Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 21 செப்டம்பர், 2009

முகத்தை மூடிக்கொள்ளுகிற குழந்தை


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
இன்று விடுவிக்கப்படாதவர்கள் மற்றொரு பக்கத்தில்
கம்பிகளுக்குள் நிற்கிறார்கள்.
அவர்களின் இடுப்பில் இருந்த குழந்தைகள் அழுகின்றன.
இந்தக் குழந்தை கொண்டாடத் தொடங்கிய
மகிழ்ச்சி முட்பம்பிகளில் மோதி சிதறுகிறது.
தனது அம்மா அப்பபாவின்
பெயர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்யப்பட்டு
ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு
குழந்தையை ஒலிபெருக்கியில் அவர்கள் புன்னகைக்க விட்டார்கள்.

உன்னை வரவேற்பதற்காக சொற்களை கொண்டு வந்திருக்கிறேன்.
கைளில் கட்டியிருந்த அடையாள இலக்கை
அவிழ்த்து உன்னை வெளியில் அழைத்துச் செல்லுகிறேன்.
குழந்தை முகத்தைப் பொத்திக்கொண்டு புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.
வெளியைப் பற்றி அது அறிந்திராத கதைகளை கேட்டபடி
உள்ளே அறிந்து வைத்திருந்த ககைளையும்
தனது மொழியில் சொல்லத் தொடங்குகிறது.
எல்லோரும் கேட்டபொழுதும் யாருக்கும் புரிவதாயில்லை.

முள்ளி வாய்காலில் பதுங்குகுழியொன்றில்
ஷெல்களின் இரவில்
பிறந்து மிஞ்சியிருக்கிறவர்களுக்காக புன்னகையை வளர்த்துக் கொண்டிருக்கிறது.
இராணுவ தளபதியொருவனின் சட்டையில்
தூங்கிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களை இழுத்து பிடுங்க
அவனது தோள்களை எட்டிப் பிடிக்கிறது.
அந்தத் தளபதியும் குழந்தையைப் பார்த்து சிரிக்கிறான்.
குழந்தை முழுச் புன்னகையையும் சட்டென நிறுத்துகிறது.

குழந்தைகள் அழும் சத்திற்கிடையில்
மீளவும் மீளவும் இந்தக் குழந்தையின் புன்னகை எழும்புகிறது.
அவர்க்ள பேசுகிறார்கள் உலகத்தைப் பற்றியும்
வாழ்வைப் பற்றியும்
குழந்தைகளின் விடுலை பற்றியும்
இன்னும் விமானங்களை வானத்தில் காண்டுகொண்டிருக்கிற குழந்தைகள்
அதிர்வுகளுக்கு அஞ்சி நிலத்தில் விழுகின்றன.

இந்தக் குழந்தை புன்னகைத்தது., மற்றைய குழந்தைகளுக்காகவும்
அவர்களுடைய அம்மா அப்பாக்களுக்காகவும்.
மிகவும் பெரிதாய் புன்னகைத்தது. புகைப்படங்களுக்கு முகத்தையும் கொடுத்தது.
அவர்கள் சொன்னார்கள் குழந்தையை
எங்கள் உலகத்திலேயே வளர்த்து விடுங்கள் என.

இனி, இந்த நாட்டின் குழந்தை எனவும்
இது பயங்கரவாதத்திற்கு துணைபோயிருந்தது கண்டு பிடிக்கப்பட்டபோதும்
மன்னிக்கப்பட்டிருக்கிறது எனவும்
இறுதி யுத்திற்கு சில நாட்களின் முன்பாக
பிறந்து ஒரு வாரத்தில் சரணடைந்தபடியால் யுத்தக்குற்றங்களை
மற்றைய எல்லோரைவிடவும்
மிக குறைவாகவே செய்திருக்கிறது எனவும்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
குழந்தை மூச்சை அடக்கி வைத்துக்கொண்டு பார்க்கிறது.

பெயர் பதிவுசெய்யப்பட்ட புத்தகத்தில் கடைசியாக குறித்து வைக்கும்பொழுதும்
வாசலால் வெளியில் அனுமதிக்கப்படும்பொழுதும்
மீளவும் பேரூந்தில் ஏறுகிறபொழுதும்
பல கோணங்களில் படம் பிடிக்கப்பட்டது.
செல்லும் முகவரியையும் சுற்றித்திரியும் எல்லைகளைப் பற்றியும்
மீள ஞாபகப்படுத்தப்பட்டது.
கூப்பிடுகிறபோது எப்பொழுதும் குழந்தையை கொண்டு வருவதற்கு
தயாராக இருப்பதாக குழந்தையின் தகப்பன் சொல்லுகிறான்.

குழந்தை கைகளை விலக்கி பார்க்கிறது குருதி காய்ந்த தெருக்களை.
நான் சொல்லத் தொடங்குகிறேன் கொண்டு வந்த சொற்களை.
அதன் புன்னகைக்காக காத்துக்கொண்டிருந்தேன்.
கணவனை தேடி மற்றறொரு முகாமிற்கு செல்ல இறங்குகிற
இன்னொரு குழந்தையையும் தாயையும் பார்த்து
முகத்தை மூடிக்கொள்ளுகிறது.
கையை விலக்கிய பொழுது முகம் சிவந்துபோயிருந்தது.
கையில்
அடையாள இலக்கம் கட்டியிருந்த இடத்தில் குருதி கசிந்திருந்தது.
வீட்டின் முன், விறாந்தையில் இருந்தபடி
தனியே குழந்தை மீளவும் புன்னகைத்துக்கொண்டிருந்தது.
-----------------------
( 20.09.2009 அன்று கைதடி தடுப்பு முகாம்)

4 கருத்துகள்:

தமிழ்நதி சொன்னது…

கவிதையை வாசித்தபோது பல இடங்களில் அழுகை வந்தது. அது குழந்தை தொடர்பானதாக இருக்கலாம். பொதுவாகச் சின்னக் குழந்தைகள் மனதை நெகிழ வைத்துவிடுகின்றன. இந்தக் கவிதை ஒரு கதைபோலவே இருந்தது. இது கதையல்லாதபோதிலும். இதைச் சிறுகதையாக்கலாமே...?

தமிழரங்கம் சொன்னது…

வாழ்வின் உண்மைகள், மனிதத்தை அதிர வைக்கின்றது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6265:2009-09-21-18-25-47&catid=75:2008-05-01-11-45-16

உமா சொன்னது…

கண்ணை மூடிக் கொண்டது ஏனோ?
கண்ணேயுன் கண்ணின் வெளிச்சமிம்
மண்ணின் இருளில்
மறைந்திடா திருக்கவோ?
சொந்த மண்விட்டுன்
செல்லப் பெயர்மறந்(து)
அடையாளங் காட்டி
அழைக்கப் படுதலின் அவலமோ! நீயுன்
அல்லிவிழி மூடிக் கொண்டது?
பதுங்குக் குழியின் இருட்டை சற்றே
மறந்துவிடு கண்ணே!
திறந்துவிடு உன்கண்ணை
பரவவிடு வெளிச்சம்
விழிகளைத் திறந்தே
வழிதனைக்காண்! ஈழத் தமிழர்
இழிநிலை மாற
விலக்குன் கைகளை இலக்கினை எட்டவே!

நிலாரசிகன் சொன்னது…

வலிமிகுந்த வரிகள் :(

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...