Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 22 நவம்பர், 2011

செங்காந்தள் பூக்கள்


நினைவு பூத்திருக்கும் கற்களை
வேர்களுடன் அகழ்ந்து உடைக்கையில்
ஆடியது நம் நிலம்
நிலம் எரிக்கப்பட்டு
கல்லறைகள் உடைக்கப்பட்டன
மறுக்கப்பட்ட இருப்பிற்காய்
போராடி மாண்டவர்களுக்கு
உறங்க இடம் மறுக்கப்பட்டிருக்கிறது
நிலத்தில் பெரும் பூதம்
நுழைந்து வேர்களைத் தின்றும்
கொல்ல முடியாத மரங்கள்
மீண்டும் தழைக்கின்றன
வீடுகளின் மூலைகளிலும்
தெருக்களின் சந்துகளிலும்
நகரங்களுக்கு மேலாயும்
கிராமங்களிலும் ஒளி ஊற்றெடுக்கிறது
வெளிச்சம் அணைக்கப்பட்ட
நிலத்தில் விளக்குகள் எரிகின்றன
உயிர்மரங்கள் தறிக்கப்படுகையில்
துடித்தன தாய்மார்களின் வயிறுகள்
காலம் சூழன்று கொண்டேயிருக்கிறது
அழிக்கப்பட்ட நிலத்தில்
செங்காந்தள் பூக்கள் பூத்திருக்கின்றன.

தீபச்செல்வன்

ஞாயிறு, 20 நவம்பர், 2011

பேய் நகரம் பேய் ஊர்

பேய்கள் நகரையும் ஊரையும் பாழாக்குகின்றன
உடைந்த வீடுகளின் மேலாய்
அமர்ந்திருந்து
சிதைந்த சுவர்களை தின்கின்றன
குண்டுகள் துளைத்த ஓட்டைகளால்
போய் வருகின்றன
சமையல் புகையிழந்த வீட்டில்
பேய் வாசனை மூடுகிறது
கரித்துண்டுகளால்
பேய்கள் எழுதுகிற கதைளால்
அதிர்ந்து கிடக்கிறது எம் நகரும் ஊரும்
குழந்தைகளில்லை
சைக்கிள்களில்லை
மாட்டு வாண்டிகள் இல்லை
யாரும் உள் நுழைய முடியாது பேயாழ்கிறது
பேய் நகர் என்றும் பேய் ஊர் என்றும்
மாற்றிக் கொள்கின்றன
அழிந்த கட்டிடங்களின் மீதேறி
பேய்கள் ஆடும் உக்கிர நடனங்களால்
அதிர்ந்து கிடக்கிறது எம் நிலம்.

தீபச்செல்வன்





நன்றி : தடாகம்

பூச்சி அரித்துண்ணும் நிலம்

வீடுகளை அரித்துண்ட பூச்சிகள்
பச்சை மரங்களுடன்
காய்ந்த தடிகளையும் தின்று முடித்து விட்டன
பெருகிய பூச்சிகளின் மேலால்
நடந்து திரியும் பெரும்பூச்சி
பூவரசுகளை தின்றாடுகிறது
கூர்வாள்களில் குழந்தைகளை தூக்கி எறிந்தாடுகின்றன.

கனவோடு நிலத்தில் புதைந்த
சனங்களை அடர்ந்த இரவுகளில்
தின்று சுவடுகளை தேடித் தேடி அரிகின்றன
பூச்சிகள் உதிர்க்கும் வண்ணங்களினால்
எம் நிலம் நிறம் மாறியிருக்கிறது.

சிதைக்கப்பட்ட கனவினை பெரும் மூட்டையாகி
உருட்டிக் கொண்டு செல்கிறது
எல்லாப் பூச்சிகளுடன் பசியுடன் அலைந்து
நிலத்தின் கிளைகளை அறுக்கின்றன
பெரும் பூச்சியோ
எல்லோரும் பார்த்திருக்க
அகன்ற வாய்களை திறந்து
பூர்வீக நிலத்தை அரித்துண்ணுகிறது.

தீபச்செல்வன்

நன்றி : தடாகம்

ஞாயிறு, 6 நவம்பர், 2011

தலை நிலத்தில் மலைகளை தின்னும் பேய்கள்


மலையும் சரிந்து கிடக்கிறது
நிலமும் சரிந்து கிடக்கிறது
கண் தளைத்த குளத்தில் முகம் கழுவ முடியாது
தாமரைகளில் பேய்கள் கண்மூடியிருக்கின்றன
கண்களற்று அலைந்து பேய்களில் மோதி விழுகிறோம்

கோணமலையில் ஒரு பெரிய பேய் அமர்ந்திருக்கிறது
தலை நிலத்தை நாளும் தின்னும்படி
அரசன் பேய்களுக்கு உத்தரவிட்டிருக்கிறான்
மலைகளை தின்று களிக்கும் பேய்கள்
தலை நகரத்தில் நடனமாடும் காலத்தில்
அகோரம் தாங்க முடியாது வாடுகின்றன முகங்கள்.

முதிய ஊரில் யாருமில்லை
சர்வ அழகான ஊரிலிருந்து துரத்தப்பட்டவர்கள்
அகதி முகாங்களிலிருந்து இன்னும் திரும்பவில்லை
மலைகளின் ஊரில் மலைகளுக்கடியில்
சூழ்ச்சிகளுடன் பேய்கள் உறங்குகின்றன
மலைகளையும் நிலத்தையும்
அரித்து அரசனுக்கு அனுப்புகின்றன.

மலைகளின்மீது கால் வைத்தலையும்
புத்தரின் நிழலில் பௌத்தக் கொடிகள் பறக்கின்றன
சிங்களம் பூசப்படும் தெருக்களில்
ஊர்கள் கொல்லப்பட்டு வேறு ஊர்களாக்கப்படுகின்றன
நமது முகங்கள் கண்களுடன் அழுகிப்போக
கண்தளைத்த குளத்தில் துவக்குகள் நீந்துகின்றன.

பாடற் தலத்தை புத்த சரணங்கள் தின்னத் துடிக்க
துறைமுகத்தில் மலைகளை திருடும் கப்பல்கள்
சுற்றி வளைக்கின்றன
மகாவலி ஆற்றில் பேய்கள் படகுகளில் வந்து குடியேறின
மாவிலாற்றில் எறியப்பட்ட நமதுயிர்கள் கடலினுள் மூழ்கின.

எங்கள் கோட்டையின் கொடியை தின்றுகொண்டிருக்கும்
பேய்களின் கொடி மாநிலத்தோடு தலை நிலத்தையும் மூடியிருக்கிறது
நரகங்களோடு தலைநகரத்தையும் மூடியிருக்கிறது
அடங்காக் கனவு பேய்களின் தீனியாக
ஆதி நிலத்து சனங்களுடன்
கொடியசைந்த மலைகளும் சரிந்தன
மாநிலமும் சரிந்தது.

27.02.2011


தீபச்செல்வன்

அம்ருதா செப்டம்பர் 2011

கொலையுண்ட நிலம்


முழுநிலமும் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர்
கனவின் வேர்கள் அழிப்பதற்காய் தேடப்படுகிறது
ஷெல்கள் துளைத்த சுவர்களிலும்
குண்டுகள் தின்ற வீடுகளிலும்
விமானங்கள் சிதைத்த வெளிகளிலும்
காயங்களிலிருந்து முளைவிடுகிறது கனவு.

ஊனமாக்கப்பட்ட வெறும் நிலத்தில்
உடைத்துக் கொண்டு வரப்பட்ட
புத்தரின் சமாதிக் கற்கள் சுவர்களாகின்றன
பூவரசகள் கொல்லப்பட்டு
அரச மரங்கள் நடப்படுகின்றன
கை நழுவிக் கரைந்து கசிந்து கொண்டிருக்கும் நிலத்தை   
தூங்கும் குழந்தைகள்
கைகளில் நிரப்பி வைத்திருக்கின்றனர்
ஈரமாக்கப்பட்ட நிலம் எப்பொழுது காயும்?

வேலிகளும் சுவர்களும் கூரைகளும்
வேறு விதமாய் வளர்ந்து
நிலத்தை கொல்லுகின்றன
துவக்குகள் நிலம் மேயும் காலத்தில்
நிலத்திற்காய் புதைந்த உயிர்கள்
மீண்டும் முளைக்கப் பார்க்கின்றன.

தீபச்செல்வன்

அம்ருதா செப்டம்பர் 2011

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...