Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 27 நவம்பர், 2009

குழந்தைகளுக்காக சேகரிக்கப்பட்ட யுத்தத்தின் நாணயத்தாள்

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
குடுமி மலையில் யார் வாழ்ந்தார்கள் என்று
குழந்தைகள் கேட்கிறார்கள்.
அந்த மலையை ஆயுதம் நிரப்பிய
டோராப் படகுகள் ஏன் தாக்குகின்றன என்று
கேள்விகளை முன்வைத்தபடி
யுத்தம் நிகழும்
நாணயத்தாளை பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

யுத்தம் ஏதோ ஒரு வகையில் மீள மீள
ஞாபகப்படுத்தப்படுகிறது.
இந்த நாணயத்தாள் அந்த நாள் வரை
நிகழ்த்தப்பட்ட எல்லா அழிவுகளையும்
வரைந்து வைத்திருக்கிறது.

மீட்க சகிக்காத நிகழ்வுகளையும் தோல்வியையும்
நிரப்பி வைத்திருக்கிறார்கள்.
நினைவு கொள்ள முடியாத நாட்களின் கதைகளால்
செய்யப்பட் கேலியான தாளின் வாயிலாக
அச்சம் தரும் காலத்தின் காட்சிகளை மட்டுமே
குழந்தைகளுக்காக சேகரித்து வைத்திருத்திருக்கிறார்கள்.

இந்த விமானங்கள் இன்னும் ஏன்
பசிக்கிற வேகத்துடன் பறந்தலைகின்றன எனவும்
ரெலிகப்டர்கள் இன்னும் ஏன் மிகவும் இறக்கமாக
பறந்து திரிகின்றன எனவும்
இந்தத் குழந்தைகள் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

வரலாற்றுள் ஒளிந்து கொள்ளுவதற்காய்
புனிதத்தை பூசிய
பின்பக்கமாக பதிந்திருக்கிற
குற்றம் நிரம்பிய முகத்தின் புன்னகையையையும்
திசை நோக்கியிருக்கிற கைகளையும்
நான் மொழிபெயர்த்து கூறமுடியாதபடியிருக்கிறேன்.
எதற்கும் இந்த நாணயத்தாளை தூக்கிக்கொண்டும்
கைகளுக்குள் வைத்துக்கொண்டும்
வாழ வேண்டியிருப்பதுடன்
அதற்காக உழைக்கவும் வேண்டியிருக்கிறது.

எரிந்து போயிருக்கிற தேசத்தில் செயின்பிளக்குகள்
இன்னும் ஏன் நிலத்தை பிய்க்கின்றன என
நான் கேட்கிறேன்?
இரணைமடுக்குளத்தினுள் அச்சம் தருகிற
உருவங்கள் இறங்குகின்றன.
எரிந்துபோன தேசத்தை தின்னும் நடவடிக்கையும்
மறுபக்கத்தில் உள்ள புன்னகையையும் விலக்க முடியாதபடி
ஒன்றின்மேல் ஒன்றாய் படிந்திருக்கிறது.
இந்த அரசன் ஏந்தியிருக்கும்
கூர் வாள் எனது குழந்தைகளை
இனிவரும் எல்லாக் காலங்களிலும் குத்தப்போகிறது.

தந்தையே எங்கள் கடலை யார் குடித்தார்கள்?
என்று எனது குழந்ழைதகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.
பெரிய கொடியை எதன்மீது நாட்டினார்கள் எனவும்
அங்கு யாருடைய குருதி கொட்டியிருக்கிறது எனவும்
அங்கு குடியிருந்தவர்கள்
எங்கு துரத்தப்பட்டார்கள் எனவும்
எனது எதிர்காலக் குழந்தைகள் கேட்கப்போகிறார்கள்.

தங்களுக்காக சேமிக்கப்பட்டிருக்கிற நாணயத்தாள்களில்
நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற
படைகளின் சாப்பாத்துக்களையும்
தொப்பிகளையும்
அதிகாரம் வளருகிற நட்சத்திரங்களையும்
எல்லாக் குழந்தைகளும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். _________________________
18.11.2009

புதன், 18 நவம்பர், 2009

இல்லாதவர்களின் அளவற்ற கனவு

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
அவர்கள் பெருங்கனவுடனே
மரணத்தை முத்தமிட்டனர்.
கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட
கல்லறைகளும் நம்மிடம் இல்லை.
தாய்மார்கள் தீப்பந்தங்களையும்
தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர்.
மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன்
கல்லறைமீதான
தமது சொற்களையும் இழந்து விட்டனர்.

கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது.
இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை.
இலைகளில் குருதி ஒழுக
பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன.

தலைகளை மின்கம்பத்தில் மோதி
இல்லாதவர்களை அழைக்கிறது
நம்பிக்கையற்ற மனம்.
கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு
அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம்.
அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாடல்
நெருப்பில் கிடந்து பொசுங்குகிறது.
அவர்களை முழுமையாக
அழித்துவிட்டதாக இந்த நாளை
பிரகடனம் செய்கின்றனர்.

அப்பாவுக்காக தீப்பந்தம் ஏந்தி வருகிற குழந்தை
மண்ணை கிண்டி
கல்லறையை தேடிக்கொண்டிருக்கிறது.
நமது ஞாபகத்தின் கடைசி சொத்தையும்
அவர்கள் மிக வேகமாக அழித்தனர்.
அழுவதற்காக இருந்த
உரிமையையும் நாளையும் பறித்து எடுத்தனர்.
மனங்களில் கல்லறைகள்
எழும்பிக் கொண்டிருக்கின்றன.

எங்கோ ஒரு மூலையில் கனவு எரிந்து
கொட்டிக் கொண்டிருக்கிறது.
யாருமற்ற தனித்த நிலத்தில்
வரலாற்றின் துயரம் நிரம்பிய எலும்புக்கூடுகள்
எழும்பிச் செல்லுகின்றன.
மண்ணை பிரட்டி
வீரச்சொற்கள் எழுதப்பட்ட
கல்லறைகளின்
சுவர்களை ஆழத்தில் புதைக்கிறார்கள்.
கல்லறைகளின் போர் நடந்து முடிந்துவிட்டது.
சனங்களுடன் அவர்கள்
கல்லறைகளை துடைத்தெறிந்து விட்டனர்.

யாரிடமும் பூக்கள் இல்லை.
எவருக்கும் கல்லறைகள் இல்லை.
அணைக்கப்பட்ட தீப்பந்தள் அலைந்து திரிகின்றன.
வீர முகம் நிரம்பிய புகைப்படங்களும்
கரைந்து போய்விட்டன.
சனங்கள் ஏமாற்றப்பட்டனர்.
வீரர்கள் இறுதியில் தோல்வியடைந்தனர்.
இந்த நாள் தோல்வியால் நிரப்பப்பட்டிருக்கிறது.
கனவு வளர்க்கப்பட்ட பெரிய மண்ணிலிருந்து
இனம் படுகொலை செய்யப்பட்ட
சுடலையின் வாசனை திரண்டபடி பெருமெடுப்பில் வீசுகிறது.
__________________________________

புதன், 11 நவம்பர், 2009

மழைக்கிராமத்தில் நனைந்து ஊறிப்போன சொற்கள்

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
சொற்கள் விறைத்துப்போயிருக்க
மழை சனங்களில் குளித்துக்கொண்டிருக்கிறது.

மலக்குழியில் புதைந்து இறந்த
சிறுமியின் உடலை
மீட்டு வைத்திருக்கிறர்கள்.
கல்லாற்றில் மிதந்துகொண்டிருக்கிறது
தண்ணீர் நிரப்பும் கலன்கள்.
முழுமையாக
நிவாரணக் கிராமத்தை
நனைத்துக்கொண்டிருக்கிறது மழை.
கூடாரங்களுக்குள் தண்ணீர் நிறைய
குழந்தைகள் மிதந்துகொண்டிருக்கின்றன.

மழைக்காடாகிறது
ஒதுக்குப்புறமாக இருக்கிற காட்டுக்கிராமம்.
அள்ளுண்டு போகிறது முட்கம்பிகள்.
களைத்த முகத்தை கழுவி
நிரப்பிக்கொண்டிக்கிறது பெருமழை.

திறந்த வெளியில் விளையாடிக்கொண்ருந்த
சிறுவர்கள்
மழையில் ஒதுங்கி நிற்கிறார்கள்.
குளித்துக்கொண்டிருக்கிறது கூடாரங்கள்.
சோற்றுப்பானை உடைந்து விழ
அடுப்பு கரைந்து முடிகிறது.

விறைத்துப்போயிருக்கிறது மனம்.
பள்ளத்தை நோக்கிச் செல்லுகிறது கூடாரம்.
கால்வாயில் போகும் பாத்திரங்களுக்கு
பின்னால்
ஓடிச்செல்லும் அம்மாவின் கால்கள்
மணலில் புதைகின்றன.

நிலத்தை கழுவிய நீர்
முட்கம்பிகளுக்குள் அலைந்து
கிராமத்தை குளமாய் நிரப்பியிருக்கிறது..
சொற்கள் நனைந்து நீருரிப்போய்க்கிடக்கிறது.
சேற்றில் புதைந்துகொண்டிருக்கிறது
ஆறு கிராமங்களும்.
--------------------------------
(13.09.2009 செட்டிக்குளம் தடுப்புமுகாம் கிராமங்கள்)

செவ்வாய், 3 நவம்பர், 2009

யுத்தகால நிகழ்வுகளின் கலந்துரையாடல்

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
எங்கள் யுத்தகால நிகழ்வுகள் பற்றி
அவர்கள் கலந்துரையாடப் போகிறார்கள்.
யாரும் குற்றங்களை இழைக்கவில்லை
என்றே எல்லா விசாரணைகளும் சொல்லுகின்றன.
குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்
மிக மிக கொடிய இரவுகளை
பனி படர்ந்திருந்த இரவுகள் என்றே
அவர்கள் சொன்னார்கள்.
எல்லாருடைய கைகளிலும்
குருதி பிறண்ட கோடுகள்தானிருக்கின்றன.

சரியாக ஆயுதங்களை பாவித்தார்களா எனவும்
சரியாக குண்டுகளை வீசினார்களா எனவும்
சரியான இடத்தில் நிலை கொண்டிருக்கிறார்களா எனவும்
எல்லா அறிக்கைகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

ஜனநாயக மேசைகளில் வடிந்து கொண்டிருக்கிற
குருதியை ஏந்தும் எல்லா விசாரணைகளும்
தந்திரம் வாய்ந்திருக்கின்றன.
குழந்தைகள் மறுக்கப்பட்ட பூமியில்
அவர்கள்
வாழ்வதற்கு எதிராக
சட்டங்களை கொண்டு வருகிறார்கள்.
யுத்தகால நிகழ்வுகள்
எவ்வளவு கொடுமையானவை என்பதை
குருதி பிறண்ட முகத்துடன் மிகவும் காயமுற்ற குரலுடன்
உலகின் எல்லாக் குழந்தைகளும்
அழுதபடி சொல்லின.
யாரும் படைகளை திரும்பப்பெறுவதாயில்லை.

எல்லாச் சந்திகளுக்குமாக கிளைமோர்களும்
எல்லா நகரங்களுக்குமாக குண்டுகளையும்
முழுப் பூமிக்கு எதிராக அணுகுண்டையும் தயாரித்தார்கள்.
அனைத்து மனிதர்களுக்கும் எதிராக
துப்பாக்கிகள்தான் அலைகின்றன.
குழந்தைகளின் உலகத்தை கொடுமையாக சிதைத்தார்கள்.
எப்பொழுதும் ஏதோ ஒரு மூலையில்
யுத்தம் நடந்துகொண்டேயிருக்கிறது.
எங்காவது குழந்தைகள் அஞ்சி பதுங்கியிருக்கிறார்கள்.

எல்லா விசாரணைகளும் யுத்த வெற்றிகளையே
பட்டியலிடுகின்றன.
கிண்ணங்களை பரிமாறி மேலும் களங்களை திறக்கின்றன.
அதிகாரத்தை வடிவமைப்பதைப் பற்றிய
எண்ணத்திலே தொங்குகின்றன.
மூடப்பட்ட கிடங்கை திரும்பவும் கிண்டத்தொடங்குகிறார்கள்.
சிப்பாய்களின் கைகளில் சோர்வடையும்
துப்பாக்கிகளை இறுகப் பற்றச் சொல்லுகிறார்கள்.

ஈராக்கின் எண்ணெய் கிணறுகளில்
குழந்தைகளை ஒளித்திருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் எறியப்பட்ட குண்டுகள்
ஆறாதிருக்கின்றன.
அமெரிக்கப் படைகள் உலகம் எங்கும் நிறைகின்றன.

எங்கள் யுத்தகால நிகழ்வுகள் பற்றி
அவர்கள் கலந்துரையாடப் போகிறார்கள்.
அவர்கள் எதையோ பெறுவதற்காகவும்
நிகழ்த்துவதற்காகவும்
புன்னகை மிகுந்தபடி
கூடுகிறார்கள்.

எல்லோருமே யுத்தக் குற்றவாளிகாக இருப்பதை
தந்திரமாக மூடுகிறார்கள்.
குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்.
_____________________
{02.11.2009 யுத்தக் குற்றங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது}

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...