Wednesday, September 5, 2007

முட்களுக்காக முளைத்திருக்கும் கால்கள்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

வழியில் செறிவாக கிடக்கிறது
முட்பொறிகள்
தூரம் சுருங்கி சுருங்கி
நீள்கின்றன
பயணங்களின் குறிப்புகளை
யாரும் மீள வாசிப்பதாயில்லை.
நான் கால்களாகவே
தனித்திருக்கிறேன்.

வண்டிகளில் எந்த புரிதலுமில்லை.
சக்கரங்களின் வட்டம்
சதுரமாகிப்போக
நகர்வுகள் முடங்கிவிடுகின்றன
யாருடைய தோல்களிற்கும்
எனது கைகள் எட்டவில்லை.

மாலை நேரங்கள்
கொலை செய்யப்பட
எனது காலைகளில்
சூரியன்கள் உதிக்காமல்
வழி நீண்டு செல்கிறது.

ஏதோ ஒன்று வெற்றிடமாயிருக்கிறது
பகிர வேண்டிய விடங்கள்
நிறைய இருக்க
விருந்தில்லங்களுக்கு தூரமாகவே
வண்டிகள் திரும்பிவிடுகின்றன.

எந்த வழியும் முட்களின்றி இருப்பதில்லை.
எல்லாமுகங்களிலும்
ஒரு நாள் யதார்த்தம் வெளிக்கும்.
எனது கால்கள்
முட்களுக்காகவே முளைத்திருக்கலாம்.
_____________________________________

0 கருத்துகள்: