Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 26 பிப்ரவரி, 2009

எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி


தரப்பால்களின் கீழாய் கிடந்து அடங்குகிறது
நமது எல்லா வழிகளும்.
துப்பாக்கியின் நுனிகளில்
முகங்களும் எலும்புக்கூடுகளும்

எல்லாமே சட்டென தலைகீழாகிறது
நிலத்தை எரித்துக் கொண்டிருக்கிற துவக்கு
சாம்பலை எதிராய் கிளம்புகிறது.

குருதியின் ஒருதுளி கடலில் மிதந்து
தப்பிச் செல்லுகிறது
வழியில் தற்கொலை செய்துகொள்ள
துடிக்கிறது மீதமிருக்கிற நகரத்தின் சுவடு
ஒரு மாபெரும் அரசனின்
ஒற்றை வாளில்
முழுச் சுவரும் வெட்டுண்டுபோயிற்று.

பிள்ளைகளை அனுப்பிய தாய்மாரின்
கண்ணீரைத்தவிர
குறுகிய நிலத்தில் எதுவும் இல்லை
வானத்திற்கு மேலால் கடல்
இப்பொழுது கடைசிக் கெஞ்சல்
எதுவுமற்று வெளிக்கிறது துளி நிலம்.

முகத்தின் முன்னாலொரு ட்ராங்கியின் ஏவுகனை
குத்திக்கொண்டிருப்பதைபோலவே
எப்பொழுதும் துரத்துகிறது
தோல்வியின் பிறகான கூச்சல்

இன்றைக்கான தோல்வி பரிசளிக்கப்படும்
அலங்கரிக்கப்பட்ட மேடையில்
ஆக்கிரமிப்பின் சொற்கள்.

தேசம் முழுக்க புழுக்கிறது.

வெளியேறுகிற வழி
ஆக்கிரமிப்பின் வலையாக
கடல் எல்லாம் புதைக்கும் கிடங்காகிற்று.
கனவு
மற்றும் அதற்காய் சிந்திய குருதி
பறிக்கப்பட்ட
நிலத்தில் அழிக்கப்பட்டது.

வீழ்ந்த நகரம் தற்கொலை செய்துகொண்டது
கைப்பற்றப்பட்ட அதன் சுவர்கள்
உக்கத்தொடங்குகிற
எலும்புக்கூடாய் பிரிகையடைந்திற்று
சனங்களுடன் வெளியேற்றப்படுகின்றன
தற்கொலையுண்ட நகரத்தின் எலும்புக்கூடுகள்.

இனியொன்றும் இல்லை
துயரங்களைத்தவிர
சயனைட்டை அணைக்கிறது வாழ்வு.

வெளியேற வழியற்ற நிலம்
அந்தரித்து திரிகிறது

பதுங்குகுழிகளை அள்ளி ஏற்றுவதற்கு
கடலால் வருகிறது எண்ணெய் கொதிக்கிற கிணறு
பிள்ளைகளை கொன்று தாய்மார்களை
பிடித்துச் செல்லுகிறது சிங்கம்
தரப்பாலை சுற்றிக்கொண்டிருக்கிறது
பாம்பின் புகை.

தீபச்செல்வன்

(25.02.2009 வன்னி மக்களை வெளியேற்ற
அமரிக்காவும், இந்தியாவும் உதவுவதாக அறிவித்துள்ளது)

வியாழன், 19 பிப்ரவரி, 2009

கடல் நுழையும் மணற் பதுங்குகுழி




ஒரு பக்கத்து வானத்தில்
பெருந்துயர் மிகு சொற்கள் 

எல்லாருக்குமான
பாவங்களைச் சுமக்கும்
சனங்களின் குருதி மிதக்கும்
துண்டுக் கடலில்
கறுப்பு இரவு திரிகிறது.

எல்லாவற்றையும் கிடங்கிலிருந்து
கழித்து ஓ.. என்ற
பெரும் மூச்சை மணல்வெளியில் புதைத்தாய் 
வானம் தாறுமாறாய் கிழிந்தது.

சப்பாத்துகள் நெருக்கி கடலில்
தள்ளிவிடத்துடிக்கும் ஒரு துண்டு நிலத்தில்
எச்சரிக்கப்பட்டிருக்கும் வாழ்வு 
மணல் போல உருந்துபோகிறது. 

எல்லாவற்றையும் இழந்து
ஒடிவரும் இரவு சிக்கியது
மிருகத்தின் வாயில்  

எறிகனை கடித்த
காயத்திலிருந்து கொட்டும் கனவுகளை
மிதிக்கிறது மண்ணை தின்னும் டாங்கிகள்
காயப்பட்ட வழியில் எங்கும் உப்புக் காற்று.

உன்னைச் சூழ்ந்திருக்கும்
கோரமான பற்களின் பசியில் கரைகிறது
உனக்காய் என்னிடமிருக்கிற பதுங்குகுழி.

எச்சரிக்கப்பட்ட துண்டுக் கடற்கரையில்
யாரும் அறியாதபடி மிக அமைதியாக
வந்து வெடிக்கிறது எறிகனை
குழம்பிக் கிடக்கிறது கடல் 

பின்னிரவை தொடரக் காத்திருக்கும்
மற்றைய எறிகனைகளில் 
அதிரும் அசைவற்ற கடற் கரை முழுவதும்
பாரமான குருதி.

உன்னிடமிருக்கும் பெருஞ்சொற்களில்
சிலதை கேட்டு முடித்தபோது
நாம் சேர்வதற்கான கனவு
நீயிருக்கும் மணற் பதுங்குகுழியின் மூலையில் 
உருந்துபோகும் மணலில் புதைந்தது. 

அம்மா!, அதிர்கின்றன
மணற் பதுங்குழியின் சொற்கள்.

18.02.2009. 

தீபச்செல்வன்



நீண்டநாட்களுக்குப் பிறகு தற்போது பொக்கனை கடற்கரையிலிருக்கும் அம்மா,  தங்கச்சியுடன் நான்கு நிமிடங்கள் பேசினேன். 

சனி, 14 பிப்ரவரி, 2009

அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறையும் சுடுமணல்




இலைகொட்டிய அலம்பல்களில்
குந்துகிறது துரத்தப்படும் கூரை.

களப்புவெளியின் சகதிக்குள்
புதைந்துவிட்ட ஒற்றைப் பேருந்துக்குள்
ஒளிந்திருக்கும் குழந்தைகளை
தேடுகின்றன கொத்துக் குண்டுகள்.

ஒற்றை புளியமரத்துடன்
வெளித்துக்கிடக்கிறது மாத்தளன்.

விமானங்கள் குவிந்து எறியும் குண்டுகள்
விழப்போகும் அறிவிக்கப்ட்ட பாதுகாப்பு வலயத்தில்
நிறையும் சுடு மணலில் ஓடும்
குழந்தைகளின் பாதங்கள் வாடிப்புதைந்தன.

பனைகளுக்கிடையில்
படருகிறது கந்தக வெம்மை
உவர்க்களியில் கொதிககும் ஈரலிப்பில்
எழுத முடியாத சொற்கள்

உப்புவெளியில் பாதிச்சூரியன்
சுருண்டு விழ
அனல் காற்றில் பறந்துபோகிறது
இல்லாத குழந்தைகளது
அகற்றிக்கொண்டு வரப்படும் சட்டைகள்
கிணியாத்தடிகளில்
கட்டிய கயிறுகளுக்கிடையில் தொங்குகிறது
நேரம் குறித்திருக்கும்
கொடு நெருப்பின் கடைசித்துளி.

சன்னங்கள் வந்து மிரட்டும் இரவில்
உடல்வேலன் முள்ளுகளுக்குள்
ஒளிந்தனர் குழந்தைகள்

மண் துடிக்க
கடல்
மேல் எழுந்தது.

முன்பொரு வலயத்தில்
சிதறுண்டுவர்களின் பெயர்களை
யாருமற்ற சிறுவன்
சுடு மணலில் எழுத
கள்ளிச்செடிகளுக்குள் கிடக்கிறது
மிஞ்சியிருக்கும் அவனின் ஒற்றைப்பொதி.

நறுவிலி உவர்நிலக்காடுகளில் அலைகிற
பெருங்குரல்கள் கேட்கிறதா
பெருங்கடலே?

ஒற்றைத் தென்னை மரத்துடன்
வெளித்துக் கிடக்கிறது வட்டுவாகல்.

தொடுவாய்ப்பிரிப்பில் காய்ந்த கோப்பையில்
பெருங்கனவு மிதக்கக் கண்டேன்
ஒரு பெருமிருகம்
முள்ளிவாய்க்காலை தின்னத்
திட்டுமிடுகிற குருட்டிரவில்
அறிவிக்கப்பட்ட வலயத்தின் மேலாக
பெரும்பாம்பு அலைகிறது.

மணல் சுடாகி கொதிக்கும் கரையில்
ஒரு பொட்டென மிதக்கிறது
எம் கண்ணீராலும் குருதியாலுமான கடல்.
0

தீபச்செல்வன்

12.02.2009, வட்டுவாகலுக்கும் மாத்தளனுக்கும் இடையிலான பகுதியை பாதுகாப்பு வலயமாக  அறிவித்து அப் பகுதியில் கடும் யுத்தத்தை மேற்கொண்டது இலங்கை அரசு. 


செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

தாகம் பாய்கிற நதிக்கான கனவு


----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________


தண்ணீர் வற்றுகிற வாய்க்காலினை
சிரட்டையால் தோண்டுகிற சிறுவனிடம்
பாலைவனம் எரிகிற தாகம் முட்டியிருந்தது.

வெறும் குடங்களில்
ஏங்கங்களை நிரப்பி வைத்திருக்க
ஒரு இரவில் பிட்டுடன்
அருந்திய தண்ணீர் ஒரு நதியென
கனவில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

எல்லாத்திசைகளிலிருந்தும் எறிகனைகள்
வருகிறபோது
குழந்தைகளை காத்துக்கொள்ளுகிற
கோயில்களை கூப்பிட்டோம்.
வானம் முழுக்க விமானங்கள்
நிறைகிறபோது குழந்தைகளை
கூட்டி அணைத்தோம்.
கோயிலிலும் தெய்வங்கள் வெளியேறின.

சிதறுண்டுபோன மனித உடல்கள்களை
விட்டுச்செல்கிற போது அவலத்தின் பெரு நதி
கிணறுகளை அள்ளிச் செல்ல
தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து
வானம் வெளியேறுகிறது.

கிணறுகள் எங்கும் குழந்தைகள்
ஒளிந்திருக்க தண்ணீர் முழுவதும் வற்றிப்போனது.

கூட்டுக்குள் வைத்து வேட்டையாடப்டுகிற
பறவைகளிடம் இனியொரு நதியினெ வளர்ந்த கனவு
முழுவதும் சுட்டு விழுத்தப்படுகிறது.
ஒரு நிமிடத்திலேயே
பிரிந்தபோன வாய்க்காலின் கரையில்
தென்னை மரத்தில் சிரட்டைகள் உதிர
வாய்க்காலில் பாலைவனம் பாய்கிறது.

பொதிகளுக்குள் தண்ணீர் தாகங்களை
நிரப்பி சுமக்கிற தெருவின்; நடுவில்
கிணறு திறபட்டிருக்க அதற்குள்
மூடுண்டு போகிற தணலெரிந்தன.

அந்தச் சிறுவனும் இல்லை.
வாய்க்காலும் இல்லை.
பெருகுகிற தண்ணீருக்கான தாகத்தில்
குடங்கள் திரிய வாளிகளுள்
சிறுவர்களின் வளர்ப்பு மீன்கள்
உடல் காய்ந்து அலைந்தன.

காய்ந்த ரொட்டியின் மீது
அவன் எழுதிய சொற்கள் வெறுமையாயிருக்கிற
ரொட்டித்தகரங்களில் சுடுபட்டன.

இல்லாத மாவுக்கு வரிசை கட்டி நிற்கிற
கடையில் பிட்டு சுமக்கிற தேவாரங்கள் நினைவு வர
குறைந்து வருகிற தரையில்
தண்ணீர் மேலும் காய்கிறது.

தண்ணீருக்கான வழிகள்
அடைபட்டுடிருக்க
வாழ்வின் கனவின் நதி இனியொரு இரவில்
முற்றுகை அதிகரித்த காட்டினுள்
மீள பெயர்ந்து பாய்கிறது.
------------------------------------------------------------------------------------
13.01.2009

வியாழன், 5 பிப்ரவரி, 2009

யாருமற்ற நகரில் பறக்கும் கொடியின் கொடு நிழல்




சனங்கள் தம் காலடிகளையும்
எடுத்துச் செல்ல
கடல் நகரத்திலும் அசைந்தன
ஆக்கிரமிப்பின் கொடிகள்

அலைச்சலால் ஆன கால்களை
பிடுங்கும் எறிகனைகளில்
காயமுற்ற  கடல் நகரம்
பெருங் கையுள் சுருங்கிப்போனது.

கோவலன் கூத்தாடிய நகரத்தில்
திமிறி நிறைந்தன
படைகளின் வெற்றிக் கூச்சல்கள்.

யாருமற்ற நகரின் தெருவில்
தவித்து திரியும் நாயின்
எச்சிலின் வெம்மையில் பெருந்தவிப்பு

யாவற்றையும் தின்று பறக்கிற
கொடியின் நிழலில்
பசித்தலைந்தான் சிங்க அரசன்
அழிந்த நகரத்தின் அடியில்
புதைகிறது கடல் வாழ்வு.

நிலம் இருள
சூரியன்  கரைந்திற்று
பழமையான கிழக்குக் கடலில்

உடைந்த சுவர்களினையும்
நினைவுகள் எழுதப்பட்ட கற்களையும்
தின்று முன்னேறுகிறது
பசித்தலையும் கொடியின் நிழல்.

வற்றாப்பளை அம்மனும்
அகதி ஆனாள்.

பண்டார வன்னியனே
ஒருபொழுதும் வீழா நகரத்தின்
வெற்றுத் தெருக்களையே
அவர்கள் கைப்பற்றினர்.

வன்னி அரசனே
யாருமற்ற நகரில்
பறக்கும் கொடியின்
கொடு நிழலில்
தோல்வியின் முகத்தை
நீ காண்டாய்.
0

தீபச்செல்வன்

28.01.2009 முல்லைத்தீவு நகரத்தினுள் இலங்கைப் படைகள் நுழைந்தன.



வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...