Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 30 நவம்பர், 2008

முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி



இப்பொழுது மிஞ்சியிருக்கும்
பதுங்குகுழியில்
பெருமழை பெய்கிறது.

அறிவிக்கப்பட்டிருக்கும் வெற்றிக்கும்
தோல்விக்கும் இடையில்
எனது நகரத்தை
பிரிக்கும் சமரில்
நகரத்தின் முகம் காயமுற்றுக் கிடக்கிறது.

நாளை அது வீழப்போவதாய்
இராணுவத்தளபதிகள் சூளுரைக்கும்  இரவில்
பதுங்குகுழியின் ஒரு சுவர் கரைகிறது.

வெற்றி இலக்கில் அகப்பட்டிருக்கும்
எனது சந்தையில்
இறைச்சிக் கடைகளை
திறக்க காத்திருக்கின்றனர் படைகள்

நான் நேசிக்கும் நகரத்தின்
நான் குறித்திருக்கும் பதுங்குகுழியில்
முற்றுகையிடப்பட்ட
நகரக் கடைகள் ஒளிந்திருக்கின்றன.

கால்களுக்குள் அலையும்
வெற்றிச் சொற்கள்
ஒடுங்கியிருக்கும்
வீடுகளின் கூரைகளை
உலுப்பி களிப்படைகின்றன.

தூரத்தில் ஒரு சிறிய
நகரத்தில் நடக்கும் சண்டையில்
உடையும் பள்ளிக்கூடத்தைக் கைபற்றி
அதன் முகப்பில் நின்று
செய்தி வாசிக்கிற
படைச் செய்தியாளனின்
வெறித்தனமான வாசிப்பில்
பள்ளிக்கூட கிணறு மூடுப்படுகிறது.

முற்றுகையிடப்பட்ட பதுங்குகுழியில்
எரியமறுக்கிற விளக்கை
சூழ்கிற ஈசல்களை
பாம்புகள் தின்று நகர்கின்றன.

சனங்கள் வெளியேறிய பெருவீதிக்கு அருகே
கிடங்குகள் விழுந்த
மைதானத்தில் காற்று முட்டிய
பந்து கிடந்து உருள்கிறது
உலகம் விளையாடத் தெடாங்கியது.

மேலுமொரு சுவர் கரைகிறது.

படைகள் வளைத்து
முற்றுகையிடும் பொழுது
மழை சூழ்கிறது
கொண்டைகளை அறுத்தெரியும்
சேவல்கள் கூவ மறுக்கும்
அதிகாலையில்
படைகள் மேலும் நுழைய முனைகின்றன.

எல்லாச் சுவர்களும் அசைகின்றன

முன்னேற்றம் தடுக்கப்பட்ட
நகரத்தில்
சண்டையை மூட்டக் காத்திருக்கும் படைகளை
சனங்கள் கொதித்து ஏசுகிறபோது
வயல்களில்
கைப்பற்றப்பட்ட தெருக்கள் புதைந்தன.

படைகளிடம் வீழ்ந்திட முடியாத
எனது நகரத்தின் முகப்புக்காக
அலைகின்றன இராணுவக் கமராக்கள்.
0

தீபச்செல்வன்

27.11.2008, கிளிநொச்சி நகரத்தை நோக்கிய முற்றுகை முன்னேற்றேத்தை தொடங்கியது இலங்கைப் படைகள். 

திங்கள், 24 நவம்பர், 2008

மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
இழக்க முடியாத நிலத்தில்
ஓட்டிக்கொண்டிருக்கிற
நமது முகங்களும்
விட்டு வந்த ஊரில்
தங்கியிருக்கின்ற நம்பிக்கைளும்
நீ கூற முடியாதிருக்கிற
கதையின் பின் நெருப்பாய் கொட்டுகிறது.

உன்னை விழித்து
விசாரிக்கிற நள்ளிரவில்
சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தில்
உனக்காக
தலைவலிக்கிற பொதிகளை
நான் கனவில் சுமந்தேன்.

போர் குறித்து
நீ பேசிய கதைகளிலிருந்து
யாருமில்லாத கிராமத்தின் மௌனத்தில்
பெருந்துயர் வடிகிறது.

அண்மையில் இருக்கிற
கிராமம் ஒன்றையும்
பெரும் வீதி ஒன்றையும்
கைப்பற்றிவிட்டாதாய்
அறிவித்து விட்டு படைகள் மீள நகர்கிற
பின்னிரவில்
தடிகளில் பெய்கிற அடைமழையைப்போல
செய்திகள் வருகின்றன.

போரில் எழுதப்படுகிற கோட்பாடுகள்
முகங்களை அறுத்தெரிகிறது
மனிதாபிமானத்தின்
நடவடிக்கையில் நீ இழந்திருக்கிற ஊரை
போர் மூடி படர்ந்திருக்கிறது.

போரில் மிகவும் பிரியம்
கொண்டு வருகிற படைகளிடம்
மாட்டிவிடுகிற
உனது பதுங்குகுழிக்குள்
சண்டை நிகழ்கிறது.

நீ விலத்தியிருக்கிற போர்
உனது பழைய சைக்கிளின்
பின்னால் ஏறியிருக்கிறது
நீ போரை மேற் கொள்கிறாய்.

என்னிடம் சொல்லப்போகிற
கதைகளில் இருந்து
எஞ்சியிருக்கிற நிலத்தின்
மற்றொரு திசையில்
மூள்கிற சண்டையில் அப்பால்
ஒரு திசையில் அலைந்துகொண்டிருக்கிறாய்.

குருதி வடிகிற நினைவுக்கற்களில்
எழுதிய சொற்களின் மீது
கொடியைப் பறக்க விடுகிற
வெற்றிக்களிப்பில்
கோயில்கள் உடைய
கடைத் தெரு சந்திகளை இழந்தோம்.

முன்னரங்குகளில் மோதுகிற
ஜனாதிபதி கொண்டாடுகிற
செயின்பிளக்குகள் களங்களை திறக்க
தவிர்க்கமுடியாத போரிற்கு
சென்றிருக்கிற பிள்ளையின்
உனது நினைவுகள்
காடுகளின்
ஆற்றம் கரைகளில் ஒதுங்கியிருக்கின்றன.

ஏக்கம் வடிகிற இரவில்
நீ திட்டிக் கொண்டிருக்கிற போர்
உன்னை வலிந்திழுக்கிறது
நீ போரை அனுபவிக்கிறாய்.

மனிதாபிமானத்தின்
படை நடவடிக்கையில்
வயல்களிலிருந்து வயிறு வரை
தீப்பற்றி எரிகிறது.
உன்னை குறித்து
விழித்திருக்கிற அதிகாலையில்
எறிகனை பட்டு துடிக்கிற
சூரியன் ஊர் எரிகிற
புகையில் தாண்டு விடுகிறது.

அழகிய நகரங்களை
தின்று விடுகிற
படை நடவடிக்கையின்
மிகப்பெரிய வெற்றிவிழாவில்
எனது சந்தி நசிகிறது
உன்னை படைகள் நெருங்குகின்றன.
போர் எல்லாரையும் நெருங்குகிறது.

நீ எழுதாதிருக்கிற கவிதைகளிலிருந்து
உனது போர் பற்றிய
கதை தெளிவாய் கேட்கத்தொடங்குகிறது.

விட்டு வர முடியாத நமதூரில்
படைகள் கைப்பற்றிய பாலத்தின் கீழாய்
நான் உன்னுடன் மறைந்திருக்கிறேன்.
----------------------------------------------------------------------------
20.11.2008-போர்,கொண்டாட்டம்,நிலம்,இழப்பு.

திங்கள், 17 நவம்பர், 2008

அண்மையில் மிதிபடுகிற கடல்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________

மடுமாதாவின் பெருமூச்சு
அடிபடுகிற
பூநகரி கடல் வெளியில்
உப்புக்காற்று
சுழன்று அவதிப்பட்டு திரிகிறது.
நொருங்குண்ட
முடியை அணிந்த மாதா
பரந்தனையும் தாண்டிப்போகிறாள்.

மிக அண்மையில்
வந்து உறுமுகிற ட்ராங்கியில்
எனது கடல் மிதிபடக் கண்டேன்.
வலைகளில்
வந்து மாட்டித்துடிக்கிற
மீன்களின் குருதியில்
டோறாக்கள் பயணிக்கத் தொடங்குகின்றன.

மெல்லிய இரவும்
மிகவும் பெரிய கடலும்
அடர்ந்த காடுகளும்
சனங்களை இழக்க வைத்த
இராணுவ நகர்வுகளிடம்
சிக்கித் தவிப்பதை நான் கண்டேன்.

மேற்குக் கடல் கரைகளை
இழக்க காயப்பட்டு துடிக்கிறது
கடற்கரைத் தெரு.
இரண்டு பெரும் தெருவின்
நடுவில்
மாட்டிப்புரள்கிற கடல்
திரும்பமுடியாத
திசைக்கு சென்றுவிடுகிறது.

மீன்பிடிக்கிற படகுகளை இழந்த
கரையிலிருந்து
கடல் எட்டிச்செல்கிறது.
தென்னை மரங்கள்
மணல் வெளியில் புதைய
ஆயுதங்கள் கொண்டு வருகிற தெரு
வீழ்ந்து நெளிகிறது.
கிராஞ்சியில் விமானத்தின் குண்டுகளில்
சிதறுண்ட குழந்தைகளின்
கைகளை படைகள் மீட்டெடுத்தனர்.

இராணுவ வண்டிகள்
மிதித்துத் திரிகிற கடலின்
மிகவும் பிரியமான கரையை
படைகள் தின்று மகிழ்ந்தாட
அதன் சனங்கள்
வெயிலில் விழுந்து துடித்தனர்.

பின் நகர்ந்த சனங்களின்
வீடுகள்
சங்குப்பிட்டிக் கடலில் கரைக்கப்பட
கைவிடப்பட்ட தனிமையுடன்
கிடக்கிறது மிகப்பெரிய கடல்.

இரண்டு இராணுவத்தளபதிகள்
மிதித்து
கைகுலுக்க முன்பாகவே
ஜனாதிபதியின் வெறிச்சொற்கள்
ஓலிக்கத் தொடங்கிய நாளில்
இறந்து போக
எனது கடல் வீழ்ந்த தெருவில்
காய்ந்து மிதிபடுவதை
நான் கண்டு துடித்தேன்.
----------------------------------------------------------------------------
14.11.2008 பூநகரி,புலிகள்,பின்நகர்வு,ஆக்கிரமிப்பு

செவ்வாய், 11 நவம்பர், 2008

மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு


-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________

சவப்பபெட்டியின் முகத்தோடிருக்கிற
சுவர் முட்டிய
அறைகளின் மூலையில்
எங்கோ இருப்பவர்களுக்காய்
தூவிய பூக்கள்
காய்ந்து குவிந்து கிடக்கின்றன.

நாளுக்கு ஒரு மாதிரியாய்
போர் வகுக்கிற வியூகங்களில்
சிக்கிக் கொண்டிருக்கிறது
நீ பிடித்துச் செல்லுகிற தெரு.

பூட்டி ஏற்றப்பட்ட தொழிற்சாலையில்
வாங்க முடியாத போன
கடைசி மாத சம்பளத்துடன்
மீண்டுமொரு மரத்திற்கு நகர்ந்தாய்
நம்மீது விழ்த்தப்போகும் குண்டுகளுக்கான
செலவு விபரங்களை
ஜனாதிபதி நமது மொழியில் வாசித்தபொழுது
மூட்டையின் அடியிலிருக்கும்
ஒரு ரூபாய் காசிலிருந்து
கர்ஜிக்கும் மிருகம் குண்டாக வெடிக்கிறது.

நம்மை போர்
துரத்திக்கொண்டேயிருக்கிறது
அதன் நீண்ட நகங்கள்
ஒடுங்கிய இரவினை கிழித்தெறிய
நீ மீண்டுமொரு கோயிலின்
தாழ்வாரத்தில் பதுங்குகிறாய்.

மிகவும் பச்சைக்காடுகள்
முழுவதுமாய் அழிய
தெருக்கள் புதைந்த மண்மேட்டினை
உடைத்து
வந்த படைகள் அக்கராயன் குளத்தை
குடித்தபொழுது
எனது கைகளும் கூடவே ஈரமாகின.

ஒரு முறை நாம்முடன் பலர் ஒதுங்கிய
பள்ளிக்கூடத்தின் கூரைகளை
கைப்பற்றிய பிறகும்
அம்பலப்பெருமாள் சந்தியிலிருந்து
மிகவும் நிலத்துக்கான
பசியோடு பற்கள் முளைத்த கொடி பறக்கிறது.

இரண்டு போராளிகளின்
சேறு ஊறிய உடல்களுடன்
கைப்பற்றப்பட்ட பதுங்குகுழியில்
இடம்பெயர மனதின்றி
இன்னும் யாரோ தங்கியிருக்கிறார்கள்.

நம்மைப் போர் விடுவதாயில்லை
உன்னையும் என்னையும்
பிரித்து வைத்திருக்கிறது
எனது கனவுகளையும் தெருக்களையும்
தின்றுவிட்டு
உன்னை மரங்களின் கீழாய்
பின் வாங்க வைக்கிறது
நிலங்களை துண்டாடிவிட்டு
பசிக்கேற்ற முகங்களை அணிந்திருக்கிறது.

மீண்டும் இரவிரவாக வரப்போகும்
விமானங்களிடமிருந்து
தப்புவதங்காய் துடிக்கிற நாய்க்குட்டியைப்போல
மரம் உனக்கு மேலாய் பதறுகிறது.

நாளை நீ பேசப்போகும்
சொற்களை தேடியலைகிற கனவில்
இன்னும் நிறைய மரங்களுக்கு கீழாய்
அதனுடன் நீ பின்வாங்குவதைக் கண்டென்.
-0-------0-------0----------0---------0---------0------0------
08.11.2008 அம்மாவின் அழைப்பிற்காய்காத்திருந்த நாள்.

திங்கள், 3 நவம்பர், 2008

நம்மைத் தொடருகிற போர்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
01
போரே தீர்வென்று கோடுகளின் கீழாய்
எழுதிச் செல்கிறேன்
எல்லாம் மாறி உடைத்த பொழுதும்
போர்க்களங்களின் முகங்கள் மாறவில்லை
யுத்தம் உன்னையும் என்னையும்
தின்பதற்காய் காத்திருக்கிறது
காலம் நம்மிடம் துப்பாக்கியை
வழங்கிவிட்டு மௌனமாக கிடக்கிறது.

கருத்தப்பூனையைப்போல
கருணாநிதி
மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார்
நேற்றிலிருந்து கருணாநிதி கவிதைகளிலிருந்து
பூனைகள் வெளியேறுகின்றன
வாய் கட்டப்பட்டவர்களின்
பேரணிகளிலும்
பூனையின் கறுத்த மௌனம் ஊடுருவுகிறது.

புல்லரித்து முடிந்த நிமிடங்களில்
வாய்களை மூடும் தீர்வு போரைப்போல வருகிறது
முப்பது வருடங்களை இழுபடுகிற
போரை உணவுப்பைகளில்
கறுத்தப்ப+னைகள் அடைக்கின்றன.

02
போர் தீர்வென்று வருகையில்
நமக்கு போராட்டம் தீர்வென்று மிக கடினமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டோம்
விமானங்களை நம்பியிருக்கும்வரை
குண்டுகளை நம்பியிருக்கும்வரை
துப்பாக்கிகளை நம்பியிருக்கும்வரை
நாமது கைகளிலும் துப்பாக்கிகள் வந்தன
நமது பதுங்குகுழி விமானமாய் பறக்கிறது.

போர்க்களங்களில் தீர்வுகள்
இலகுவாகிவிட்டன
நீயும் நானும் பெற்றெடுக்கும் குழந்தை
உயிர் துறக்கப்போகும் இந்தப்போர்க்களம்
நம்மோடு முடிந்துபோகட்டும்
விமானங்கள் மனங்களை தீர்மானித்து விட்டன
மிகக்கொடுரமான அனுபவத்திலிருந்து
நமது விமானங்கள் எழும்புகின்றன
எனது காயத்திலருந்து வெளியேறுகிற
குருதி காவலரணை கழுவுகிறது

03
ஓவ்வொரு செய்தியின் கீழாயும்
மறைக்கப்பட்ட குறிப்புக்களை நீ கண்டாய்
அதன் மேலொரு கோடு கீறினேன்
பயங்கரவாதிகளை அழித்துச் சென்ற
விமானங்களின் கீழாய்
பள்ளிச்சிறுவனின் முகம் பதிவுசெய்யப்பட்ட
புகைப்படத்தை நீ கண்டாய்
விமானங்களும் அதன் இரைச்சல்களும்
நம்மை மிரட்டிக்கொண்டிருந்தன
ஒரு விமானத்தைப்போல ஜனாதிபதி பேசுகிறார்
ஒரு எறிகனையைப்போல
இராணுவத்தளபதி வருகிறார்.
கருணாநிதி ஒரு கிளைமோரை
பதுங்கியபடி வைத்துச்செல்கிறார்

04
அழுகை வருகிறது
தோல்வியிடம் கல்லறைகள்தானே இருக்கின்றன
எனினும் இந்த மரணம் ஆறுதலானது
அதில் விடுதலை நிரம்பியிருந்தது
இரண்டு வாரங்களில்
எடுத்துப்பேச முடியாத போரை
நாம் முப்பது வருடங்களாக சுமந்து வருகிறோம்
நம்மிடமே நம்மை தீர்மானிக்கும்
சக்தி இருக்கிறது
மரணங்கள் பதிலளிக்கும்பொழுது
குருதியில் மிதக்கிற கதிரைகளை பிடித்துவிடுகிற
அரசியல்வாதிகளிடம்
நாம் முப்பது வருடங்களாக ஏமாறுகிறோம்.

அழகான வாழ்வுக்காய் பிரயாசப்படுகையில்
உலகம் மாதிரியான
குண்டுகள் அறிமுகமாகிவிட்டன
மிகவும் கொடூரமாக மேற்க்கொள்ளப்படுகிற
போரை எதிர்க்கும் பொழுது
துப்பாக்கிகள் வாழ்வில் ஏறிவிட்டன
நீ போரின் நுட்பங்களில் கவனம் செலுத்துகிறாய்.

05
பிரித்து ஒதுக்கி ஒடுக்கப்படகிறபொழுதுதான்
இனம் குறித்து யோசிக்கத்தோன்றுகிறது
எனக்கு இந்தக் கல்லறைகளை
எண்ணி முடிக்க இயலாதிருக்கிறது.

படைகள் புகுந்துநிற்பதாய்
கனவு காண்கையில்
தூக்கம் வராத நாட்களாகின்றன
வீட்டுச்சுவர்கள் தகர்ந்துவிட
பேய்கள் குடிவாழ்கின்ற கிராமங்களில்
திண்ணைகள் கொலை செய்யப்பட்டிருக்க
எப்படி தூக்கம் வருகிறது
அதுவே தீர்வாகையில்
கை துப்பாக்கிளை இறுகப்பிடிக்கிறது.

தீர்க்கமுடியாத பிரச்சினைகள்
போர்க்களத்தில் சுடப்பட்டுக்கொண்டிருந்தன
நம்மை துரத்துகிறபோர் மிகவும் கொடூரமானது
அதன் பின்னால்
அழிகிற இனத்தின் நகரங்கள்
புரதானங்கள் குறித்து
சன்னம் துளைத்துச் செல்கிற சுவர்களைத்தவிர
எதனால் பேசமுடிகிறது?

06
நீ போர் அழகானது என்றாய்
உன்னால் போரில் நசியமுடியாதிருந்தது
அம்மா பின்னால் நிற்க
நான் சுட்டுக்கொண்டிருந்தேன்
நான் போரை சமாளிக்க வேண்டியிருந்தது.

நம்மால் சட்டென பேசமுடிகிறது
துப்பாக்கிகளைத்தான் இறக்க முடியவில்லை
மிகவும் விரைவாக சுட்டுவிட முடிந்தது
மரணங்களின் பிறகு போர்க்களம்
அடங்கிக்கிடக்கிறது
நேற்று நம்மைப்பற்றி பேசியவர்கள்
மேடைகளைவிட்டிறங்கி
கதிரைகளில் மாறிக்கொண்டிருந்தார்கள்.

படைகளும் நகரத் தொடங்க
நாம் மீண்டுமொரு சமருக்கு
எதிராக தயாராகினோம்
சிறுவர்கள் இழுத்துச் செல்லுகிற
தண்ணீர்க் குடங்களை போர் தொடருகிறது.
----------------------------------------------------------------
8.35, 31.10.2008

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...