Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 22 செப்டம்பர், 2007

விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
------------------------------------------------------------------

இது வாகரை இடப்பெயர்வு

-----------------------------------------------------------------------------
தண்ணீரில்லாத
வரண்ட காடுகளில்
இறப்பர் கூடாரங்களில்
புதிய குடியிருப்புகள்
எழும்பியிருந்தன.

மிகவும் ஆழமான
குழாய்க்கிணறுகளில்
தாகத்தைச் சொல்லிச்சொல்லி
பெண்களும் சிறுவர்களும்
தண்ணீரை மீட்கிறார்கள்.

பொருட்கள் எதுவுமில்லாத
கொட்டில் கடைகளில்
சிறுசிறு போத்தல்களில்
காய்ந்த இனிப்புகள்
விற்பனையற்றுக்கிடந்தன.

தொழில் இல்லாமல்
உழைக்க வேண்டிய ஆண்கள்
தாடி வளர்ந்து முகத்தை மறைக்க
மூலைகளில்
சோர்ந்து கிடந்தனர்

பிள்ளைகள் பசியில்
அழுதுபடி இருந்தார்கள்
நிறைய கூடாரங்களில்
அடுப்பே இல்லாதிருந்தன.

வாழ்விடங்களும் தொழில்களும்
விடுவிற்பதற்கான
நடவடிக்கையில்
பறிக்கப்பட்டு
இவர்கள் துரத்தப்பட்டிருந்தனர்

அவைக்குள்ளும்
புழுதி பிரண்ட
வெள்ளைச் சீருடைகளுடன்
கிழிந்த புத்தகங்களை
சுமந்து கொண்டு
பிள்ளைகள்
மர நிழலில் ஒதுங்கினர்.

அநாதைகளாக்கப்பட்டவர்கள்
அங்கவீனமாக்கப்பட்டவர்கள்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
புழுதியில் உருண்டு
புலம்பிக் கொண்டிருந்தனர்

இராணுவ வண்டிகள்
உறுமிக் கொண்டிருந்தன.
ஊர்களும் மனிதர்களும்
இராணுவ அணிகளில்
புதைக்கப்பட்டு வர
அழிவின் சீருடையில்
இன்னும் நிலங்கள்
விடுவிக்கப்படுமென்று
அறிவித்து
இலங்கைத்தேசியம்
சிரித்தபடி வந்து கொண்டிருந்தது.

இந்தச்சுமைகளை
தலையில் சுமந்து கொண்டு
இன்னும் எவ்வளவு தூரம்
இடம் பெயர்ந்து ஓடுவது.
--------------------------------------------

வெளிக்குநகரும் மரங்கள்

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________

எந்த மரங்களும் எனது கையில்லை.
நிழலுக்கான அதிகாரங்கள்
பறிபோன நிலையில்
தோப்பைவிட்டு
நான் துரத்தப்பட்டுவிட்டேன்.
எனினும் அந்த மரங்களிலேயே
எனது இருப்பும் ஆவலும்
மொய்த்துக்கொண்டிருக்கின்றது.

நான் எதுவும் செய்யாதிருந்தேன்
நிழலில்லாத
வெம்மை வெளிகளில் காலை
புதைத்தபடி நிற்கின்றேன்.

தூரத்திலிருந்து தோப்பைப் பார்த்து
மனதாறிவிட்டோ
நிழலை ரசித்துவிட்டோ
வாழமுடியாதிருக்கிறது।

ஒவ்வொரு இரவிலும்
ஒவ்வொரு மரமாக
குறைந்துகொண்டு வருகிறது।
எனது மரங்களின் உயிர் குடிக்கப்பட்டு
கட்டைகளாகத் தகனம் செய்யப்படுகின்றன.

நான் எந்த மரங்களையும்
நாட்டாதவன்
அந்த மரங்களுக்கும்
நீர் ஊற்றாதவன்

எனக்காக வழங்கப்பட்ட மரங்களே
பறிபோய் அழிகிறபொழுது
கோடரிகளைத் தடுக்க இயலாதவன்.
அப்படியாயின் எனக்கு
வெம்மை தானே பரிசளிக்கப்படும்.
நிழல்தீர்ந்த எரிந்த காட்டின்
தணலில்தான்
நடக்கவிடப்படுவேன்.

நாளைக்கு எனது பிள்ளைகள்
நிழலுக்காகத் துடிக்கிறபொழுது
நான் எந்தத்தோப்பின் வாசலில் நிற்பேன்
யாரிடம் நிழலுக்குக் கையேந்துவேன்.
என்னால் அவர்கள் அலையப்போகிறார்கள்
அவர்களின் தலை
நிழல் இன்றி கருகிற பொழுது
இந்த வெம்மையையா வைத்து
குடைபிடிக்கப்போகின்றேன்

கோடரிகளை மீறி
என்னைக் கடந்து
மரங்கள் வெளிக்கு நகர்கின்றன.
---------------------------------------------------------

வியாழன், 20 செப்டம்பர், 2007

நமது நிறம்...

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________

எல்லோரும் நமக்கென்று
இருக்கிற நிறங்களை
காத்துக்கொள்வோம்.

எனது வீட்டின்முற்றத்தில்
உருண்டு கிடக்கையில்
எனது நிறத்தால் மகிழ்கிறேன்
எனக்கு எனதுநிறம்
மிக முக்கியமானது
எதற்காகவும் எனது நிறத்தை
இழக்க தயாரில்லை.

எல்லோரும் அவரவர்
நிறங்களை
தங்கள் சிறந்தவண்டிகளில்
ஏற்றிப்போகிறார்கள்
நான் எனது நிறத்தை
அள்ளிச் சுமந்தபடி
கால்நடையாக பயணிக்கிறேன்.

யாருடைய நிறங்களையும்
அழிப்பதற்கு
நான் புறப்பட்டதில்லை
எனது நிறத்திற்காக
அழுதிருக்கிறேன்
விழித்து எழுந்திருக்கிறேன்.

எனது நிறம் மறைக்கப்படுவதான
பிரகடனங்களும்
வலிந்த தலையீடுகளும்
எனது நிறம்பற்றிய
வெள்ளை சிந்தனைகளை
எனது நிறத்தின் ஆயுளை
துரத்தி சிலகோடுகளாக திரிந்தன.

நிறம் பற்றிய வாதங்கள்
முற்றியநாளில்
தெருவொன்றில் சிதைந்துகிடந்த
எனது நிறத்தின் ஆதியை
தூக்கி சுகப்படுத்த
வண்டியற்று திரிந்த
வலியின் சுமையில்
நிறம் வெறிகொள்ளத்தொடங்கியது.

நிறங்களின் மிகுந்த வறுமையோடு
திரிகிற வண்ணத்துப்பூச்சிகளாலும்
மான்களாலும்
மயில்களாலும்
நிரம்பிய வெளுத்த தோட்டத்தில்
நிறம் பற்றிய
புதிய நிமிர்வு நெருப்பில் பிறந்தது.

நிறத்தை வென்று
நமக்கென்ற
நிறத்துடன் ஒளிர்கையில்
மீண்டும் நமது வெல்லப்பட்ட
நிறம் தேடப்படுகின்றுது
நிறத்தை பூசியபடி
நிறத்தை உடுத்தியபடி
நிறத்தை அள்ளிச்சாப்பிட்டபடி
போகமுடியாமல் இருக்கிறோம்.

நாம் நமது நிறத்தை
விடுத்து
இருளாக நடமாடமுடியாது
நமக்கென்ற
நிறத்தை அணிந்தபடியே
நமது அடையாளத்தின்
ஒளியிலே
தெருக்களில் நடமாடுவோம்।
---------------------------------------------------

முகமில்லாத மனிதன்

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________

முகமில்லாத மனிதனின்
புன்னகை
அந்த இரவுக்குள்
தொலைந்துகொண்டிருந்தது.

இது வேறுஒரு செயற்கை இரவு.

முதலில் இரவை சிறைவைத்தார்கள்
பிறகு இரவாய் நாளை
சிறைவைத்தார்கள்
பிறகு நாட்டை சிறைவைத்தார்கள்
இந்த செயற்கை இரவு
காலத்தை படர்ந்து
விழுங்கிக்கொண்டிருந்தது.

இனந்தெரியாத துப்பாக்கிகளும்
வெள்ளை வான்களும்
இராணுவ முகாம்களும்
மனிதர்களை இந்த இரவில்
தேடித்திரிய தொடங்கியது.

இரவில் முகங்கள் புதைந்தன.

மரணத்தை ஊதி பெருப்பித்து
அழுகைகளை நிரப்பி
இரவால் நாடு செய்தார்கள்.

இரவின் தெருவில்
நிதானமற்று எல்லோரும்
அலையத்தொடங்கினோம்
அடங்கிப்போய்
இருட்டில் அடைந்தோம்.

இரவு இன்னும் ஆக்கிரமித்தது.

இருட்டில் எழுதி
இருட்டில் கேட்டு
இருட்டில் திருகி
இருட்டாகி போகிறது
முகங்களும் புன்னகையும்.

இரவுக்காக ஒருவன்
அழுதுகொண்டிருந்தான்
இரவும் அழுதுகொண்டிருந்தது.

வெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
01
நான் மீட்டும் இசை
நிலவு தென்னைமரம்
மணல் கும்பி இவைகள்
நிரம்பிய நகரத்தில்
ஒலித்துக்கொண்டிருக்கும்
காலத்தை நீ வெளியிட
மறுத்த பிறகு
எனது புல்லாங்குழலின் இசை
அடந்த இரவில்
தடுமாறிப்போகிறது.

02
வெளிகள் நோக்கிய
தருணம் ஒன்றில்
நானும் தோழர்களும்
தயராகிறோம்.

03
ஆனாலும் நான் இனி
உன் நிழல் தேடி வரமாட்டேன்
உனது இசை தீர்ந்த
நிழலில்
பயங்கரமும் துரோகமும்
நிரம்பி வழிகின்றது.
அமைதியின் வேரை
உன்னில் தொலைத்த பிறகு தான்
அசுரநிழலில்
நீ இசைத்த பாடலின்
அர்த்தம் உணர்ந்தேன்.
முகமில்லாத
இரவுகளில் தான்
உனது பாடலை கேட்டு
திரியமுடிகின்றது।

04
நீயும் நானும்
ஆதியில் சந்தித்துக் கொண்ட
தெருக்களெல்லாம்
விகாரமுற்று
தொலைந்து விட்டன.
நாம் சந்தித்த
சருகு வெளி கதைகளையெல்லாம்
புதைத்து விட்டு
ஏத்தனை முறை உயிர்த்தெழுந்தேன்
ஓவ்வொரு தருணத்திலும்
ஊன்னை புதிய குணமாய்
எதிர்பார்த்தேன்
நீ மாறவே இல்லை
பயங்கத்திலும் துரோகத்திலும்

05
இப்போது இந்த நகரம்
புதிதாக கட்டப்பட்டது
நாம் முன்பு கூடிக்கொண்ட
நகரங்களைப்போல இது இல்லை
உனது நிழலை
எதிர்பார்க்க சந்தர்ப்பம் இல்லை
புல்லாங்குழலின்
இசையின் சூழல்
நகரத்தின் அடியில் கிடக்கின்றது
நீயும் நானும்
புதைந்த அந்த அழகிய
இசையின் சூழலை
மீட்டெடுக்கவும் முடியும்
அதற்காக நீ சிறகுகளோடு
வருவாய் என்றே
ஒவ்வொரு தருணத்திலும்
நான் எதிர்பார்த்திருந்தேன்
ஆனால் அந்த
இடைவெளியில்
எனக்கு முளைத்த சிறகுகளை
கத்தரிக்கவே
உனது பறப்பும் பயணமும்
நிகழ்ந்தது.

06
தனி ஒருவனாய்
எனது வாக்கு மூலம்
ஒலித்துக்கொண்டு இருக்கின்றது
நீ எப்பொழுதும் போலவே
மௌனமாய் இருக்கின்றாய்
உனது மௌனத்தை விட
அதிக பயங்கரம் எதுவுமில்லை
அதிக அசுரம் எதுவுமில்லை
உனது மௌனத்தை
உலுப்பி புன்னகைத்த
ஒவ்வொரு தருணத்திலும்
நான் எனது
இசையின் சூழல் வாழும்
வனங்களை
இழந்து வந்தேன்
பயங்கரத்தை
அபிவிருத்தி செய்யும்
அசுரத்தை பகிர்ந்தளிக்கும்
உனது சமரச புன்னகையை
இப்போது எனது நகரம்
கிறுக்கி வைத்திருக்கின்றது.


நீ நோக்கிய பயணத்தில்
அதிகம் ஆக்கிரமிக்க விரும்புது
எனது நகரத்தை தானே
ஒரு முறை இந்த நகரத்தை
நீ வேரோடு பிடுங்கி எறிந்தாய்
பட்டுப்போன மரமாயும்
புதைந்த நகரமாயும்
நீ ஆக்கிய ஆக்கிரமிப்பு காலம்
புதைந்த மீண்டும்மொரு நகரம்
இனி நிச்சயம் ஏமாற மாட்டாது
உனது கால்களை
திருகும் திறன் என்னிடம் உள்ளது.

07
எனக்குப் பிடித்த
பாதையின் அர்த்தம் பற்றி
கலந்துரையாடிய
எத்தனை நிலவின் இரவுகளை
நீ கொலை செய்திருக்கிறாய்
உனக்காக நான் செய்துவைத்த
எத்தனை சிறகுகளை
நீ புறக்கணித்திருக்கிறாய்
நான் கட்டிய
எத்தனை வீடுகளை
நீ குழப்பி வந்திருக்கிறாய்.
நீ அம்புகளை செய்து
அறிவித்த ஒவ்வொரு தருணத்தையும்
அன்பின் தருணமாக
நான் நம்பினேன்
நீயும் நானும் கிடக்கும்
சிறைகளுக்காக வேண்டியிருக்கிறேன்
எல்லை தாண்டி போவதற்குள்
நீ எத்தனை தடவை
உன் அம்புகளால்
என்னை கிழித்திருக்கிறாய்
வனங்களை அழித்திருக்கிறாய்
மீண்டும் மீண்டும்
உன்னால் சிறைக்குள்ளே
அசுர வெளிகளை
ஏற்படுத்தவே முடிகிறது.
மீண்டும் நான்உன்னிடமிருந்து
உர்த்தெழுந்திருக்கிறேன்
நான் இனி என்
புல்லாங்குழலின் இசையை
புறக்கணிக்கலாம்
உனது நிழலை
புறக்கணிக்கலாம்
இனி நீ எந்த அம்புகளையும்
எடுத்துவர தேவையில்லை
எனக்கென்று
நல்ல வனமும் நகரமும்
என்னிடம் இருக்கிறது
நீ பறப்பதற்கான
வெளிகளும் என்னிடம் இருக்கிறது
உனக்கு எந்த சிறகுகள்
பொருத்தம்
எந்த வெளிகள் பொருத்தம்
என்பதை நான்
உணர்ந்திருக்கிறேன்;.

08
ஒரு பொழுதும் நாம்
சிறைகளுக்குள்
சிறகுகளை பரிமாற முடியாது
பறக்கவும் முடியாது
வலிகளால் தைத்த
சிறகுகளும்
அசுரத்தால் தைத்த
சிறகுகளும்
உச்சிக்கொண்டிருக்கும்
நிழலில் எனது வனங்கள்
கருகுவதற்கு அனுமதியில்லை.

கருகிய வனங்களுக்குள்
கருகிப்போன
புல்லாங்குழலை மீட்டி
கருகிப்போன
இசையின் போதையில்
இரவு தடுமாறவும் முடியாது
எனக்குள்ளிருந்து
வெளிவரும் எல்லா இசையையும்
வி~மாக வேண்டுமென்று
நீ விரும்புகிறாய்
எல்லோரும் என்னை
புறக்கணிக்கும்
ஏதிரொலியை நீ விடுகிறாய்

09
முன்பெல்லாம்
நான் குழலில்வார்க்கும்
இசையில்
என் வனங்கள் செழிக்கும்
அமுதைப்போல காற்றில் இசை பரவி
நகரமே இனித்தது
எப்போது நீ என் நகருக்குள்
அனுமதியின்றி நுழைந்தாயோ
அப்போதே எல்லாம்
இயல்பு குலைந்தன
நீ எப்போது
உன் அசுரத்தலையை
எனது நகரில் விழுத்தினாயோ
அப்போதே
எனது நிழல் கருகத் தொடங்கியது.
உனது அசுரம் பிரண்ட
முகத்தில்
சாவின் புன்னகையை
மன்னித்து
வரவேற்றுப் பிழைத்த நிமிடங்கள்
ஒவ்வொன்றிலும்
என் அமைதியின் வேரை
நீ பறித்தாய்.
எத்தனை மன்றுகளில்
கால் வலிக்கநடந்து
குரல் வலிக்க பேசியிருப்பேன்
நீ சிலுவை பற்றி
பேசிய பொழுதெல்லாம்
மன்னித்திருக்கிறேன்
நீண்டு வலிந்த முரனை
வரணளித்து
ஒவ்வொரு கண்ணீரின்
தருணத்திலும்
உனது மாளிகை
சிரித்துக்கொண்டிருந்தது
நான் கண்ணீரைப்பற்றியும்
குருதியைப்பற்றியும்
வியர்ந்த ஒவ்வொரு சொல்லிலும்
நீ ஏளனத்தைப் பரிசளித்தாய்.

10
ஆதியிலிருந்து உன்னால்
திருகப்பட்ட
எனது அமைதியின் வேரை
உன்னிடமிருந்து
எடுத்துக்கொள்ளப் போகிறேன்
நீயும் நானும்
நமக்கென்று இருக்கின்ற
நகரங்களில் திரிவோம்
வனங்களை ஆளுவோம்.
நெருப்பில் எனது முகமும்
சூழ்ச்சியில்
உனது முகமும்
முரண்பட்டுக்கிடக்கிறது
எரிந்து கொண்டிருக்கும்
நெடுந் துயரில்
அழிக்கப்பட்ட கிராமங்களின்
எண்ணிக்கையில்
துயரங்களின் அடுக்கில்
உனது பெயரை இனி
நிறுத்தி
புன்னகைக்க முடியாது.
நீ அழிவின் சிறையை
உன்னை சூழ
வார்க்கிறாய்
நான் என்னை சூழ்ந்திருக்கும்
துயரின் சிறையை
உடைக்கப் போகிறேன்
நம்மை தாண்டிய வெளிகளில்
வாழும் இசையை
தழுவப் போகிறேன்
தோல்வியின் பிறகேனும்
நீ பறப்பதற்கு முயற்சி செய்.

11
எனக்கான நகரம்
எனக்கான சிறகுகள்
எனக்கான வனங்கள்
எனக்கான சொற்கள்
எல்லாம்
உன்னிடமிருந்து மீட்கப்பட்ட
புதிய தருணத்தில்
வெளிகளால் கட்டப்பட்டிருக்கும்
வீட்டில் இனி
நானும் என் தோழர்களும்
வாழுவோம்
பறக்கத்தொடங்கியிருக்கிறோம்.
-----------------------------------------

புதன், 19 செப்டம்பர், 2007

பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்

______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

பாட்டியின் கதையும்
குழந்தைகளின் உலகமும்
-----------------------------------------------------

வானம் இடிந்து விழுந்திருந்தது
பாட்டியின் முகத்தில்
பழைய கதைகள்
உறைந்திருக்க
புதிய உலகம் பற்றியகதை
தெரியத்தொடங்கியிருந்தது
குழந்தைகள் கதைக்காக
பாட்டியை சூழ்ந்தார்கள்.

பழைய கதைகளின்
ஐதீகமும் மர்மமும்
குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது
ஐதீகமும் மர்மமுமுடைய
கனவுலகின் கதையில்
தீவிரம் அற்றுப்போயிருந்தது.
உலகம் வேறொன்றாக இருந்தது.
குழந்தைகள் பாட்டியிடம்
ஜதார்த்தமும்
நடைமுறைச்சாத்தியமுமுடைய
கதையை எதிர்பார்த்தார்கள்.

நிலவு கலவரத்தில்
சிக்கியிருந்தது
முற்றங்கள் பாதிக்கப்பட்டு
சுருங்கிக்கொண்டிருந்தன.
சதையும் குருதியுமுடைய
மண்டைஓடுகளின் மத்தியில்
குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்
குழம்பியிருந்தன.

பாட்டி புதிய உலகம்
பற்றிய கதையை
அளக்கத்தொடங்கினாள்.

மண்டை ஓடுகளின் குவியல்கள்
நிரம்பியிராத உலகம்
உருவாகப் போகிறது.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது.

சொற்களில் குருதியின்
வாசனை வீசப்போவதில்லை
பறவைகள் மீண்டும் தங்கள்
சங்கீதங்களை இசைக்கும்
தெருக்களில் சூழ்ச்சி இருக்காது
மரணங்கள் பற்றியும்
சவப்பெட்டிகள் பற்றியும்
நம்மில் யாரும் அறியாதிருப்போம்.
வானம் மனிதாபிமானத்தில்
வெளித்திருக்கும் விழிகள்
எந்தக் காயங்களுமின்றி திறந்திருக்கும்
மிகப் பசுமையானகாட்சிகளால்
அந்த உலகம் நிரம்பியிருக்கும்

ஜதார்த்தமுடைய கதையை
கூறியதாகப் பாட்டி
திருப்திப்பட்டாள்
பாட்டியின் இருப்பில்
நிம்மதியிருந்தது.
கதையில் நம்பகம் இருப்பதாக
குழந்தைகள் உணர்ந்தனர்.

குழந்தைகளின் விழிகளில்
அச்சம் நீங்கின
பாட்டியின் வார்த்தையின்
ஆர்வம் குழந்தைகளை
குதூகலிக்கச் செய்தது.

குழந்தைகளின் முகங்களில்
புதிய உலகம்
நிகழத்தொடங்கியது.
_________________________

பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
வானம் இடிந்து விழுந்திருந்தது
பாட்டியின் முகத்தில்
பழைய கதைகள்
உறைந்திருக்க
புதிய உலகம் பற்றியகதை
தெரியத்தொடங்கியிருந்தது
குழந்தைகள் கதைக்காக
பாட்டியை சூழ்ந்தார்கள்.

பழைய கதைகளின்
ஐதீகமும் மர்மமும்
குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது
ஐதீகமும் மர்மமுமுடைய
கனவுலகின் கதையில்
தீவிரம் அற்றுப்போயிருந்தது.
உலகம் வேறொன்றாக இருந்தது.
குழந்தைகள் பாட்டியிடம்
ஜதார்த்தமும்
நடைமுறைச்சாத்தியமுமுடைய
கதையை எதிர்பார்த்தார்கள்.

நிலவு கலவரத்தில்
சிக்கியிருந்தது
முற்றங்கள் பாதிக்கப்பட்டு
சுருங்கிக்கொண்டிருந்தன.
சதையும் குருதியுமுடைய
மண்டைஓடுகளின் மத்தியில்
குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்
குழம்பியிருந்தன.

பாட்டி புதிய உலகம்
பற்றிய கதையை
அளக்கத்தொடங்கினாள்.

மண்டை ஓடுகளின் குவியல்கள்
நிரம்பியிராத உலகம்
உருவாகப் போகிறது.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது.

சொற்களில் குருதியின்
வாசனை வீசப்போவதில்லை
பறவைகள் மீண்டும் தங்கள்
சங்கீதங்களை இசைக்கும்
தெருக்களில் சூழ்ச்சி இருக்காது
மரணங்கள் பற்றியும்
சவப்பெட்டிகள் பற்றியும்
நம்மில் யாரும் அறியாதிருப்போம்.
வானம் மனிதாபிமானத்தில்
வெளித்திருக்கும் விழிகள்
எந்தக் காயங்களுமின்றி திறந்திருக்கும்
மிகப் பசுமையானகாட்சிகளால்
அந்த உலகம் நிரம்பியிருக்கும்

ஜதார்த்தமுடைய கதையை
கூறியதாகப் பாட்டி
திருப்திப்பட்டாள்
பாட்டியின் இருப்பில்
நிம்மதியிருந்தது.
கதையில் நம்பகம் இருப்பதாக
குழந்தைகள் உணர்ந்தனர்.

குழந்தைகளின் விழிகளில்
அச்சம் நீங்கின
பாட்டியின் வார்த்தையின்
ஆர்வம் குழந்தைகளை
குதூகலிக்கச் செய்தது.

குழந்தைகளின் முகங்களில்
புதிய உலகம்
நிகழத்தொடங்கியது.
_______________________

புதன், 5 செப்டம்பர், 2007

கிளிநொச்சி

______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

01

பிரகாசிற்கு இப்பொழுது
பியரில் நாட்டமில்லை
முன்பு நாம்
பியர் குடிப்பதில்லை
சமாதான காலத்தில்தான்
இங்கு பியர்கள்
கொண்டுவரப்பட்டன.
அப்போதுதான்
நானும் பிரகாசும்
பியர் குடிக்கப்பழகினோம்.

இப்பொழுது இங்கு
பியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
முன்பு கொண்டுவரப்பட்ட
பியர் போத்தல்களின்
சுட்டுத்துண்டு நிறங்கள்
வெளுறிக்கிடக்கின்றன.

02
நாங்கள் பயணம் செய்த
பேருந்துகள்
ஓய்ந்தோ முடங்கியோ
கிடக்கின்றன
நாங்கள்
பேருந்துகளையோ பயணங்களையோ
விரும்புவதில்லை

இப்பொழுது
சைக்கிளை
மெதுவாக ஓட்டியபடி போகிறோம்
எங்கள் மோட்டார் சைக்கிள்
வீட்டில் நிற்கிறது.
இனி நடந்தும் போகவேண்டி இருக்கும்.

03
பிரகாசின் அம்மா
புற்றுநோயில்
இறந்துவிட்டாள்
பாதை பூட்டியிருந்தததால்
அவளுக்கான வைத்தியங்கள்
தவறிவிட்டன.
கடைசி நாட்களில்
நல்ல சாப்பாடுகளைக்கூட
பிரகாசு
வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

இப்பொழுது அவன்
பியரை நன்றாக
வெறுத்துவிட்டான்

04
வீடுகளில்
விளக்கு வைப்பது
பெரும்பாடாகி விட்டது.
சிவப்புநிற மண்ணெண்ணையில்
வண்டிகள்
புகையுடனும்
பெரும் இரைச்சலுடனும்
ஓடுகின்றன
எமது வண்டிகளுக்கு
எதிர்காலமே
இல்லாமலாகி விட்டதென்று
அனேகரும் கவலைப்படுகிறார்கள்.

வீதிகள் எல்லாம்
குன்றும் குழியுமாகி விட்டன.
சில்லுடைந்துவிடும்
காற்றுப் போயிவிடும்
சைக்கிளை
மெதுவாக ஓட்டுகிறோம்

05

கான்ஸ்பிரஸ்கரின்
சிரிப்புடன்கூடிய படம்
எரிக்சொல்கெய்மின்
சிரிப்புடன் கூடிய படம்
எல்லாம்
சுவர்களில் இருந்து
அகற்றவேண்டி ஆகிவிட்டது.
அவர்கள்தான்
எங்களுக்கான பியர்களை
எடுத்துவந்திருக்க வேண்டும்.

அவர்கள்தான் சோடாவும்
கொண்டு வந்திருக்க வேண்டும்
மினரல் தண்ணீர்களும்
கொண்டு வந்திருக்க வேண்டும்.
இப்பொழுது சுடும்
கலர் தண்ணிகளை
பொலித்தீன் பையில் அடைத்து
இங்கு விற்கிறார்கள்
அது சூடாய் இருக்கிறது.
கடைகள் குறைந்து விட்டன.

06

எங்கள் தாத்தாவின்
வாயில்
மூள மறுக்கும்
குறைச்சுருட்டுக் கிடக்கிறது
அவர் பழைய
குறைச்சுருட்டுக்களை
தேடிக்கொண்டிருக்கிறார்
நெருப்புக் கொள்ளியுடன்
போராடுகிறார்.

07

கடிகாரத்திற்கான
பென்டோச் பற்றியுமில்லை
சுவர்க்கடிகாரம் ஓடுவதில்லை
ரணில் விக்கிரமசிங்கவும்
தலைவர் பிரபாகரனும்
இணைக்கப்பட்ட படமுடைய
கடிகாரத்தை
புத்தளத்தில் இருந்து வந்த
முஸ்லீம் கடையில்
அம்மா வாங்கி வந்தாள்.
அது பழுதாகி விட்டது.
பற்றி போட்டும் வேலையில்லை.
நேரம் சரியில்லை.

08

எப்படி வீடுகளில்
பதுங்குகுழி என்று
நானும் பிரகாசும்
விசாரித்துக் கொள்கிறோம்.

நாங்கள் நல்ல
பதுங்குகுழி அமைக்கவில்லை.
சாமாதான காலத்தில்
சீமெந்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கையில்
நிலத்தின்கீழ்
வீடுகட்டியிருக்க வேண்டும்.

09

படுகொலை செய்யப்பட்டவர்களின்
பெயர் விபரங்கள்
சந்தியில் அறிவிக்கப்படுகின்றன.
அது நமது பாடலாகி ஒலிக்கிறது.

சைக்கிளை விட்டு
இறங்கி வீதிக்கரையில்
நிற்கிறோம்
களமுனையில் வீழ்ந்த
மாவீரர் ஒருவரின்
விதையுடல்
சிப்பு மஞ்சள் வண்டியில்
துயிலும் வீடுநோக்கிப் போகிறது.

10

சைக்கிளை ஒதுக்கி
வழி விடுகிறோம்
விமான தாக்குதலில்
காயமடைந்த
மக்களைக் காவிக்கொண்டு
அம்புலன்ஸ் வண்டி
ஓமந்தை நோக்கிப் போகிறது
சிலவேளை
பிணத்துடன் திரும்பி வந்துவிடும்

11

நமது உடைகள்
மங்கி சுருங்கி விட்டன
செருப்பும் தேய்ந்துவிட்டது.

பசிக்கிறது.
கொஞறுசமாய் சாப்பிட வேண்டும்.
நானும் பிரகாசும்
மெலிந்து விட்டோம்

மீண்டும் ஒருநாள்
நானும் பிரகாசும்
பதுங்குகுழியை விட்டு
வெளியில் வந்து பேசுகிறோம்.
___________________________

பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்


------------------------------------------------------------------

01
ஒருவேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும.

குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிரம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது

02

குழந்தைகளின் புன்னகைகளை
நிலங்களின் அடியில்
புதைத்து வைத்துவிட்டு
நாம்
நசுங்கிய எதிர்காலத்தோடு
அமர்ந்திருக்கிறோம்

பதுங்கு குழியினுள்
அவர்களின் பள்ளிக்கூடங்கள்
தொலைந்துவிட்டன.
இசையின் நாதம்
செத்துவிட
குழந்தைகளின் பாடல்கள்
சாம்பலாகிப் பறக்கின்றன

மலர்கள்
தறிக்கப்பட்ட தேசத்தில்
இராணுவச் சப்பாத்துகளின்கீழ்
வாழ்வைத் தொலைத்துவிட்டு
இனத்தின் ஆதிப்புன்னகையை
அறியாது வளர்கிறார்கள.

நமது வாடிய முலைகளுடன்
மெலிந்த குழந்தைகளை பெற்று
புன்னகைப்பட்ட
நாடு செய்கிறோம்.
இந்தப் பதுங்கு குழியில்
கிடக்கும்
எனது குழந்தையின் தாலாட்டில்
நான் எதை வனைந்து பாடுவது?




03

தாய்மார்களின் வற்றிய
மடிகளின் ஆழத்தில்
குழந்தைகளின் கால்கள்
உடைந்துகிடக்க
பாதணிகள்
உக்கிக்கிடந்தன.

அவர்களின் உதடுகள்
உலர்ந்து கிடக்கின்றன
நாவுகள் வரண்டு
நீள மறுக்கின்றன
நாங்களும்
திறனியற்ற நாவால்
இந்தக் குழந்தைகள்
கருவூட்டப்பட்டிருக்கையில்
எதைப் பேசினோம்?

04

குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக
குடிவாழ்கிறது
அவர்களுடன் ஓட்டிப்பிறந்த
கருணை வார்த்தைகளும்
விடுதலைப் பாதங்களும்
அவர்கள் அறியாமல்
பறிக்கப்பட்டுள்ளன

எதையும் அறியது கிடக்கும்
எனது குழந்தை
சதாமின் ஆட்சிக் காலத்தில்
ஈராக்கில் பிறந்திருக்கலாம்


05

நான் கடும் யுத்தப்பேரழிவில்
பிறந்ததாய்
அம்மா சொன்னாள்
எனது குழந்தையை
நான் இந்த பதுங்குகுழியில்
பிரசவித்திருக்கிறேன்

அது நாளை என்னிடம்
ஜனாதிபதியையும்
இராணுவத் தளபதிகளையும்
விசாரிக்கக்கூடும்
நான் நிறையவற்றை
சேமித்துவைக்க வேண்டும்.

கண்ணாடிகளை உடைத்து
தண்ணீரைக் கிறுக்கி
எங்களை நாங்கள்
காணாமல்
இருட்டில் வாழ்ந்தோம் என்றும்
அது பிறக்கையில்
எரிந்த தொட்டிலின்
தாழத்தில்
தாலாட்டுப் பாடல்கள்
கருத்திருந்தது என்றும்
நான் கூறவேண்டும்.

06

நான் மலட்டுத் தன்மை அடைவதற்கு
வேண்டியதற்காக
அப்பொழுது வெட்கப்பட வேண்டியிருக்கும்
ஏதாவது பேசுங்கள்
ஏதாவது செய்யுங்கள்
என்ற எனது உரையால்கள்
தலைகுனிந்து கிடக்கும்

07

பதுங்குகுழிக்குள்
எனது குழந்தையின் அழுகை
உறைந்துவிடுகிறது

08

ஏன் இது
ஒரு ஈழக்குழந்தையாக
இங்குவந்து பிறந்திருக்கிறது?
அதுவும் இந்தப் பதுங்குகுழியில்
கண்ணை விழித்திருக்கிறது?
எனது குழந்தையின் அழுகை
நாளை இந்நாட்டின்
தேசிய கீதமாய் மாறலாம்
----------------------------------------------------

மனசை தொட்ட கவிதை

//குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக
குடிவாழ்கிறது.//
தீபச்செல்வன் இது உன்னுடைய முக்கியமான கவிதை என்று நினைக்கின்றேன்। குழந்தைகள் கண்களில் ஒளிருகிற நாட்களுக்காக ஏங்குகிறேன்.

வ.ஜ.ச.ஜெயபாலன்

---------------------------------

நன்றி ஜெயபாலன்

தீபச்செல்வன்

பூனையும்நாயும் நிரம்பியவீடு

______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

என் சப்பாட்டிற்குஅருகில்
என்பூனை காவலிருக்கிறது
சாப்பாட்டின் மிகுந்தவாசனையில்
உடைகள் வேகமாக கழறுகின்றன.

வீட்டிற்கு வெளியே இப்பொழுதெல்லாம்
மனிதர்களை சந்திக்கமுடிவதில்லை
நடமாடித்திரிபவர்களிடம்
உண்மை முகங்கள்
மருங்கியிருக்கின்றன
வீடு வரும்பொழுதெல்லாம்
அந்த மனிதர்களின்
பொய்முகங்கள் பின்தொடர்ந்து
துன்புறுத்துகின்றன.

பூனை கால்களை உரசும் பொழுதெல்லாம்
எல்லா வலிகளும் அகலுகின்றன
நிம்மதியை கெடுக்கிற
ஒலிகளின் மத்தியில்
பூனையின் குரல்
சங்கீதமாய் ஒலிபரப்பாகிறது.

எங்கள் வீட்டில்
பூனைக்கும் நாய்க்கும் கூட
நல்லநெருக்கம் இருக்கிறது
அவைகளின் தோற்றம் விகாரப்பட்டு
நெருக்கத்தின் வடிவமாய்
சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன.
பூனையும் நாயும்
எப்பொழுதும் ஞாபகமாயிருக்கின்றன.

வீட்டில் நெருக்கமும் ஆறுதலும் பரவுகிறது
அமைதியும் ஒழுங்கும் நிலவுகிறது
பூனையும் நாயும் கூடிய எனதுவீடு
எப்பொழுதும்
எல்லாவற்றுக்குமாக காத்திருக்கிறது।
__________________________________

சிறுவர்களின் வினோத வேடங்கள்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

சிறுவர்களின் விளையாட்டு
மைதானத்தில்
நிறைய முகமூடிகள் கிடந்தன.

வினோதங்கள்
கூடுதலாக இருக்க
தான் என்ன வேடம் அணிவது
என்று கேட்கிறான்
எனது பிள்ளை.

நான் நிறைய உருவங்களை
பாhத்திருக்கிறேன்
என் பிள்ளைக்கு
எந்த வேடத்தின்
முகமூடியை காட்டவேண்டும்.

எந்த குணத்தை
தெரிவு செய்யவேண்டும்.

அவன் உருவங்களின்
கோதுகளையும்
உள்ளீடுகளையும்
அறியாது பார்க்கிறான்.
முகமூடிகளின்
பின் வாசனை தெரியாதவன்.

அவைகள் அவனிடத்தில்
கவர்ச்சியை ஏற்படுத்தியபடியிருந்தன.

பிள்ளைகளின் உயிரில்
அங்கிருந்த முகமூடிகள் எல்லாம்
மிக கூடுதலான
மழலை பெற்ற
உருவங்களாக தெரிந்தன.

கோரத்திற்குரிய முகமூடிகளின்
குணங்கள் எங்கோ மறைய
பிஞ்சு ஊடகத்தில்
முகமூடிகள் சாந்தமாயிருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில்
நிறைய உருவங்களை பார்க்கிறான்
விளையாட்டான வேடங்கள்
என்பதை அவன் மறக்கிறான்.

எல்லா முகமூடிகளையும்
வாசிக்கிறான்
ஏதோ ஒரு முகமூடியை
எடுத்துக்கொண்டு
வீட்டிற்கு வருகிறான்
நான் எதையும் பார்க்காதிருந்தேன்.
-----------------------------------

முட்களுக்காக முளைத்திருக்கும் கால்கள்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

வழியில் செறிவாக கிடக்கிறது
முட்பொறிகள்
தூரம் சுருங்கி சுருங்கி
நீள்கின்றன
பயணங்களின் குறிப்புகளை
யாரும் மீள வாசிப்பதாயில்லை.
நான் கால்களாகவே
தனித்திருக்கிறேன்.

வண்டிகளில் எந்த புரிதலுமில்லை.
சக்கரங்களின் வட்டம்
சதுரமாகிப்போக
நகர்வுகள் முடங்கிவிடுகின்றன
யாருடைய தோல்களிற்கும்
எனது கைகள் எட்டவில்லை.

மாலை நேரங்கள்
கொலை செய்யப்பட
எனது காலைகளில்
சூரியன்கள் உதிக்காமல்
வழி நீண்டு செல்கிறது.

ஏதோ ஒன்று வெற்றிடமாயிருக்கிறது
பகிர வேண்டிய விடங்கள்
நிறைய இருக்க
விருந்தில்லங்களுக்கு தூரமாகவே
வண்டிகள் திரும்பிவிடுகின்றன.

எந்த வழியும் முட்களின்றி இருப்பதில்லை.
எல்லாமுகங்களிலும்
ஒரு நாள் யதார்த்தம் வெளிக்கும்.
எனது கால்கள்
முட்களுக்காகவே முளைத்திருக்கலாம்.
_____________________________________

ஊருக்குப்போகலாம்...

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

பெருங்காடுகளின் நடுவே
நீண்ட வழியில்
எனது ஊருக்கு
பேரூந்து
போய்கொண்டிருக்கிறது.

சகபயணிகளில்
யாருடையதும்
தெரிந்த முகங்களில்லை
காடுகளின்
பசுமையை
உச்சி துளிர்க்கும் ஆர்வத்தை
இடைஇடையே
உச்சி கருகிய மரங்களை
பட்டமரங்களை
எல்லாம்
விழிகள் மேய்கிறது.

எத்தனை தடவை
பயணம் செய்தாலும்
காடுகளின் வனப்பை
வீதியின்
ஏற்ற இறக்கங்களை
அலுக்காமல்
ரசிக்க முடிகிறது.

இடை இடையே வரும்
மைற் கற்களை
எண்ணியபடி இருக்க
எங்காவது ஒரு சிறு இடத்திலிருக்கும்
தேனீர்க்கடையில்
பேரூந்து ஓய்வெடுக்கும் .
அறிமுகமில்லாத தோள்களில்
சாய்ந்து
தூங்கி விட்டு
மன்னிப்பு தடுமாறும்
சிலமுகங்களில்
பாசமும்
தொடர்ந்துபேச
ஆர்வமும் பிறக்கும்.

வழியில் பெருங்காட்டில்
ஒரு பெரியமரத்தடியில்
வண்டி பழுதுபட்டுவிட
ஓட்டுனர்
நடத்துனர் பயணிகள் சேர்ந்து
வண்டியை
திருத்திக் கொண்டிருப்பார்கள்.

அப்போது அந்த முகத்துடன்
அறிமுகம் பலப்படும்
முகவரிகள்
விசாரித்து கொள்ளப்படும்
நன்மை தீமைகள்
பகிரப்படும்
அப்படியே
சிறுதூரம் நடக்கவும்
மரத்தடியில் அமர்ந்து பேசவும்
நல்ல நண்பர்களாகிகூட விடலாம்.

பேரூந்து தயாராகிவிடும்.

வழியில் பெரிய காட்டுமரம்
முறிந்து கிடக்க
யானைகள் பாதை மாறிவிட்ட
அடையாளங்கள் கிடக்கும்
அதையும் தாண்டி
பேரூந்து ஊரை நோக்கி
போய்க் கொண்டிருக்கும்।
____________________________

அண்டங்காக்கைகளின் ஓலம்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

அண்டங்காக்கைகள்
வீட்டு முற்றத்திலிருந்த
மாமரத்திலும்
வேலி ஓரத்திலிருந்த
பனைமரத்திலும்
இருந்து கரைகின்றன.

அவம் மணப்பதாக
நெருப்பை காட்டி
அம்மா
காக்கைகளை கலைக்கிறாள்.

எனினும்
வீட்டை நோக்கி
தூரத்திலிருந்தபடி
காக்கைகள்
கரைந்தபடி இருந்தன.

எதுவும் நடக்கலாம்
என்ற அவத்தின் மீதான
நம்பபிக்கையில்
காக்கைகளை ஏசியபடி
அம்மா திண்ணையிலிருந்தாள்
காக்கைகள்
தமது இறக்கைகளின் பகுதிகளை
கழற்றி போட்டிருக்கலாம்
அவைகளில்
அவத்தின் நாக்குகள்;
காவப்பட்டு அசையலாம்
என்று அம்மா யோசித்தாள்.

சனிக்கிழமைகளில்
இந்த திண்ணையை மெழுகி
விரதமிருந்து
சனியன்கள் தீரும் என்று
நம்புவாள்
காக்கைகளை தேடிப்போய்
கூவி கூப்பிட்டு
சாப்பாடு வைப்பாள்.

அம்மாவிடம்
இப்போது திணிந்திருக்கும்
கொடிய விரதத்தை,
அச்சமூட்டும்படி ஓலமிட்டு
வீடுகளை
எச்சரிக்கும் காக்கைகளின்
கண்மூடித்தனமான
அசிங்கத்தை
வெறித்தபடி கலைத்தாள்.

புற்கள் மண்டி
சருகு நிறைந்து கிடந்த
ஊரின் பிரதான தெருவை
பார்த்துக் கொண்டு
மருந்து தீர்ந்த
வெறும் குப்பிகளை
அள்ளிகட்டினாள்.

சமைத்து நீண்டநாளாகிய
சமையல் பாத்திரங்களை
கழுவி காயவிட்டாள்
அவசிய உணவுப் பொருட்கள்
தீர்ந்தபைகளை
உதறி சுருட்டிவைத்தாள்.

பயன்தரும் பெருமரங்களும்
மூலிகைச் செடிகளும்
சற்று வாடிக்கிடந்தன
அடுப்பை எரித்து
தண்ணீரை வைத்துவிட்டு
அம்மா காக்கைகளை
மறந்து கொண்டாள்.
_________________________

தண்ணீரில் நடந்த பயணம்...

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

பயணம் திடீரென்று
அறிவிக்கப்பட்டது
எல்லோரும் புறப்பட
தயாராகினார்கள்.

இது நிச்சயமென்றில்லை
இராணுவ விசாரணைக்கு பிறகு
மீண்டும் விடுதிக்கு வரலாம்.

புத்தகங்களை விடுத்து
உடுப்புக்களை சுருட்டி
கட்டினார்கள்
இனி இந்த புத்தகங்கள்
திறப்பதற்கான சூழல்
இல்லாது போகலாம.

நான் அந்த மேசையில்
கடைசியாய் வாசித்தேன்
அழுகையில் விடுதி வெளித்தது.

எல்லாம் இழந்து
வெறும் மனிதர்களாய்
உருவங்கள் நூலகத்தின் கரையில்
போய்க் கொண்டிருந்தன.

ஒரே ஒரு புத்தகம்
எடுத்துவர அனுமதிக்கப்பட்டது.
துயர் நிரம்பிய உனது
ஒளிப்படத்தை
எனது புத்தகத்தில்
மறைத்து எடுத்து வந்தேன்.
அதில் நீ ஏதோ ஒன்றை
இன்னும் பிரதிபலித்தபடியிருந்தாய்.

எல்லோரும் ஒருவலியுடன்
நடந்தார்கள்
சிறைக்குள் இருந்து
இன்னொரு சிறைக்கு
பயணிப்பதைப்போல.

கடைசியாய் என்னையும் அனுப்பி
விடுதிக்கதவை
காவலாளி இழுத்து மூடினான்
தனித்தவனாய் நானும்
எனது புத்தகத்தில்
உனது ஒளிப்படத்தை மறைத்தபடி
தண்ணீரில்
நடக்கத்தொடங்கினேன்.
____________________________

அம்மாவின் வீடு கட்டும் திட்டம்




வேயாத தற்போதைய
தற்காலிக வீட்டிற்குளிருந்து
புதிய வீடு கட்டுவது குறித்த
திட்டத்தை வேய்ந்துகொண்டிருக்கிறோம்
நானும் அம்மாவும்.

முதலில் வீடு
பின்னர் அளவான கிணறு
அத்தோடு மலசலகூடம்
இவ்வளவும் கட்டவேண்டும்
என்பது எங்கள் அடிப்படைத்திட்டம்.

காணாமல்போயிருந்தும்
அப்பாவின் அடையாளம்
முழுமைப்பட்டு
எப்போதும் சுமங்கலியாய தெரியும்
அம்மா தன் ஒற்றைக்கையில்
வீடு கட்டும் திட்டத்தை
வரைந்திருக்கிறாள்
எங்களை அருகிலிருத்தியபடி.

கல்லறையில் இருக்கும்
அண்ணாவோடும்
இது குறித்து கலந்து
அம்மா வரைபடம்
செய்திருக்கிறாள்.

மழை பெய்யும் வீடு.

பக்கத்து வீட்டில் பகுதிநேரமாய்
தண்ணி எடுக்கும் ஒப்பந்தம்
ஒருவாறு ஒத்துப்போகிறது.

மலசலம் கழிக்க
காடுகளின் திறந்த கழிப்பறைகள்
தூரப்பட்ட தளத்தில்
இப்போது இயங்கிக்கொண்டிருக்கிறோம்
ஒரு நாள்களும் நாங்களும்.

எனக்கான பல்கலைக்கழக படிப்புச்செலவு
தங்கைக்கான பாடசாலை படிப்புச்செலவு
இவைகளோடு
எங்கள் தீவணத்தையும் ஆடைகளையும்
அம்மாவின் மாதச்சம்பளம்
சினந்தபடி அடக்கம் செய்துகொள்ளும்.

இதற்குள் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும்
நானும் அம்மாவும்
எங்கள் வீடு கட்டும் திட்டத்தை
புதுப்பித்துக்கொள்வோம்.

2006

நன்றி-தாயகம்

வேர்களின் முகங்கள்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

யாரும் இந்தவெளிகளை
திரும்பிப்பார்க்க வேண்டாம்
எல்லோரும்
இந்த மனித விடயத்தில்
தொடர்ந்து மௌனமாய் இருங்கள்
இரக்கமற்ற மௌனத்தின்
நிழலில் எதுவும்
தீர்ந்துவிடப் போவதில்லை
மிஞ்சும் துயரத்திலிருந்து
எல்லாவற்றுக்குமான முளைவரும்.

எமது துயரமும் பயணமும்
கணக்கிடுகிறது
மௌனங்களை விதைத்தவர்
நீங்களே என்று
வனங்களின் அடிக்கல்லில்.

வனங்களைச் சமைத்து
பரவிய பிறகு
தோள்களை நிமிர்த்தி
கோடரிகளோடு
எமது வனங்களுக்குள்
நீங்கள் நுழையவேண்டாம்
மரங்களைத் தறித்து
புதிதாய் பிறக்கும் மனிதத்தை
புதைக்க வேண்டாம்.

எங்கள் நிரந்தர
நிழலின் சூழலுக்காக
இப்போதே புதைகிறோம்.

ஒட்டிய முகங்களுடன்
எங்களைப்பார்த்து எழுதும் கவிதைகள்
வரையும் ஓவியங்கள்
எல்லாவற்றையும்
நீங்கள் கூடி வரவேற்கும் அறைகளில்
மாட்டி வையுங்கள்.

அதிகாரங்களின்
மேன்மை தங்கிய நிலையில்
பலியெடுக்கப்பட்ட உயிரின் கணக்குகள்
எல்லாம் தோற்றுப் போகிறது.
எங்களுடைய மொத்த வலியில்
பொருளாதாரமும் பாதுகாப்பும்
கீறப்படுகிறது.


விமானங்களால் சபிக்கப்படும்
வெளிகளாகவும்
எறிகணைகளால் தேடப்டும்
இலக்குகளாகவும்
நாங்கள் தீர்மானித்தபடி இருப்போம்.

உங்கள் மௌனத்தின் சூழலில்
அசூர வல்லமையில்
எமது அடையாளம் அழிந்து போகும்.
அவர்கள் கருதுகிறார்கள்
நம்புகிறார்கள்.

எல்லாம் அவசாகங்களில்
துடித்துப் போகிறது.
எதிர்பார்க்கவில்லை
நெருப்பு வார்க்கும் வதைகளை
தூக்கிலிட்டு சுருக்கும்
மின்சாரக்கயிறுகளை.

எல்லாமேதான் இங்கு
தீர்ந்துபோகிறது.
எல்லாருமே சிலுவைகளைச் சுமந்தபடி
மரணத்தில் புதைந்துகொள்கிறார்கள்.

எப்போதும் நாங்கள் புதைந்த
இந்த வெளிகளை
திரும்பிப்பார்க்க வேண்டாம்.
புதைகுழிகளைக் கிழறி
விபரம் கேட்கவோ
கணக்கிடவோ வேண்டாம்.
இப்போதே
நாளைய எமது வனங்களின்
வேர்களிடமிருந்து விடைபெறுங்கள்.
__________________________________

அப்பாவின் சுவரொட்டி




அப்பாவின் குருதியில் தெரு நிறைய எழுதப்பட்ட
மரணச் சுவரொட்டிகள்தான்
இன்றெனது முகவரி.

நேற்றுச் சில சுவரொட்டிகளுடன்
வீடு திரும்பிய அப்பா
கொல்லப்பட்டவனுக்காய் துயரடைந்தார்
கொன்றவனை நினைத்துச் சினமடைந்தார்
நாளைய சுவரொட்டிகளில்
தன் குருதியில்
தன் முகம் வரையப்படுமென அறியாது

இச் சுவரொட்டிகளில்
கனலும் அப்பாவின் குரல் தீரவில்லை
சிவக்கும் அவரின் முகம் மறையவில்லை

வீதியைக் கடந்து செல்லும் நகரவாசிகளே!
காயாத குருதியில்
வரையப்பட்ட என் அப்பாவின் உதடுகள்
உச்சரிக்கும் வார்த்தைகளை புரிந்துகொள்வது
உமக்கு கடினமானதல்ல

அப்பாவை கொன்றவர்களும்
கண்ணீர் விட்டொரு
சுவரொட்டியை என் வீட்டில் முன்னால் ஒட்டினர்
அப்பா!  குருதியை உறிஞ்சியவர்களே
கண்ணீர் விடும் ஆச்சரியமும் புதிதல்ல

ஒவ்வொரு மரணச் சுவரொட்டிகளின் முன்னும்
தந்தையர்களுடன் பேசும் குழந்தைகளும்
பிள்ளைகளுடன் பேசும் தாய்மாரும்
காதலன்களுடன் பேசும் காதலிகளும்

குருதிமேல் குருதியாய்
பட்டை பட்டையாய் படிந்திருக்கும்
தடித்தகன்ற சுவரில் விடப்பட்ட
வெற்றிடங்களில்
பிசுபிசுக்கும் பசைகளை பூசியிருப்பது
இத்தெருவில்
நாளை எவரின் முகத்தை ஒட்ட?

அப்பா இங்கெதுவே புதினமல்ல,
நாளை ஒரு சுவரொட்டியில்
எனது முகமும் தென்படலாம்
இனம் புரியாத நோயினால் காலமாகியவனென்றோ
வீதி விபத்தொன்றினால் அகலாமுற்றவனென்றோ
இரு குழுக்களின் மோதலின் இடையில் சிக்கியவனென்றோ

ஆனால், என் மரணச் சுவரொட்டிக்கு முத்தமிட்டுச்
சபிக்கும் என் காதலியின்
நெருப்புதிரும் வார்த்தைகளில்
நொருங்கும் கொலை அரசு
0
2007

தீபச்செல்வன்

பயங்கரப்பறவை வேட்டை

______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________
ஒரு பயங்கரப் பறவையின்
கொடிய சிறகு
உதிர்க்கப்பட்டிருக்கிறது
அல்லது
அந்தப்பறவைக்கூட்டத்தின்
ஒரு பறவை
வீழ்த்தப்பட்டிருக்கிறது.

பயங்கர பறவைகளினால்
கொத்தி கிழித்து
குதறப்பட்ட சமூகத்திலிருந்து
வேட்டைக்காரப் போராளிகள்
வெளிவந்தார்கள்.

இந்தப்பயங்கரப் பறவைகளினால்
சீரழிக்கப்பட்டு
இரத்தம் கொட்டியபடி
வெள்ளை புறாக்களும்
தேசத்தைவிட்டு வெளியேறின
பறவைகள் பற்றிய
புதிய தத்துவத்தோடு,
சிறகுகள் பற்றியும்
அம்புகள் பற்றியும்
அனுபவங்களை வழங்கிவிட்டு.

கிழிக்கப்பட்ட
வார்த்தையின் கொதியில்,
பொறுமைகாத்த
எரிமலையின் மௌனத்தில்,
பயங்கர சிறகுகளால்
சிதைக்கப்பட்ட
அப்பாவிகளின் ஆன்மாவில்,
செய்யப்பட்ட அம்புகளை
வேட்டைக்காரப் போராளிகள்
அணிந்துகொண்டு
பயங்கரப்பறவைகளை
வேட்டையாடத் தொடங்கினர்.

பசுமை நிறைந்த
புதிய பறவைகளின்
நிழலில்
சிறகுகளின் அர்த்தத்தில்
வானம்
விரியத் தொடங்கியது
நிறமிழந்து சிதைந்து கிடந்த
தெருக்கள்
விளக்குகள் நிரம்பி எரிய
பானைகள் ஏற்றி
பொங்கல் செய்ய
பண்டிகை வெடிகளின் ஒலியில்
சிரித்து
வெற்றியை கொண்டாடின.

முதியவர்களின் ஆசியில்
குழந்தைகளின் கையசைவில்
வெல்வதற்கான
வாழ்த்துக்களை
அள்ளி எடுத்துக்கொண்டு
வேட்டைக்கார போராளிகள்
அம்புகளை எய்தார்கள்.

அசுரக்கூடுகள் தள்ளாடின.
______________________________

சிறகு முளைத்த வானம்


பதுங்கு குழியின் ஓரத்தில்
இடிந்து கிடந்த  வானம்
நிமிர்ந்து வெளிக்கிறது
திடுக்கிட்டு
சிறுபள்ளங்களில் விழுந்து பதுங்கிய குழந்தைகள்
பார்க்க மறுத்த வானம் நோக்கி
கை தட்ட
புன்னகையால் நிரம்பிற்று வானம்.

செடிகளில் புன்னகை அரும்ப
நெடுநாட்களின் பின்
சூரியன் வருகிறான் கம்பீரமாய்
இருள் துடைக்கப்பட்ட
நிலவின் ஒளியில்
விண்மீன்களை எண்ணுகின்றனர்
இரவுப் பொழுதின்
முற்றத்தில் படுத்திருக்கும் குழந்தைகள்

நள்ளிரவில் குழந்தைகள்
கண்ணயரும்போது
நாட்டைச் சிதைக்க
வானத்தை உழும் பயங்கரப் பறவைகள்
காவிச்செல்வதெல்லாம்
பிய்த்துவிட்ட குழந்தைகளின் உடல்களை

அதன் அசுரச்சிறகுகளை
பிடுங்கி எறிந்துவிட
துரத்தின போராளிகளின் பீரங்கிகள்

அவை உறங்கும்
அசுரக்குகையை
நெருப்பை பொழிந்து அழித்துவிட
விரிந்தன ஈகம் சுமந்த சிறகுகள்

தான் எறிந்த கல்லில் விமானம்
வீழ்ந்ததென துள்ளிக் குதிக்கும்
ஒரு சிறுவனின்
குதூகலத்தில் இருந்தது விடுதலை

தான் எறிந்த நெருப்புக் கொள்ளியில்
விமான நிலையம் அழிந்ததென
சொல்லித் திரியும் சிறுமியின்
கொண்டாத்தில் இருந்தது வாழ்வின் கனவு

சிறகு முளைத்த வானத்தில்
பறவைகளைப் போல
இறக்கையபடித்துப் பறந்தனர் குழந்தைகள்.
0

தீபச்செல்வன்

2007


ஜூலை 2007இல் வன்னியில் விடுதலைப் புலிப் போராளிகளால் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே காலத்தில் புலிகளின் விமானங்கள் இலங்கை தலைநகரில் தாக்குதல்களை மேற்கொண்டன. மேற்போந்த பின்னணியுடன் புலிகளின் வீரம் செறிந்த தாக்குதல்களில் ஒன்றான  2001இல் நடைாத்தப்பட்ட கட்டுநாயக்கா விமான நிலைய அழிப்பு உள்ளிட்ட “போராளிகளின் விமானத்துறை“ பின்னணிகளில் இக் கவிதை எழுதப்பட்டது. 2016இல் திருத்தம் செய்யப்பட்டது. 

பிரசுரம் - ஈழநாதம்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...