Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அகதியின் பள்ளிக்கூடம்


அகதிமுகாமாக்கப்பட்ட பள்ளியின்
கதிரை மேசைகள் அள்ளியேற்றப்பட்ட
ஒருநாள் புத்தகங்கள் தொலைந்துபோயின
யாரும் திரும்பாத காலத்தில்
போர்க்களத்தில் நிற்கையில்
காயங்கள் மிகுந்த பள்ளியின் மணியை அசைத்திருப்பாயா?
நொந்த உள்ளத்தோடு கிழிந்த சீருடைகளுடன்
நான் அகதியான பொழுது
நிமிர்ந்திருந்த நம்; பள்ளியும் அகதியானது
ரொட்டிகளை பரிசளிக்கும் பசியாறும் கதைகளை
படித்த மரநிழலின் நினைவுகளை பொழியும்
சேலைகள் கட்டப்பட்ட
மரங்களாலான வீடுகளில்
என்னிடம் புத்தகங்கள் இருக்கவில்லை
அகதி முத்திரை குத்தப்பட்ட பள்ளிக்கு
உன்னைப்போலவே எந்தத் தோழர்களும் திரும்பவில்லை
யாரும் திரும்பாத வகுப்பறையில்
பாடல்கள் ஒலிக்கவேயில்லை
பேரீட்சைப் பழங்களில்லை
ஒட்டகங்களில்லை
எண்ணெய் கிணறுகளில்லை
சிறுவர்கள் சாகடிக்கப்படும் யுகத்தில்
ஒரு பாலஸ்தீனச் சிறுவனைப்போல
நான் ரொட்டிக்கு அலைந்தேன்
இறுதிவரை
கிழிந்த என் அகதிப் புத்தகப் பையிற்குள்
உனக்காக சில ரொட்டித் துண்டுகளிருந்தன.

தீபச்செல்வன்

*** 
நன்றி - மலைகள் இணைய இதழ்

திங்கள், 3 செப்டம்பர், 2012

பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது?

தீபச்செல்வன்
     
மணற்ப்படுக்கைகளில் எழுதப்பட்டு விதைபட்ட
உன் கவிதைகளும் கதைகளும் மூடுண்டு கிடக்கின்றன
நண்பனே! பாலி ஆறு எப்படி இருக்கிறது?
என்ற உனது முதலாவது வார்த்தையிலேயே
தாங்க முடியாத என் பதில்கள் உதிர்கின்றன
நமக்கொரு பெரிய கனவு இருந்தென்பதை
வரலாற்றில் பரப்பிச் செல்லும்
பாலியாறு என்ன தவறிழைத்தது?

நண்பனே நீ கண்ட கரையினில் பெண்கள் யாருமில்லை
வீழ்த்தும் கைகளை மீறி நணல்கள்
எழும்பிக் கொண்டிருக்கின்றன
மீன்கள் வெளியில் வருவதுமில்லை துள்ளுவதுமில்லை
யாருடைய கால்த்தடங்களுமில்லாத
பாலி ஆற்றங்கரை இருண்டு கிடக்கிறது
ஆற்றங்கரை மரங்கள் சலசலத்து
மண்ணின் கவிதைகளை பாடிக் கொண்டேயிருக்கின்றன.

குருதியை நிலத்திலிருந்து துடைத்து ஆற்றில் எறிந்திருக்கிறார்கள்
பாலி ஆறு நெளிந்தபடி கடலைத் தேடுகிறது
உடல் பரிசோதிக்கப்பட்டு
அனுமதிபெறப்பட்டு
கால் நனைத்து முகம் நனைக்கையில்
நம்மோடு இந்த ஆறும் அடிமையாயிருந்தது.

மருது மரங்கள் துயர்க்கோலமாய்
வளர்ந்து கிளைகளை வீசியிருக்கின்றன
யாரும் உள் நுழைய முடியாதபடியிருக்க
ஆறு தனித்து துயரோடு நீண்டு செல்கிறது.

பச்சை சமையல் பாத்திரங்கள் கழுவப்படும்
ஆறாய் அடங்கிக் கிடக்கிறது
துப்பாக்கிகளின் நிழல் விழுந்து அடக்கி
நீரோட்டத்தை குழப்பும் ஆறாய்க்கிடக்கிறது
பச்சை உடைகளும்
பச்சை சுவர்களும்
பச்சை முகாங்களும் பச்சை காவலரண்களும்
மூடியிருக்க ஆற்றங்கரையினில் பறக்கின்றன
ஆற்றில் துவைக்கப்பட்ட பச்சை உடைகள்.

ஒட்ட முடியாத பச்சைகள் மதிக்கின்றன
செழித்து நமது வரலாறு பரவிப் பாயும் ஆற்றின்
வலிமையையும் நீட்சியையும்
நாம் மீண்டும் பெறுவோமா?
மீண்டும் நாம் நீந்தி மூழ்க முடியுமா?
பாலி ஆற்றுப் பக்கமாக தாகத்தோடு
சில குழந்தைகள் தண்ணீர் கோப்பைகளை
இறுகப்பிடித்து குடித்துக் கொண்டிருந்தனர்.

அசையாத மணிகளும் யாருமற்ற பல வீடுகளும்
தயங்கி விளையும் பயிர்களும்
துரத்தப்பட்ட மனிதர்களைத்தான் தேடுகின்றன.

நீ வருவாயா உன் கவிதைகள் விளைந்த
பாலியாற்றில் நீந்திச் செல்ல?
மூட முடியாது விரியும்
தடுக்க முடியாது நீளும் பாலியாறு
இன்னும் மெல்ல மெல்லவாக
நகர்ந்து கொண்டுதானிருக்கிறது எனினும்
பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது?

பின்குறிப்பு : 

'பாலியாறு நகர்கிறது' என்பது ஈழக் கவிஞர் ஜெயபாலன் 1968இல் எழுதிய அவருடைய முதல் கவிதை. இக்கவிதைவன்னியில் மல்லாவியில் உள்ள பாலியாற்றை பற்றியது. ஜெயபாலன் வன்னியில் மல்லாவியில் வாழ்ந்து தற்பொழுது புலம்பெயர்ந்து வாழ்கிறார். வன்னியின் வளத்திலும் வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறும் பாலியாற்றை தற்பொழுது இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இராணுவத்தின் வசம் வீழ்ந்துள்ள பாலியாற்றுக்கு 2011இல் சென்ற பொழுது ஜெயபாலனை விழித்து எழுதியது

-பூவரசி 2012 ஜனவரி

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...