Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 22 மே, 2010

கொலைக் காட்சிகளின் நிழல்

o தீபச்செல்வன் ----------------------------------------

01
கொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின்
சித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

முதலில் எல்லோரையும் கைது செய்தனர்
சிலரது கண்களை கட்டினர்
சிலரது கைகளை கட்டினர்
இறுதியில் எல்லோருக்கும் கைகளும் கண்களும் கட்டப்பட்டன
வரிசையாக இருத்தப்பட்டனர்
புற்களின் மேலாயும் பற்றைகளின் வழியாகவும்
வதை எழும்பும் ஒலியுடன் இழுத்துச் செல்லப்பட்டனர்

மாபெரும் கொலைக் காட்சிகள் நிகழ்த்தப்பட்ட நிலத்தில்
குருதியின் மேலாய் பூக்களை தூவ
தந்தையை இனங்கண்ட சிறுமி காத்திருக்கிறாள்
மறுபடியும் அதே நாட்களில் வானம் உறைந்து கிடக்கிறது
உருக்கிக் கொட்டுகிறது
சத்தமிட்டு அழுதுகொண்டிருக்கிறது
கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளன
துப்பாக்கிகள் விசாரணை செய்கின்றன
பிரிபடாத நிலம் இருண்டுபோய்க் கிடக்கிறது.

சடலங்களால் நிரம்பிய நிலத்தில்
கனவு முறியடிக்கப்பட்ட இரத்தத்தில்
அநியாயம் வென்று களிக்கும் வெறியில்
இனம் துடிக்கும் பெருங்கொலைகளின் தொடர்ச்சி நிகழ்ந்தன
அந்த இரத்தம் வெளியில் தெரிய வேண்டி வந்தது
அந்த கூக்குரல்கள் வெளியில் கேட்க வேண்டி வந்தன
அந்தக் காட்சிகள் வெளித்தெரிய வேண்டி வந்தன
சித்திரவதைகளினால் அந்தப் பெருநிலம் அதிர்ந்து கொண்டிருந்தது.

இரத்தம் வடிந்து நனைந்து போன நிலத்தில் இருத்தப்பட்டனர்
மண் சித்திரவதை செய்யப்பட்ட நிலத்தில் இருத்தப்பட்டனர்
மழை வெருண்டபடி மேலும் அழுகின்றது.



02
படைகளது உடைகள் இன்னும் பச்சை நிறமாகின்றன
அவர்கள் ஒரு நாட்டின் ஒரு தேசத்தின்
மனிதாபிமானத்திற்கான படைகளாக கௌரவிக்கப்படுகின்றனர்
துப்பாக்கிகளின் பிரியர்களாக
துருப்பிடித்த பல துப்பாக்கிகளை மீட்டு வைத்திருக்கின்றனர்
அவர்களது இராணுவப் புன்னகையிலிருந்து
வெளிப்பட்டுப் போகிறது பேய்களின் நடனத்தின் அதிர்வு.

அரசனின் பிரியத்தை அவர்கள் நிறைவேற்றுபவர்கள்
தளபதிகளின் உத்தரவை நடத்துபவர்கள்
இறுதியில் அரசனுக்கும் தளபதிகளுக்கும்
படைகள் இரத்தத்துடன் கூடிய சதைகளை படைக்கின்றனர்
தளபதி இன்னுமின்னும் வீங்குகிறான்
அரசன் இன்னும் இன்னும் வீங்குகிறான்
அரசனின் புன்னகை வீங்குகிறது
தளபதிகளின் நட்சத்திரங்கள் வீங்குகின்றன
படைகள் இன்னுமின்னும் வெறியூட்டி வளர்க்கப்படுகின்றனர்.

அவர்கள் யுத்தத்தின் தந்திரங்களை
வெற்றியின் குரூரங்களை பகிர மிக விரும்புகின்றனர்
இனஅழிப்பை அதற்கான படுகொலையை
மீள மீள விளக்கத் தயாராக இருக்கின்றனர்
வீரம் நிறைந்த அர்த்தத்தில்
சடலங்களின் முன்பாக கம்பீரமாக நிற்கவும்
சடலங்களை அள்ளி பெருங்கிடங்குகளில் நிறைக்கவும் விரும்புகின்றனர்.



03
வெள்ளைக் கொடிகள் கொலை பதுங்கியிருந்த
ஒற்றர்களாக மாறியிருந்தன
எதிர்வரும் எவரையும் ஏதோ ஒரு அடிப்டையில்
சுட்டுத் தள்ளுவதற்கு
அவர்கள் தயாராகவும் ஆர்வமாகவும் செயற்பட்டனர்
சரணடைந்தவர்கள் கொலைக்கு பரிசளிக்கப்பட்டனர்
கைது செய்யப்பட்டவர்கள்
சித்திரவதைகளுக்கு தெரிவுசெய்யப்பட்டார்கள்
கொன்ற பின்னர்
குழந்தைகளை வெள்ளை கொடிகளால் போர்த்தியிருந்தனர்
புணர்ந்து முடித்த பின்னர்
பெண்களையும் வெள்ளைக் கொடிகளால் மூடியிருந்தனர்.

மேல்சட்டைகளையும் கீழ் சட்டைகளையும்
கைகளில் விலங்காக்கியிருந்தனர்
கொலையின் தந்திரம் மிகுந்த கயிறுகளால்
கைகளை பிணைத்திருந்தனர்
ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே
தங்கள் குருதி வெளியேறிக் கொண்டிருந்ததை கண்டனர்
அவர்களது குருதி பிரட்டப்பட்ட மண்ணில் ஆழத்திற்கு
செல்லுவதை பார்த்துக் கொண்டிருந்தனர்
அவர்களுக்கு பலவிதமான சடலங்கள் காண்பிக்கப்பட்டன.

கொல்லவும் சித்திரவதை செய்யவும்
வேருடன் அழிக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்ட படைகள்
இறுதியில் சடலங்களின் முன்பாக நின்று
வெற்றியைப் பகிருவதுடன் தங்கள் கடமையை முடிப்பதில்லை
அழிவுக்கான புதிய புதிய கட்டளைகளை நிறைவேற்ற
அவர்கள் எப்பொழுதும் காத்திருக்கின்றனர்
குருதியின் கனவுகளை அவர்கள்
வளர்த்துக் கொண்டிருக்கவே விரும்புகின்றனர்

நிலத்தை கைபற்றவே படைகள் நடவடிக்கை செய்தன
மக்களைக்கொல்லவே படைகள் இறந்தனர்
அதனால் படைகள் மக்களைக் கொன்றனர்
அதனால் படைகள் போராளிகளை கொன்றனர்

அதனால் அரசன் நிலத்தை கொன்றான்.
குருதியாலும் சதையாலும்
அரசன் தன் மாளிகையை கட்டி வைத்திருக்கிறான்.



04
கொலையின் பயம் உறைந்த கண்களை
என்ன செய்தீர்கள்?
எல்லா முகங்களையும் பார்த்துக் தவித்துக் கொண்டிருக்கும்
ஏக்கம் உறைந்த முகங்களை என்ன செய்தீர்கள்?
தனித்து மாட்டுண்ட சிறுவனை என்ன செய்தீர்கள்?
கைதவறி விட்டுச் சென்ற குழந்தையை என்ன செய்தீர்கள்?


ஏன் சப்பாத்துக்கள் நெருங்கின?
ஏன் பயங்கரமான சீருடைகள் நெருங்கின?
ஏன் ஆழமாய் அழித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கிகள் நெருங்கின?
ஏன் அழித்து முடிக்கச் சொல்லிய கட்டளைகள் நெருங்கின?

சித்திரவதைகளால் உயிர் இழந்து கொண்டிருந்த
சிறுவனின் முகம்
கொலைக்காட்சிகளில் இன்னும் நெளிந்து கொண்டிருக்கிறது.
நிலத்திற்கிடையில் குழந்தைகள் அலைகின்றனர்.
______________________
19.05.2010

பின்குறிப்பு :

தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் அதிர்ச்சியுட்டும் மேலும் சில புகைப்படங்களுடன் அவர்கள் எப்படி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்ற விடயங்கள் உட்பட இறுதிக் களத்தில் இராணுவம் எப்படி செயற்பட்டது என்பதை விளக்கும் இராணுவ அதிகாரி ஒருவரது நேர்காணலுடன் கூடிய போர்க்குற்றம் பற்றிய விபரணப்படத்தை ‘சனல் 4’ தொலைக்காட்சியில் ஜொனாதன் மில்லர் வெளியிட்டுள்ளார்.

இணைப்பு :

http://link.brightcove.com/services/player/bcpid62612474001?bctid=86382573001

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24585&cat=1

http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687
ஆங்கில மொழிபெயர்ப்பு
 THE SILHOUETTE OF MURDEROUS SCENES

புதன், 19 மே, 2010

கிழக்கில் கிடந்த பச்சை சூரியன்


சூரியனை சரித்து போட்டிருந்தனர்
உயிர் வயலில்
எல்லாக் கன்றுகளும் இறந்து கிடந்தன
ஒரு தாய் தன் குழந்தைகளை அணைத்தபடி
இறந்து கிடந்ததை நீ பார்த்திருப்பாயா?
கடைசியில்
அங்கு ஏன் நெருப்பெரிந்து
இருள் பிறந்தது?
ஏன் வானம் இருண்டு மழை பொழிந்தது?
அந்த மனிதனின் இறுதி வார்த்தைகள் என்ன?
வானம் என்ன சொல்லி அழுதது?
பெருநிலம் உறைந்து போயிருந்தது
நமது நகரங்கள் உடைந்து போயிருந்தன
கடைசி மனிதன் எங்கோ வெளியேறிச் சென்றிருக்கிறான்.
புதருக்கிடையில் குருதி பாய்ந்து கொண்டிருக்க
கபாலம் கொள்ளையடிக்கப்பட்டு
கிழக்கில் கிடந்தது பச்சை சூரியன்.
(மே 18)
_________________
தீபச்செல்வன்

வியாழன், 13 மே, 2010

கைது செய்யப்பட்ட தாயின் சரணடைந்த குழந்தை


o தீபச்செல்வன் ----------------------------------------

நந்திக்கடலில் விழுந்திருந்தன
நிறைய முகங்கள்
சயனட் குப்பிகளில் குழந்தைகள்
பால் குடித்தனர்.
தாய்மார்கள் துவக்குகளை வைத்திருந்தபடி
குழந்தைகளை சுமந்து சென்றனர்.

முள்ளி வாய்க்காலின் கிடங்குகள்
எல்லாம் மூடுண்டு விடுகிறது.
கிடங்குகளிலிருந்து எழும்பி வருகின்றனர்
பிணங்களும் அதன் குழந்தைகளும்.

கடல் வீழ்ந்துவிட மணல் பெயர்ந்து
கடலில் அள்ளுண்டு செல்லுகிறது.
முள்ளுக் கம்பிகள் வரவேற்கின்றன
ஒற்றை தேச முகங்களை அணிந்தபடி.

விடுவிக்கப்பட்ட பகுதி மரணத்தின்
குளிர் அறைகளாக மாறிவிட
சித்திரவதையின் பாடல்களில்
இரவு அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.
பெருநிலம் மயானமாக மாற
அகதிமுகாம்கள் நெருங்குகின்றன.

தாய் கைது செய்யப்பட்டிருந்தாள்.
குழந்தை சரணடைந்திருந்தது.
துப்பாக்கி இருவருக்கும் நடுவில்
நின்று கொண்டிருக்கிறது.
முட்கம்பி ஆடையாக படர்கிறது.
நந்திக்கடலின் பிணங்கள்
ஒதுங்கி முடிகின்றன.
ஈழத்தை இலங்கை விழுங்கி முடிக்கிறது.
__________________
17 மே 2009

(மே மாதம் கவிதைகள்)

நன்றி : அம்ருதா ஜீன் 2009

சொற்களற்றலைகிற நகரம்

o தீபச்செல்வன் ----------------------------------------
மரணம் கொடு முகத்துடன்
குழந்தைகளை விழுங்கி முடிக்கிறது.
ஒரு போராளியுடன்
சுற்றியிருந்த இருபது சனங்கள்
சுட்டு விழுத்தப்பட்டனர்.
இலக்கத்தில் முழ்கியிருக்கிறது வீடு.

எண்ணிக்கையின் மாறாட்டங்களில்
மரணங்களை கொண்டாடி திடுக்குறுகிறவர்கள்
சொற்களற்றலையும் நகரத்தின்
வாடிய பூக்களை கண்டு ஏங்கினர்.

பத்திரிகையின் முகப்பில்
சொற்களில் கண்ணீர் நிறைந்திருந்தது
துவக்குகள் வாசித்து
பின் தொடருகிற பத்திரிகை நிறுவனத்தின்
வாசலில்
குருதியின் பெரு எச்சரிக்கை குவிந்திருந்தது.

சவப்பெட்டிகள் தயாராக இருக்க
பிணங்களை தொலைத்தழுகிற மிஞ்சிய ஒருவன்
அதற்குள் படுத்திருக்கிறான்.
எதுவும் பேச முடியாதிருக்கிறது நகரம்.

கொடிகளால் முற்றுகையிட்டிருக்கிற நகரமெங்கும்
வரையப்பட்டிருக்கிறது
சனங்களின் தோல்வியின் கடைசிப் பிரதேசம்.
குழந்தைகள்
தடைசெய்யப்பட்ட சீருடைகளை அணிந்தபடி
உதிர்ந்து கொண்டிருக்கிற
பிணங்களின் கீழ் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

சொற்களற்றலைந்த நகரம் கடைசியில்
சவப்பெட்டியினுள் ஒளிந்தலைய
குழந்தைகள் அவற்றை சுமந்தபடி
நகரமெங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.
__________________
20.05.2009

(மே மாதம் கவிதைகள்)

நன்றி வடக்குவாசல் 2009

சனி, 1 மே, 2010

எல்லாக கண்களையும் இழந்த சகோதரியின் கனவு

o தீபச்செல்வன் ----------------------------------------


யுத்தத்தை முடித்துத்திரும்பும்படி வழியனுப்பிய
தன் இரண்டாவது கணவனையும்
இழந்த சகோதரி
இன்னும் உயிருடன் இருப்பதாக சொல்லியனுப்பியிருக்கிறாள்
பதிலற்று கரைந்து கொண்டிருக்கின்றன
என் வார்த்தைகள்
நொந்துபோன குரல்களால்
தன் காட்சிகளை அவள் கோரிக்கொண்டிருக்கிறாள்.
எப்பொழுதும் அவளுக்கு
முன்னாள் விளையாடித் திரிந்துகொண்டிருந்த
தன் குழந்தைகளை தேடுகிறாள்.

அழிக்கப்பட்ட காட்சிகள்
ஆன்மைவை நிறைத்துக்கொண்டிருக்கின்றன
எல்லாக் கண்களையும் இழந்துபோயிருக்கிறேன்
என்பதை திரும்பத் திரும்ப சொல்கிறாள்
கண்களை பிடுங்கிச் சென்ற ஷெல்
அவளது இரண்டு பெண் குழந்தைகளையும் விழுத்திச் சென்றது.
கண்களற்று துடித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான்
அவள் மாபெரும் சனங்கள்
கண்களை இழந்த
மைதானத்தலிருந்து அகற்றப்பட்டாள்
கண்கள் தொலைந்து போனது
குழந்தைகளையும் கண்களையும் அவள் தேடிக்கொண்டிருந்தாள்
சிதறிய குழந்தைகளின் குருதி
காயமடைந்த அவளின் கண்கள் இருந்த இடத்தையும் நனைத்தன.

குழந்தைகளின் குருதியால் ஊறியிருந்தபடி
பெருநிலத்தை அவள் இறுதியில் பார்த்திருந்தாள்
என்றும் தன்னால் தன் நிலத்தை
பார்க்க முடியாதபடி திரும்பியிருக்கிறாள்.

கடலால் கொண்டு செல்லப்பட்ட நாளிலிருந்து
கனவிழந்து தன் உலகத்தை தேடிக்கொண்டிருக்கிறாள்
உடலெங்கும் ஷெல் துண்டுகள் ஓடியலைகின்றன
கண்களை இழந்த சகோதரி கனவுகளைப் பற்றியே பேசுகின்றாள்.
_________________________

நன்றி : மறுபாதி இதழ் 03

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...