Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 27 நவம்பர், 2013

விதைக்கப்பட்டவர்களின் குரல்


வீடுகளும் கல்லறைகளும்
கோயில்களும் அழிக்கப்படுகையில்
ஒரு நாய்க்குட்டி இடமற்றுத் திரிகிறது

கல்லறையற்றிருக்கும் மரித்தோருக்கும்
வீடற்றிருக்கும் மனிதர்களுக்கும்
இடம் மறுக்கப்பட்ட கடவுள் என்ன செய்வார்

இருப்பவர்களின் வீடுகள் அழிக்கப்படுகையில்
மாண்டுபோன தனது பிள்ளையின்
அழிக்கப்பட்ட கல்லறைக்காய்
ஒரு துண்டு நிலம் கேட்கிறாள்
கார்த்திகை மாதக் காந்தள் மலரோடு
அலையும் தாயொருத்தி

பிள்ளைகளும் இல்லை
கல்லறைகளும் இல்லை
கனவைப் போல
பூத்திருக்கும் காந்தள் பூமரங்களில்
எரிகின்றன விளக்குகள்.

வாழும்பொழுதும்
மரணத்திற்குப் பின்னரும்
இடம் மறுக்கப்படுகையில்
இறந்தவர்களும்
இருப்பவர்களும் என்ன செய்ய முடியும்

எதற்காக இறந்தோம்
எதற்காக இருந்து கொண்டிருக்கிறோம்

நீ நினைப்பாய்
கடவுளுக்குகூட நிலம் மறுக்கப்படுகையில்
என்ன நம்பிக்கையோடு இருக்கிறார்களென

எனது நிலத்தின் கல்லறைகள்
மரணத்தை விரும்புபவையல்ல
அழகியதொரு வாழ்வின் கனவோடு
புதையுண்டு போனவர்கள்
துயிலும் வீடுகள்

குழந்தைகளின் குரலாக
கல்லறைகளின் குரலாக
நாம் கேட்போம்

ஏனெனில் இது எமது தாய் நிலம்
நாம் யாருடைய நிலத்தையும் அபகரிக்கவில்லை

தீபச்செல்வன்

2013 நவம்பர்

நன்றி: குங்குமம்

கணினி ஓவியம் - ரமணி

ஞாயிறு, 17 நவம்பர், 2013

விற்கப்பட்டது உனது காணிநிலம்


யாருடைய கால்களுமற்ற மைதானத்தில்
தனியே உருண்டு கொண்டிருக்கிறது 
நேற்று விளையாடி பந்து

நான் சுவையற்ற மதுவை தனியே அருந்துவேன்
கிராமங்களுக்குள் நுழையும் வீதியில் தனியே செல்லுவேன்
இரண்டு மதுக்கோப்பைகளில் ஒன்றைக் காணவில்லையென
மதுச்சேவகன் தேடுவான்

புளுதி கிளப்பிச் செல்லும் ஒரு மோட்டார் சைக்கிள் 
எங்கு மறைந்தென்று தெருவில் ஒருத்தி தேடுவாள்

இனி யாருமில்லை நண்பா
வெறிச்சோடிய நகரத்தில்
வீதியில் தனியே நடந்து செல்லுகிறேன்
இனி ஒரு கதையையும் பேசப்போவதில்லை

ஏதாவது ஒரு நாட்டில் இறங்கி
குளிருக்குள் கணத்த ஆடைகளை அணிந்தபடி
அனுப்பும் ஒரு புகைப்படத்திற்கு
சோறூட்டுவாள் உனது அம்மா

வர்த்தக மாளிகைகள் எழுப்புதவற்காய் 
நேற்று விற்றுத் தீர்க்கப்பட்டது உனது காணிநிலம்
எல்லோரும் வெளியேறிய நகரத்தில் 
யாரோ அகன்ற வீதிகளைப் போடுட்டு
உயர்ந்த மாளிகைகளை எழுப்புகின்றனர்

எனக்கென இருந்த இறுதி நண்பனே 
நேற்றுடன் நீயும் வெளிநாடு சென்றுவிட்டாய்
தாய் நிலத்திலிருந்து
இன்றுடன் உனது பெயரையும் அழித்துவிட்டனர்

தீபச்செல்வன்

நன்றி: கணையாழி நவம்பர் 2013
ஓவியம்: மணிவர்மா

புதன், 13 நவம்பர், 2013

பிரளயத்தின் சாட்சி

கண்கொண்டு பார்க்க முடியாது
ஒரு பறவை
இரத்தம் சொட்டச் சொட்ட
நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்
பிய்த்து வீசப்பட்டிருப்பதை

முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்
பின்னர் ஆண்குறிகளால்
பின்னர் துப்பாக்கிகளால்

அழுகிய பிணங்களைப்
புணரும் வீரமிகு படைகள்
வேறெதைச் செய்வர்?

யாருமற்ற கடற்கரையில்
ஈனக்குரல் எழுப்புகையில்
ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை

வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்?

யாராலும் எழுத முடியாது
நேரிட்ட நிர்க்கதியை
சிந்திய கண்ணீரை
உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை
பிய்த்தெறியப்பட்ட கதையை
இறுதிக்குரலை

நிராயுதயபாணிகளை வேட்டையாடும்
கொலையாளிகளிடம்
‘அது நானில்லை’
என்று சொன்னாய்
யாரை அவர்கள் விட்டு வைத்தனர்?

அன்றொருநாள் கதிர்காமநகரில்
மன்னம்பேரியை நிர்வாணமாய்
இழுத்துச் செல்கையிலும்
அவளிடம் துப்பாக்கியேதுமில்லையே

இசைப்பிரியா,
முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் முடிவில்
அணையும் இறுதிக்குரலில்
மாபெரும் குற்றங்களின் சாட்சியமானாள்.

இனியும்
ஒரு பெண்ணுக்கும்
ஒரு இனத்திற்கும் வேண்டாமென்றாள்
ஈனக்குரலும் நெருப்பு மேனியுமாய்

தீபச்செல்வன் 

மன்னம்பேரி: 1971இல் கதிர்காமம் என்ற இடத்தில் இலங்கைப் படையினரால்; பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சிங்களப் பெண் போராளி. 
வற்றாப்பளையம்மன்: முள்ளிவாய்க்காலுக்கு அருகில் உள்ள கோயில். 

நன்றி: குமுதம்


வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...