Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 19 ஜூலை, 2009

குழந்தைகள் தோற்கடிக்கப்படுகிற சமாதானத்தின் நிழல்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
போர் தின்ற நகரத்தை
சமாதானத்தின் கடதாசி கட்டி எழுப்புகிறது.
பூக்களும் பறவைகளும்
நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டிருந்த நாளில்
வெள்ளைவீதி திறந்திருக்கிறது.
எல்லோருடைய கண்களிலும் போர் நிரம்பியிருக்க
கவிழ்ந்த கைகள்
நமது நகரத்தில் உலவித்திரிகின்றன.

சூழ்ச்சிகளால் வடிவமைக்கப்பட்ட
சொற்களை
மாறி மாறி பேசிக்கொண்டிருந்த
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காலத்தில்
சீமெண்ட் சுவர் வளர்ந்து
மனதை மூடிக்கொண்டிருக்கிறது.
காலங்களின் ஒளியை
முழுவதுமாய் சுறண்டி எடுத்திருக்க
பொலித்தீன் பைகளில்
அலையும் கனவை அடைத்துக் கட்டப்படுகிறது.

தோற்றுத் தோல்வியின் துயரில்
முடிந்து விடுகிறது நிலத்தின் அடங்காத வாசனை.
எல்லோரும் பேசிவிட்டுப் போன பிறகு
கதிரைகள் வெடித்துச் சிதற
ஏங்கிக்கொண்டிருந்தது சொற்கள்.

போரை கொண்டாடிக்கொண்டிருக்கிற
சமாதானத்தின் கீழ்
பயங்கரம் நிரம்பியிருந்ததைக்
குழந்தைகள் கண்டனர்.
எல்லோரையும் மூடிக்கொண்டிருக்கிறது.
சமாதானத்தின் நிழல்.
குழந்தைகளின் கண்களை மெல்ல
சமாதானம் தின்கிறது.
மணல் நகரங்கள் எழும்பிக்கொண்டிருக்கிறது.

கிராமங்கள் புதைந்துபோக
முடிவற்ற பெயர்வு நிலத்தை வரைந்துகொண்டிருக்கிறது.
ஆற்றில் நகரத்தை அள்ளும்
படகு மிதக்கிறது.
முதலில் சொற்களின் ஒளி
மீள முடியாத சகதியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்க
காலம் தோற்க்கடிக்கப்பட்ட
வானம் முழுவதும் இருள் பொழிகிறது.

சமாதானத்தின் நிழலில்
எரிந்து கருகுகிறது கடதாசி நகரம்.
குழந்தைகள் துப்பாக்கிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்டு
கவச வாகனங்களில் நிரப்பப்படுகின்றனர்.
முன்னால் நிற்கிறது
ஷெல்களை பொழியத் தயாராக இருக்கிற பீரங்கிகள்.

நம்பிக்கைகளை ஏமாற்றியபடி
எதிர்பார்ப்புக்களை சிதைத்தபடி
சொற்கள் போர் வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
காத்திருப்புக்களின்மீது
மிதிக்க வெடிக்கிறது புதிய வெடிகள்.
குழந்தைகள்
எல்லாவற்றையும் கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.

வாசனையை உணர்ந்த கிழவன்
திண்ணையை மேய்ந்த பின்மாலைப்பொழுதில்
தோற்கடிக்கப்படுகிறான்.
காலத்தின்மீது
நஞ்சுக் கனிகள் காய்த்து முற்றுகிறது.
துவக்குகள் ஆட்களைத்தேட
மரணம் அண்மையை சுலபப்படுத்துகிறது.
மரம் முழுவதும் பாம்புகள்
பூத்து அடர
குளத்தில் விஷம் நிரம்புகிறது.
ஆறுகளின்மீது
பெருமெடுப்பில் பாய்கிறது வீழ்ச்சியின் இலக்கு.

பீரங்கிகள் தயாராக இருக்கின்றன.
டாங்கிகள் புறப்படத் தொடங்குகின்றன.
துவக்குகள் நிமிர்ந்து நேராக நிற்கின்றன.

சொற்களைப் பிய்த்தெறிந்துவிட்டு
குண்டுகளை ஏற்றி வந்து இறக்குகிறது
பயண விமானங்கள்.
வெள்ளைவீதிளில் சமாதானம்
போரை வடிவமைக்கிறது.
குழந்தைகள் ஒழித்துக்கட்டப்பட்ட நகரத்தில்
அவர்கள் தோற்றதை
அறிவித்துக்கொண்டிருக்கிறது சமாதானத்தின் கடதாசி.
______________

வெள்ளி, 10 ஜூலை, 2009

முட்கம்பிக்குள் மண்மூடிய கிராமம்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
எலலோருக்கும் பகிரமுடியாத
ஒற்றைக் கிணற்றையும்
முட்கம்பி சுற்றி எடுத்திருக்கிறது.
தென்னோலைகள் தலைகீழாக தூங்க
கண்களுக்கு எட்டிய இடமெல்லாம்
வெடித்துச் சிதறிய
குண்டுகளின் வெற்றுக் கோதுகள் கிடக்கிறது.

வெயில் வந்து
கூடாரங்களை மேய்ந்துகொண்டிருக்கிறது.
முடி பறிக்கப்பட்ட தலைகளை
சூரியன் தின்று கொண்டிருக்க
முட்கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது
காலம் பற்றிய சொற்கள்.

குண்டுகளற்ற பெட்டியை தட்டி விரித்து செய்யப்பட்ட
இருக்கையில்
நீயும் நானும் வைக்கப்பட்டிருக்கிறோம்.
தரப்பட்ட நேரங்களை
நாமறியாதபடி தின்றுகொண்டிருக்கிறது கடிகாரம்.
எப்பொழுதும் வெடிக்க தயாராக
ஒரு குண்டு
இருக்கையின் கீழிருப்பதைப்போலிருக்கிறது.
மீளவும் மீளவும்
மனம் வெடித்து சிதறி எங்கும் கொட்டிக்கொண்டிருக்கிறது.

எப்பொழுதும் இலங்கங்களை
அறிவித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியில்
யாரோ சொல்லத் துடிக்கிற
சொற்கள்
வாசலில் வந்து பொறுத்து நிற்கின்றன.
எப்பொழுதும் ஒலிபெருக்கிகளுக்கு கொடுத்துவிட்ட
காதுகளுக்கு
யாரோ அழைப்பது போல கேட்கிறது.

திசை பிரித்து கொண்டு செல்லப்பட்டவர்களாய்
இன்னும் தேடிக்கிடைக்கப் பெறாதவர்களுக்காய்
விசாரித்துக்கொண்டிருக்கிற
தனித்துவிடப்பட்ட சிறுவன் எல்லோரையும் பார்க்கிறான்.
மீள்வதற்கு எந்த வழிகளுமற்றுப்போக
முட்கம்பி எங்கும் இழுத்துக் கட்டப்படுகிறது.

துவக்குகள் வரிசையில் நின்று பார்த்துக்கொண்டிருக்க
ஒடுங்கிய முகங்களில்
பயங்கரத்துள் கைவிடப்பட்ட துயரம் ஒழுகுகிறது.
யாரும் கண்களுக்கு எட்டடிவிடாத முடிவில்
தலையை முட்கம்பியில்
தொங்கப்போடுகிறான் அந்தச் சிறுவன்.

யாரையும் சந்திக்காத வெறுமையில்
வெயில் நிரம்பியிருக்கிறது.
ஒலிபெருக்கி களைத்து அடங்கிவிட
வெயில் இந்தத் தனிக்கிராமத்தை கடந்து சரிகிறது.
இரவானதும்
மனம் எப்பொழுதும் சிக்குப்பட்டுக்கிடக்கும்
அந்தக் கிராமத்தை மண் மூடிக்கொண்டிருக்கிறது.
_____________
05.07.2009

சனி, 4 ஜூலை, 2009

அபிராஜூன் தங்கை லூர்த்தம்மாவின் கண்கள்

o தீபச்செல்வன்


01
லூர்த்தம்மாவின் கண்கள் பின்னிரவுகளில்
அலைந்து கொண்டிருந்தன.
அந்தத் துவக்கு மிகப் பாரமாக இருந்தது
என்கிறாள்
அபிராஜின் தங்கை லூர்த்தம்மா.
அவள் இழுத்துச் செல்லப்பட்டபோது
அபிராஜ் புதர் ஒன்றுக்குள் ஒளிந்திருந்தான்.

மீளவும் அவள் ஓடி வந்து
சருகுகளிற்குள் ஒளிந்துகொண்டாள்.
அப்பொழுது அவள் பார்த்துக்கொண்டிருக்க
அபிராஜ் இழுத்துச் செல்லப்பட்டான்.
கனவு ஒழுகி சருகுகள் ஈரமாக
லூர்த்தம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.
அபிராஜ் துவக்கின் சூட்டில்
வாடிவிட
லூர்த்தம்மாவை தேடிக்கொண்டிருந்தான்.
களங்கள் எங்கும் குருதி வடிந்துகொண்டிருந்தது.

இனந்தெரியாத கால்களில் மோதுகிறபோது
அபிராஜை லூர்த்தம்மா கண்டாள்.
குழந்தைகள் சரணடைந்து துவக்குகளை கையளித்தனர்.

02
அவள் ஒதுங்கும் இடங்களில்
துவக்குகள் விழித்துக்கொண்டிருக்கின்றன.
லூர்த்தம்மாவுடன்
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுமிகளின் கைகளில் பாரமான இலக்கங்கள்
கட்டப்பட்டிருக்கின்றன.
மீள மீள அவள்
சரணடைந்து கொண்டிருக்கிறாள்.
அபிராஜிடம் துப்பாக்கியை கொடுக்கப்பட்டு
பரிசோதிக்கப்படுகிறது.
வந்திறங்கும் சிறுவர்களுக்காக
தயாரிக்கப்படும் இலக்கங்களை
அபிராஜ் எண்ணுகிறான்.
அபிராஜின் கால்கள் மடங்கிப்போகின்றன.

இப்போது லூர்த்தம்மாவின் கண்களை
இந்தத் துவக்குகள் காவலிட்டுக் கொண்டிருக்கின்றன.
பொம்மைக் கடைகளில்
துவக்குகள் தொங்கிக்கொண்டிருக்கிறதாய் வருகிற
கனவுகள் இருவரையும் இரவுகளில் அலைத்தன.

அபிராஜ் மீள மீள பரிசோதிக்கப்பட்டான்.
லூர்த்தம்மாவின் கண்களில்
சமரிரவுகளின் துப்பாக்கிகள் குத்திக்கொண்டிருந்தன.
துவக்குகள் லூர்த்தம்மாவையும்
அபிராஜையும் துரத்திக்கொண்டேயிருக்கின்றன.

லூர்த்தம்மாவின் குருதி கசிந்து வாடுகிற கண்கள்
அபிராஜின் முன் அலைந்துகொண்டிருந்தன.
 
தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறுவர் போராளிகளான 15வயதுச் சிறுமியான லூர்த்தம்மாவும் அவளின் அண்ணனான 16வயதுடைய அபிராஜிம் இராணுவத்திடம் சரணடைந்து- கைதுசெய்யப்பட்டு அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் இவர்களுடன் 94 சிறுவர்கள் இருப்பதாகவும் அவர்களில் 44பேர் சிறுமியர்கள் எனவும் லூர்த்தம்மா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தாள்.

புதன், 1 ஜூலை, 2009

பாம்புகள் பரிசளித்த சவப்பெட்டிகள்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
கடைசியில் ஒரு நாள் மலசலகூடம்
கட்டி முடித்த போது எறிகனைகள் வந்து கொண்டிருந்தன.
கிணற்றின் ஆழத்தை
அளந்து கொண்டிருந்தபோது வெளியில்
வேவு விமானம் பறந்து கொண்டிருந்தது.

மரணத்தின் தூதுவர்களை வேடிக்கை
பார்த்த நமது வீதிகளை குழந்தைகள் இழந்துவிட
நாம் காணாமலிருக்க
வீடு அதிர்ந்து போயிருந்தது.

சவப்பெட்டிகள் வந்து குவிய
நாம் பூக்களாலான ஊச்சலில் ஆடியபடியிருக்க
பாம்பு முற்றத்தின் மரத்தில் ஏறிக்கொண்டிருந்தது.
விஷத்தின் கனியை
பூசையறையில் வைத்து பூக்களை
படையல் செய்தபோது
மரங்கள் சவப்பெட்டிகளில் நிரப்பப்பட்டது.

ராஜாக்களிடம் ஏமாற்றமடைந்த உரையாடல்களிடம்
என்றைக்குமான சொற்கள் பலியானது.
ஊமையாகிற மேசைகளில்
வைத்து சொற்கள் நசுக்கப்பட்டன.
பறவைகள் பாம்பாகி பறக்க
மேசைகள் சவப்பெட்டியாகி வந்தன.

வாக்குமுலங்களின் மேசையில்
இன்று பிணங்கள் தரப்படுகையில்
நமதாயிருந்த தொன்மையான சொற்களையும்
வாழ்நிலத்தையும்
சவப்பெட்டி பெருமெடுப்புடன் தின்னத்தொடங்கிற்று.

சவப்பெட்டிகள் வாழுகிற ராஜாவின் தீர்ப்பில்
மரணம் விதியால் துரத்துகிற பகுதியில்
யாரும் அறிமாலிருக்க
இனத்தின் நெடுநாளின் வாழ்நிலக்கனவு
ஊசிகளால் குத்தி மெல்ல சிதைக்கப்பட்டது.

மரணத்தின் அறைகளும்
அதிகாரத்தின் மூலைவெளிகளும் அதிகரிக்க
வாழ்வென்று காத்திருந்த ஏக்கம் தகனம் செய்யப்பட
மரங்கள் ஆணிகளாக்கப்பபட்டு
சந்ததியை அறைகிறது.

தெரு கிணற்றுக்குள் தவளையாகிப்போகிறது.

ஈரம் காயுமுன்பே விட்டு வந்த
கட்டிடங்களில் மரணத்தின் படைகள் தமது மொழி எழுத
நீயும் நானும் ஒரு சவப்பெட்டியில் என்றைக்கும்
மீள முடியாதவர்களாக அடைக்கப்பட்டிருந்தோம்.
-------------------------------------------------------
13.01.2009

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...