Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 20 ஜூன், 2010

அகதித் துயர்வெளி

01.
மழைநாளில் இடம்பெயரும் தெருவொன்றில்
வெட்டப்பட்ட குழியைப்போலிருக்கும் கூடாரங்களுக்குள்
பாலஸ்தீனக் குழந்தைகள் வந்து ஏன் ஒளிந்திருக்கின்றனர்?

அகதிகளாக சனங்கள் வெற்றிக்கொள்ளப்பட்ட நாளில்
உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன
சிறுவர்கள் துப்பாக்கிகள் பிடிக்கும் நாளில்
தாய்மார்கள் பொதிகளை சுமந்தலையும் காடுகளின் வெளியில்
எல்லோருமே ஏதோ ஒரு நடவடிக்கையில் துரத்தப்பட்டனர்
வீடு அழித்துத் துடைக்கப்பட்டதையும்
நகரம் சிதைத்து உரு மாற்றப்பட்டதையும்
நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதையும்
இந்த அகதிச் சனங்கள் தாங்க முற்படுவர்
அகதிகளின் காலங்கள் அலைச்சலால் நிரம்பியிருக்கின்றன

மீண்டும் மீண்டும் பொருட்களைக் தூக்கிக்கொண்டு
சில மீற்றர்களுக்கோ சில கிலோ மீற்றர்களுக்கோ நடந்து செல்ல முடியாமல்
இந்தக் குழந்தைகள் கீழே அமர்ந்து விடுகின்றனர்
காடுகளுக்கோ சனங்கள் நுழைந்திராத கடல் வெளிகளுக்கோ
இந்தப் பாதங்கள் செல்ல விரும்புவதில்லை.
குழந்தைகளுக்கான உணவிற்காய்
அடுப்பு எரிந்து கொண்டிருந்த வீட்டை யுத்தத்தீ எரித்து விட்டது
கோகட் நகரத்தில் நீண்டுசென்ற அகதி வரிசைகள் மலைகளை இடித்தன.



02.
ஆப்கானிஸ்தானில் இடிபாடடைந்த கட்டிடங்களுக்குள்ளால்
ஈழக் குழந்தைகள் ஏன் செல்லுகின்றனர்?
கொங்கோ குடியரசின் சனங்கள் எங்கள் கூடாரத்திற்குள்
இரவில் வந்து தங்குகின்றனர்
ஒரு துண்டு ரொட்டிக்காகவும் ஒரு கிண்ணம் கஞ்சிக்காகவும்
ஒரு கோப்பை தண்ணீருக்காகவும்
உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன.

கனவுகள் நிராகரிக்கப்பட்டு பிரித்து சிதைக்கப்பட்ட
இணைந்த மாநிலத்தில் காலம் படியவிட்டிருக்கும்
ஈழ அகதித்துயரை
ஆக்கிரமிப்பாளர்கள் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு பெருமழையையோ சிறிய தூறலையோ
இந்தக் கூடாரங்கள் தாங்க முடியாதிருக்கின்றன
நிலத்தின்மீதாக அரும்பும் எல்லாக் கனவுகளையும் சீவியெறிந்து
நிலத்தை கொலைசெய்யும் ஆக்கிரமிப்பாளர்கள்
எல்லா திசைகளுக்கும்
மிகவேகமாக சென்றுகொண்டிருக்கின்றனர்
இனங்களின் நிறங்களை சூறையாடும் தந்திரங்களை
ஆக்கிரமிப்பாளர்களின் தலைவனோ சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை
சோமாலியாவின் பசிக்கிண்ணங்கள் மாத்தளனில் புதைக்கப்பட்டன.

காடுகளை சூறையாட முற்படுபவர்களும்
கிணறுகளை கொள்ளையடிக்க முற்படுபவர்களும்
நிலத்தை அள்ளிச் செல்ல முற்படுபவர்களும்
உரிமையை அழித்து முடிக்க புறப்பட்டவர்களும்
முதலில் குழந்தைகளைத்தான் கொலை செயதனர்
குழந்தைகளின் இரத்தில் அகதிச் சனங்களின் கனவு நனைந்துபோனது



03
சனங்கள் தங்கள் பூர்வீக நிலங்களிலிருந்து துரத்தப்பட்டதை
பெருகும் அகதித்துயிரினிடையில்
வெற்றிகொள்ளப்பட்ட அதிகாரம் நிறைந்திருக்கும்
தங்கள் கொண்டாட்டத்திற்குரிய நாளில் படைகள்
ஒரு கையில் துப்பாக்கியையும்
மறு கையில் மனித உரிமைப் பிரதிகளையும்
எடுத்துச் சென்றதாக
ஆக்கிரமிப்பாளர்களின் தலைவன் சொல்லுகிறான்.
படைகள் கொண்டு சென்ற மனித உரிமைப் பிரதிகளே
சனங்களை நெடுந்தூரத்திற்கு துரத்தின
எல்லாச் சனங்களும் வாழ்வு பிடுங்கப்பட்டு
பூர்வீக நிலத்திலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர்.

எல்லா குழந்தைகளும் புழுதியில் கிடந்தபடி
ஒரே மாதிரியான கிண்ணங்களை தூக்கி வைத்திருக்கின்றனர்
எப்பொழுதும் தூக்கிச் செல்லக்கூடிய
பொதிகளையும் எங்கோ ஒரு இடத்தில் விட்டுச்செல்லுகிறார்கள்
ஆக்கிரமிப்பாளர்கள் படையெடுக்கும்பொழுது
வீசும் குண்டுகளைவிடவும்
கொடுமையாக வார்த்தைகளை எறிகின்றனர்
உலகத்தில் கூடாரங்களும் அகதிகளும் நிறைக்கப்பட்டிருந்தாலும்
அகதிகள் சிரிக்கப் பழகியிருக்கிறார்கள்
டாபர் குழந்தைகள் தடிகளாலான கூடாரங்களுடன்
தேய்ந்த ஒற்றைச் செருப்புக்களையும்
கிழிந்த சட்டைகளையும் வைத்திருக்கின்றனர்
ஆணுறைகளை கொண்டு செல்லும் இராணுவம்
தங்கள் தலைவனுக்கு விடுமுறையில் பெண்குறிகளை கொண்டு வருகின்றனர்




04
யுத்தம் நீண்ட தூரத்திற்கு சனங்களைத் துரத்திவிடும்
மனிதாபிமானம் மிக்கது
ஈராக்கின் சிதைவுகளோடு தலமைத்தேசம் இன்னும் ஒளிர்ந்துகொண்டேயிருக்கிறது.

காஷ்மீரில் சனங்கள் துரத்தப்பட்டார்கள்
கோத்ராவில் சனங்கள் வெளியேற்றப்பட்டார்கள்
ஒரிசாவில் பெயர்த்தலைக்கப்பட்டார்கள்
பள்ளத்தாக்குகளுக்கும் மலைகளுக்கும் வனங்களுக்கும்
அனுப்பி வைக்கப்பட்டனர்
மணிப்பூரின் குழந்தைகளுடன்
டார்ஜிலிங் குழந்தைகளும் காடுகளை அழிக்கத் தொடங்கினர்
மதமும் கடலும் காடுமே சனங்களைத் துரத்துகின்றன
வெளியேற மறுக்கும் சனங்களை அவை கொல்லுகின்றன.

சனங்களிடமிருந்து நிலத்தை மீட்ட அரசின் வெற்றிக் கொடிகள்
அகதிகளின் கையிலிருந்து பறக்கின்றன.
எல்லாத் தேசங்களிலுமிருக்கும் அகதிகள்
எல்லா நாட்களிலும் அலைகின்றனர்.
சனங்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து
தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
__________________________________

ஜீன் 20 : உலக அகதிகள் நாளை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகிறது

செவ்வாய், 8 ஜூன், 2010

எங்களுக்காய் யார் இருக்கிறார்கள்?

o தீபச்செல்வன் ----------------------------------------

குழந்தைகள் மீண்டும் மீண்டும் ஏன் பிறக்கின்றன
பதற்றங்களை கண்டு அதிரும்
இந்த குழந்தைகளை பார்க்கும் பொழுதெல்லாம்
முகம் கோணலாகி உடைகிறது
அவர்களின் புன்னகையை பார்ப்பவர்களில்லை
அவர்களின் வார்த்தைகளை கேட்பவர்களில்லை.

அந்தச் சிறுவன் பணத்திற்காக கழுத்து நெரித்து
கொல்லப்பட்ட நகரத்தில்
அவனின் குருதி படர்ந்த தெருவில்
நான் எப்படி அமைதியாக திரிவது?
அம்மா ! ஏன் என்னை இந்த மண்ணில் பெற்றிருக்கிறாய்?

யாரிடமும் கருணையில்லை
இரத்தமும் வன்மமும் படிந்த முகங்களுடன்
நான் பேசிக்கொண்டிருக்கிறேன்
என்னைச் சுற்றிலும்
மனிதர்களை தின்று களிக்கும் மிருகங்கள் அலைகின்றன
மிருகம் கவர்ந்து சென்ற நண்பனைப்போல
நான் ஏனம்மா இருக்கிறேன்?

கருணைக்காக தவிக்கும் குழந்தைகள்
எனக்கு முன்னால் செல்லுகின்றனர்
பிள்ளைகளுக்காக துடிக்கும் தாய்மார்கள்
என்னோடு பேசுகின்றனர்
அம்மா ஏன் என்னை இந்த மண்ணில் வளர்த்தாய்?

குழந்தைகளை இழுத்துச் செல்பவர்கள் என்னையும்
ஒரு இரவில் துப்பாக்கிகளால்
இழுத்துச் செல்ல முடியும்
உன்னையும் என்னையும் குறித்து யாரும் பேசுவதாயில்லை?
தங்கள் கோப்பைகளை குறித்தும்
தங்கள் வீடுகளைக் குறித்தும்
தங்கள் வண்டிகளைக் குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள்
அம்மா ஏன் வன்மம் நிறைந்த
மண்ணில் என்னை நடமாட வி;ட்டிருக்கிறாய்?

பூக்களை பார்க்க இன்னும் எதை நாம் இழக்க வேண்டும்?
துப்பாக்கிகளால் இருதயத்தை குத்திக்கொள்ளும் காலம்
ஏன் இன்னும் விரட்டுகிறது?
அமைதியான இரவில் இந்த நகரத் தெருவொன்றில்
நடந்து வர ஆசைப்படுகிறேன்
வெளிச்சங்களில் மகிழ்ச்சியுடன் உலவ விரும்புகிறேன்.
அம்மா அழகான வாழ்வு எப்படியிருக்கும்?

மகிழ்ச்சிக்கான ஏக்கங்கள் கனவாய்ப்போகின்றன
காலம் எல்லா வகையிலும் பிழைத்துப்போய்க்கிடக்கிறது
நீ இன்னும் வெயிலில் கிடந்து காய்கிறாய்
எங்களுக்காய் யாரம்மா இருக்கிறார்கள்?
____________________

நன்றி : ஆனந்தி

புகைப்படம் : அல்லாரை தடுப்பு முகாமில் 04.06.2010 அன்று எடுத்திருந்தேன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...