Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

சாம்பலாக்கப்பட்ட நிலத்தின் நடுவிலிருக்கிற சிதைக்கப்பட்ட நகரம்


o தீபச்செல்வன்
 ----------------------------------------------------------------

01
மாடுகள் அலைந்து திரிந்து
கண்ணிவெடிகளையும் மண்ணையும் மேய்ந்து கொண்டு
சாணியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக
நகரத்திற்கு வேறு பக்கம் திரும்புகின்றன.

எரிந்து கருகிப்போயிருக்கிறது
சனங்களின் நிலம்.
அழிந்து சமதரையாகிப்போன வெளியில்
பேய்கள் வாழ்ந்து திரிகிறது.
நிலம் எரிந்து சாம்பல் பூத்திருக்க
தலைகள் பிடுங்கப்பட்ட
மரங்கள் மண்ணில் குத்துண்டு நிற்கின்றன.
தலையிழந்த பனைகளால் மிகுந்த வெளியில்
நோடட்மிடுகிற காவலரண்களை
சுமந்து நிற்கிறது வேர் பட்ட பனங்குத்திகள்.
உப்பு விழைந்த வாடிகளில்
இல்லாத சனங்களின்
குருதியும் துயரும்
சேர்ந்து விளைந்து கொண்டிருக்கிறது.

02
யாரும் திரும்ப முடியாத வழியில்
எங்கும் குழிகளும்
அவற்றில் அவலமும் நிரம்பியிருக்கிறது.
கல்லறைகளை புதைத்து
நினைவுச் சிலைகளை கொலை செய்ய
இடிந்த கட்டிடத்தின்
சுவர்க்கரையில் மாடுகள் கன்றுகளை ஈன்றிருக்கின்றன.

ஞாபகங்கள் அழிந்து குவிந்து கிடக்கின்றன.
விட்டுச் செல்லப்பட்ட முகங்கள்
கொழுத்தப்பட்டுக்கொண்டிருக்க
கருகிக்கொண்டிருக்கிறது சூரியனின் முகம்.

அறுக்காத நெல்மணிகள் சாய்ந்து
எரிந்த சாம்பல் வயலில்
இருப்பிற்காய் அலைந்து
பாதியாய் உடைந்து போயிருக்கிற
கதிரையை யாரோ விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
புத்தர் கண் விழித்திருக்கிற
அரச மரங்களைத் தவிர எங்கும் நிழலில்லை.
வாசல் மறைத்து கறுப்புத் திரையிடப்பட்ட
கோயில்கள் இராணுவ நிறங்களால் தீட்டப்பட்டிருக்கிறது.
சனங்களின் கடவுள் வெளியேற்றப்பட்ட
ஊரில் அலைகின்றன மிருகங்கள்.
மணிகள் அறுத்து கீழே விழுத்தப்பட்டிருக்கிறது.

மிஞ்சியிருக்கிற ஒரு சில வீடுகளின்
சிதைந்த பகுதியில் சாம்பலில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
அழிப்பின் உக்கிரம்.
கூரைகளை இழந்த வீடுகளை துளைத்துப்போயிருக்கிறது
பீரங்கி வண்டிகள்.
பேரூந்தும் சைக்கிளும்
எரிந்த தகரச் சாம்பலில் புத்தர் அமர்ந்திருக்கிறார்.

கண்கள் பெரிதாய் திறந்தலையும்
அரச மரங்களின் கீழ்
பாத்திரங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன.
முற்றிலும் மாறிப்போயிருக்கிறது நிலம்.

03
அடையாளம் தெரியாத வீதியில்
பள்ளம் மேடாக்கப்பட்டு
மேடு பள்ளமாக்கப்பட்டு
கற்களின் மேடாயிருக்கிறது நகரம்.
சைக்கிள்களையும் கதிரைகளையும்
ஒதுக்கி குவித்து விடப்பட்டிருக்க
சாம்பல் பரப்பி விடப்பட்டிருக்கிறது.
எரிந்த வானத்தின் கீழ்
நகரத்திற்கு மேலாக
சாம்பல் உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்கிறது.

சிதைந்த மாடியின் மேலிருந்து
தொங்கிக்கொண்டிருக்கிறது
எப்பொழுதும் விழக்கூடிய ஜன்னல்.
மின்கம்பங்களில் முட்கம்பிகள் படர்ந்திருக்க
நெடு வீதி கரைந்து ஒழுகுகிறது.
விழுந்து கிடக்கிறது நகரின் பிரதான மின்கம்பம்.

வயல்களில் போட்டுச் செல்லப்பட்ட
படகுகளின் கீழாய்
மீன்கள் அலைகின்றன.
சாம்பலை சுற்றியிருக்கிறது வலை.
எல்லாம் தகர்த்து வீழ்த்தப்பட்ட
நகரத்தில்
தோல்வியின் வாசகங்களை
எழுதிக்கொண்டிருக்கிறது சிங்கள எழுத்துகள்.
தொப்பியால் மூடப்படுகிறது பள்ளிக்கூடங்கள்.
நெடு வீதி சீருடையால் போர்த்தப்பட்டிருக்கிறது.

04
சுவடுகள் அழிக்கப்பட்டு மண்மேடுகளால்
சுற்றி நிரப்பட்ட நகரத்தில்
எதுவும் தெரியவில்லை.
சாம்பல் மேட்டில் இனந்தெரியாதபடி
குறுக்கு வீதிகள் அச்சத்துள் மூடுண்டுகிடக்கிறது.
நகரத்தின் மேல் சாம்பல்.
சாம்பலின் மேல் மண்மேடு.
மண்மேட்டின்மேல் காவலரண்.
முழு நகரத்தையும் தின்று கொண்டிருக்கிறது
முன்னுக்கு சென்றுகொண்டிருக்கிற பவல்.
எப்பொழுதும் இராணுவ மோட்டார் சைக்கிள்கள்
சுற்றிக்கொண்டிருக்கிறது.
அடையாளத்தை இழந்துபோயிருக்கிறது நகரம்.

சாம்பல் கரைந்து குளத்தை நிரப்பியுள்ளது.
சொற்கள் மூழ்கி நாறிக்கொண்டிருக்கிறது.
கனவு பாசி பிடித்து எரிந்த தாமரைகளின் வேரில்
சுற்றிக்கிடக்கிறது.
சலனமற்றுக் இருக்கிறது பெருநிலம்.
கொலை செய்யப்பட்டிருக்கிறது நகரம்.
தோல்வியின் குருதியால் நிரப்பட்டிருக்கிறது குளம்.
05
காடுகள் பிரட்டி ஒதுக்கப்பட்ட
தீ எரிந்து கொண்டிருக்கிற திசையில்
அடியுடன் பிடுங்கி காய்ந்துபோன முகத்துடன்
எறியப்பட்ட பெருவேரில்
தீர்ந்து போயிருக்கிறது சனங்களின் நம்பிக்கை.
வீடு விழுந்து தாண்டுபோன கிணற்றை
முற்றம் குடித்திருக்கிறது.
முற்றம் இறங்கிய காணியில்
முதிர்ந்த பயன் மரங்களின் வேர்கள்
குவிக்கப்பட்டிருக்கின்றன.

சனங்களை இழந்த வெளியும்
வாசனையை இழந்த நிலமும்
நிறத்தை இழந்த நகரமும்
சாம்பலில் குளித்தலைகிறது.
பிணங்கள் கால் இறங்காமல்
பார்த்துச் செல்லுகிற வீதியில்
பேய்கள் எல்லாவற்றையும்
அடியில் தாழ்த்து
அதன்மேல் புதிய மண்ணை குவித்து
நிரப்பி எல்லாவற்றையும் அழித்து
அதன் மீது புதிய சொற்கள் எழுதுகின்றன.

வாழ்வு சாம்பலான வெளியில்
நிலம் எரித்து நகரம் சிதைக்கப்பட்ட
பூர்வீகமான வாழ்வு அகழ்ந்து துடைக்கப்படுகிறது.

யாரும் திரும்பாத நெடு வீதியின் கரையாக
இரவு விரிந்து பெருக மாடுகள் அலையத் தொடங்குகின்றன.
குழந்தைகளை இழந்த பொம்மைகள்
வயல்வெளிகளில் கிடந்து உக்கிக்கொண்டிருக்கிறது.
-----------------------
02.08.2009 வன்னி நிலம், கிளிநொச்சி, ஏ-9 வீதி, பயணம்.

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

கவிதை வரிகள் காத்திரமாகவுள்ளன, எதார்த்தக் கவி வாசிப்போரை நிச்சயம் கலங்க வைக்கும்.

பாராட்டுக்கள் தீபச்செல்வன்.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...