Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 27 ஜனவரி, 2010

நிழலற்ற நகரத்தில் கால் பதித்த நாள்



o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

பூக்கள் உதிர்ந்த எனது நகரத்தில் கால்களை
இன்றுதான் இறக்கி வைத்திருக்கிறேன்.
ஆடித் திரிந்த எனது நகரத்தில்
அழிவுகளின் துயரடைந்த காலத்தின் பின்னர்
சற்று தூரம் வரை நடந்து திரிகிறேன்.
நான் விட்டுச்சென்றவைகளை தேடுகிறேன்.
சில சனங்கள் திரும்பியிருக்கிறார்கள்.
சாம்பலை அள்ளி கைகளில்
நிரப்பிக்கொண்டு அவர்கள் திரும்பியிருக்கிறார்கள்.

அந்த இரவு எனது நகரத்தில் இரண்டாவது முறையாக
மீண்டும் கால் பதித்திருந்தேன்.
முகங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.
முத்தமிட முடியாதபடி
குருதியும் சதையும் கலந்துகிடக்கிற மண்ணை
கொடூரமான ஓவியங்கள் வரையப்பட்ட
என் பூர்வீக நகரத்தின் வசீகரம் இழந்த சுவர்களை
தனியொருவனாய் வாசிக்கிறேன்.

சதிகளால் பலியிடப்பட்ட ஆன்மாக்கள்
அலைந்துகொண்டிருக்கின்றன என்றும்
நகரத்திற்கு மேல் அந்தரத்தில்
அவை துடித்துக்கொண்டிருக்கின்றன என்றும்
ஒரு முதாட்டி சொல்லிக்கொண்டு
சுவர்க்கரையில் கிடக்கிறாள்.
நகரம் இருளால் நிரம்பி வெறுமையுள் அமுங்கியிருந்தது.
பாதி மரங்களும் சிறிய துண்டு கட்டிடங்களும்
மீண்டும் துளிர்க்கும் என்று
அந்த மூதாட்டி இன்னும் சத்தமாக சொல்லிக்கொண்டிக்கிறாள்.

சாபங்களில் கிழிந்து போன நகரத்தில்
கால் வைக்கிற இடங்களெல்லாம் புதைகிறது.
முட்கம்பிகளிடமிருந்து
மெல்ல மெல்ல எனது நகரத்தை பிடுங்கி எடுப்பேன்.
சிதைவுகளின் கையிலிருந்து
மெல்ல மெல்ல எனது நகரத்தை செழிக்க வைப்பேன்.
என் நகரத்தில் மீண்டும் பூக்களை நாட்டுவேன்.
பூக்களின் நகரத்தில் கனவுகள் பூக்கும்.
எல்லோரும் வரும் நாட்களில் திரும்புவார்கள்
என்ற நம்பிக்கையை நகரத்திலிருந்து வெளியேறிய
நள்ளிரவு சொல்லிக்கொண்டு வந்தேன்.
தனியொருவனாய் வந்திருக்கிற
என் காலடியை
எண்ணிக்கொண்டிருக்கிறது நிழலற்றுப்போயிருக்கிற நகரம்.
________________________
02.01.2010

புதன், 20 ஜனவரி, 2010

அதே முட்கம்பிகள் - அதே பயங்கரம்


o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

எல்லா அறிவிப்புகளும் முடிந்துவிட்டன.
செய்திகளும் புகைப்படங்களும் எல்லோரையும்
நம்பவைத்து சென்றுவிட்டன.
அதே முட்கம்பிகளுக்குள்
அம்மாவின் முகம் சுருங்கிக்கிடக்கிறது.
தங்கையின் கூந்தல் வளராமலிருக்கிறது.
எங்களுக்கிடையில் அதே முட்கம்பிச் சுருள்கள்
அம்மாவின் அருந்திக்கொண்டு வந்த புன்னகையை
காயப்படுத்திக்கொண்டிருக்கிறது.
தங்கையின் கையிலிருக்கிற புத்தகத்தை
கிழித்துக்கொண்டிருக்கிறது.
எனக்காக அம்மா பிட்டினைச் சுமந்து வந்தாள்.
காத்திருப்பின் எல்லைகளை
வீடு செல்லுகிற கனவினை நகரத்திற்கு மீள்கிற
நம்பிக்கையை
அம்மா முட்கம்பிகளில் சொருகியிருக்கிறாள்.
நுளம்புகள் கூடாரத்தை தூக்கிச் செல்லும் இரவில்
முட்கம்பிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க
காலாவதியான அதே கூடாரத்திற்குள்
கால்களை மடக்கி அம்மா அடைந்து கொள்கிறாள்.
நீண்ட தூரத்திலுள்ள நகரத்தின் கடைக்குச் செல்லுவதற்காக
அம்மா கோரிய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
நெருங்கவும் தழுவிக்கொள்ளவும்
அனுமதிக்கப்படாத
வாசலில் முகாங்கள் என்றோ திறந்துவிடப்பட்டன
என்று எழுதப்பட்டுள்ளன.
முகாங்கள் திறந்து விடப்பட்டதற்காக
பத்திரிகையில் எழுதப்பட்ட
நன்றிகளை நான் உட்பட பலர் வசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
முட்கம்பிகளைப்பற்றியும்
கூடாரங்களைப்பற்றியும் நிறையவே பேசி விட்டோம்.
எல்லா அறிவிப்புகளும் போராட்டங்களும் முடிந்துவிட்டன.
நான் எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கும்
அந்தப் பயங்கரமான முட்கம்பிகளால்
சூழப்பட்ட வேலிகளுக்குள்
குழந்தைகள் விளையாடுவதைக் கண்டேன்.
______________________
02.01.2010

திங்கள், 11 ஜனவரி, 2010

அரசன் கொண்டு வந்த பழங்களுக்காக நாம் வழங்கிய பூக்கள்


o தீபச்செல்வன்------------------------------------------------------------------

அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான்.
யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான்.
நான் இப்பொழுதும் கேட்கிறேன்
அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும்
குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று.
என் அன்பு மிகுந்த சனங்களே!
எங்கள் பிடரிகளால் குருதி கசிந்துகொண்டிருக்க
இந்த மைதானம் இழந்தவற்றைக் கோரிக்கொண்டிருக்கிறதை
நீங்கள்தான் அமைத்து வைத்திருக்கிறீர்கள்.
எங்கள் கோரிக்கைகளும்
அரசனின் தந்திரம் நிரம்பிய வாக்குறுதிகளும்
நஞ்சுக் கனிகளில் மறைந்திருக்கின்றன.

துக்கம் உறைந்த நாட்களை எண்ணி கவலைப்படும்
எங்கள் தந்தையே!
ஒரு நாள் குழந்தைகள் புதருக்கிடையில் பதுங்கியிருந்த வேளை
நடு சமங்களில் எழுந்து நின்று
சிலுவைத் தூக்கியபடி மன்றாடிக்கொண்டிருந்திர்களே!
எங்களுக்கு முன்னால்
இறந்து சிதைந்த குழந்தைகள்தானே வந்து விழுந்துகொண்டிருந்தன.
அரசன் எல்லாக் குழந்தைகளையும்
வெட்டும்படி கட்டளை பிறப்பித்தபொழுது
எல்லாச் சனங்களையும் சிறையிலடைத்துக்கொண்டபொழுது
குழந்தைகளுக்காகவும் சனங்களுக்காகவும்
நீர் உபவாசம் செய்து கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருந்தீர்.

பெற்றோர்களை பிரிந்து துயர் மிகுந்த அறைகளில்
துடித்துக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு
உணவும் வார்த்தைகளும் கொடுத்த தந்தையே
அரசனின் பழங்கள் குறித்து உங்கள் ஒரே குழந்தைக்கு
என்ன சொல்லப் போகிறீர்கள்?
ஆடைகளை களைந்து சோதனையிடவும்
ஆடைகளை கிழித்து
நிருவாணமாக நாம்மை ஓட வைக்கும்படியும்
அரசனே கட்டளை பிறப்பித்திருந்தான்.
அவனுக்கு நாங்கள்  பொன்னாடை போர்த்தியிருக்கிறோம்.
எங்கள் நிர்பந்தங்களும் சபிக்கப்பட்ட வாழ்வும்
ஒவ்வொருவரையும் கொலை செய்துகொண்டிருக்கிறது.

எங்கள் கனவை சிதைத்துப்போட்டவன்
நிலத்தை அள்ளிச் சென்றவன்
தெருக்களை சூறையாடியவன்
குழந்தைகள்மீது பிரமாண்டமான சிறையினைப் பின்னியவன்
சனங்களின் குருதியில் முகம் கழுவிக்கொண்டிருந்தவன்
தந்திரமான கதிரையால் வனையப்பட்ட
கூடையில் யுத்ததில் பிடுங்கிய பழங்களை கொண்டு வந்திருக்கிறான்.
அவற்றை நாமும் புசித்து குழந்தைகளினது
கைகளிலும் சொருகி
சனங்களின் குருதியில் நனைந்த பூக்களை பரிசளித்திருக்கிறோம்.
அரசன் அழகான பூக்களுடன் செல்லுகிறான்.
_________________________
10.01.2010

சனி, 9 ஜனவரி, 2010

பால்மா பைக்கற்றுக்களை கோரும் குழந்தைகளின் துவிச்சக்கர வண்டிகளை கோரும் தாய்மார்கள்


o தீபச்செல்வன்
------------------------------------------------------------------

குழந்தைகளுக்கு ஏனைகளை கட்டுவதற்காக
பழைய சீலைகளை
யார் யாரிடமோ வேண்டிக்கொண்டு சென்றார்கள்.
இரவல் சைக்கிள்களில் குழந்தைகளை பின்புறமாக
ஏற்றிக்கொண்டு
புத்தகங்களை கொலுவியபடி அவர்கள் போகிறார்கள்.
இவர்கள் ஒரே நேரத்தில்
தாயாகவும் மனைவியாகவும் மாணவியாகவும்
இருக்கிறார்கள் என்ற கதையாடல்கள்
புத்தகமெங்கும் விரிந்து கிடக்கிறது.

விதவை மாணவிகள் பற்றியும்
கணவன் பிரித்தெடுக்கப்பட்ட மாணவிகள் பற்றியும்
நிறையக் கடிதஙகளை எழுதியிருக்கிறேன்.
அவர்கள் எனக்கெழுதிய கடிதங்களில் வீங்கி வழிகிறது கண்ணீர்.

குழந்தைகள் வெகுநேரமாய்க் காத்திருக்க
வீடுகளுக்காக
மலைநேரங்களில் அலைந்து திரும்புகிறார்கள்.
தங்கள் குழந்தையையும் புத்தகத்தையும் பத்திரமாக
எடுத்து வைத்துக்கொண்டு
தவித்துக்கொண்டிருக்கும் தேனீரை அருந்துகிறார்கள்.

அவர்கள் கோருவது குழந்தைகளுக்காக
பால்மபைக்கற்றுக்களையும்
குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புத்தகங்களை கொண்டு செல்ல
ஒரு துவிச்சக்கரவண்டியையும்.
கொதித்துக்கொண்டிருக்கும் மாலை நேரம்
தேனீர்க்கோப்பைக்குள்
கீழிறங்குகிற சூரியன் விழுந்ததைப்போலிருக்கிறது.

உறவினரின் வீட்டில் தங்கியிருக்கத் தொடங்கி
எத்தனை நாளாகிறது?
காலை முதல் குழந்தை அழுதுகொண்டிருக்கிறது.
புத்தகத்தில்
வீடுகள் முளைத்துச் செழிக்கின்றன.
விரிக்கப்பட்ட புத்தகத்தின்
நடுவில்
சைக்கிள்களும்
பால்மாபைக்கற்றுக்களும் கொட்டிக்கிடக்கின்றன.
மாலைநேரத்தையும் தாயின் புத்தகத்தையும்
குழந்தை விரித்து வைத்து படித்துக்கொண்டிருக்கிறது.
____________________________
10.10.2009 நன்றி:ஆழி ஜனவரி 2010

வெள்ளி, 1 ஜனவரி, 2010

முன்பொரு காலத்தில் இந்த நிலம் எங்களிடமிருந்தது


o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

எந்தப் பறவைகளும் வந்தமராத மரத்தின்
காய்ந்த கிளைகளில்
பழங்கள் காய்த்து கனியும் என்று நம்பியிருந்தோம்
அம்மா அந்தப் பறவைகளை எங்கேனும் கண்டாயா?
அதன் மரம் நீண்ட காலங்களாய் பட்டுப்போயிருந்தது
தலைகளில்
ஒடிந்து விழுந்துகொண்டிருக்கிற முற்றத்தில்
இப்பொழுது எந்தத் தடிகளும் இல்லை
இந்த வருடம்
எங்கள் வீட்டை உடைத்து வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றதுடன்
அச்சம் தரும் நாட்களையே
ஒவ்வொன்றாய் விரித்துக்கொண்டிருந்தது.
வெறும் ஒரு இரண்டு தடிகளைத் தவிர ஒன்றுமில்லை.

பறவைகள் மறந்துபோன எங்கள் கிராமத்தில்
சைக்கிள்கள் உடைந்து உக்கிப்போன எங்கள் நகரத்தில்
ஒரு புன்னகையை பரிமாற
கூடியிருந்து ஒரு கோப்பை மதுவை அருந்துவதற்கு
யாரம்மா இருக்கிறார்கள்?
உன் கைகளில் மலை நேரத்தை கொண்டு வருகிற
தேனீர்க்கோப்பைகளை காணவில்லை
திரும்பாத கிராமத்திற்கும்
இறங்காத நகரத்திற்கும் ஊடாக செல்லும் பேரூந்தில்
நாளை நான் பயணிக்கப்போகிறேன்.

இந்த நாள் கழிந்துபோன வருடத்தின்
இனிப்பாயிருந்த நாட்களையே ஞாபகப்படுத்துகிறது
வெடி அதிரும் இரவு
இன்னும் சற்று நேரத்தில் முடிவடைகிறது
யார் யாரே வந்து செல்லுகிறார்கள்
எனக்கு முன்னால் ஏதேதோ கிடக்கிறது
முடிந்து போன இந்த வருடத்தில்
ஏராளமானவற்றை இழந்துபோயிருக்கிறோம்
என் வீடு தேடுகிற தெருக்களில்
வார்த்தைகளற்று என் சைக்கில் அலைகிறது
முன்பொரு காலத்தில் இந்த நாள் எங்களிடமிருந்தது.

அந்தப் பறவைகளையும்
அதன் பட்ட மரத்தையும் அதன் கீழிருந்த எங்கள் வீட்டையும்
எங்களிடம் தருவார்களா?
பட்ட மரம் எரிந்து சாம்பலாகிப்போக
பறவைகள் அதில் புதைந்து போயிருக்கின்றன
வீடு கரைந்துபோன கிராமத்து வெளியில்
எந்த அடையாளங்களுமில்லை
இந்த நாளில் முன்பொரு காலத்தில்
எங்களிடமிருந்த நமது நிலத்தில்
என்னிடமிருந்த புன்னகையையும்
வார்த்தைகளையும் கோரிக்கொண்டிருக்கிறேன்.
 
01.01.2010 

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...