Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

இறுதிநாள் வழியில் தொலைந்தவர்கள்

o தீபச்செல்வன் ----------------------------------------

வழியில் தொலைந்த ஆடுகளின் கதைகளால்
நிறைந்துபோயிருக்கிறது இந்த நாள்.
இந்த வானொலி* வழி தவறியவர்களை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிற இரவு நிகழ்ச்சியை
ஓலிபரப்பிக்கொண்டிருக்கிறது.
கைகளுக்குளிலிருந்து எப்படி நழுவி விழுந்திர்கள்
என்று ஒவ்வொரு தாய்மார்களும்
இரவு நிகழ்ச்சியில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதி நாளிலிருந்து இன்று வரை
உனதம்மா** உன்னை*** தேடிக்கொண்டிருக்கிறாள்.
உன் ஞாபகமாய் என்னிடமிருக்கிற ஒரு சேட்டை
எப்படி பத்திரிகையில் விளம்பரமாக பிரசுரிக்க முடியும்?
புகைப்படங்கள் தொலைந்த வழியில்
வழி தவறியவர்களின்
குருதியுறைந்த உடல்கள் பற்றிய கதைகளை
வேறொரு பத்திரிகையின்**** மற்றொரு
பக்கம் எழுதிக்கொண்டேயிருக்கிறது.

தொலைந்தவர்களை கடிதங்களால் விசாரித்துக்கொண்டேயிருக்கிறது
இன்னொரு பத்திரிகை. *****
தேடிக்கொண்டிருப்பவர்களின்
துயரம் மிகுந்த சொற்களை நிரப்பிய கடிதங்களை
கொண்டு வந்தபடி
ஒவ்வொரு வாரமும் வந்துகொண்டிருக்கிறது.

எல்லோரும் திரும்பிவிடுவார்கள் என்ற
நம்பிக்கையை மட்டுமே இந்தக் கடிதங்கள் வாசிக்கின்றன.
தவறி விழுந்த குழந்தையின்
அழுகை எப்படி அடங்கிப்போயிருக்கும்?
கை நழுவி மறைந்த சிறுமியின்
இரவு எப்படியிருக்கும்?
தனித்து தொலைந்த சிறுவனின் வழி எப்படியிருக்கும்?
குழந்தைகளை இழந்த தாயின் வலி எப்படியிருக்கும்?
மனைவியை பிரிந்த கணவனின் திசை எப்படியிருக்கும்?
சகோதரர்களை பிரிந்தவர்களது துயர் எப்படியிருக்கும்?
எல்லோரையும் பிரிந்தவர்களது துயரால் மிகுந்திருக்கிற
கடிதங்கள் அதிகரித்தபடி பிரிவை அளந்துகொண்டிருக்கின்றன.
பதில் வார்த்தைளற்றுக் கிடக்கிற கேள்விகளால்
இந்த இரவு குலைந்து கிடக்கிறது.

காத்திருப்பும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும்
வளர்ந்துகொண்டேயிருக்கிறது.
அவர்கள் தவறிய வழிகள் மூடுண்டபடி
பிரிவை உயர்த்துகிற கடிதங்கள் மிக ஆழமாக தாழ்க்கப்பட்டு
மண் கொட்டிப் பரவியிருக்கிறது.
யாரும் திரும்பியதாக இல்லை என்பதை
மிகச் சோகமாக சொல்ல முடியாமல்
கரைந்து போகிறது அந்த வானொலியின் இரவு நிகழ்ச்சி.
மகிழ்ச்சி தரும் சொற்களான
தவறிய யாரேனும் ஒருவர் எழுதிய கடிதம் ஒன்றுக்காக
உன் அம்மா காத்துக்கொண்டிருக்கிறாள்.
----------
09.12.2009
*சூரியன் எப்எம், **கஜானந்தினுடைய அம்மா, ***கஜானந், ****சுடரொளி வார இதழ், *****மித்திரன் வார இதழ்

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

வருடத்தை தொடருகிற போரின் பிரகடனம்

o தீபச்செல்வன் ----------------------------------------

எல்லா வருடங்களும்
வெறும் இரவுகளைத்தான் உதிர்கின்றன.
நான் உன்னை சந்திக்காத
எதையும் பகிராத
கடந்த வருடத்தைப்போல
இந்த வருடம்
நடு இரவில் வந்து
என்னை எழுப்பக் காத்திருக்கிறது.

போர் நமது கிராமத்தை அழித்து
கனவை முடிவுறுத்துவதாய்
முன் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிற நாளில்
இதுவரை கைப்பற்றப்பட்ட
எல்லாம் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.

நீயும் நானும்
வெகு சுலபமாக புறக்கணிக்கப்பட்டு
போரால் அணுகிக்கொண்டிருக்கிற
வெளியில்
துடிதுடித்துக்கொண்டிருக்கிறது
கொண்டாட்டங்களுக்குரிய நமது வீடு.

உன்னையும் நமது சொற்களையும்
நாமிருந்து
பகிர்ந்துருக வேண்டிய வெளிகளையும்
ஒரு சாரைப்பாம்பு
மிக அமைதியாக தின்று முடிக்கிறது.
மேலும்
வருடத்தை தொடருகிறது
அலைச்சலுக்கான போரின் பிரகடனம்.
_____________________
14.04.2009

(கடந்த வருடத்தை நினைவு கூருவதற்காய் இந்தக் கவிதை பகிரப்படுகிறது)

நன்றி : இருக்கிறம் ஏப்பிரல் 2009

புதன், 7 ஏப்ரல், 2010

அப்பத்தின் கதை பற்றிய இரண்டாவது உரையாடல்

o தீபச்செல்வன் ----------------------------------------

எப்பொழுதும் அந்த முதல் உரையாடலை
நீ ஞாபகப்படுத்தியபடியிருப்பாய்.
சிகரட் குறைத்துண்டுகள் ஒதுங்கி குவிந்திருக்கும்
அந்தச் பாதிச்சுவரில்
அமர்ந்துகொண்டு மீளவும் மீளவும்
நாம் பேசியிருக்கிறோம்.
ஓவ்வொரு இரவும் கடைசியில் நம்மை
தனித்து பேச வைத்திருக்கிறது.
அப்பங்களை தூக்கிச் செல்லும்
உனது காலையும்
அதற்கான மாவை இடித்துக்கொண்டிருக்கும்
மாலை நேரத்தையும் நாம் இழந்துபோயிருக்கிறோம்.
போரினால் நாம் வாழ்வை இழந்து போயிருக்கிறோம்.

சிகரட் புகைக்கும் தேனீர்க்கடையின்
அருகிலிருக்கிற ஓடையில்
வரிசையாய் படிந்துபோயிருக்கிறது சாம்பல்.
அசாத்தியமாக வளர்ச்சி பெற்ற நமது நகரத்தில்
பியரை அருந்தியபடி நாம் அலைந்திருக்கிறோம்.
சாரயக் கடைகளில்
மதுக்கிண்ணங்களை தூக்கி வைத்திருத்தபடி
இருவரும் அப்பங்களை விற்கும் அனுபவங்களை
பகிர்ந்திருக்கும்பொழுது
நமது நகரம் வசீகரமான வெளிச்சத்தில்
ஒளிர்ந்தபடியிருந்தது.
நமது நகரத்திற்காக நாம் உழைத்திருக்கிறோம்.
அதை மிகவும் நேசித்திருக்கிறோம்.
கடைகளின் பின்புறமாக குந்தியிருந்து
உரையாடிக்கொண்டிருந்த பொழுது
விமானங்களுக்கு அஞ்சி பதுங்கியிருந்தபொழுது
நீ எனக்குப் பக்கத்திலிருந்தாய்.

நண்பனே சிகரட்டிற்காய் அடிபடுகிறவர்களாகத்தான்
எப்பொழுதுமே இருந்திருக்கிறோம்.
எல்லாவற்றையும் போலவே இப்பொழுது
நீ அப்பங்களை கூவி விற்பதற்கான
நமது நகரமும் இல்லை.
உனது அப்பங்களும் இல்லை.
சிகரட்டுக்களும் இல்லை.
மாவை இடித்துக்கொண்டிருக்கிற
மாலை நேரமும் இல்லை.
ஆனால் நீ நெருக்கத்தின் பெரிய உரையாடலாய்
முடியாத சிகரட்டாய்
எனக்குள் புகைந்து கொண்டிருக்கிறாய்.
அந்தப் பாதிச்சுவரின் சிதைவில்
சிகரட் துண்டுகள் என்னவாகியிருக்கின்றன?
போர் எல்லாவற்றையும் அழித்து விட்டது.
உன்னை இழந்திருக்க கூடாது.
உன்னுடன் நாம் எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம்.

கைவிடப்பட்ட உனது சடலத்தை
யாரோ கண்டு வந்ததாக சொல்லுகிறபோது
உனது அப்பம் பற்றிய
இரண்டாவது உரையாடல் தனித்துத் தொடங்கி
முடிவற்று நீளுகிறது.
எங்கு தவறிப் போயிருக்கிறாய்?

தகர்ந்து போயிருக்கிற நகரத்திற்கு நான் திரும்பப்போவதில்லை.
யாரேனும் அங்கு அப்பங்களை கூவிக்கொண்டிருப்பார்களா?
அப்பங்களை வாங்க யார்தான் காத்துக்கொண்டிருப்பார்கள்?
மூட்டத் தொடங்கும் ஒவ்வொரு சிகரட்டும்
உனக்காக புகைந்துகொண்டிருக்கிறது.
உனக்காக மது நிறைக்கப்பட்ட கிண்ணம்
எப்பொழுதும் எனக்கு முன்னாலிருக்கிறது.
___________________
08.09.2009 .கிளிநொச்சி நகரத்தின் நண்பர்களில் மிகவும் பிரியமான எனது நண்பன் ஸ்ரீகஜானாந். இறுதிப் போரில் சிக்குண்டு இறந்து போயிருப்பதாகவும் அவனின் சடலத்தை கண்டு வந்தாகவும் கூறுகிறார்கள். தடுப்பு முகாங்கள் எங்கும் தேடிய பொழுது கிடைக்கப்பெறவில்லை.

நன்றி : எதுவரை பெப்ருவரி - மார்ச் 2010

வியாழன், 1 ஏப்ரல், 2010

முட்கம்பிகளில் படிகிற அடையாள இலக்கம்

o தீபச்செல்வன் ----------------------------------------

ஒரு தனித்தீவில் உன்னைச்
சிறையிட்டிருக்கிறார்கள்.
முதுகில் குத்தப்பட்ட அடையாள இலக்கம்
முட்கம்பியில் படிந்து கிடக்கிறது.
மரங்களில் பொருத்தப்பட்டிருக்கும்
காவலரண்கள் என்னைக் கடந்து கொண்டிருக்கிறது.
காற்று அலையும்
வெளிகளில் முடிவற்ற வெறுமை நிரம்புகிறது.

முட்கம்பிகளால் கட்டப்பட்ட வீட்டில்
கோழி செட்டையடித்து துடிதுடித்துக்கொண்டிருக்கிறது.
வானம் கரைந்து சோற்றுப் பானைக்குள் நிறைந்துவிட
பிள்ளைகளுக்காக வாழும்
நம்பிக்கையை கட்டியெழுப்புகிறாய்.
நீ அறிந்திராத தெருக்களைப் பற்றி
நான் எதுவும் பேசிக்கொண்டிருக்கப்போவதில்லை.
நேரம் வேகமாக கடந்து கொண்டிருக்கிறது.

பிள்ளைமீது முட்கம்பி ஆடையென
உடுக்கப்பட்டிருக்கிறது.
நான் வரும்போது பச்சை வயல்களில்
சித்திரவதையின்
பழைய கூக்குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.
ஆண்குறிகளும் யோனிகளும்
கடல் நீரேரியில் மிதந்து கொண்டிருக்கிறது.
பெரிய பாலத்தை
தின்று மொய்க்கிறது காவலரண்கள்.

இரவுக்கும் பகலுக்கும் இடையில்
கிடந்து நீ நசிபடுகிறாய்.
அடையாள அட்டை
எனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
நெடு நேரத்தின் பின்னர் வந்திருக்கிற
நிவாரண உணவில்
நவீன பொருளாதாரத்தை கணக்கிடுகிறாய்.
சுவர்களற்று புழுதி
நுழைகிற வீட்டில் காலனிய நகரங்கள்
வந்து படிந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் சொற்கள் இருக்கின்றன.
நீ எதையோ சொல்லாமல் போகிறாய்
நம்மை கொண்டு வந்து
குவித்து விட்டிருக்கிற குண்டுகள்
தீர்ந்த பெட்டிகளில் நிரப்பிவிடப்பட்டிருக்கிறது
உனது சொற்கள்.
நீ எழுத முடியாதிருக்கிற கவிதையை
என்னிடம் வாசித்துவி;ட்டுப்போ.
பின்னால் சொற்கள் கொட்டிக் கொண்டிருக்கின்றன.

எனக்கான நேரம் முடிவடைகிறபோது
கோழிகள் செட்டையடிக்கிற சத்தம்
கேட்கத் தொடங்குகிறது.
இப்பொழுது உனது அடையாள
இலக்கத்தை நான் மீளவும் ஞாபகப்படுத்துகிறேன்.
____________________-
14.5.2009

சொற்கள் சிதைகிற மணல்

o தீபச்செல்வன் ----------------------------------------

நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
நீ பேசு.
சொற்களற்ற காட்டில்
துயர் பொழிந்து கொண்டிருப்பதை
பகிர முடியாதபடியால்
பாதியாய் சிதைந்து உடைகிற சொற்களை
நான் விழுங்குகிறேன்.
என்னை விடுத்து
உன்னை பற்றி சொல்லிக்கொண்டிரு.
காதுகளில் மணல் நிரம்புகிறது.

ஷெல்கள் வந்து விழுவதையும்
விமானங்கள் பறந்தலைவதையும்
துவக்குகளின் சத்தங்கள்
எங்கும் புகுந்து செல்வதையும்
தவிர
எந்த சத்தங்களுமற்றிருக்கிறது
உனது தொலைபேசி.
மணல் அணை எழும்புகிறது.

உயிரோடிருப்பதை தவிர
அங்கு எதுவுமில்லை.
உயிரும் பாதியாய் குறைந்துபோயிருக்க
சிதைகிற சொற்கள் ஒவ்வொன்றாய் வருகின்றன.
குண்டுகளால் சிதறியபடியிருக்கிற
உனது ஒரு இரு சொற்களைத் தவிர
நான் அடைந்தது ஒன்றுமில்லை.
மணல்தரை சூடாகிறது.

பாதியில் அறுந்துபோகிற உரையாடலில்
மீளவும் உன்னை குறித்தான
அச்சம் தொடங்குகிறது?
நீ தொலைபேசியை வைத்ததிலிருந்து
நான் காத்திருக்கிறேன்
பெரும் சமரிற்குப்பிறகான
உனது சொற்களுக்கு.
மணல் கிடங்கு வாய் பிளக்கிறது.

எதுவரை எனது சொற்கள் சிதைய
விழுங்கிக்கொண்டிருப்பேன்
உன்னிடமிருந்து என்னை மறைத்தபடி?
தொலைபேசி கனத்துப் போய்க்கிடக்கிறது.
மணல் எழுந்து வீசுகிறது.
_____________
மே 2009

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...