Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 29 மே, 2009

பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
மண் சிதறி மூடப்பட்ட பதுங்குகுழியில்
மூடுண்டு போயிற்று
கடைசிவரை வைத்துக் காத்திருந்த
உடைந்த முகத்தின் எச்சங்கள்.
எங்கள் வெளி அர்த்தமற்றுப்போய்
அந்தரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது.
மண்ணில்
உலகத்தின் யுத்தம் நிகழத்தொடங்கியது.

மிகவும் பயங்கரமான வெளியில்
தூக்கி வீசப்பட
கொதித்து துடித்துக்கொண்டிருக்கிறது மனம்.
மண்ணடியில்
புதைந்துபோனது விரிந்த வானமும்
நெடுநாள் காணாதிருந்த நட்சத்திரங்களும்.
வாசல் அடைக்கப்பட்ட குழியில்
யாரோ அடைக்கப்பட்டு நாளாகிறது.
முகங்கள் வெளியில் தனித்தலைந்தன.

மூடிப் புதைத்துவிடப்பட்ட கிராமம்
பிணங்களின் கீழ் அழுகிக்கொண்டிருக்கிற வீடு
தென்னைமரங்கள் பிடுங்கி நிரப்பட்ட கிணறு
எல்லாம் மூச்சடங்கி உயிர் துறக்கிறது.
முகமற்ற நகரத்தில்
அழிப்பின் சபதம் எழுதப்பட்டு
சிறையிலடைக்கப்படுகிறது.

அச்சத்தின் சனங்கள் வெளியில்
எடுத்து போடப்பட்டனர்.
உடைந்த சனங்களை மீளவும்
குழிகளில் போட்டு மூடிக்கொண்டு
அழிவு புதைக்கப்பட்டு சமதரையாக்கப்பட்டிருக்கிறது.
மணல் பரப்பி நடந்து கொண்டிருக்கிறது
மனிதாபிமான யுத்தம்.

எண்ணி அடுக்கப்பட்ட துண்டங்களாய்
வந்து விழுகின்றன
தாய்மாரை இழந்த குழந்தைகள்.
மழை மூழ்கடித்த இரவில்
கடும் சமரில்
யாரும் அறியாது இருளை பெய்தபடி
நிலவு பதுங்குகுழியில் வந்து ஒளிந்திருந்தது.

ஒளியிழந்து கொடியில் அடிபட்டு
வீழ்ந்து போகிறது சூரியன்.
இருள் பெரு வெள்ளமென வந்து
பதுங்குகுழிகளை குடித்து பசியாறின.
மண்ணை கிளறி உழுது
எச்சரிக்கைகளை விதைக்கப்பட்டன.

உலகின் சபையில் யுத்தம் பேராதரைவை பெறுகிறபோது
பதுங்குகுழியில் ஒளிந்திருந்த வெளி
கனவின் சுடலையாகிய
தரையிலிருந்து எழுந்து போகிறது.
எங்களுடன் நிலவும் பயங்கரவெளியில்
தோய்ந்தபடி அலைந்து கொண்டிருக்கிறது.
------------------------------------------------------------------------
29.05.2009

சனி, 23 மே, 2009

பந்துகள் கொட்டுகிற காணி

---------------------------------------------------------
தீபச்செல்வன்

---------------------------------------------------------------

மைதானத்துக்கான சமர்
ஓய்ந்துபோக மீளவும் தொடங்குகிறது
தீராத பேரினநோயின் யுத்தம்.
கூடாரத்தில் அடைந்துவிட
தாடி வளர்ந்து
உன்னை மூடிக்கொண்டிருக்கிறது.
உயிர்கள் கறுகிய மைதானத்தை
நனைக்கிறது இறுகிய மழை.
வாழ்வு
கூடாரத்தில் மூடிவைக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாதமாக வேர் அறுக்கப்பட்ட
பெருமிதங்களால்
வாழத்துக்களால் வெற்றியின் களிப்பில்
மிதந்துகொண்டிருக்கிற
கொண்டாட்டங்களில் நாம் எல்லாவற்றையும்
இழந்து போயிருக்கிறோம்.
இலக்கங்களாலும் ஒலிபெருக்கிகளாலும்
நீ கட்டி வைக்கப்பட்டிருக்கிறாய்.

என்னை அழைத்துச் செல்லுகிறபோது
முழு மரங்களும் பக்கத்தில் உதிர்ந்ததுபோல
அதிருகிறது உனது முகம்.
பான்கீமூனின் கைகளில் துவக்கு இருப்பதை
நீயும் நானுமே காணுகிறோம்.
இன்னும் அடங்காமல் பசித்திருக்கிற
துவக்குகளால்
சூழப்பட்டிருக்கிறது நமது காணி.

மண்ணடியில் நமது சிதைந்த வேரில்
திணிக்கப்படுகிற சொல்லாடல்களில்
நாம்தான் உன்மையில் தோற்றிருக்கிறோம்.
மைதானத்தைவிட்டு
வெளியேறிக்கொண்டிருக்கிறது யுத்தம்.

நாராயணனின் கைகளிலும்
மேனனின் கைகளிலும் பந்துகள் உருளுகின்றன.
பந்துகள் கொட்ட
தலைகள் சிதறுகிற காணிக்கிராமங்களில்
அருசி மூடைகளும் வந்து விழுகின்றன.

இனி கனவுகள் குறித்து மிக மௌனமாயிருப்போம்.
இறப்பர் கூடாரங்களால் நிரம்பியிருக்கிற
காணியில் முட்கம்பிகளில்
தொங்கிக்கொண்டிருக்கிறது போரின் பிறகான வாழ்வு.

நம்மை வென்றுவிட்டு கிடக்கிற
யுத்தம்
அறிவிப்பின்றி மெல்ல தொடருகிறது.
மனங்கள் காயப்படுத்தப்பட
தலைகள் கழற்றப்படுகின்றன.
நமது மைதானத்தில்
பந்தாடிக்கொண்டிருக்கிறது உலகம்.
குடிக்கிற தண்ணீருக்கான
வரிசை நீளுகிறது.
-----------------------------------------------------------------
21.05.2009

சனி, 16 மே, 2009

மணலில் தீரும் வீர யுகம்



ஒவ்வொன்றாய் விழுகின்றன மண்மேடுகள் 
மரணக் கிடங்கில் துயர் கொண்டலையும் 
பிணதேசத்தின் குழந்தைகள்

இதற்கு முன்பு பூமி பார்த்திராத 
கண்ணீர், குருதி
இதற்கு முன்பு பூமி பார்த்திராத 
வீரயுகம், தோல்வி

எல்லோருக்கும் கேட்கும் விதமாய்
எஞ்சியிருக்கும் குழந்தைகள்
என்ன சொல்லி அழுகின்றனர்?

கடல்கரையோரமாய் பெயர்ந்தலைந்து
மீள அதே இடத்திற்குத் திரும்பிய
வானம் பெயர்ந்து சுருங்கி வீழ்கிறது.

யாரிடமும் இல்லை கருணை
குழந்தைகளின் விழிகள் 
புதையுண்டன மணலில்

இன்று பின்னிரவிலும் ஆயிரம் பிணங்கள்
மண்மேடுகளின் பின்பக்கமாய் விழுந்தன
மீற்றர்களினால் முன்னேறுகிற
படைகள் பிணங்களின் குழந்தைகளை
மீட்டு படம் பிடித்தனர்.

கீழே வைக்கப்பட்ட ஆயுதங்களின் காட்சிகளுடன்
மூளும் தாக்குதல்களில்
மேலும் சுருங்குகிறது மண்
கைப்பற்றப்பட்ட மண்ணரணுள்
மூடப்பட்டிருக்கின்றன உயிரிருக்கும் பிணங்கள்.

வீழ்கிறது மண்
குழந்தைகள் மீளமீள மோதுகின்றனர் மணலில்
யுத்தத்தில் துயரமில்லை என்றனர்
குருதியில் தோய்ந்த வெற்றியை உண்டு மகிழ்ந்தனர்
இறுதிக் கட்டமாகவே
கழுத்து நெறிக்கப்படுகிறது  என்றனர்
அதன் பின்னர் குருதியும் இல்லை
உயிரும் இல்லை என்றனர்

இரண்டு இராணுவ அணிகள் சந்தித்து
கொடிகளை அசைத்தனர்
மூச்சடங்கிய குழந்தைகளின்மீது
பிணங்களைப் பற்றிப் பிடித்தனர் குழந்தைகள்
இன்னும் சற்று நேரத்தில் ஓய்ந்தடங்கும்
வீர யுகம் தீர்கிறது மணலில்
தீருகின்றனர் சனங்கள்
ஒவ்வொன்றாய் விழ்கின்றன
பாதுகாத்திருந்த மண்மேடுகள்.

தீபச்செல்வன்

15.05.2009

வியாழன், 7 மே, 2009

நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு



பிழைத்துப்போன களம் உன்னை
கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது
நீ கொண்டு செல்ல வேண்டிய
பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது.

விளையாடுகிற முத்தமற்று
சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று
வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க
உன்னை களம் கொண்டுபோயிற்று
திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு
உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.

அண்ணாவின் கல்லறைதான்
ஒரு சொத்தென இருந்தது
அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க
கல்லறையும் தகர்ந்து போயிற்று
இப்பொழுது வீடு இல்லை
எங்களில் யாரும் வாழ்வதற்கு
அண்ணாவைப்போலவும்
அவனின் கனவைப்போலவும்
அலைந்துகொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றையும் இழந்து
அலைந்து ஒடுங்கியிருக்கிற
அச்ச மூட்டுகிற இராத்திரிகளில்
பொத்தி வைத்திருந்த
உன்னை இழுத்துச் செல்லப்படுகிற
எங்கள் விதியை என்ன செய்வது?

எங்களை அலைத்துக்கொண்டிருக்கிற எதிரியை
நீ எப்படி சுடுவாய்?
எவற்றையும் உணர முடியாத
அறிந்திருக்காத வயதில்
உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது
கையில் தரப்பட்டிருக்கிற துவக்கு
பிஞ்சு மனதை வேகவைத்துக்கொண்டிருக்கிறது
எதியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்.

இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கின்றன என் சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.

இப்பொழுது நமது நகரமும் இல்லை.
வாழ்வுமில்லை.
எதுவுமற்ற நாமும் இல்லை.
எனினும் நீ வேண்டும்
அவியாத கொஞ்ச சோற்றையும்
தண்ணிரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.

விரைவாக வந்துவிடு
நாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்.
0
தங்கச்சி வேங்கனிக்கு

தீபச்செல்வன்
20.04.2009


வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...