Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 5 டிசம்பர், 2009

அம்மா எதுவரைக்கும் காத்திருப்பாள்

தீபச்செல்வன்
----------------------------------------------------------------
01
அம்மா எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளக்கூடியவள்.
வீட்டிற்கு செல்வதற்காகவே
கொடிய வனாந்தரத்தின்
வெயிலிலும் அடர்ந்த மழையிலும் அவள் காத்திருக்கிறாள்.
நண்பனே நீண்ட நாட்களின் பிறகு
மகிழ்ச்சி தருகிற செய்தி ஒன்றை தந்திருக்கிறாய்.
உனக்காக உனதம்மா சொந்த நிலத்தில்
செய்து வைத்திருக்கிற உணவுகளுடன்
காத்துக்கொண்டிருக்கிறாள் என்ற
உனது மகிழச்சி ஒன்றுதான் இங்கிருக்கிற யாவரதும்
புன்னகையை துளிர்க்கச் செய்திருக்கிறது.

அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
எதுவரைக்கும் எனது அம்மா காத்துக்கொண்டிருப்பாள்.

அழைத்துச் செல்வதற்கான அனுமதிக்காகவும்
பெயர் குறிப்பிடுகிற ஒலிபெருக்கிக்காவும்
அம்மா காத்திருக்கிறாள்.
நாட்களை தள்ளிச் செல்லுகிறபோது
அதை பொறுத்துக்கொள்ளுகிறாள்.
எதுவரைக்கும் காத்துக்கொண்டிருப்பாள்
என்பதை ஒரு கேள்வியாக நான் முன்வைக்கவில்லை.
யாரே சனங்கள் ஊர்களுக்கு
திரும்பிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

02
அம்மாவை இன்றுதான் திறந்துவிட்டிருக்கிறார்கள்.
அவள் எந்த பையையும் தூக்கிக்கொண்டு
மீன் வாங்குகிற சந்தைக்கோ
புடவை வாங்குகிற கடைக்கோ செல்லவில்லை.
திரும்பி கூடாரத்துக்குள் வரவேண்டியதை
அம்மா மறுக்கவில்லை.
எப்பொழுதும் கூடாரத்துக்குள் வந்து
அடைந்து கொள்ள தயாராகவே இருக்கிறாள்.

அவர்கள் உங்களது வீடுகளை
உங்களிடமே தந்ததைப்போல
எங்களது வீடுகளை எங்களிடம் தருவார்கள்
என்றே அம்மா நம்புகிறாள்.
இன்று திறக்கப்ட்ட கதவின் அகலத்தின் அளவை
எனது நண்பன் ஒருவன் கேட்டிருந்தான்.
வெட்டபட்ட முட்கம்பிகளை
மீள இழுத்து கட்டினால் என்ன செய்வீர்கள்
என்று கேட்கிறான்.
நாங்கள் பதிலளிக்காத கேள்விகளுடன்
இதையும் சேர்த்துக்கொள்ளுகிறேன்.

முகாங்கள் திறந்துவிடப்படுகிறபோது
திறக்கப்பட்ட காத்திருப்புகளின் நீளத்தை
யாரும் அறிந்திருப்பார்கள்.
சோகங்களை அடுக்கி வைத்திருந்த கூடாரங்களை
யாரும் பார்த்திருக்க கூடும்.
உனது அம்மா எனது மற்றும் என் அம்மாவின்
காத்திருப்பை நன்றாக உணர்ந்திருப்பாள்.


சனங்கள் எதையாவது பிரதியீடாக தரவேண்டும்
என்றே திறந்து விடப்பட்டிருக்கிறார்கள்.
இப்பொழுது இருப்பது
காய்ந்து உக்கிய எலும்புகள் மட்டுமே.
எலும்பின் மூலைகளுக்குள் ஒதுங்கியிருந்த
கொஞ்ச இரத்தமும்
உறிஞ்சப்பட்ட பின்னர்
எங்கள் மிகுதி எலும்புகள்
அவரவர் ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
அம்மா
அதையும் கொடுக்க தயாராக இருக்கிறாள்.

அம்மா எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுவாள்.
இந்த வெளியில்
அம்மா எதுவரைக்கும் காத்திருப்பாள்.
நண்பனே
உனது ஆறுதலையும்
வீடு திரும்பிய மகிழ்ச்சியையும்
எனது அம்மாவுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
_______________
29.11.2009 சதீஸ் மற்றும் அவனின் அம்மாவுக்காக
(அம்மாவின் கூடாரத்துக்குளிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்)

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...