Wednesday, August 29, 2007

அப்பத்தின் உரையாடல்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

எல்லா தோழர்களும்
இருக்கைகளை விட்டு
எழுந்து போய்விட்டார்கள்
எஞ்சியிருக்கும்
நீயும் நானும்
நமது அப்பத்தின் கதைபற்றிய
வாழ்க்கையை
கலந்துரையாடுவோம்
பிரம்புகளை
ப+சையறையில் வைத்துவிட்டு.

ஒவ்வொரு இராத்திரியிலும்
நமக்கிடையேயான
அப்பத்தின் கதை
இறுதியின்றிய
இராப்போஃனமாக
தொடருகிறது.
விடியும்பொழுது
அப்பங்களை சுமந்தபடி
நமக்கென்ற
தெருக்களில் திரிவோம்.

அப்பங்களுக்காக
கூவிக்கொண்டிருக்கும்
நமது குரலிலும்
அப்பத்தின் நடுவிலும்
நமது வியர்வையும்
கண்ணீரும் நிரம்பியிருக்கும்
அப்பத்தின் காசுகளுக்காக.

அப்பத்தின் கூடையை
கொழுவியிருக்கும்
கையிலிருக்கும்
பிரம்பை பற்றி
நம்மிடம் அப்பம் வாங்கிய
எல்லோரும்
அறிந்திருக்கிறார்கள்
அப்பம் பிரம்பு
இவைகளை
பிரித்துப்பார்க்க முடியாத
நமது வலிமையான
பயணங்களில்
நமது பசியையும் தீரத்தையும்
அறிந்திருக்கிறார்கள்.

கையில் பிரம்புடன்
தெருநாய்களை
கலைத்துவிட்டு
அப்பங்களை சுமந்தே
நம்மால் பசி போக்க முடிகிறது.

ஒவ்வொரு இராத்திரியிலும்
நாம் விற்பனை செய்யும்
அப்பங்களை பற்றியும்
பிரம்பின் தீரம் பற்றியும்
கலந்துரையாடுவோம்.

விடிந்ததும்
ஆளுக்கொரு தெருவில்
அப்பங்களோடு போவோம்
தாவீதின் கல்லைப் போன்ற
பிரம்புடன்.

நம்மிடம்
அப்பங்களை வாங்க
நிறையப்பேர் காத்திருக்கிறார்கள்।
______________________________

0 கருத்துகள்: