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே! 
உறிஞ்சப்பட்ட குருதியும் 
மனிதப்படுகொலைகளும்  
அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தை? 

சுதந்திரம் எவ்வளவு இனிமையானதோ
அதைப் பெறுவதும் அவ்வளவு கடினமானதென்றபடி
மாபெரும் விதையாய் புதைந்திருப்பவளே
இன்னும் பல நூறு வருடங்களெனினும் 
நான் காத்திருப்பேன்

நீ அறிவாய்
நான் வரலாறு முழுதும் போராடுவேன்
அடிமையை எதிர்த்துக்கொண்டே இருப்பேன்

காதலியே! அடிமையால் என் அடையாளத்தை ஒழிக்க இயலுமோ?
ஆக்கிரமிப்பால் என் தேசத்தை மறைக்க இயலுமோ?
மாபெரும் சுற்றிவளையிலும்
நான் முன்னகர்வேன்!

நம் கண்களுக்கு முன்னால் விரிந்திருக்கும்
எனது நாட்டை
வேறொரு பெயரால் அழைக்காதே நண்பா!

ஒரு பாலஸ்தீனனை
இஸ்ரேலியரென அழைப்பயா?
என்னை சிறிலங்கன் என்று அழைக்காதே
நான் தமிழீழத்தவன்
எனது நாடு தமிழீழம்

மாபெரும் சமுத்திரத்தில் 
தொலைக்கப்பட்ட ஓர் ஊசியினை 
தேடியலைவதுபோல
அலைகிறேன் என் தாய்நாட்டைத் தேடி.

தீபச்செல்வன்

நன்றி: தீராநதி மே 2014

ஞாயிறு, 18 மே, 2014

முள்ளிவாய்க்கால் தீபம்



குருதி ஒழுகும் தினங்களால் நிரப்பப்பட்ட வரலாற்றின்
மறக்க முடியாத் தினங்களில்
அடக்கப்பட்ட நினைவிலிருந்து
ஒரு பறவை சிறகுலர்த்திப் பறக்கிறது

உயிர் அழிக்கும் ஞானத்தால்
மயானம் ஆக்கப்பட்ட தேசத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தருக்காய்
குருதி உறைந்த கடலின் மேல்
வண்ணங்கள் பூசப்பட்ட
எலும்புக் கூடுகளுக்குள் ஒளிர்கின்றன தீபங்கள்

எரிக்க முடியாத நினைவுகள்
குரலற்ற பாடல்களாய் எழ
தீபங்களுக்கு அலைகின்றன ஆன்மாக்கள்.

கொல்லப்பட்டவர்கள் மறைக்கப்பட்ட
நிலமெங்கும் குழந்தையின் புதைகுழியை தேடி
அலைகிறாள் தாயொருத்தி

தாயிற்கு தீபமொன்றை ஏற்ற முடியாக்
குழந்தையின் இருதயம்
தீப்பிடித்து எரிகிறது அனற்காடாய்

சிதைக்கப்பட்ட சமாதிகளின்மீது நடுப்பட்ட
இருள் மண்டிய அரச மரங்களில் வந்தமர்கிறது
காணாமல்போன துணையை தேடும்
ஆட்காட்டிக்குருவி.

அழிக்கப்பட்ட முகங்கள்
நட்சத்திரங்களில் தெரிய
நந்திக் கடலில் விழுந்து மிதக்கிறது
எரிந்து கொண்டிருக்கும் நிலவு.

சுற்றிவளைக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில்
தீபங்களை சுமக்கின்றன மின்மினிப்பூச்சிகள்.

தீபச்செல்வன்

மே 2014

ஆட்களை இழந்த வெளி


வானம் நேற்றுக் காலைவரை
உறைந்திருந்தது
இப்பொழுது சிதறி
கொட்டிக்கொண்டிருக்கிறது
வானம் அழுகிறதென யாரோ
சொல்லிக்கொண்டு போகிறார்கள்
இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை
சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கின்றனர்
குடி எரிந்து முடிகிறது.

ஹெலிஹொப்டர்கள் அலைந்து
கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது
எரிந்த வாகனங்களை
மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா
எல்லாம் நசிந்துபோக
அடங்கிக் கிடக்கிறது
ஆட்களை இழந்த வெளி.

கைப்பற்றப்பட்டவர்களாக
குழந்தைகளை தொலைக் காட்சிகள்
நாள் முழுவதும்
தின்று கொண்டிருந்தன
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நந்திக்கடலில்
பறவை விழுந்து மிதக்கிறது
பறவைதான் சனங்களை தின்றது
என்றனர் படைகள்
நந்திக்கடல்
உனது கழுத்தை நனைத்து
அழைத்துக்கொண்டு போயிருக்கிறது

உடைந்த ஆட்கள் குழிகளில்
நிரப்பட்டனா்
ஆடகளற்ற வெளி கரைந்து உருகுகிறது
மாடு காகத்தை சுமந்து
வீழ்ந்து கிடக்கிறது
அந்தச் சிறு கூடுகள் நிலத்தை
பிரித்து சிதறின.

இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை
பெரு மழை பெய்கிறது
எனினும் நந்திக்கடல் காய்ந்து போகிறது.

வானம் உருகிக்கொட்டியபடியிருக்க
மிருகம் ஒன்று
சூரியனை தின்று கொண்டிருக்கிறது
யாருமற்ற நிலத்தில்
தப்பிய ஒற்றை ஆட்காட்டிப் பறவை கத்துகிறது.

o தீபச்செல்வன்

18.05.2009

சனி, 10 மே, 2014

நகரத்திற்கு மேல் சுற்றும் பறவை


மழைநாளொன்றில் இருண்டபோன நகரத்தைச்
சுற்றிவளைத்து உன்னைத் தேடியவர்கள்
வீட்டின் கோடியைக் கிளறும்பொழுது
வெளித்தெரிந்தன புதைத்து வைக்கப்பட்ட கவிதைகள்

படுக்கையறையிலிருந்து வெடிகுண்டையும்
சமையலறையிலிருந்து ஆணுறையும்
கடவுளறையிலிருந்து ஆபாசப்படங்களையும் மீட்தாக
நகரமெங்கும் ஒலிபெருக்கியில் அறிவித்தனர்

எதிரிகள் ஆக்கிரமித்திருக்கும்
நம்முடைய நகரத்தில்தான் நடத்தப்பட்டது
பழி சுமத்தும் சுவரொட்டிகளுடன்
உனக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்

மழையில் நனைந்தபடி
கைகட்டி நின்றனர் நம்முடைய நகரின் சனங்கள்

எதுவும் நடக்கக்கூடிய நம்முடைய நகரத்தில்
கை நிறையப்பொருட்களுடன்
வருபவர்கள் யாருடைய பொக்கற்றிலும்
சொருகிச் செல்லக் கூடும் எதையும்

பூவுக்கு ஏங்கும் குழந்தையின் கனவை எழுதிய
உனது கைகளுக்கு விலங்கிடப்பட்டது
நீ பிறந்த நகரில் நான் ஒளித்து வைத்திருக்கிறேன்
உன்னுடைய ஐந்து கவிதைகளை

நான் கண்டேன்
விலங்கிடப்பட்ட ஒரு பறவை சுற்றிக்கொண்டிருந்தது
மழைநாளில் நனைந்து காயாதிருந்த நகரத்தை.

தீபச்செல்வன்

பொன்.காந்தனுக்கு

2013

நன்றி - காலம் இதழ்

சனி, 19 ஏப்ரல், 2014

கொழும்பு



எனது காயங்களை ஆற்றக்கூடிய
எனது வார்த்தைகளை புரிந்துகொள்ளக்கூடிய
எனது நியாயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய
நண்பர் ஒருவரை
இந்த நகரத்தில் சந்திக்கக்கூடுமென எதிர்பார்க்கிறேன்

தலையற்ற பனைகளுக்குள் வடலிகள் முளைக்குமென
பறிக்கப்பட்ட வீடுகளுக்கு நாம் திரும்பவேண்டுமென
அழிக்கப்பட்ட நகரங்கள் உயிர்க்குமென
சிதைக்கப்பட்ட கிராமங்கள் செழிக்குமென
சொல்லக்கூடிய ஒருவரை கடற்கரை இருக்கைகளில் தேடுகிறேன்

காணாமல் போனவர்கள் திரும்ப வேண்டுமெனவும்
பிள்ளைகளை இழந்த தாய்மாரின் கண்ணீர் துடைக்கவேண்டுமெனவும்
கொல்லப்பட்டவர்களின் கனவு மெய்யாகவேண்டுமெனவும்
சொல்லக்கூடிய ஒருவரை 
இந்தத் தெருக்களில் சந்திக்க காத்திருக்கிறேன் 

யாவற்றின் பிறகும்
எனது தாய்மொழியை மதிக்கும் ஒருவரை
எனது இனத்தை ஏற்கும் ஒருவரை
எனது தேசத்தை அங்கீகரிக்கும் ஒருவரை
நான் எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்
புத்தர் உறங்கும் சிங்கள தேசத்தில்.

-தீபச்செல்வன்

நன்றி: ஆனந்தவிகடன்

வெள்ளி, 14 மார்ச், 2014

காணாமல் போன அண்ணன்

ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக்
கொண்டு செல்லும்பொழுது
வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில்
அண்ணன் எங்கே என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப்
பார்க்கும்போதும்
அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன்
விளையாடச் செல்லும்போதும்
அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்வில்லை

யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும்
கொண்டாட்டநாட்கள் வரும்போதும்
அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

தூங்கி எழும்பும்போதும்
பள்ளிக்கூடம்செல்லும்போதும்
அண்ணா எப்பொழுது வருவான்? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

வருடங்கள் பல ஓடிய பின்னரும்
யாரைப் பார்த்தாலும்
எங்காவது அண்ணாவைக் கண்டீர்களா?
என்பதைத் தவிர
அவள் வேறெதையும் கேட்கவில்லை.

-தீபச்செல்வன்


நன்றி: ஆனந்தவிகடன் 

விபூசிகா கடத்தப்பட்டாள்!

இன்று (13.03.2014)  வெளியான ஆனந்த விகடனில் வெளியான இரண்டு கவிதைகளில் ஒன்று விபூசிகாவைப் பற்றியது. "காணாமல் போன அண்ணன்" என்பது அக் கவிதை. அந்தக் கவிதை இன்று வெளியாகியிருக்கிறது என்று நான் அறியும்போது அந்த விபூசிகாவும் கடத்தப்பட்டிருக்கிறாள் என்று செய்தியையும் அறிகிறேன். குழந்தைகள் காணாமல் போகும் தேசத்தில் என்னதான் இருக்கும்? via facebook.com/tipaccelvan.piratipan



வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...