Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 26 டிசம்பர், 2009

உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்



நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து
எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சகோதரியே! உன்னை உரித்து
சிதைத்தவர்களின் கைளிலிருந்து
எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.

கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு
என்ன நேர்ந்திருக்குமென்று
தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு
இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு
உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்
எண்ணிக்கையற்ற முனைகளில்
நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்
யார் உன்னை தின்றார்கள் என்பதையும்
உனது தொலைக்காட்சியில்
நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நீ நடித்த பாடல்களும் படங்களும்
ஒளிபரப்பபட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்
உனது பாதிப்படம் ஒரு மூலையில்
பார்க்கப் பொறுக்க முடியாத
கோலமாக தொங்குகிறது.

அதே படைகளினால் கவலிடப்பட்ட
நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது
தாயைப்போலவே ஒருத்தி
தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.
ஆண்குறிகளை வளர்த்து
இரத்தத்தை படையலிட்டிருக்கிற
படைகளின் யுத்த முனைகளில்
உன் சீருடைகளை
கழற்றி எறிந்திருக்கிறார்கள்.
உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்
தொலைந்துபோன உன் துப்பாக்கி
படைகளின் கையிலிருக்கிறது

முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே
நீ சரணடைந்திருக்கிறாய்.
துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்
ஒரே மாதிரியாய்
வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.

முற்றத்தில் தெருவில் வயல்களில்
கண்ணிவெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்
சீருடைகள் முதலான உடைகளும்
இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்
மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.
என்னிடம் வாங்கிச் சென்ற
கவிதையை எங்கு போட்டிருப்பாய்?

இசைப்பிரியாவுக்கு.
 25.12.2009

o தீபச்செல்வன்

தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் பணிபுரிந்த காலத்தில் அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. 'வேலி' என்ற குறும்படத்தில் மிகத்திறம்பட நடித்திருந்தார். 'வேலி' படம் பற்றி நான் வீரகேசரியில் எழுதிய பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 'ஈரத்தீ' படத்திலும் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவர். பாடல்களிலும் நடித்திருக்கிறார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளாராக இருந்திருக்கிறார். வீடியோ, எடிட்டிங், எழுத்து போன்ற எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இரக்கமும் அன்பும் கொண்ட மிகுந்த எளிமையான - கருத்தாழம் கொண்ட 'சிறந்த' போராளியாக வாழ்ந்தவர்.

கணினி ஓவியம் - ரமணி

சனி, 19 டிசம்பர், 2009

புகைப்படத்தில் கொல்லப்பட்ட சகோதரன்



o தீபச்செல்வன்
------------------------------------------------------------------

எங்கள் எல்லா ஞாபகங்களையும் கனவையும்
இறுதிநாளில் களைந்தபிறகுதான் சரணடையவேண்டியிருந்தது.
தாய்மார்கள் தாங்களகவே
தமது பிள்ளைகளின் புகைப்படங்களை கிழத்துப்போட்டனர்.

சகோதரனே யுத்தத்தின் இறுதி நாட்கள் வரையிலும்
உன்னை ஏதோ ஒரு வகையில்
பதுக்கி வைத்திருந்தோம்.
கடுமையான மழை நாள் இரவொன்றில்
எங்கள் எல்லா முகங்களும்
வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றபோது
உனது முகம் மட்டுமே
எங்களிடம் எஞ்சியிருந்தது.

நீங்கள் தறித்திருந்த புகைப்படங்களையும்
நாங்களாகவே அழித்துவிடவேண்டிய தருணம் வந்திருந்தது.
தீபங்கள் இறந்துபோயிருந்தன.

நாங்கள் சரணடைந்ததாக சொல்லப்பட்ட நாளில்
அல்லது
கைது செய்யப்பட்டதாக நாங்கள் உணரப்பட்ட நாளில்
உனது கல்லறைகளையும்
தகர்த்துவிட்டார்கள் என்ற செய்தியை அறிந்தோம்.

நீங்கள் வரிசையாய் துடித்துக்கொண்டிருப்பதை
நான் கண்டேன்.
பெரிய கிடங்கொன்றில் அவர்கள் உங்களை
புதைத்துவிடப்போவதாக பேசிக்கொண்டார்கள்.
அந்தப் பெரிய சவப்பெட்டி.யில்
குருதி வடிந்து எங்கள் வாழ் நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது.

உன்னை அவர்கள் கொன்றனர் என்ற அந்த செய்தியால்
யாரும் அறியாதபடி மிக அமைதியாகவேனும்
எங்களால் அழ முடியவில்லை.
உனது மரணம் உன்மையில் எங்கு நிகழ்ந்தது
என்று தெரியாமலிருக்கிறது.
உன்னை மதிக்கிற
மாலைகளை நிரந்தரமாக இழந்து
நினைவுகள் வீழ்ச்சியடைந்திருக்க
ஒரு பெரிய சவப்பெட்டியில் தகர்க்கப்பட்ட
முழுக்கல்லறைகளினது சாம்பலையும் நிரப்பி வைத்திருந்தார்கள்.

சகோதரனே உனது புகைப்படத்தை
அம்மா விட்டு வரநேர்கையில் தனது கைகளில்
குருதி கசிந்து கொட்டியது என்கிறாள்.
உன்னை நினைவு கூறுவதற்காய் எங்களிடம் எதுவும் இல்லை.
புகைப்படத்தில் வைத்தே
உன்னை அவர்கள் கொலை செய்துள்ளனர்.
நீ நாட்டிய தென்னங்கன்றும்
வேருடன் அகழ்ந்து அகற்றப்பட்டிருக்கிறது.

உனக்காக தங்கையும் உனது குழந்தையும்
கொண்டு திரிகிற தீபம் எரிந்து கையை சுடுகிறது.
_________________________
20.11.2009

(நன்றி: வடக்குவாசல் டிசம்பர் 2009
ஓவியம்  சந்திரமோகன்)

சனி, 12 டிசம்பர், 2009

கூடார மக்களது குழந்தைகளின் விருப்பம்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------

இந்தக் குழந்தைகள் எப்பொழுதும் கூடாரத்திற்கு
வெளியில் செல்லவே விரும்புகிறார்கள்
என்பதை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
மிகவும் சிறியதான இந்தக் கூடாரம்
ஒரு சிறைச்சாலையைப்போல பெரிதான சித்திரவதைகளை
திறந்துகொண்டிருக்கிறது.
எங்கும் நடக்க முடியவில்லை., காட்டு மரங்களின் வேர்கள்
முகங்களை குத்திக்கொண்டிருக்கிறது.
தோழரே, கூடார மக்கள் குறித்து நீங்கள் பேசுவது
உங்களுக்கு ஆபத்தை தரலாம்.
நாங்கள் பேசுவதை நிறுத்துவதும்
கோருவதை தவிர்பதுமாகவே எல்லாம் நிகழ்ந்துவிடுகிறது.

இந்தப் புழுதியிலும் சேற்றினிலும்
அவர்கள் எப்பொழுதும் அழகான குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.
அவர்களது கேள்விகளுக்கு
நம்மால் பதில் சொல்ல முடியவில்லை.
அவர்களுக்கு சொல்லும் கதைகள் எல்லாம்
உலகத்தின் கூடாரங்கள் பற்றிய கதைகளாகத்தானிருக்கின்றன.
அதிகாரத்தின் கூர்மையில்
அவர்களது புன்னகையையும் விளையாட்டு மைதானங்களும்
இன்னும்பிற வழிகளும் சிதைந்துபோயிற்று.
உலகத்தின் எங்களைப்போன்ற சனங்களுக்காக
கூடாரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தோழரே, இவர்களுக்காக நாங்கள் வியப்புட்டும்
எந்தக் கதைகளையும் சொல்ல முடியவில்லை.
பொம்மைகளையும் இதர விளையாட்டுப் பொருட்களையும்
இவர்கள் தூக்கி எறிகிறார்கள்.
கூடாரத்துக்குள் இவர்களின் உலகம் சுருங்கியிருக்கிறது.
குழந்தைகள் முட்கம்பிகளுக்குள்
எங்கேனும் திரிந்து விளையாடி திரும்பி வரலாம்
என்று முகாம் விதிகள் சொல்லுகின்றன.
கூடாரத்தை விட்டு வெளியேற எதை வேண்டுமானாலும்
செய்துவிடத் துடிக்கிறார்கள் சற்று வயது கூடிய சிறுவர்கள்.

மிக நீணட காலமாக கூடாரங்களை பாவித்திருக்கிறோம்.
மண் கூடாரங்களையும்
இந்த இறப்பர் கூடாரங்களையும் வழங்க மறுப்பின்றி
அனுமதி தரப்பட்டிருக்கிறது.
இதற்குள்ளே குழந்தைகளைப் பெறவும்
அவர்களை வளர்க்கவும் சொல்லியிருக்கிறார்கள்.
இவர்கள் வயதாக வயதாக பேசுபவைகளினால்
உலகத்தின் அத்தனை அகதிகளுக்கும்
ஆபத்து நேர்ந்துவிடும் போலிருக்கிறது
கூடாரங்களை மீறாத வகையிலேயே
நாங்கள் காவலிடப்பட்டிருக்கிறோம்.

ஜன்னல்களும் வாசல்களும் கூடிய இந்தக் கூடாரங்களை
தங்கள் புத்தகங்களிலெல்லாம் வளரும் சிறுவர்கள்
வரைந்து வைத்திருக்கிறார்கள்.
கூடார மக்கள்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கறார்கள்.
எங்கள் வளரும் சிறுவர்களுக்கும்
சில கூடாரங்களை அடுத்த வாரங்களில்
தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
வண்ண வண்ணமான கூடாரங்களை புதிதாக இறக்குகிறார்கள்.

எங்கள் குழந்தைகளும் நாங்களும் அனுமதிக்கப்படும்பொழுது
கூடாரங்களை விட்டு வெளியே செல்லவும்
அல்லது நிரந்தரமாக இதற்குள் தங்கவும் தயாராக இருக்கிறோம்
என்பதை நாங்களாகவே வற்புறுத்தலின்றி ஊடகங்களுக்குச் சொல்லியிருக்கிறோம்.

மிக அவசர அவசரமாக கூடாரங்களைத் தந்தபிறகு
அவை நிரந்தரமாக காலுன்றப்பட்டன.
------------------------------------------------------------------------
(27.10.2009 ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண் டோ வன்னி அகதிகளை "கூடார மக்கள்" என அழைக்கிறார்)

நன்றி: வார்த்தை டிசம்பர்

சனி, 5 டிசம்பர், 2009

அம்மா எதுவரைக்கும் காத்திருப்பாள்

தீபச்செல்வன்
----------------------------------------------------------------
01
அம்மா எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளக்கூடியவள்.
வீட்டிற்கு செல்வதற்காகவே
கொடிய வனாந்தரத்தின்
வெயிலிலும் அடர்ந்த மழையிலும் அவள் காத்திருக்கிறாள்.
நண்பனே நீண்ட நாட்களின் பிறகு
மகிழ்ச்சி தருகிற செய்தி ஒன்றை தந்திருக்கிறாய்.
உனக்காக உனதம்மா சொந்த நிலத்தில்
செய்து வைத்திருக்கிற உணவுகளுடன்
காத்துக்கொண்டிருக்கிறாள் என்ற
உனது மகிழச்சி ஒன்றுதான் இங்கிருக்கிற யாவரதும்
புன்னகையை துளிர்க்கச் செய்திருக்கிறது.

அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
எதுவரைக்கும் எனது அம்மா காத்துக்கொண்டிருப்பாள்.

அழைத்துச் செல்வதற்கான அனுமதிக்காகவும்
பெயர் குறிப்பிடுகிற ஒலிபெருக்கிக்காவும்
அம்மா காத்திருக்கிறாள்.
நாட்களை தள்ளிச் செல்லுகிறபோது
அதை பொறுத்துக்கொள்ளுகிறாள்.
எதுவரைக்கும் காத்துக்கொண்டிருப்பாள்
என்பதை ஒரு கேள்வியாக நான் முன்வைக்கவில்லை.
யாரே சனங்கள் ஊர்களுக்கு
திரும்பிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

02
அம்மாவை இன்றுதான் திறந்துவிட்டிருக்கிறார்கள்.
அவள் எந்த பையையும் தூக்கிக்கொண்டு
மீன் வாங்குகிற சந்தைக்கோ
புடவை வாங்குகிற கடைக்கோ செல்லவில்லை.
திரும்பி கூடாரத்துக்குள் வரவேண்டியதை
அம்மா மறுக்கவில்லை.
எப்பொழுதும் கூடாரத்துக்குள் வந்து
அடைந்து கொள்ள தயாராகவே இருக்கிறாள்.

அவர்கள் உங்களது வீடுகளை
உங்களிடமே தந்ததைப்போல
எங்களது வீடுகளை எங்களிடம் தருவார்கள்
என்றே அம்மா நம்புகிறாள்.
இன்று திறக்கப்ட்ட கதவின் அகலத்தின் அளவை
எனது நண்பன் ஒருவன் கேட்டிருந்தான்.
வெட்டபட்ட முட்கம்பிகளை
மீள இழுத்து கட்டினால் என்ன செய்வீர்கள்
என்று கேட்கிறான்.
நாங்கள் பதிலளிக்காத கேள்விகளுடன்
இதையும் சேர்த்துக்கொள்ளுகிறேன்.

முகாங்கள் திறந்துவிடப்படுகிறபோது
திறக்கப்பட்ட காத்திருப்புகளின் நீளத்தை
யாரும் அறிந்திருப்பார்கள்.
சோகங்களை அடுக்கி வைத்திருந்த கூடாரங்களை
யாரும் பார்த்திருக்க கூடும்.
உனது அம்மா எனது மற்றும் என் அம்மாவின்
காத்திருப்பை நன்றாக உணர்ந்திருப்பாள்.


சனங்கள் எதையாவது பிரதியீடாக தரவேண்டும்
என்றே திறந்து விடப்பட்டிருக்கிறார்கள்.
இப்பொழுது இருப்பது
காய்ந்து உக்கிய எலும்புகள் மட்டுமே.
எலும்பின் மூலைகளுக்குள் ஒதுங்கியிருந்த
கொஞ்ச இரத்தமும்
உறிஞ்சப்பட்ட பின்னர்
எங்கள் மிகுதி எலும்புகள்
அவரவர் ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
அம்மா
அதையும் கொடுக்க தயாராக இருக்கிறாள்.

அம்மா எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுவாள்.
இந்த வெளியில்
அம்மா எதுவரைக்கும் காத்திருப்பாள்.
நண்பனே
உனது ஆறுதலையும்
வீடு திரும்பிய மகிழ்ச்சியையும்
எனது அம்மாவுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
_______________
29.11.2009 சதீஸ் மற்றும் அவனின் அம்மாவுக்காக
(அம்மாவின் கூடாரத்துக்குளிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்)

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...