Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 6 அக்டோபர், 2008

அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள்


---------------------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
வாழ்வு பற்றி பெரிய ஆசையிருந்தது
பூக்கள் பற்றி நிறைய கனவுகள் இருந்தன.

இந்த நகரத்தின் பெருஞ்சுவர்களை
அழித்த பிறகு
வீடுகளை புதைக்கிற
நிகழ்வு அறிவிக்கப்படுகிறது
பூக்கள் பற்றிய கனவு உதிர
வரிசையாய் போடப்பட்ட கதிரைகளை
உடைத்துதெறிக்கும் தீர்வு வருகிறது.

பூக்களை உற்பத்தி செய்யும்
நகரத்தை அழிப்பதற்கு பிரகடனத்தை
அறிவித்தபொழுது
புரதான பெருஞ்சுவர்கள் அதிர்ந்து போயின.

விமானங்களுக்கு பலிகொடுக்கப்பட்ட
மேசைகள் உடைந்து கிடக்கும்
வெடித்துச் சிதறிய கண்ணாடி மாளிகைகளில்
அருந்திவிட்டுப்போன
தேனீரின் மிச்சம் காயாமாலிருக்கிறது.

எல்லோரும் வந்திருந்து பேசிய
கதிரைகளை உடைத்துவிட்டுப்போகையில்
அருகிலிருந்த மாமரங்கள் முறிந்து விழ்ந்தன.

யுத்தத்தின் விதி புதியதாய் இயற்றப்பட்டு
மாறிக்கொண்டிருந்தது.

மூன்றாவது போர் முடிந்தபொழுது
எழுப்பப்பட்ட மாளிகைகள்
மீண்டும் தகர்ப்பதற்கான
நாலாவது போர் ஒளிந்திருந்தது.

02
ஷெல்கள் வந்து விழும்
நகரத்தின் மையத்திலிருக்கும்
மருத்துவமனையில்
காயமடைந்து வந்து சேர்ந்த
நோயாளியின் அதிருகிற தெருவின்
அழும் குரலில்
ஒரு பெரிய சனக்கூட்டத்தின்
ஓலம் ஒலித்துக்கொண்டிருந்தது.

பூக்கள் பற்றிய கனவிலிருந்து
வெளியேறும் தருணம் வருகிறது.

இந்த நகரத்தோடும்
சனங்களின் மரணத்தோடும்
துப்பாக்கி அணிந்து வீழ்ந்த போராளிகளோடும்
பூக்களின் நகரம் பற்றிய கனவு
முடிந்துபோய்வடுவதாய் கருதப்படுகையில்
அரசுகளின் யுத்தக்கனவில்
இனநிலவெறி நாடு ஆடுகிறது.

எல்லோரும் பயங்கரவாதிகள் என்று
அறிவிக்கப்படுகையில்
எஞ்சியிருந்த பூக்கள் உதிர
நகரத்தை அழிப்பதற்கான பிரகடனம் கேட்கையில்
உடைந்த கதிரைகள் மேலும் உடைய
அதன் கைகளிலும் துப்பாக்கிகள் முளைத்தன.

வாழ்வு பற்றி பெரிய ஆசையிருந்தது
பூக்களின் நகரம் பற்றி நிறைய கனவுகள் இருந்தன.
-----------------------------------------
05.10.2008

3 கருத்துகள்:

Kalaiyarasan சொன்னது…

இலங்கையின் உண்மை நிலையை கண்முன்னே கொண்டு வரும் கவிதை வரிகள். அருமையான படங்கள் கவிதைகளுக்கு அழகூட்டுகின்றன.

பெயரில்லா சொன்னது…

போரின் கொடுமை பிறந்த மண்ணைத் தின்னும் கொடுமையென யுத்தம் எங்கள் அழகிய நகரங்களை ஆக்கிரமிக்கிறது. துயரோடு செய்திகளைப் பார்த்தபடி புலம்பெயர் நாடுகளில் நாங்கள்.

வாழ்த்துக்கள் தீபச்செல்வன் எனச்சொல்லி உங்கள் வலிமிகு படைப்பை வரையற முடியாதபடி காலம் உங்கள் கவிதைகளில் தன் முகம் பதித்திருக்கிறது.

- சாந்தி -

தமிழ்நதி சொன்னது…

தீபச்செல்வன்,

உங்கள் கவிதை வரிகளை 'குங்குமத்தில்' பார்த்தேன். டி.அருள் எழிலன் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது. வலியின் பதிவுதான் என்றாலும் வாழ்த்துக்கள்.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...