Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 25 ஆகஸ்ட், 2012

மணல் வீடு

தீபச்செல்வன்

குழந்தைகள் வீடுகளை மறந்துபோனார்கள்
மணலில் பிறந்து விளையாடி
உறங்கிக் கிடக்கையில் கனவில்
நமது தேசத்தைப் பற்றி
பேசிக்கொள்கிறார்கள்
பெரும் மழையும்
கொடும் புயலும் அடித்த அழிவுக்காலத்தில்
நமது தேசம் அழிந்து போனது
குழந்தைகள் மணலில் வரைந்த
கதைகள் கொல்லப்பட்டன
அழிக்கப்பட்ட தேசத்தின்
குழந்தைகளின் கைகளுக்குள்
உதிராத மணல்வீடுகள்
இறுகிக் கிடக்கின்றன
அழிவை கட்டி எழுப்பிய தேசத்தில்
இந்தக் குழந்தைகளுக்கு எதைக்காட்டுவது?
பாதிச் சூரியனை
தலையில்லாத மரங்களை
கிடங்குகள் விழுந்து சிதைந்த நிலத்தை
பொம்மைகள் இறந்து கிடக்கும் வெளியை
பார்க்க ஏன் இவர்கள் இங்கு பிறந்தார்கள்?
தாங்கள் வாழ விரும்பும் தேசத்தை
மணலில் வரைந்திருக்கிறார்கள்.

நன்றி - மல்லிகை ஆண்டு மலர்

நினைவை கொல்லும் மிருகம்

தீபச்செல்வன்

நினைவைக் கொல்லும் மிருகம்
ஓரிரவில் பெருநகரைத் தின்று முடித்தது
அந்த மிருகத்தின் வாயில்
நினைவுகள் கொல்லப்பட்டு விழுங்கப்படுவதை
நாம் பார்த்துக் கொண்டேயிருந்தோம்
கனவை ஊடுருவிச் சென்று
மனதின் ஓரங்களில் சொருகப்பட்டு
கிடந்த நினைவுகளை எல்லாம்
தின்று விடுகிறது
கதைகள் எழுதப்பட்ட கற்களையும்
குழந்தை சித்திரங்களை வரைந்த சுவர்களையும்
தின்று கொண்டே
நமது மூதாதையர்களின் நினைவுகளை
எல்லாம் கொன்று போடுகிறது
அது மெல்ல மெல்ல
எல்லாவற்றையும் தின்றுகொண்டிருக்கிறது.
அது பசியெடுத்து அலறுகையில்
வார்ததைகள் நடுங்குகின்றன
தீன் தேடி வருகையில்
பூர்வீக கட்டிடங்கள் துடிக்கின்றன
கொடும் இரவில் நிலவைத் தின்ற மிருகம்
காலத்தை இழுத்துத் தின்கிறது.

நன்றி - மல்லிகை ஆண்டு மலர்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

யுத்தக்கல் சுமக்கும் சிறுவன்



தீபச்செல்வன்

ஒற்றைக்காலுடன் இழுத்துச் செல்லும்
சிறுவனுக்காய் திறக்கப்பட்டிருக்கிறது 
குண்டுகள் கொட்டப்பட்டு குழிகள் வீழ்ந்த நகரம்
செல்துளைத்த ஓட்டைக்குள்ளால்
பள்ளியிலிருந்து பார்த்த பொழுது
அழிவில் முழுநகரும் தோய்ந்திருந்தது
வலிக்காத கால்களுடன் நகரத்தில் திரிகையில்
ஒரு கையில் அம்மாவும் மறுகையில் அப்பாவும் இருந்தனர்
யாருமற்ற நகரில் ஊன்றுகோல்களை அவன் பிடித்திருந்தான்
கால்களற்ற சிறுவர்கள் தவழ்ந்தலையும் கனவு நகரில்
விளையாடும் குழந்தைகளில்லை
குழந்தைகளின் பூங்காவில் யுத்தக் கல் நிறுத்தப்பட்டிருந்தது
கால்கள் முதல் எல்லாவற்றையும் இழந்த
குழந்தைகளுக்கு தோல்வியை நினைவுபடுத்தும் யுத்தக்கல்
விழுந்தது காலற்ற சிறுவனின் முதுகுமீது.

நன்றி - கல்கி ஆகஸ்ட் 2012

புதன், 15 ஆகஸ்ட், 2012

பாடலற்ற நிலம்

தீபச்செல்வன்

நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள்
நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள்
நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள்
இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள்.

எங்களுக்கு ஒரு கனவு இருந்தது
எங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது
எங்களுக்கு ஒரு நாடு இருந்தது
அப்பொழுது எங்களுக்கு ஒரு கொடியும் பாடலும் இருந்தது.

இன்று எங்கள் நகரத்தில் அந்நியக் கொடி பறக்கிறது
எங்கள் நிலத்தில் அந்நியப் பாடல் ஒலிக்கிறது
அன்று எங்கள் நகரத்தில் எங்கள் கொடிகள் பறந்தன
எங்கள் நிலத்தில் எங்கள் பாடல் ஒலித்தது.

அன்று எங்களுக்கு காவல் இருந்தது
இன்று நாங்கள் காவல் இழந்திருக்கிறோம்
அன்று எங்களுக்கொரு தலைவன் இருந்தான்
இன்று எங்களுக்கு யாருமில்லை!

0

நன்றி - யூனியர் விகடன் 

காவல் இழந்த நிலம்

தீபச்செல்வன்


எதுவும் திரும்பியிராத காலத்தில்
தலைவனற்ற நிலத்தில்
காவலை விழுங்கும் அரண்களுக்குள்
சனங்கள் வசிக்கின்றனர்
இராணுவமுகாங்களுக்குள் வீடுகள் இருக்க
நிலமெங்கும் துப்பாக்கிகளின் நிழல் அடர்கிறது
புன்னகையிலிருந்து இரத்தம்வரை
எல்லாவற்றையும் உறிஞ்சும்
துப்பாக்கிகள் தெருக்களை ஆள்கின்றன
கிராமங்களில் நிரப்பட்ட யுத்த ஆயுதங்களும்
நகரங்களில் பறக்கும் இராணுவக் கொடிகளும்
சனங்களின் பூமியைக் கொல்கின்றன
கோயிலின் கோபுரங்களில் சப்பாத்துக்கள் ஏறியாட
ஆறுகளில் இராணுவ வண்டிகள் குதித்தெழும்ப
மரங்களில் இராணுவ உடைகள் போர்க்கப்பட்டிருக்க
எல்லாம் கொல்லப்பட்டன
சுற்றுலா தேசத்தின் காட்சிகள் விளம்பரமாக
கடதாசித் தலைவர்கள்
போர் தின்ற சனங்களின்
தலைகளுக்காய் அடிபடுகிறார்கள்
காவல் இழந்திருக்கும் நிலத்தில்
எல்லாம் பறிக்கப்பட்ட
எதுவும் இல்லாத ஒரு காலம் வந்தது
யாரும் கொல்லப்படக்கூடிய
எதுவும் பேசமுடியாத ஒரு காலம் வந்தது
இதற்கு முன்பு இந்த நிலத்தை
யாரோ காவல் செய்திருக்கிறார்கள்.
0

நன்றி - யூனியர் விகடன் 

கடத்தப்பட்டவர்களின் கண்கள்

தவிட்டுக் கலர் துணிகளால் 
கண்கள் இறுகக் கட்டப்பட்டவர்கள்
இரத்தப் பொருக்குப் படிந்து 
வெடில் மாறாத வழிகளில் 
பறவைகளின் ஒலியை கேட்டுத் திரிந்தனர்

பூக்களைப் போன்ற கண்கள்
நசுங்கி இறந்து போயின

என்னுடைய குழந்தைகளின் கண்களை
மூடிக் கட்டியவர்கள் 
இறுதியில் கண்களை பிடுங்கியெடுத்ததை
நான் காணமுடியாதிருந்தேன்

எனது கண்கள் ஒளிபொருந்தியவை 
காதல் ஊற்றெடுப்பவை என்று சொல்லிக் கொண்டே 
காதலி முத்தமிடுவாள்
அவளது விரல்களால் இமைகளை கோதி முத்திமிட்டபோது
கண்பூக்கள் செழித்துச் சடைத்தன

வெள்ளை நிற வண்டிகள்
மிருகங்களை போல கவ்விச் சென்று 
கண்களை மூடிக்கட்டும்பொழுது சூரியன் அணைந்தது

என்னுடைய கண்கள் உதிர்ந்துபோயின

வியர்த்து வெந்து பல நாட்களாய் கண்டுண்ட கண்கள்
எல்லா சித்திரவதைகளின் பின்பாயும்
அவிழ்த்து விடப்படுகையில்  
தேசம் இருண்டிருந்தது

நடுத்தெருக்களில் கண்களற்றுத் திரியும் 
மனிதர்களின் கண்கள் தனித்தலைந்தன
0

தீபச்செல்வன்

நன்றி - யூனியர் விகடன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...