காட்சிக் குறிப்பு
_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
இந்த நகரத்தில் மட்டும்
ஏதோ ஒரு விதத்தில்
மனிதர்கள
தீர்நதுகொண்டிருந்தார்கள்
தங்கள்பிள்ளைகளை
மரணங்களுக்கு
ஒப்புக்கொடுத்துவிட்டு
புதைந்துபோன தாய்மார்களின்
கண்ணீரில்
எரிந்தநகரம்
சூடேரிக்கொண்டிருந்தது.
கல்லறைகளும்
தகர்க்கப்பட்டு வரும்
அகண்டகாலடியில்
அழிவுகள் முளைவிட்டன
மரணங்களுக்கும்
மரணமளித்து
சுடலைகளும் அழக்கப்பட்டு
சுடலையாயின.
வீடுகள் சிதைந்து
பயணங்களின்
அடையாளமும் அர்த்தமும்
கிடையாது
சறுக்கி விழுந்துகிடந்தன.
குழந்தைகளின் எலும்புக்கூட்டின்
சாம்பலில் மலர்ந்த மலர்களில்
வெள்ளைக்காகங்கள் வந்து
குந்திக் கொண்டன.
எண்ணிக்கையிலடங்காத
தனிமையில்
நகரம் துடித்துக்கொண்டிருந்தது
கணக்கெடுக்கப்படாத
அழிவின் சீருடைகளை
அணிந்த எண்ணற்றவர்கள்
எரிந்து முடிந்த நகரத்தை
படையெடுத்து
வந்து சேர்ந்தனர்.
பிய்ந்து அழிந்துபோன
கூடுகளை
தாங்கிய பட்டமரங்களின்
நிழலில்
எரிந்து கருகிய
மனிதர்களின் சாம்பல்கள்
அடுக்கப்பட்டிருந்தன.
சிறகுகள் கிழிந்து
தொங்கிக்கொண்டிருக்கவும்
தீர்ந்துவிடவும்
பறவைக்கூட்டங்களில் எஞ்சியவை
நகரின் மரங்களை இழந்து
எங்கோ?
தொலைந்துகொண்டிருந்தன..
.............................................................
1 day ago
0 கருத்துகள்:
Post a Comment