Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 27 மார்ச், 2010

துயர் மிகுந்த காலத்தை கடந்த அருளம்மாவின் கனவு

o தீபச்செல்வன் ----------------------------------------


அழிவினால் தன் காலங்கள் முழுவதையும்
இழந்த மூதாட்டியின் நேர்காணலில்
உறைந்து போயிருக்கின்றன சொற்கள்.
அருளம்மாவின் குரல்களில் அடங்கியிருந்த வாழ்வின் கனவை
தீராதிருக்கும் தன் பசியை
அவர் மீளமீள சொல்லிக்கொண்டிருக்கிறார்.

பயங்கரமான நிமிடங்களிலிருந்து தப்பித் திரும்பிய
அருளம்மா தன் கண்களில்
கடவுளை நிறைத்து வைத்திருக்கிறார்.
பேரழிவுகளின் நிலத்தில் கதிரையில் அவளின் காலங்களை
ஏற்றி கொண்டு வந்திருக்கிறார்கள்.
கடவுளின் அளவை மீறிக்கொண்டிருக்கின்றன
அருளம்மாவின் அடங்காத பிரார்த்தனைகள்.
ஏமாற்றங்களால் முடிந்துபோன வாழ்வின்
சொற்களில் உறைந்து போயிருக்கிறது வாழ்வுக்கான கனவு.

யுத்தத்தின் கொடிய அனுபவங்களால்
அவள் வைத்திருக்கும் கதைகளும்
சிதற மறுத்த அவளின் உடலும்
அடங்க மறுத்த நீளமான நிரம்பிய உயிரும்
தீராத கனவுகளை வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
அவலத்தின் பெருங்கதையை
குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்
யுத்தத்தை வென்ற மூதாட்டி.
அருளம்மா நிறைவேறாத
கனவுகளைப் பற்றியே குழந்தைகளுடன் பேசுகிறாள்.
__________________
நன்றி :   பொங்குதமிழ்

பெருநிலம்: காயங்களை அணிந்து புன்னகைத்துக்கொண்டிருக்கிறது


o தீபச்செல்வன் ----------------------------------------

(இன்னுமின்னும் அறியாச் சேதிகள்
அந்தப் பெரு நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன)

யாரும் அறிந்து முடிக்காத மரணங்கள்
நந்திக்கடற்கரையில் கசிந்து கொண்டிருக்கிறது.
எல்லா விதமான சித்திரவதைகளையும் நீளமாக கொலுவிய
ஓளிநாடாவை
தங்கள் இரவுத் தொலைக்காட்சிகளில்
படைகள்
பார்த்து பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
குற்றவாளிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட
பெருநிலத்தில் விரும்பிய எல்லாமே நிகழ்த்தப்படுகிறது.

எல்லாற்றையும் ஞாபகப்படுத்துகிற
பெரிய துப்பாக்கியை வைத்திருக்கிற
அந்தப் பெரிய இராணுவ வீரனை
ஆட்கள் தங்கள் கனவுகளை இறுகப்பிடித்தபடி
புதைக்கப்பட்ட வெளியிலே நட்டு வைத்திருக்கிறார்கள்.
மூர்க்கமும் வெறியும் கொண்ட
அந்த இராணுவ வீரன் அச்சம் தரும்படியான முகத்தை
பெரு நிலத்தின் முழுத் திசைகளுக்கும் காட்டிக்கொண்டிருக்கிறன்.

சனங்களை வென்று விழுத்திய
தன் வீரக் கதைகளை அவன் அளந்துகொண்டிருக்கிறான்.
தன் வீரப்பாடலை
வானத்தில் பாய்ச்சி முழு நிலத்தையும் நனைக்கிறான்.
குழந்தைகள் செல்ல
மறுக்கப்பட்ட பகுதியில் மரணம் கசிந்து பரவ
எலும்புக்கூடுகளை கால்களில்
கட்டிய பேய் மகளிர் தங்கள் நடனங்களை ஆடுகிறார்கள்.

வீரப்பாடலின் அரசன் கால் வைக்கிற இடமெல்லாம்
மரணமும் குருதியும் நசிபடுகின்றன.
குரல்கள் சல சலத்து அடங்க மண்ணால் மூடப்பட்டிருக்கிறது.
வீழ்ந்தவர்களின் கதைகளையும்
வீழ்த்தப்பட்ட முறைகளையும் புகைப்படங்களாக
வெளியிட்டுக்கொண்டிருக்கிறான்
அரசனால் அங்கு நிறுத்தி
வெற்றி வாகை சூடப்பட்டிருக்கிற இராணுவீரன்.

பெருநிலம் காயங்களை அணிந்து புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.
_____________________________
09.12.2009
நன்றி:  பொங்குதமிழ்

சனி, 20 மார்ச், 2010

குழந்தைகள் ஆசைப்படுவது என்ன?

o தீபச்செல்வன் ----------------------------------------


குழந்தைகள் அரசனின் கேள்வியிலிருந்து
தங்களின் விரிந்த விடைகளைப் பெற்றிருக்கிறார்கள்.
குழப்பமாக நீட்டப்பட்டிருக்கிற தெருவில்
அனைத்துக் குழந்தைகளும் கைகோர்த்தபடி கேட்கிறார்கள்
குழந்தைகள் ஆசைப்படுவது என்ன என்று?
தான் கேட்டுக்கொண்டு
அரசன் குழந்தைகள் ஆசைப்படுவது
தான் தரும் காலம் என்கிறான்.
அது வளமானது என்றும் சுதந்திரம் சமத்துவம் கொண்டது
என்றும் சொல்ல குழந்தைகள்
அரசனின் சொற்களிலிருந்து கேள்விகளை தொடங்குகின்றனர்.

அரசன் தன் எல்லாச் சொற்களிலும் அதிகாரம் பெருகுகிற
தன் புன்னகையை பூசி விட்டிருக்கிறான்.
குழந்தைகள் அஞ்சும் பயங்கரமான முகத்தை
அவன் குழந்தைகளை நோக்கி திருப்புகிறான்.
குழந்தைகளின் உலகத்தை
சுருட்டும் தன் புத்திகளால் வடிவமைத்த புத்தகத்தில்
அவன் குழந்தைகளைப் பற்றியே பேசுகிறான்.

குழந்தைகளிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கி எடுத்தவன்
அவர்கள் துயரடைந்து போயிருக்கிற
அச்சமான காலத்தை வனைந்தவன்
குரூரங்களின் வளமான காலத்தை குழந்தைகளுக்கு
பரிசளிக்கப்போவதாக சொல்கிறான்.
குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்.

எல்லாவற்றையும் நிர்மூலமாக மூடியிருந்து
புன்னகையை சிதறடிக்கும் அதிகாரத்தை
இயல்பை தின்று தந்திரங்களால்
சிறைப்பிடித்திருக்கிற நோக்கங்களை
சாபங்களை பரிசளித்து சரித்திரங்களை அழித்து
விரிந்திருக்கிற எண்ணங்களை
குழந்தைகள் ஆசைப்படவில்லை.
அரசன் தன் விடைகளால் குழந்தைகளின் மனதையும்
தன் புன்னகையால்
அவர்களின் கண்களையும் காயப்படுத்திக்கொண்டேயிருக்கிறான்.
_________________
நன்றி :  சிக்கிமுக்கி இதழ் 03

வெள்ளி, 12 மார்ச், 2010

அந்தச் சிறுவன் திரும்பி வருவான்

o தீபச்செல்வன் ----------------------------------------

அந்தத் தாய் நம்புவதைப்போல
அவனின் தந்தையும்
சகோதரர்களும் நம்புவதைப்போல
அவன் திரும்புவான் என்பதையே நாமும் நம்புவோம்.
அந்த வழிகள் இன்று எங்கிருக்கின்றன?
அவன் பல குழந்தைகளுடன்தான்,
பல சிறுவர்களுடன்தான் காணமல் போயிருக்கிறான்.

தோழனே!
பெரு நிலம் முழுக்க முழுக்க குழந்தைகளின்
இரத்தம் படர்ந்த நிலையிலேதான் தோற்றிருக்கிறது.
எதிர்பாராத விதமாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்
அஞ்சலிக்குறிப்புகளில்
அவனுக்கும் ஒன்று எழுத நேர்ந்திருக்கிறது.
குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும்
அஞ்சலிக்குறிப்புக்களை
எழுதுவது மிகப்பெரும் சாபமாய் வலிக்கிறது.
உனது சொற்கள் அவனுக்காக காத்திருந்ததை நானறிவேன்.

ஏதோ ஒரு தடுப்பு முகாமையும்
ஏதோ ஒரு சிறைச்சாலையும்
மாறிமாறி தேடிக்கொண்டிருந்தாய்.
யாரே பார்த்திருக்கிறார்கள்
அவனின் கிழிந்த கால்சட்டையை.
ஷெல் குழந்தைகளை தின்னும் என்பதையும்
சிறுவர்களை கொன்றுபோடும் என்பதையும்
அந்தச் சிறுவன் அறிந்திருந்தான்.
தனக்கு முன்னால் நிகழ்நத எல்லா மரணங்களையும்
கண்டு அஞ்சியிருந்தான்.

எங்கள் சிறுவர்கள் இனி புன்னகைப்பார்களா?
அவன் கரைக்கப்பட்ட நிலத்தில்
இனி என்ன நிறத்தில் பூக்கள் மலருமா?
தன் முகத்தையும் புன்னகையையும்
அவன் எங்கு கொண்டுபோய் வைத்திருப்பான்.

தோழனே!
நீங்கள் அவனுக்காக புத்தகங்களை எடுத்து வையுங்கள்.
அவன் தன் இரவுப்பாடப்பயிற்சிகள்
நிறைவு செய்துகொண்டு
வகுப்பறைக்கு திரும்புவான்.
ஒளித்து வைத்த எல்லாவற்றையும் அவன் மீட்டுக்கொண்டு
திரும்புவான் என்பதை நாமும் நம்புவோம்.
_______________________
( யுத்தத்தில் கொல்லப்பட்ட தர்மேகனுக்காய் )

நன்றி : உலக தமிழ்ச் செய்திகள்

சனி, 6 மார்ச், 2010

இரத்தம் வடிகிற உரையாடலுக்காய் மூடப்பட்டிருந்த பக்கம்

o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

01
எல்லாக் கதவுகளையும் இழுத்து சாத்தும்
மிக ரகசியமான அழைப்பை
ஏதேனும் ஒரு குறிப்பில் எழுதி வைத்திருக்க நினைத்தபோதும்
தாமதமாக செல்கிற ஒரு குறுந்தகவலில்தான்
சுருக்கமாக எழுதி அனுப்பியிருந்தேன்.
மிக ரகசியமாகவே முகத்தில் வழிந்துகொண்டிருந்த குருதியை
துடைத்துக்கொண்டேன்.

மிகவும் தடித்த படங்குகளால் எல்லாவற்றையும்
மூடிக்கொண்டபடி
எனக்கு எதிராக நிகழும் எந்த நடவடிக்கைகளையும்
வெளியில் காட்டாதிருக்கிறேன்.
மூன்று மணிநேரமாக வலைப்பதிவு மூடப்பட்டிருந்தது.
மீளவும் இறுக்கமான சொற்களை தேடினேன்.

நமது ஆதி வீட்டில் வரையப்பட்டிருந்த சித்திரங்களும்
பொறிக்கப்பட்டிருந்த பெரு எழுத்துக்களும்
மிகவும் சாந்தமானவை என்றே
அவர்களிடம் கூறியிருக்கிறேன்.
வந்த எல்லா தொலைபேசி அழைப்புக்களையும்
திருப்பி விட்டுக்கொண்டிருந்தேன்.

இந்தக் கவிதைகள் வாயிலாக இனி ஒன்றையும்
உங்களுக்கு சொல்லப்போவதில்லை.
அந்த இரத்தம் படர்ந்த கம்பளத்தில் நடத்திய
உரையாடலையும்
சொற்களில் வடிந்து காய்ந்துபோன இரத்தத்தையும்
எதையும் பகிரவும் எண்ணமில்லை.
விளக்கமளிக்கப்படவேண்டிய இந்தப் பக்கம் வெளித்துக்கிடக்கிறது.

02
நானும் எனது தோழனும் சிரித்துக்கொண்டேயிருந்தோம்.
எல்லா விதமான பயங்கரமான
சொற்களின் பொழுதும்
கண்களையும் முகத்தில் படர்ந்த தோல்வியையும்
வேலிகளுக்கு கீழாக முட்கம்பிகளின் ஊடாக
அடுத்த காணிக்குள் எறிந்துகொண்டிருந்தோம்.
அவர்கள் எங்களை
மிக வேகமாக விழுங்கிக்கொண்டிருந்தார்கள்.

துவக்கு முகத்தை குத்தி கிழிப்பதையும்
கீறிக்கொண்டு உரையாடுவதையும் இரத்தம் உறிஞ்சி செல்வதையும்
நாங்கள் யாரிடமும் பகிரப்போவதில்லை.
யாரும் எங்களை மிரட்டவில்லை
என்பதையும் நாங்களாகவே வெளியிட்டிருக்கிறோம்.

முழு அச்சங்களும் நிறைந்த சொற்கள்
உரையாடலின் பிறகு
இந்த மோட்டார் சைக்கிளின் பின்னால்
எதுவரை வடிந்துகொண்டிருக்கப்போகிறது.

எனக்கெதிரான நடவடிக்கைகள் மிகுந்த இனிமையானவை
என்பதை அன்றை பின்மாலைப்பொழுதில்
இந்த பக்கத்தில் விரிவாக எழுதியிருந்தேன்.
நானும் எனது நண்பனும்
மூடப்பட்டிருந்த வலைப்பக்கம் குறித்து ஒன்றையும் சொல்லப்போவதில்லை.
எல்லாவற்றிற்காகவும் காலம் மிக அழகாக தரப்பட்டிருக்கிறதாக
நாம் சொல்லியிருக்கிறோம் என்று
அன்றைய இரத்தம் வடிகிற உரையாடல் குறித்து அவர்கள் பேசுகிறார்கள்.
-----------------------------------------------------
25.11.2009

நன்றி : எதுவரை பெப்ருவரி - மார்ச் 2010 

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...