Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 30 ஏப்ரல், 2008

ஒரு கமரா ஒளித்துக்கொண்டிருக்கிறது.

எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------


குழந்தைகள் பூக்களை நிரப்பி
உன்னை வணங்கிச் செல்கிறார்கள்
தெயவம் என்ற பக்தியோடு
உன்மீது
சனங்கள் பாடி ஏற்றுகிறார்கள்
குருதி பிறண்ட
கமராவோடு இருக்கிறது உனது அறை.


சனங்கள் சனங்கள் பாடிய
எனது அன்புத்தோழனே
ஒரு நாள் நான் வருவேன்
சனங்களின்
கனவு நிரம்பிய நீயான கல்லறைக்கு.

சனங்களின் ஏக்கங்களை
அள்ளி நிரப்பி வரும்
உனது கமரா
களத்தில் தோளிலிருந்து
உதிர்ந்து விழுந்ததை
நான் நம்பாமலிருக்கிறேன்.

சனங்கள் துரத்தப்பட்ட கிராமத்தில்
ஒரு துப்பாக்கியோடும்
உனதான கமராவோடும்
நீ சமராடிய நிமிடங்களை
நான் நினைத்துப் பார்க்கிறேன்.

நஞ்சு நிரப்பிய
உனது சயனைட் குப்பியில்
பதுங்குகுழிச்சனங்களின்
கண்ணீரையும் கோபத்தையும்கூட
நிரப்பிவைத்திருந்தாய்
அது உனது கழுத்தில் தொங்கியபடியிருந்தது.

உனது ஒரு சூரியனின் முகத்தையும்
குழந்தையாய்
நெருங்கி வருகிற முகத்தையும்
உனது அறையில் நிரம்பியிருந்த
நமது வார்த்தைகளையும்
நான் எந்த களமுனையில் தேடுவேன்.

சீருடைகயையும்
துப்பாக்கியையும்
கமராவையும் இவைகளுடனான
உனது கடமையையும்
உனது அறையில் நான் தேடித்திரிகிறேன்
நாம் பருகிய தேனீர்க்கோப்பைகள்
அழுது கிடக்கிறது.

நீ களப்பலியானாய்
என்ற செய்தியை சொல்லிவிட்டு
ஒரு பறவை துடிக்கிறது
கனவில் நிரம்பிவிட்ட
கல்லறைகளில்
நான் உன்னை தேடியலைகிறேன்.

உனது கமராவிற்குள்
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
பதுங்குகுழிச்சனங்களின் அழுகை.

--------------------------------------------------------

மன்னார் களமுனையில் கார்த்திகை14 2007 இலங்கை இராணுவத்தினருடனான சமரில் எனது அன்புத்தோழன் கமராப் போராளி மேஜர் அன்பழகன் களப்பலியாகினான்.
-------------------------------------------------------------------

செவ்வாய், 22 ஏப்ரல், 2008

திருப்பலி:கருணாரட்ணம் அடிகளார்

எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------
இன்னும் பலிபீடங்களுக்காய்
நமது ஆடுகள்
அழைத்துச்செல்லப்படுகின்றன
அவர்களின்
அதிகாரம் நிரம்பிய
சிலுவைகளின் முன்னால்
சனங்கள் ஜெபித்தனர்.

போர் நடக்கும் தேசத்தில்
சிலுவைகளை
சுமந்து திரியும் சனங்களோடு
அடிகளார் போனார்
யேசுவோடு பல ஆயிரம்
சனங்கள்
இங்கு சிலுவையில்
அறையப்பட்டனர்.

சவப்பெட்டிகள் நிரம்பிய
தேவாலயத்தில்
அவரின் ஜெபபிரசங்கம்
அதிகாரத்தின் முகத்தை
குத்தியபடியிருந்தது.

கனிகள் இல்லாத தேசத்தில்
தோட்டம்
கருகிக் கிடந்தது
சருகுகளின் மத்தியில்
அடிகளார் மரக்கன்றுகளுக்காய்
விதைகளை தேடினார்.

குழந்தைகள் வந்தனர்.

யுத்தத்தில் பதுங்கியிருந்த
சனங்களின் மத்தியில்
அடிகளார் உயிர்களை
தேடிப் பொறுக்கினார்
நசிந்து உடைந்து சிதறிய
சிலுவைகளின் கீழாய்
சனங்களின்
அழுகை கிடக்கக்கண்டார்.

அழிந்துபோன தேவாலயத்தில்
தொங்கிய
சிலுவையுடனிருந்தார்
சனங்கள் திருப்பலியாகினர்.

சிலுவை பொறிக்கப்பட்ட
வண்டியில்
நிரம்பியிருந்தது பிரார்த்தனைகள்.

அடிகளாரும் அவரது சிலுவையும்
சனங்களின் தெருவில்
பலியாகி கிடக்கக் கண்டேன்..
20.04.2008
-------------------------------------------------------------------------------
20.04.2008 மல்லாவி வவுனிக்குளத்தில் இலங்கை இராணுவம் ஆழஊடுறுவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் மனித உரிமைப் பணியாளர்( வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலக பணிப்பாளர்) அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் பலிகொள்ளப்பட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------

திங்கள், 21 ஏப்ரல், 2008

கிணத்தினுள் இறங்கிய கிராமம்


கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------
எனது கிராமம் இப்பொழுது
கிணத்தினுள்
இறங்கியிருக்கிறது.

தவளைகள் தரித்திருக்கும்
பொந்துகளினுள்
ஒளிந்திருக்கும் அம்மாவே
உன்னைப் போன்ற
நமது கனவுகள் நிரம்பிய
பைகள்
மாமரத்தில் தொங்கியபடியிருக்கிறது.

நீயும் நானும்
நமது சனங்களைப்போலவே
இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.

காட்டில் பதுங்கியிருக்கும்
சூரியன்
பாலைமரங்களையும்
வீர மரங்களையும் விலத்தியபடி
புழுதி உதிர
நமது கிராமம் திரும்பிவிடும்.

சூரியனை காணாத
இரவோடிக்கிறது நமது நாடு.

கிணத்தினுள் நிரம்பிய
உனது வியர்வை வெளியில் வழிகிறது.

*பள்ளிப் பேருந்துமீது
ஒரு கிளைமோர் வெடிக்கிறது
பிணங்களாய் பள்ளி மாணவர்கள்
அடுக்கப்பட்டிருந்தார்கள்
புத்தக மேசைகளில்.

குழந்தை யேசுவை தூக்கி வைத்திருக்கும்
மாதாவின்
மடு தேவாலயத்தின்மீது
விமானங்கள் பறந்தடிக்கிறது.

**எனக்கு இளநீர் பருகத்தந்த
தோழன் ஒருவனின்
தலையை
விமானம் கடித்தெறிந்தது
அவனது தலை
இரத்தினபுரத்தில் கிடந்தெடுக்கப்பட்டது..


***கிராஞ்சியில் குழந்தைகளின்
கைகள் பிடுங்கி எறியப்பட்டன
கையில் கட்டியிருந்த
பாசி மணிமாலைகளும்
கிழிந்த பாய்களும் வலைகளும்
தென்னை மரங்களும்
மணல் தரையில் குருதியாய் கிடந்நது.
ரஷ்யா இன்னும் வேகமான
விமானங்களை
இந்த தலைகளின் மேலால் பறக்கவிடுகிறது.

கிணத்தினுள் தண்ணீர் ஊறுகிறது.

கருணாநிதியின்
கவிதைகளை கேட்க முடியாமலும்
ஜெயலலிதாவின் கூச்சல்களை
கேட்க முடியாமலும்
தவளைகள் கத்துகின்றன.

****கடைசியாய் இருந்த
முறிகண்டியின்
கச்சான்கடைகளாலான
வழி இறங்கு இடமும்
தகர்ந்து கிடக்கிறது
அம்மா உனது நேத்திகளும்
உடைந்த தேங்காய்களும்
தும்பிக்கை உடைந்த
பிள்ளையாரோடு.

கிராமம் கிணத்துக்குள் இறங்கிவிட
இராணுவத்தின்
கவசவாகனங்களும் ராங்கிகளும்
சேற்று நிலத்தில் புதைகின்றன
வீடு கடலில் இறங்கித் திரிகிறது.

தங்கச்சி கனவுகண்டு துடித்தெழும்பி அழுகிறாள்.

எனினும் நீயும் நானும்
நமது சனங்களைப்போலவே
இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.
-----------------------------------------------------------------------------

*29.01.2008 செவ்வாய்க்கிழமை
மன்னார் மடுவில் இலங்கை இராணுவம் பள்ளிப் பேரூந்துமீது ஆழஊடுறுவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 பள்ளி மாணவர்கள் உட்பட 20பேர் பலியாகியுள்ளனர்.

**02.11.2007 அன்று நடைபெற்ற விமானத்தாக்குதலில் எனது தோழன் நிர்மலசிங்கன் பலியாகினான்.

***பெப்ருவரி 22 பூநகரி கிராஞ்சியில் நடத்தப்பட் விமானத்தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 8 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்.

****16.11.2007 நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் முறிகண்டியில் உள்ள மீன்பிடி படகு உற்பத்தி நிறுவனம் அழிந்தது. இது ஏ-9 வீதியில் பேருந்து தரித்து நிற்கும் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலிருக்கிறது.
--------------------------------------------------------------------

சனி, 5 ஏப்ரல், 2008

மாதா வெளியேற மறுத்தாள்






எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------

சனங்கள் மாதாவையும்
குழந்தை யேசுவையும்
கூட்டிச் சென்றிருக்கலாம்.

யேசுவின் குருதியால்
எழுதப்பட்ட பைபிள்களை
கிளைமோரில் சிதறிய
மாணவர்களின்
குருதி பிறண்ட
வெள்ளைச் சீருடைகளில்
ஆயர்கள்
கட்டி எடுத்துப்போனார்கள்.

வத்திக்கான் எங்கேயிருக்கிறது.

பதுங்குகுழியில் மாதா ஒளிந்திருந்தாள்
வெளியில் போன அருட்சகோதரிகள்
குருதி பிறண்ட
திரு ஆடைகளோடு விழுந்தனர் பதுங்குகுழிக்குள்.

மடு மாதாவின் தேவாலயம்மீது
எண்ணிக்கையற்ற
எறிகனைகள் நுழைந்தன
குழந்தை யேசுவின் அழுகை
வீறிட்டு கேட்க
ஆயர்கள் வளாகத்தை எட்டிப்பார்த்தனர்.

சிலுவை பொறிக்கப்பட்ட
எறிகனைகளும்
பிறை பொறிக்கப்பட்ட்
எறிகனைகளும்
சூலம் பொறிக்பப்பட்ட
எறிகனைகளும்
புத்தரின் மூடிய கண்களில்
சுழறும் தர்மச்சக்கரத்திலிருக்கும்
படையினரிடமிருந்து
வந்து விழுந்து கொண்டிருந்தன.

வளாகத்தை விட்டு
வெளியை விமானம் உழுதடித்தபோது
சனங்கள் மாதாவை குழந்தையோடு
தனியே விட்டுச் சென்றனர்.

பாப்பரசர் வத்திக்கானில்
பைபிளை திறந்தபோது
குருதி ஒழுகியது
அமெரிக்காவின் முன்னால்
குருதி காயாத
சிலுவையோடு நின்றார் யேசு.

மிஷன் பாடசாலைகளுக்கு சென்ற
பிள்ளைகளையும்
சவப்பெட்டியில் கண்டோம்
வண்ணத்துப்பூச்சி திரிகிற
பற்றைகளில்
பதுங்கியிருந்தன கிளைமோர்கள்
வருகிற பிள்ளைகளை பார்த்தபடி
யேசுவை தூக்கிச் செல்ல மாதா அஞ்சினாள்.

பாப்பரசர் மன்றாடவில்லை
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
ஜெபத்தில் திடுக்கிட்டனர்.

சனங்களோடிருந்த மாதாவுக்கும்
குழந்தைக்கும் எதிராக
அரசுகள் யுத்தத்தை புரிந்தன
பைபிள்களாலும் ஜெபமாலைகளாலும்
பதுங்குகுழி நிரம்பியிருந்தது.

இனி இங்கிருக்கமுடியாது
என்று
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
மாதாவுக்கு எடுத்துக்கூறினர்
மாதா மறுத்தாள்
குழந்தை யேசுவின் அழுகையை துடைத்தபடி.

சனங்கள் விட்டுப்போன
மாதாவையும் குழந்தையையும்
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
கட்டாயப்படுத்தி
நேற்றோடு கூட்டிச்சென்றனர்
மடு தேவாலய வளாகத்தை விட்டு..

--------------------------------------------

03.04.2008 இரவு 9.30
---------------------------------------------------------------------------------
03.04.2008 6.30 மணிக்கு அன்று மடு மாதா தேவாலய திருச்சொரூபம் ஆயர்களால் வளாகத்தை விட்டு தூக்கிச்செல்லப்பட்டது என்று ஆயர்கள் பி.பி.சிக்கு தெரிவித்தனர்.மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றுவதற்காக கடந்த ஒரு வருடமாக இலங்கை அரசாங்கத்தின் படைகள் கடும் போர் புரிந்து வருகின்றார்கள்.சகல இன மக்களும் வணங்கும் மடு திருத்தல பகுதி பெரும் போர் பூமியாக காணப்படுகிறது. அப்பகுதி மீதான கடும் தாக்குதல்களால் ஏற்கனவே மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று மடுமாதாவின் திருச்சொரூபமும் அங்கிருந்து வெளியெறியது.
------------------------------------------------------------------------------------

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...