Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 30 அக்டோபர், 2009

மீளவும் சில பொருட்களை தவறவிட்டிருக்கிறேன்

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
பொருட்களை எந்த நேரத்திலும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி
தயாராகவே வைத்திருக்கிறேன்.
எதிர்பாராத பின்னேரமாகவே நாங்கள் அழைக்கப்பட்டோம்.
எண்ணிக்கையற்ற பிரகாசமும் மகிழ்ச்சியும்
எல்லாவற்றையும் மறைத்து முன்னால் நின்றுகொண்டிருந்தன.
எங்கள் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவதாக
ஏற்றிக்கொண்டு சென்ற பேரூந்தில்
பொருத்திய ஒலிபெருக்கி அறிவித்தது.
பார்க்க முடியாதபடி
நிலம் முழுவதும் அழிந்துபோயிருப்பதை கண்டேன்.

கடந்த வாரம் அதுவும் ஒரு மாலை நேரமாய்
நிதிலேகாவையும் குழந்தையையும்
மீளக்குடியிருத்த ஏற்றிச் சென்றார்கள்.
தான் விட்டுச் செல்லும் பொருட்களை எல்லாம்
அவள் எனக்கே தந்திருந்தாள்.
என்னுடன் மிகவும் பிரியமாயிருந்த
அவளது குழந்தையை நான் பிரிய நேர்ந்தது.

தனது ஞாபகங்களை மறக்கவும் எதையும் தாங்கிக்கொள்ளவும்
அவள் பழகியிருந்தாள்.
தனது கணவனை வழியில் இழுத்துச் சென்ற ஷெல் பற்றிய
அதிர்ச்சியை அவள் மறந்துபோயிருக்கிறாள்.
அவளது குழந்தையுடன் எல்லாவற்றையும் பேசுகிறாள்.
எனது கூடாரத்தின் பாதியில்
அவள் தடுத்து வைத்திருந்ததினால்
எனக்கு ஆறுதலாக இருந்தது.
யுத்தகாலத்தின் நினைவுகளை முழுமையாக மறந்துவிடலாம்
என அவள் எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருப்பாள்.
என்னால் தூக்க முடியாதவற்றை நான் விட்டுச்செல்லுகிறேன்.

இ;ன்னும் நாம் இடம்பெயர்ந்துகொண்டிருக்கிறோம்
என்பதை யாரும் பேசிவிடாதீர்கள்.
பொருட்களை எந்த நேரத்திலும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி
தயாராகவே வைத்திருக்கிறேன்.
மகிழ்ச்சிகரமாக இடம்பெயரவும்
சிலவேளை துக்கத்துடன் திரும்பிவரவும் நேரிடுகிறது.
வரும்பொழுது
வழிகளை எல்லாம் பார்த்து
பார்க்க முடியாத இடங்களிலெல்லாம்
அலைந்து கொண்டிருக்கிறேன்.
இடையில் சில பொருட்களை தவறவிட்டிருக்கிறேன்.
பிடுக்கி வைக்கப்பட்ட கூடாரத்தை
மீளவும் பொருத்தி வைத்திருந்தார்கள்.

நிதிலேகாவை அவளின் பள்ளிக்கூடத்தில்
இப்பொழுது தடுத்து வைத்திருக்கிறார்கள்.
அவள் தனது காணிக்கு சென்று திரும்புவாள்.
வீடு திரும்புபகிற கனவுகள் எவ்வளவு இனிமையானவை
என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
நிதிலேகா அதைப்பற்றி என்னுடன் நிறையவே பேசியிருக்கிறாள்.
என்னுடன்
இந்தக் கூடாரமும் சரிந்து தூங்கிக்கொண்டிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் யாருமற்ற தனித்த
நிலம் பற்றிய கதைகளையே இரவுகளில் அளந்துகொண்டிருக்கிறேன்.
மீளவும் இலவசமாக
பொருட்களை விநயோகித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனினும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி
எல்லாமே தயாராக இருக்கின்றன.

பொதிகளில் எத்தனை ஏக்கங்கள் தவிப்புக்களை
அடைத்துவைத்திருக்கிறோம்.
அந்த ஒலிபெருக்கியை கழற்றி சூடாற விடுகிறார்கள்.
____________________________
30.10.2009

வெள்ளி, 16 அக்டோபர், 2009

அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை


o தீபச்செல்வன்

அரசனின் நகரம் இரவு முழுவதும் சிரித்துக்கொண்டிருக்கிறது.
நண்பனே, உரையாடலின் பின்னர்
கடற்கரையில் வெகு நேரமாய் காத்திருந்தேன்.
அங்கிருந்து அகற்றப்பட்டு
தங்கியிருந்த வாடி வீட்டிற்கு முன்னால் கடற்கரையுடன்
முடிந்தவற்றை உனக்கு சொல்லியனுப்பிக்கொண்டிருக்கிறேன்.
நான் இனி என்ன செய்வது
என்பதை உன்னால் கூற முடியுமா?

கடற்கரை எதையோ செல்லிக்கொண்டிருக்கிறது.
அதிகாரத்தின் பெருஞ்சிரிப்பு கடலை கடந்து
எல்லாத் திசைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது.
கடல் மகிழ்ச்சியடையவில்லை.
அது எல்லாப் பக்கங்களுக்கும் அலையை தள்ளி
எதையோ பேசிக்கொண்டிருந்தது.
விண்ணப்பங்கள் நிரம்பிய எல்லாக் கடிதங்களையும்
கடல்தான் முழுமையாக வாசித்துக்கொண்டிருந்தது.

கொண்டு சொல்லப்பட்ட நிரூபங்கள்
மிதித்தெறியப்பட்டதை எப்படி? வெளிக்கொணர முடியும்?
நாம் அவமானப்பட்டதை யாரிடம் பகிர முடியும்?
அதிகாரம் நாளுக்கு நாள் தீணியிட்டு
வளர்க்கப்படடும் அந்த மாளிகை
எங்களை சிறிய தகரப்பேணியில் அடைத்துக்கொண்டிருக்கிறது.
காய்ந்துவிடாத எங்கள் குருதியை எங்கும் அப்பி வைத்திருக்கிறது.
அரசன் எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருக்கிறான்.

அரசனின் பெரு மகிழ்ச்சியால் மாளிகை
எப்பொழுதும் அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.
கனவுகள் கிழித்து மறுபுறத்தில் உள்ள தெருவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்
கடற்கரையிலிருந்து என்னதான் சொல்ல முடியும்?
திரும்பும் பக்கங்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்ட
எமது மண்மேடுகளது புகைப்படங்களின் மீதிருந்து
அரசன் சிரித்துக்கொண்டிருக்கிறான்.
அவர்களது நகரம் வெற்றியை இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
நமது வாழ்வை தின்று ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

அரசனின் அன்றைய வார்த்தைகள் எவ்வளவு குரூரமானவை என்பதை
உனக்கு உணர்த்த வேண்டியுள்ளது.
எனினும் அவற்றை மீளவும்
என்னால் உச்சரிக்க முடியவில்லை.
முகம் இறுகி நாங்கள் வார்த்தைகளற்று தவித்தோம்.
நாங்கள் அரசனுக்காக சிரித்து
கைகளை தட்ட வேண்டும் என்று மந்திரி சொன்னான்.
முடியுமானவரை சிலர் அரசனை மகிழ்ச்சிப் படுத்தினார்கள்.

எல்லோரும் கடற்கரையை பார்த்து புன்னகையையும் கைகளையும்
இழந்ததாக சொல்லிக்கொண்டு நின்றனர்.
அரசன் தனது வீட்டுக்குச் சென்று உணவருந்திய பின்னர்தான்
நாம் வாடி வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டோம்.
எல்லாவற்றின் பிறகும், சில நாட்கள் கழிந்தும்
உன்னுடன் எதையும் பகிர முடியவில்லை.
நாம் தொடர்ந்து ஏமாந்துகொண்டிருக்கிறோம்.
நமது தேசம்போலன்றி இங்கு இரவுகள் முழுமையாக கிடைக்கின்றன.

இரவிரவாக எல்லாரது
புன்னகையும் கைகளும் கடல் வழியாக எங்கோ எடுத்துச் செல்லப்பட்டன.
அரசனின் நகரமும் இரவிரவாக சிரித்துக்கொண்டிருக்கிறது.
நன் கடற்கரையில் இருந்து முழு இரவையும் கடந்து கொண்டிருந்தேன்.
__________________________
12.10.2009

சனி, 10 அக்டோபர், 2009

அபிராஜ் புத்தகங்களை மறந்துபோயிருக்கிறான்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------

லூர்த்தம்மா! காலம் பற்றி என்ன சித்தரிப்புக்களை
நான் செய்ய வேண்டியிருக்கிறது?
நாறி வதைத்துக்கொண்டிருக்கும்
எல்லாச் சொற்களையும்
உனக்காக அசைத்து கொட்டுகிறேன்.
மழைக் காலத்திற்கிடையில்
நமது காணியில் மேடு ஒன்றில் வீடு ஒன்றை
அமைப்பதற்காகவே இரவுகளில்
கற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நான் அவர்களிடம் சொன்னேன்
குழந்தைகள் ஒரு பொழுதும் விரும்பி
துப்பாக்கிளை தூக்கி வரவில்லை என்பதை.
அபிராஜிடம் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

அபிராஜை இன்னும் நான் பார்க்கவிலை.
வெயில் கொட்டிக்கிடந்த நாளில்
மிகத் தெலைவுக்குச் சென்றும் அவனை பார்க்கமுடிவில்லை.
யாரையும் குறைகூறக்கூடாது?
எதைப் பற்றியும் விபரிக்க முடியாதிருக்கிறது.
நேற்றிரவு
கூடாரத்தை காற்று பிடுங்கிக்கொண்டு போயிற்று.
புழுதி முடிய உன் தங்கைகளை
காலையில் கிளிறியே எடுத்துக்கொண்டோன்.
நீங்கள் இப்பொழுது துப்பாக்கிளையெல்லாம்
மறந்துபோயிருப்பதாக
எனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறேன்.
நான் எப்படி எல்லாம் பேசுகிறேன்!
வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

எல்லாவிதமான சொற்களையும் மறுப்பின்றி
ஏற்றதனால் அபிராஜை பார்க்க முடியும் போலிருக்கிறது.
அவனுக்கு வழங்கிய புத்தகங்களில்
தொழிற் கருவிகள் வரைந்துகொடுக்கப்பட்டுள்ளன.
மரவேலைகளை செய்யவும் பழக்கப்படுகிறான்.

உங்களைப்போலவே ஒவ்வொரு
காலையிலும் ஏற்றப்படும் சிங்கக்கொடியின் முன்னிற்கிறேன்.
சிங்கள தேசியகீதத்தை தவறாது பாடுகிறேன்.
ஜனாதிபதியின் புகைப்படங்களை
கூடாரத்தில் மாட்டி வைத்திருக்கிறேன்.
இப்படி
குருதி கொட்டாமலே எல்லாக்கொலைகளும் நிகழுகின்றன.
நீங்கள் துப்பாக்கி பற்றி பேசாதிருங்கள்.
பெரிய கிடங்கில் தள்ளுப்பட்டு விழுந்து கிடக்கிறோம்.
மண் நிரவிக்கொண்டிருக்கிறது.
நான் குறிப்பிட்ட வீடு நம்மை தேடியலைந்துகொண்டிருக்கிறது.

நான் மீளவும் மீளவும் பேசுகிறேன்.
பல்வேறு வருணங்களை கலந்த சொற்களை வைத்து.
குருதி பிறண்ட கோப்பைகளில் கைகளை நீட்டி அழைகிறேன்.
முயற்சியின்
எல்லையில் குவிந்துகிடக்கிற குப்பைபகள்
புகைந்துகொண்டிருக்கின்றன.
அபிராஜ் புத்தகங்களை மறந்துபோயிருக்கிறான்.

எந்த ஓட்டைகளுமில்லை.
வழி என்பது வேறு ஒரு பக்கத்திற்கு இழுத்துச் செல்லுகிறது.
மிகவும் இறுக்கமாக பின்னப்பட்டிருக்கின்றன அரண்கள்.
எனக்குப் பதில் எழுதாதே!
மீண்டும் உன்னைப் பார்க்க வேண்டும்,
லூர்த்தம்மா,
கனவுகள் எப்படி வருக்கின்றன என்பதை எழுதமுடியவில்லை.
அபிராஜின் கைகளில்
உழிகளும் பலகைத்துண்டுகளும் நிரம்பியுள்ளன.
____________________
06.10.2009

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கிறார்கள்


இப்படித்தான் கொடுமையான இரவுகளையே
எப்பொழுதும் உனக்கு தரவேண்டியாயிற்று.
காலை என்றாலும் உன்னை
நெருங்கிவிட முடியவில்லை.
எல்லாவற்றையும் நிர்பந்தங்களுக்காக
செய்துகொண்டிருக்கிறோம்.
உன்னை தனியே விட்டுச் செல்லுகிற
என் தாய்மையைப் பற்றி
என்ன சொல்லி அழுகிறாய்!
அந்த வெளியில்
கலந்து கிடக்கிற தாலாட்டுகள்
உன்னை தூங்க வைக்கும் என்றே நினைத்திருந்தேன்.

அவர்கள் உன்னை என்னிடமே சேர்ப்பதாக
சொல்லுகிறார்கள்.
வீடுகளை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டு வந்த
பயணத்தின் இடையில்
ஒரு தோழிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.
அதற்கான பாதுகாப்பு விசாரணைகளுக்காகத்தான்
இடையில் தடுத்து வைக்ப்பட்டிருக்கிறோம்.
தூங்க மறுத்து
அழுது களைத்துப்போய் காலையில்
சூரியனை காணாது தூங்கிக்கொண்டிருக்கிறாய்.
நினைத்தபடி எங்கும் செல்ல முடியாது
என்பதால் உன்னை கொஞ்சம் பொறுக்கச்சொல்லுகிறேன்.

எனது கண்களும் கரைந்துகொண்டிருக்கின்றன.
என்னை மறந்து
தூங்கும்பொழுது மீளவும் உன்னிடம் வந்து
என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ள
துர்பாக்கியத்தில் நானிருக்கிறேன்.
இங்கு தோள்களில் பிள்ளைகளை அவர்கள் போட்டுக்கொண்டுதான்
புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கூடவே தங்கள் துணைகளையும் அழைத்து வந்திருக்கிறார்கள்.
ஏன் நம்மை பிரித்து விட்டார்கள்.
இந்த இரவு மிகவும் கொடுமையாக
நீண்டுகொண்டே உன்னை தூரமாக்கிச் செல்லுகிறது.

நானும் உன்னைப்போலவே தூங்க மறுத்துக்கிடக்கிறேன்.
பால் சுறந்து வடிந்துகொண்டிருக்கிறது
மனம் கொதித்து அறைக்குள் அலைந்துகொண்டிருக்கிறேன்.
மகளே இப்படித்தான்
நாங்கள் எப்பொழுதும் பிரிக்கப்படுகிறோம்.
எப்படி நீ அருகில் இருக்கிறாய் என்றும்
நான் உன் அருகில் இருக்கிறேன் என்றும்
சொற்காளால் சமாளிக்க முடியும்?
நான் வெகு தூரத்திற்கு வந்திருக்கிறேன்.

எங்கோ ஒரு கூடாரத்தில் அழுகை படிந்து கிடக்கிற
உனது முகத்தை யார்தான் காட்டமுடியும்?
பல்வேறு விடயங்களுக்காக
குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கிறார்கள்.
நாளையும் விரைவாக வருகிறது.
எப்படி மீளவும் உனக்கு பதில் அனுப்பப்போகிறேன்.
அவர்கள் உன்னை கொண்டு வந்து தருவதாவே சொல்லுகிறார்கள்.
நான் சொன்னபடி
நிறைவே பொறுத்து உனக்கு தொண்டையடைத்துப்போயிருக்கிறது.
அவர்கள் சொல்லுவதைத்தானே சொல்ல முடியும்!

இவை கொடுமையான இரவு என்பதை
நான் சொல்லாமலே அறிந்து வைத்திருப்பாய்.
உனது அழுகை மிகச் சமீபமாகவே கேட்கிறது.

இன்னும் உன்னை பொறுத்துக்கொள்ளச் சொல்லுவது
எவ்வளவு இரக்கமற்ற வார்த்தைகளாக இருக்கும்!
உன்னை தூங்க வைத்து
அசைத்துகொண்டிருக்கும் மடிகளால் நிறைந்து கிடக்கிறது
என் கனவு .
எல்லாக் குழந்தைகளும்
எதோ ஒன்றின் நிமித்தம் அழுதுகொண்டேயிருக்கிறார்கள்.
o

தீபச்செல்வன்

03.09.2009 

முள்வேலித் தடுப்பு முகாமில் மாணவர்கள் மாத்திரம் விடுவிக்கப்பட்ட சமயத்தில் ஒரு வயதான தனது குழந்தையை கணவருடன் விட்டுப் பிரிந்துவர நேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி தனது குழந்தையை தன்னிடம் சேர்த்து விடும்படி கோரினார்.


வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...